Monday, November 19, 2007

ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன், நாலு மடங்கு ரேட்டுக்காரன்

பெங்களுர் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியிலிருந்து கேரளா வழியாக பெங்களூர் செல்கிறது.

அட்டவணையில் குறிப்பிட்டபடியே காலை 10:55க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது.

பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன. நானிருந்த பெட்டியில் நானும், கன்னியாகுமரியிலிருந்து ஏறியிருந்த ஒரு வட இந்தியக் குடும்பம் மட்டுமே. பகல் நேர பயணம் என்பதால் அலுவல் சம்பந்தமாக வாசித்து குறிப்பெடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து விரித்துப் போட வசதியான தனிமை. மதியம் 12:30க்கு திருவனந்தபுரம் வந்தடைந்தது. தூரம் 90 கி.மீ. என்றாலும், நெரிசலான சாலை வழியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் அடைய இப்போதெல்லாம் இரண்டு மணி நேரங்கள் ஆகி விடுகிறது.

திருவனந்தபுரத்தில் கொஞ்சம் பேர் ஏறினர். வர்கலாவில் எதிர்பார்த்தது போலவே ஒரு இளம், வெள்ளைக்கார தம்பதி ஏறியது. முதுகில் சுமந்து வந்த பெரு மூட்டைப் பொதியை இறக்கி வைத்து விட்டு, ஒரு டான் ப்ரௌன் நாவலையும், ஒரு ப்ரிட்டானியா பிஸ்கட் பொட்டலத்தையும் பிரித்துக் கொண்டு இரண்டையும் ஒரு கை பார்க்க ஆரம்பித்தது. கொல்லம் போன்ற தெரிந்த ஊர்கள் வழியாகவும், கருநாகப்பள்ளி போன்ற தெரியாத, திகிலூட்டும் பேர்கள் கொண்ட ஊர்கள் வழியாகவும் பயணம் தொடர்ந்தது. சங்கனாசேரி வரை எனது நீண்ட இருக்கைக்கும், எதிரேயுள்ள இருக்கைக்கும் போட்டியில்லை.

சங்கனாசேரியில் ஒரு பிரமாண்டமான சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகளோடு ஏறினார். எனக்கு எதிரான இருக்கை அவர்களுக்கு. துருதுருவென்று இருந்த பையன் – 4 வயதிருக்கும் – பெயர் ஜோ. சற்று அமைதியாக 7 வயதான பெண் – பெயர் ரீட்டா. உள்ளே நுழைந்து, அமர்ந்த அடுத்த நொடி பேச ஆரம்பித்து விட்டான் ஜோ. ரீட்டாவும் அதிகம் தாமதிக்கவில்லை. ரீட்டா கையில் ஒரு இளம்சிவப்பு நிறக் காகிதம். அதில் பெங்களூர் எக்ஸ்பிரசின் கால அட்டவணை அச்சிடப்பட்டிருந்தது. மிகத் தெளிவான ஆங்கிலேயே உச்சரிப்பில்:

“ஜோ உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால், நான் இதில் இந்த ரயில் இது வரை கடந்து வந்த நிலையங்களையெல்லாம் அடித்து விடுகிறேன், சரியா?” என்று சொல்லி விட்டு, ஒவ்வொரு நிலையமாக அடித்துக் கொண்டே வந்து, சரி அடுத்த நிலையம் “கோட்டயம்” என்றாள். பிறகு அடித்து விட்ட நிலையங்களையெல்லாம் இந்தியில் எண்ணி விட்டு “அம்மா, இந்த ரயில் 20 நிலையங்களைத் தாண்டி வந்து விட்டது” என்றாள்.

“கோட்டயத்திற்குப் பிறகு பெங்களூரா?” என்றான் ஜோ.

“இல்லை, நாளைக் காலையில்தான் பெங்களூர்”

“நான் மேலே போகலாமா?”

“போகலாம், ஆனால் மேலேயும், கீழேயும் போய் விட்டு வந்து விட்டு இருக்கக் கூடாது”

“வந்தால்?”

“அப்புறம் மேலே அனுப்ப மாட்டேன்”

பிள்ளைகள் இருவரும் மேலே செல்ல எத்தனிக்க

“இன்னொரு விஷயம் மேலே சிவப்பு நிறத்தில் சங்கிலி ஒன்று இருக்கிறதல்லவா. அதைத் தொடக்கூட முயற்சி செய்யாதே”

“தொட்டால்?”

“ஒருவர் வந்து உன்னை ரயிலிலிருந்து தூக்கி வீசி விடுவார்”

பிள்ளைகள் மேல் பெர்த்திற்குப் போனார்கள். அம்மா என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

“பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்?”

“டெல்லியில்”

“ஓ…”

எனது ‘ஓ’வில் இருந்த குழப்பம் அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். “இங்கிலாந்தில் நெடுநாட்கள் இருந்து விட்டு இந்தியா திரும்பி ஆறு மாதமாகிறது”

“இந்திய வாழ்க்கை எப்படியிருக்கிறது?”

“பழகத் தொடங்கி விட்டோம்”

“சொந்த ஊர் சங்கனாசேரியா?”

“ஆமாம். பெங்களூர் வரைக்குமா?”

“இல்லை, எர்ணாகுளம் வரையில்தான். அங்கு ஒரு தொழில் ரீதியாக ஒரு பட்டறை”

எர்ணாகுளம் வந்தது.

எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். தமிழ்நாட்டில் இருப்பது போல் “சார் ஆட்டோ வேணுமா?” தொந்தரவுகள் கிடையாது. வேண்டுமென்றால் ஆட்டோவை அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

“சாருக்கு எவிட போணும்?”

“ரீஜெண்ட் அவென்யூ”

என் சூட்கேஸை வாங்கி ஆட்டோவில் வைத்தார் ஓட்டுநர். நான் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பியது. மீட்டர் போடவில்லை.

“மீட்டரா, ஃபிக்சட் ரேட்டா?”

“30 ருப்பீஸ்”

தமிழ்நாட்டில் 30 ருப்பீஸ் என்றால் 5 நிமிடப் பயணம். கேரளாவில் சுமார் 10 நிமிடமாவது ஆனது.

ரீஜண்ட் அவென்யூ எம்.ஜி. ரோட்டில் இருக்கும் ஒரு நான்கு நட்சத்திர விடுதி. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் பிரமாதமாக இருந்திருக்க வேண்டும். இப்போது வயது தெரிகிறது. விசாலமான, வசதியான, தூய்மையான அறைகள். குறை சொல்ல முடியாத, ஆனால் விஷேஷமில்லாத உணவு.

சனிக்கிழமை இரவு பட்டறைக்கு வந்தவர்களையெல்லாம் எர்ணாகுளம் படகுத் துறையிலிருந்து புறப்பட்ட ஒரு படகில் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள். கப்பல்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதியில் ரசிக்க என்று அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால், குளிருமில்லாமல், அனலுமில்லாமல் நிலவிய மிதமான சூழல் நன்றாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் சூடாக சுட்டு பரிமாறப்பட்ட ஆப்பங்களை மீன் கறியோடு வெட்டினார்கள்.

ஞாயிறு மாலை கொச்சியின் பிரதான சுற்றுலாத் தளங்களான மட்டாஞ்சேரிக்கும், ஃபோர்ட் கொச்சினுக்கும் சென்றேன். எர்ணாகுளத்தையும், மட்டாஞ்சேரியையும் பெரியாறின் இரண்டு கிளைகள் பிரிக்கின்றன. மட்டாஞ்சேரி ஒரு பெரிய மீனவ கிராமம். அதன் ஒரு புறத்தில் யூதர்கள் வசித்து, காலி செய்த தெருக்களில், வீடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கலைப் பொருட்கள், புராதனப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறியிருக்கின்றன. பல கடைகள் வழக்கமான மரச்சிற்பங்கள், கம்பளங்கள், பாஷ்மினா கம்பளி போர்வைகள் விற்கின்றன. சிலவற்றில் அதி நூதனமான பொருட்கள் இருக்கின்றன. ஒரு கடையில் 100 அடி நீளமான ஒரு சுண்டன் வள்ளத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு கடையில் உலகத்திலேயே பெரிய வார்ப்பு என்று ஒரு மகா பெரிய உருளியை செய்து வைத்திருக்கிறார்கள். அதில் அல்வா கிண்டினால் சுண்டன் வள்ளத்துக்காரர்கள்தான் அவர்களது துடுப்பை வைத்து கிண்டி விட வேண்டும். அம்மாம் பெரிசு.

ஃபோர்ட் கொச்சினின் கடற்கரையில் வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம். சீன மீன் பிடி வலைகளுடன் கடல்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. கரையில் பல பழைய கட்டிடங்கள் விடுதிகளாக உருமாறி விட்டன. ஐரோப்பாவில் இருப்பது போல் உணவு விடுதிகளுக்கு வெளியில் உணவுப் பட்டியலை விலைகளுடன் அச்சிட்டு பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் இரண்டு இத்தாலிய உணவு வகைகள், இரண்டு ஃப்ரெஞ்ச் வகைகள், இரண்டு பஞ்சாபி தினுசுகள், சில கேரளா தினுசுகள் என ஒரு அயிட்டத்துக்கு ரூ. 200 முதல் 800 வரை இருக்கின்றன.

நண்பரொருவர் எர்ணாகுளத்தில் பாரத் டூரிஸ்ட் ஹோம் என்று ஒரு இடம் இருக்கிறது, அங்கே சாப்பிட்டுப் பார் என்று சொல்லியிருந்ததால் அதை முயற்சி செய்தேன். அது வெஜிடேரியன் என்று தெரியாது. இரவு பஃபே, அதுவும் சாப்பாடு என்று தெரியாது. இரவு முழுச் சாப்பாடு சாப்பிட விரும்பாததால், அந்த விடுதிக்குள்ளேயிருக்கும் காஃபி ஷாப்பில் சப்பாத்தி சாப்பிட்டேன். மிக மிருதுவான சப்பாத்திக்கு ஒரு கொள,கொளா வெண்டைக்காய், உருளைக்கிழங்கு குருமா வைத்து கெடுத்திருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி உணவுப் பொருட்களில் எனக்கிருக்கும் விலைவாசி ஞானக் குறைவை சுட்டிக் காட்டியிருந்தபடியால் இந்த விடுதியில் 3 சப்பாத்தி கொண்ட ஒரு செட் ரூ 35, ஒரு காஃபி ரூ 15 என்பதையும் மனதில் குறித்துக் கொண்டேன்.

இரவு 11 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ். 10:30க்கு அவென்யூ ரீஜெண்டில் இருந்து புறப்பட்டேன். ஆட்டோக்காரரிடம் விலை பேசவில்லை. வருவதற்கு ரூ 30. இரவு பத்துக்கு மேல் கிளம்புவதால் 10ஓ, 20ஓ கூட இருக்கலாம் என்று நினைத்தேன். ரயில் நிலையம் சேர்ந்தவுடன் 50 ரூபாய் தாளை நீட்டினேன். எந்த வித தயக்கமும் இல்லாமல் மீதி 20 ரூபாயை எடுத்து நீட்டினார்.

காலை 5:30க்கு நாகர்கோவில். நிலைய வாசலுக்கு வருவதற்கு முன்னே “சார், ஆட்டோ வேணுமா?” என்று ஆரம்பித்து விட்டார்கள். கோட்டாறிலிருந்து வெட்டூர்ணிமடம் செல்ல ரூ. 60. இதை விட இரு மடங்கு தூரத்திற்கு கேரளாவில் பாதி விலை. கேட்டால், “காலை வேளை, சவாரி கிடைக்காது, பெட்ரோல் விலை ஏறி விட்டது, மற்ற ஊர்களையும் இங்கேயும் ஒப்பீடு செய்யாதீர்கள்” என்பார்கள். நம்மூர் ஆட்டோக்காரனை விட பக்கத்து மாநில ஓட்டோக்காரன்தான் நியாயமானவனாக பட்டான் எனக்கு.
Posted by Picasa

Monday, November 12, 2007

தீபாவளி கொளுத்திய பட்டாசு நினைவுகள்

நவம்பர் 8, 2007 தீபாவளி

அதிகாலையில் தெருவில் பட்டாசுகள் முழங்கத் தொடங்கி விட்டன. பிள்ளைகள் வழக்கம் போல் வந்து “நாம எப்ப பட்டாசு விடப் போகிறோம்?” என்று ஆரம்பித்து விட்டார்கள். நானும் வழக்கம் போல் “எதுக்காக பட்டாசு?” என்று பதில் புராணத்தை தொடங்கி விட்டேன். வழக்கமான பட்டாசு விரோத காரணங்கள்தான்:


  • காதைக் கெடுக்கும் ஒலி
  • நுரையீரலை நாசமாக்கும் புகை (இந்த ஆண்டில் அவர்களது
  • பாடத்திலேயே க்ரீன் ஹவுஸ் எஃபக்ட், க்ளோபல் வார்மிங் பற்றி சொல்லப்பட்டிருப்பதால் கூடவே அறிவியல் ரீதியான ஒரு பயமுறுத்தலையும் சேர்க்க முடிந்தது)
  • தலைவலியைக் கொடுக்கும் நாற்றம்
  • தீ விபத்து நடந்து உடலோ, பொருட்களோ கருகுவதான அபாயம்

“உங்கம்மாவுக்கு பென்சில் மத்தாப்பு வெடிச்சே கை அப்படி பொத்துட்டுதே” என்று பயமுறுத்த முயன்றால் “ஒரு தடவ அப்படி நடந்தா, எல்லா தடவயும் அப்படியா நடக்கும்?” என்ற மனைவியின் குறுக்குச்சால் காதில் விழாத மாதிரி நடித்துக் கொண்டு காரணங்களை தொடர்ந்தேன்.

  • பட்டாசு வெடிப்பது என்பது காசைக் கரியாக்குவது
  • டம, டம என்று காதைப் பிளக்கும் ஒலியை ரசிப்பது நாகரீகமடைந்த மனிதனின் ரசனையில் இடம் பிடிக்காது

என்று பட்டியல் நீண்டது.

பதின்ம வயதாகப் போகும் புதல்வனுக்கு தந்தையருளும் மந்திரங்களின் மகிமை குறைவது சகஜமென்பதால், நாம் சொல்வதை அவ்வப்போதாவது மதிப்பு கொடுத்து கேட்கும் ஒன்பது வயது மகளையாவது மாற்றி விடலாமென்றால், அவள் “அதாவது டாடி, அந்த திரில தீ வெச்சுட்டு, பட்டாசு வெடிக்கற வைக்கும் ஒரு த்ரில்லிங்கா இருக்கும்ல அதுக்குத்தான் பட்டாசு வெடிக்கிறோம்” என்று புதுசாக வெடியைக் கொளுத்திப் போட்டாள்.

வழக்கம் போலவே இந்த பட்டாசு விவாதம், “சரி, நம்ம சாயங்காலம் பட்டாசு வெடிப்போம்” என்ற தீர்ப்போடு நிறைவுக்கு வந்தது.

அதென்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே பட்டாசுகளின் மீது ஆர்வமில்லாமலேயே நான் வளர்ந்து விட்டேன். சின்ன வயதில் “கைல கால்ல வெடிச்சிடப் போகுது” என்று எங்கம்மா எப்பவும் எச்சரித்து, பொட்டு வெடி தவிர எதையும் வெடிக்க அனுமதிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், வளர்ந்த பிறகும் பட்டாசு மீது ஒரு நாட்டம் வரவேயில்லை.

நான் ஏ.ஐ.டி.யில் படிக்கும் போது அங்குள்ள தமிழ் சங்கத்தினரும், இந்திய சங்கத்தினரும் தீபாவளியை விமரிசையாக கொண்டாடுவர். ஏ.ஐ.டியில் இருந்த 20க்கும் மேற்பட்ட நாடு/கலாசார சங்கங்களில் முதன்மையானது தமிழ் சங்கமே. இலங்கை, இந்திய, மலேசிய தமிழர்களோடு, அங்கிருந்த சொற்ப மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்களோடு ஜே, ஜே என்று எப்போதும் தமிழ் சங்கம் இயங்கும். ஏ.ஐ.டி நடுவில் எட்டு கோண அமைப்பில் இருக்கும் “கொரியா ஹவுஸ்” எனப்படும் கட்டடம் ஏறக்குறைய தமிழ் சங்கத்தின் குத்தகையில்தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். வாரத்தில் மூன்று நாள், மாலை 6-9 அந்த கட்டடத்தில் தவறாமல் தமிழ்ப் படம் போடுவார்கள் நம் மக்கள். இது தவிர மாதம் ஒரு முறை கூட்டம், இரவுணவு என்று அசத்துவார்கள். பொங்கல் என்றால் பாங்காக்கில் இருக்கும் தமிழர்களும் வந்து இணைந்து கலைநிகழ்ச்சிகள், மதிய உணவு, என்று செய்து கோலாகலம் பண்ணி விடுவார்கள். சங்கத்தின் பொறுப்பை மூன்று மாதத்திற்கொரு முறை மாற்றியமைக்கப்படும் குழு ஒன்று கவனித்துக் கொள்ளும்.

நான் பொறுப்புக் குழுவிலிருக்கும் போது வந்த தீபாவளியில் பெரிய அளவில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது (இந்த முடிவிலிருந்து அந்தப் பொறுப்புக் குழுவில் என் குரலுக்கு இருந்த மதிப்பையும், மரியாதையையும் அறிந்து கொள்வீர்களாக). பொறுப்புக் குழுவிலிருந்த மற்றவர்களில் சிலர்: அன்புமொழி (சேலத்தைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஜப்பான் சென்று அங்கேயே தங்கிவிட்டதாக கேள்வி), ராமநாராயணன் (கோவையைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஓக்லஹாமா சென்று அங்கேயே வெகு நாட்களாக இருந்தார், இப்போது தொடர்பில்லை), மற்றும் பரம் (குலாலம்பூரைச் சேர்ந்த இவர் இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை) ஆகியோருடன் நானும் பட்டாசு வாங்கும் முயற்சியில் இறங்கினோம்.

முதலாவது ஏ.ஐ.டி.க்கு தெற்கில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் ரங்சிட் என்னும் இடத்தில் முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அது பாங்காக்கின் பாஹ்யோலிதின் துரித நெடுஞ்சாலை டான் முவாங் விமான நிலையத்தோடு நின்று விட்ட காலம். இப்போது அந்த சாலை வடக்கே ஏ.ஐ.டியையும் தாண்டி எங்கோ சென்று விட்டது. விளைவாக ரங்சிட் ஒரு பெரிய நகராக உருப்பெற்று விட்டது. ஆனால் அந்தக் கால ரங்சிட் ஒரு சிறு கிராமம். உள்ளே இருபது, இருபத்து ஐந்து கடைகள் கொண்ட ஒரு தெரு உண்டு. அங்கே பட்டாசைத் தேடிப் போனோம்.

கடைத் தெருவுக்கு போன பிறகுதான் எங்களுக்கு ஒரு பெரிய ஞானோதயம் ஏற்பட்டது. அது, பட்டாசிற்கு தாய் மொழியில் (அதாவது தாய்லாந்தின் மொழியில்) பெயர் என்ன என்பதை விசாரிக்காமலேயே வந்து விட்டோம் என்பது. பாங்காக் நகரிலேயே ஆங்கிலம் பேசுபவர்களை விளக்கெண்ணெய் ஊற்றித்தான் தேட வேண்டும். ரங்சிட்டில் ஆங்கிலம் புரிந்து கொள்பவர்களைக் கண்டுபிடிப்பதை இன்றைய இளைஞர்களின் பாஷையில் சொல்லப் போனால்: “சான்சே இல்லை.”

சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், முடிந்த வரை முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு கடையில் ஏறி:

“கூன், க்ராக்கர்ஸ் மீ மாய்னா?” (ஐயா, பட்டாசு இருக்கிறதா?”

“அலோய்னா?” (அப்படின்னா? – இதைக் கேட்ட விதம் “என்ன உளறுகிறாய்?”)

“க்ராக்கர்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை சொன்னால் கேட்பவருக்கு ஆங்கிலம் புரிந்து விடுகிற மாதிரி நாம்.

“க்ராக்கார்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை நாம் சொன்னதை திருப்பிச் சொன்னால் ஆங்கிலம் புரிந்து கொள்கிற மாதிரி அவர்.

இது சரிப்படாது என்று அன்புமொழிக்கு தோன்றி விட்டது.

“கூன்” (ஐயா) என்று கடைக்காரரை விளித்து விட்டு ஊமை பாஷையில் பேச ஆரம்பித்து விட்டார். ஒரு விரலை நீட்டி (அதுதான் பட்டாசாம்), பிறகு ஒரு கை தீப்பெட்டி, மறு கையை அதில் உரசி தீக் கொளுத்துகிறமாதிரி பாவலா செய்து, விரலில் வைத்து, “டமார்” என்று கத்தினார்.

கடைக்காரரின் இரு புருவங்களின் இடையே போடப்பட்ட வியப்பு முடிச்சு இந்தக் குரங்கு சேட்டையைப் பார்த்த பிறகும் அவிழவில்லை. அவர் “இந்த கிறுக்கனுங்க என்னதான் சொல்ல வரானுங்க?” என்ற கடுமையான சிந்தனையில்தான் இருந்தார்.

ராமநாராயணனுக்கு இதை ஸ்கெட்ச் போட்டு காண்பித்தால்தான் புரியும் என்று தோன்றியது. ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். அன்புமொழி வாயால் சொன்னதை படமாக வரைந்தார். தீ வைத்து, பட்டாசு வெடித்ததை படமாக விளக்கும் போது, அன்புமொழி மீண்டும் ஒரு எஃபக்டுக்காக “டமார்” என்று கத்தினார்.

கடைக்காரர் மூளையிலும் அந்த நேரம் பட்டாசு வெடித்திருக்க வேண்டும். அவர் முகம் 1000 வாட் பல்பு போட்ட மாதிரி பிரகாசமானது.

“ஓ, பட்டாஸ்?” என்றாரே பார்க்கலாம்.

அடப்பாவி பட்டாசுக்கு தாய்லாந்திலும் பெயர் பட்டாசுதானா என்று நாங்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டோம்.

அந்தக் கடையில் மட்டுமல்ல, ரங்சிட் முழுக்க பட்டாஸ் கிடைக்கவில்லை என்பதும், பாங்காக் சென்று சைனா டவுணிலோ, வேறெங்கோ சென்று பட்டாஸ் வாங்கி தீபாவளிக்கு வெடித்தோம் என்பதும் இந்த தீபாவளி நினைவில் பின்குறிப்புகள்.

Saturday, November 3, 2007

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தேவையா?

பால் அட்வெல் (Paul Attewell) நியூயார்க்கின் சிற்றி பல்கலையிலும் (City University of New York) காதரீன் நியூமேன் (Katherine Newman) நியூ ஜெர்சியிலுள்ள ப்ரின்ஸ்டன் பல்கலையிலும் (Princeton University) சமூகவியல் பேராசிரியர்கள். இவர்கள் இருவரும் இணைந்து இந்தியாவில் இரண்டாண்டு காலமாக ஆராய்ச்சி பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களது ஆய்வு இந்திய செய்தித் தாள்களில் வரும் தனியார் நிறுவன வேலை விளம்பரங்களுக்கு விண்ணப்பம் செய்ததிலிருந்து தொடங்கியது. எல்லாமே பட்டதாரி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி கொண்ட வேலைகள். அனுப்பட்டது ஒரு விண்ணப்பமல்ல; 4800 விண்ணப்பங்கள். வேறு வேறு புனை பெயர்களில். அந்தப் பெயர்கள் மூன்று வகைப்பட்டவை. ஒரு வகை உயர்ந்த சாதிக்காரர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள். இன்னொரு வகை இஸ்லாமிய பெயர்கள். பிறிதொரு வகை தலித்திய பெயர்கள். மூன்று வகையான புனை பெயர்கள் கொண்டவர்களுக்கும் சமமான கல்வி, மற்றும் பிற தகுதிகளே குறிப்பிடப்பட்டன. அதாவது பெயரைத் தவிர மற்றனைத்து விஷயங்களிலும் இந்த கற்பனை நபர்கள் ஒருவருக்கொருவர் சமம்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள் வந்தன. தனியார் நிறுவனங்கள், சாதி, மத அடிப்படையில் தகுதி பார்ப்பதில்லையென்றால், எல்லோரும் ஒரே அளவில்தானே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும்? அதுதான் இல்லை. உயர்சாதிப் பெயர்களைக் கொண்டவர்கள் 100 பேர் அழைக்கப்பட்டார்கள் என்றால், தலித் பெயர்களைக் கொண்டவர்கள் சுமார் 66 பேர் அழைக்கப்பட்டார்கள்; இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டவர்கள் சுமார் 33 பேர் மட்டுமே அழைக்கப்பட்டார்கள்.

இதுவே, தனியார் நிறுவனங்களில் சாதி, மத அடிப்படையில் நிலவும் ஒதுக்கலை (discrimination) அறிவியல் பூர்வமாக நிறுவிய முதல் முயற்சி. தனியார் நிறுவனங்கள் சொல்லிக் கொள்வது போல் அவர்கள் நிறுவனங்களில் சாதி, மத அடிப்படையிலான ஒதுக்கலும், துவேஷங்களும் இல்லை என்பதும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதும் இந்த ஆய்வு முடிவுகளினடிப்படையில் தீவிரமாக மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியவை. இந்த ஆய்வு விரைவில் பிரசுரிக்கப்படவுள்ளது. இது பிரசுரமானவுடன் இட ஒதுக்கீட்டு அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

Monday, October 29, 2007

தலித்திய விமர்சனம்

கடந்த வார இறுதியில் வாசித்தது ராஜ் கௌதமன் எழுதிய “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” (காலச்சுவடு பதிப்பகம், 2005 வெளிவந்த இரண்டாவது பதிப்பு, ரூ 90).

இப் புத்தகத்தை வாங்கியதற்கு பல காரணங்கள் உண்டு. ராஜ் கௌதமன் அவர்களை “சிலுவைராஜ் சரித்திரம்” என்ற அவரது நூலின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் தெரிந்து கொண்டேன். சுயசரிதையினடிப்படையில் பின்னப்பட்ட புதினமான அந்நூல் என்னுடைய மனதைக் கவரவே, தொடர்ந்து அவரது “காலச்சுமை” என்ற நூலையும் வாங்கி வாசித்தேன். இது “சிலுவைராஜ் சரித்திரம்” நூலின் தொடர்ச்சியே. இந்த இரண்டு நூல்களும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளில் சிலவற்றை நான் புரிந்து கொள்ள உதவி செய்யவே, ராஜ் கௌதமன் எழுத்துக்களை மேலும் வாசிக்கும் எண்ணம் எழுந்தது. கூடவே, நமது சமூகத்தில் சாதியமைப்பின் எதிர்காலம் பற்றி எனது மனதில் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும் கேள்விகளில் சிலவற்றிற்காவது “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” நூலில் விடைகள் இருக்கலாம் என்று தோன்றியது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

“தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” 15 கட்டுரைகள் அடங்கிய 185 பக்கப் புத்தகம். 1991லிருந்து 2002 முடிய எழுதப்பட்ட கட்டுரைகள் கால வரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று ரணஜித் குகா என்பவர் எழுதிய ஆங்கில நூலின் சுருக்கமான தமிழ் தொகுப்பு. ஒன்பது நூல் விமர்சனங்கள். இவை தவிர இரண்டு கட்டுரைகள் தீவிர இலக்கியம் சார்ந்தவை. இவற்றில் “பின்னை நவீனத்துவமும் தலித் சிந்தனைகளும்” என்பதையும், “குடும்பம், பெண்ணியம்” ஆகிய இரண்டு கட்டுரைகளையும் என்னால் வாசிக்க முடியவில்லை. மிகவும் செறிவு வாய்ந்த என் கபாலத்திற்குள் மிகவும் செறிவு வாய்ந்த அக் கட்டுரைகள் இறங்க மறுத்து விட்டன.

“தலித்தியப் பார்வையில் பாரதி,” “காலம் பார்த்து வந்த ‘தோட்டியின் மகன்’,” “புனித ஆறுமுகம்” மற்றும் “புதுமைப்பித்தன்: விமர்சனமும் சாதியமும்” ஆகிய நான்கும் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரைகள். ராஜ் கௌதமனின் எள்ளல் தெறிக்கும் உற்சாக நடை எல்லாக் கட்டுரைகளிலும் இருக்கிறதென்றாலும், அது உச்சாணியை எட்டுவது “ஒரு டவுசர் கிழிந்த கதை” என்ற கடைசிக் கட்டுரையில்தான். அக்கட்டுரையின் பொருளுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கதை நடக்கும் ஊர்தான் எனது முன்னோர்களின் கிராமம். அந்த டவுசரின் வலது காலை அணிந்திருந்தவர்கள்தான் எனது முன்னோர்கள். இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.

நூலின் முதல் கட்டுரையான “தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்” என்ற கட்டுரை தேசிய விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் வழிவந்த இலக்கிய முயற்சிகள் எல்லாம் தலித் சமுதாயத்தை ஒடுக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டன என்று சொல்லிவிட்டு, தலித் இலக்கியம் என்றால் என்ன என்று வரையிட முயற்சி செய்கிறது:

எல்லா வகையிலுமுள்ள ஒடுக்கு முறைகளை எதிர்த்து, இனி தனக்குக் கீழ் ஒடுக்குவதற்கு எதுவும் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்குடைய இலக்கியத்தைத்தான் தலித் இலக்கியம் என்று கூறலாம்” என்று சொல்லி விட்டு “இனியொரு சாதியோ, மதமோ, குடும்பமோ, சுரண்டலோ உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம். இத்தகைய அரசியலை மேற்கொண்ட, கருத்தியல் ரீதியில் தலித்துக்களான அனைவராலும் இத்தகு தலித் இலக்கியத்தைப் படைக்க முடியும்” என்கிறது இக் கட்டுரை.

இவ்வளவு விரிவாக சொன்ன பிறகும் தலித்திய இலக்கியம் என்றால் என்ன என்பதை என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியாததற்கு என் கபால ஓட்டின் செறிவு ஒரு காரணமென்றாலும், “எவர்தான் ராஜ் கௌதமன் அவர்கள் தலித் இலக்கியம் புனைவோருக்கு விதிக்கும் மிகக் கடினமான தகுதியினை எட்ட முடியும்?” என்ற மலைப்பும் ஒரு காரணம். இன்னொரு இடத்தில் (தலித்தியப் பார்வையில் பாரதி, பக்கம் 149) “சாதி, அரசியல், நாடு, இனம், மொழி, மதம், பால், பொருளாதாரம் முதலிய பல்வேறு நிலைகளில் ஏதாவது ஒரு சிலவற்றால் மனிதர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்களே” என்கிறார். இதனுடைய இன்னொரு பக்கம், எவ்வளவுதான் ஒடுக்கப்பட்டாலும், மனிதன் தன் தன்மையிலேயே ஒடுக்குபவனாகவும் இருக்கிறான். இது மனிதனுக்கு மட்டுமல்ல மனுசிக்கும் பொருந்துவதுதான். எனவேதான் ராஜ் கௌதமன் அவர்களின் தகுதிக்கு உட்பட்டு யார் இலக்கியம் படைக்க முடியும் என்று தோன்றுகிறது. மேலும் சாதியும், மதமும், குடும்பமும் உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம் என்பதும் விவாதத்திற்குரியதாகிறது. இம் மூன்றில் மதமும், குடும்பமும் உருவாகதபடி செய்வதன் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே. ஒரு வேளை சுரண்டலுக்குட்படுத்தும் சாதியும், மதமும், குடும்பமும் உருவாகாதபடியான செயல்பாட்டையே ஆசிரியர் குறிப்பிடுகிறாரோ என்னவோ. மூன்றாவது வரையறையான தலித்துகள்தான் தலித் இலக்கியத்தைப் படைக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பது மட்டுமே எனக்கு தெளிவாக புரிகிறது.

தலித் இலக்கியம் பற்றி ஒரு தெளிவான பார்வை ராஜ் கவுதமன் அவர்களது கட்டுரையில் எனக்கு கிட்டவில்லை என்பதற்கு இக்கட்டுரை எழுதப்பட்ட காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். இது எழுதப்பட்ட 1991ல் தலித் இலக்கியம் என்று ஒன்று உருவாக்கப்படவில்லை என்றே ராஜ் கவுதமன் கருதுகிறார். இல்லாத ஒன்றைப் பற்றி தெளிவான பார்வையை எப்படி உருவாக்க முடியும்? ஆனால் பிற்காலத்தில் தலித்திய இலக்கியம் உருவெடுக்க ஆரம்பித்தபின் தனது கருத்துக்களை தெளிவு படுத்தியிருக்கலாம். தனது குறுகிய முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்:

இங்கு பிரசுரமாகும் கட்டுரைகளில் நான் கை வைக்கவில்லை. அந்தந்தக் காலத்தில் வெளிவந்த தடயங்கள் இருக்கட்டும் என்பது என் விருப்பம். இந்தப் பத்தாண்டு காலத்தில் சில கருத்துக்களை நான் மாற்றிக் கொண்டிருக்கலாம்; சில வளர்க்கப்பட்டிருக்கலாம்; சில கைவிடப்பட்டிருக்கலாம்

இருக்கலாம், ஆனால் புத்தகத்தின் தலைப்பை வலியுறுத்தும் முதல் கட்டுரையிலாவது, குறைந்த பட்சம் ஒரு பின்குறிப்பு மூலமாகவாவது தனது கருத்துக்களை ஆசிரியர் தெளிவு படுத்தியிருந்திருக்கலாம். அல்லது பின்னர் எழுதப்பட்ட “புனித ஆறுமுகம்”, “சனதருமபோதினி: சின்னக் கதையாடல்கள்” போன்ற விமரிசனங்களிலாவது தலித் இலக்கியம் என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கியிருக்கலாம்.

“புனித ஆறுமுகம்” என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். இமையம் என்பவர் எழுதி, க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஆறுமுகம்’ என்ற புதினத்தின் விமர்சனமே இக்கட்டுரை. தலித் ஒருவன் நாயகனாக இருப்பதால் ஒரு நூல் தலித் இலக்கியமாகி விட முடியாது என்பது இக்கட்டுரையில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் இருக்கிறதாக கருதுகிறேன். இக்கட்டுரையை நான் தமிழில் படித்த நூல் விமர்சனங்களில் சிறப்பானதாகக் கருதுகிறேன். தவறுகளைக் காணும் போது, நாவலாசிரியர் தனது படைப்புச் சுதந்திரத்தை முன்னிட்டு தப்பிப்போக இடமுள்ள இடங்களில் கூட அவரை நழுவ விடாமல் நறுக்கென்று தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்யும் ராஜ் கவுதமன், நாவலின் சிறப்புக்களையும் வெகு உற்சாகமாக பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. இதைப் போன்றே, அல்லது இதை விடச் சிறப்பாகவே புதுமைப்பித்தன் அவர்களது மற்றும் புதுமைப்பித்தன் பற்றிய படைப்புக்களையும் அணுகியிருக்கிறார். புதுமைப்பித்தன் மீது ராஜ் கவுதமனுக்கு ஒரு பெரும் கிறக்கமே இருக்கிறது இக்கட்டுரைகளில் புலனாகிறது. இருப்பினும், அவர் மீது கறாரான விமர்சனங்களை வைக்க தயங்குவதில்லை. புதுமைப்பித்தன் ஸ்ரீராமாநுஜலு நாயுடு என்பவரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதினார் சொல்லிவிட்டு, இது புதுமைப்பித்தனுக்கும் பொருந்தும் என்கிறார்.

ஸ்ரீராமாநுஜலுநாயுடு கதை சொல்வதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த்தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திர அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞர் என்பதை நாம் மறந்து விடுகிறோமா? அம்மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க வேண்டும்

இந்தப் பார்வை ராஜ் கவுதமனுக்கு வாய்த்திருப்பது அவரது விமரிசனங்களிலெல்லாம் வெளிப்படுகிறது. “தலித்தியப் பார்வையில் பாரதி” என்ற கட்டுரையில் அவர் பாரதியை மூன்று நிலைகளில் பார்க்கின்றார். ஒன்று, தான் பிறந்த சாதியின் கொள்கைக்கு மாறான கொள்கையை பின்பற்றியதால் அந்த சாதியால் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பாரதி. இரண்டாவது, சொந்தச் சாதியின் ஒடுக்குமுறைகளைக் கடுமையாக விமர்சித்த பாரதி. மூன்றாவது, தலித் விடுதலை பற்றிய ஆர்வம் கொண்ட பாரதி. இரண்டாவது, மூன்றாவது அணுகுமுறைகளில் பாரதியின் கருத்துக்களில் இருந்த பிழைகளை சுட்டிக் காட்டத் தயங்கவில்லை. அவரது காலத்தின் பிடிக்குள்ளிருந்து பாரதியால் முற்றிலுமாக மீள முடியவில்லை என்றும், வருணம், சாதிபேதம் பற்றி இந்து அறிவுலகம் கூறி வந்ததை பாரதியும் பிரதிபலித்தார் என்று கூறும் ராஜ் கௌதமன், சமத்துவத்தை நிலவ வேண்டும் என்பதில் பாரதியிடம் வெளிப்படுத்திய விதத்தை “உள்ளார்ந்த ஆர்வத்தை, நேர்மையை, ஒரு குழந்தையின் கபடமின்மையை, ஒரு கவிஞனின் கனவை, ஒரு பித்தனின் கற்பனையை யாராலும் சந்தேகிக்க முடியாது” என்று விவரிப்பது ராஜ் கௌதமனின் உள்ளத்தைத் திறந்து கொட்டும் வார்த்தைகளாகத் தோன்றுகிறது.

தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும், நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்.” என்று முதல் கட்டுரையில் வரைந்த தலித்திலக்கியத் தகுதியனடிப்படையில் ராஜ் கௌதமனின் “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” தலித்திலயக்கியம் ஆகாது. இப்புத்தகம் சுகமான வாசிப்பனுபவத்தைத் தருவது மட்டுமல்ல, தனது நிதானமான, அறிவுபூர்வமான பார்வையிலும், அழகான, தெளிவான நடையிலும், ஆங்காங்கு கொப்பளிக்கின்ற குறும்பிலும், உற்சாகத்திலும், உணர்விலும் வாசிப்பவர்களிடம் செறிவான கருத்துத் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

தமிழ் பேராசிரியர் என்பதாலோ என்னவோ, சில நூல் விமர்சனங்களில் நூலில் கண்ட சிறு பிழைகளை கூட குறிப்பிட ராஜ் கௌதமன் மறப்பதில்லை. ஒரு நூலின் ஒற்றுப் பிழைகள் கூட கடும் கண்டனத்துக்குள்ளாகின்றன. அது போன்றே, காலச்சுவடு நிறுவனத்தால் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் இந் நூலில் முதல் கட்டுரையில் பின்குறிப்புகள் ஒன்று (குறிப்பு எண் 5) விட்டுப் போனது, குறிப்பு எண் 13 வரை குழப்பங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
Posted by Picasa

Monday, October 22, 2007

தமிழரின் பணிவும் குழைவும்

சில புத்தகங்கள் வாங்க கடந்த வாரம் நாகர்கோவிலிலுள்ள காலச்சுவடு பதிப்பக அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். பதிப்பக நிறுவனரும், தமிழ் எழுத்தாளருமான காலம் சென்ற சுந்தர ராமசாமி அவர்களது இல்லத்தின் முன்பகுதி பதிப்பக அலுவலகமாக இயங்குகிறது.

ஓடு வேய்ந்த முகப்பு பகுதியில் நின்றிருந்த ஒருவர் நட்புடன் புன்னகைத்து என் தேவையைக் கேட்டார். கட்டிடத்தின் வலது புறமிருந்த முன்னறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, பதிப்பகத்தின் விலைப்பட்டியலைக் கொடுத்தார். எனக்கு தேவையான புத்தகங்களை தெரிவு செய்து விட்டு, அவை எடுத்துக் கொடுக்கப்படும் வரையில் காத்திருந்த போது, அந்த அலுவலகத்தின் அலமாரி ஒன்றின் கீழ்ப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு தாள் என் கவனத்தை ஈர்த்தது. அது அந்த அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பட்டியல். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த தாளில் பெயர்கள் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தப்பட்டிருந்தன:

Sudarshan Stores
Sudarshan Books
Sir
Madam



முதலாளியின் பெயரைத் தட்டச்சு செய்தால் கூட அவரது மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடுமென அஞ்சி “Sir” என்று விளித்த, அந்த முகமறியா ஊழியர் தமிழர்கள் காட்டும் மிதமிஞ்சிய பணிவின் அடையாளமாக எனக்குத் தோன்றினார்.

இறைவனையும் தோழனாகப் பாவித்து, நீ, அவன் என்று அழைத்த தமிழ் சமுதாயம் தனக்கு மேலிருக்கும் மனிதர்களிடம் மிதமிஞ்சிய பணிவினைக் காட்டத் தொடங்கியது எப்போது என்று தெரியவில்லை.

நம் மண்ணில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த சாதியமைப்பும், நிலவுடமையாளர் ஆதிக்கமும், பின்னர் காலனியாதிக்கமும், அதன் விளைவாகப் பிறந்த அதிகார வர்க்கமும் இந்த மனநிலைக்கு காரணமாக இருப்பதில் சந்தேகமில்லை. உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களின் குடும்பத்திலுள்ள சிறுவர்கள் கூட, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதியவர்களின் பெயர் சொல்லி, ஒருமையில் அழைப்பதை கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன். எனது நண்பரொருவர் காவல் துறையில் உயர்ந்த நிலை பதவி ஒன்றில் இருக்கிறார். அவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவராதலால் அனைவரிடமும் பணிவாக, இனிமையாக பழகுபவர். ஒரு முறை அவர் அலுவலகத்தில் இருக்கும் போது வயது முதிர்ந்த காவலர் ஒருவரை “நீ, போ” என்று ஒருமையில் அழைப்பதை வியந்து பார்த்த போது “இங்கயெல்லாம் இதுதான் வழக்கம். இப்படி நடத்தலேனா நம்ம தலைக்கு மேல ஏறி உக்காந்துருவாங்க” என்றார். நமது தமிழ்ச் சமுதாயத்தின் பணிவும் மரியாதையும் பெரும்பாலும் மனித நேயத்தில் விளைவதில்லை; ஒரு வித அச்சத்திலும், அடிமையுணர்விலுமே விளைகிறது. முகத்திற்கு முன்னால் பணிவும் குழைவும் காட்டும் பலர், முகம் மறைந்ததும் சம்பந்தப்பட்ட நபரை சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சிப்பதை நாம் பல தடவை பார்த்திருக்கலாம்.

ரோபோர்ட்டோ பெனினியின் “Life is beautiful” படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் பெனினி அவரது மாமா நடத்தும் விடுதி ஒன்றில் உணவு பரிமாறும் பணியில் சேர செல்வார். அவரது மாமா அவரிடம் பல கேள்விகள் கேட்பார். அதில் ஒன்று எப்படி விடுதிக்கு உணவருந்த வருகிறவர்களிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டுமென்பது, குறிப்பாக தலையை எப்படி தாழ்த்த வேண்டுமென்பது. பெனினி முதலில் லேசாக தலையைத் தாழ்த்துவார். அதற்கு அவர் மாமா எதுவும் சொல்லாமல் இருக்கவே, தாழ்த்தி, தாழ்த்தி இடுப்பை வளைத்து வணங்குமளவுக்கு போய் விடுவார். அதற்கு அவர் மாமா சொல்வது:

“முட்டாள், சூரியகாந்தி மலர்களைப் பார்த்திருக்கிறாயா? அவை சூரியனுக்கு முன்னால் லேசாகத் தலை வணங்கி நிற்கின்றனவே. அப்படி செய்தால் போதுமானது. ஒரேடியாக சூரியகாந்தி தலையை சாய்த்து விட்டதென்றால் அது செத்துப் போய் விட்டதென்று அர்த்தம். நீ பரிமாறுபவன். பணிவிடைக்காரன் அல்ல (You serve. You are not a servant). பரிமாறுவது என்பது உன்னதமான ஒரு கலை. கடவுள்தான் மனிதனின் முதல் பரிசாரகன். கடவுள் மனிதனுக்கு பரிமாறுகிறார். ஆனால் பணிவிடைக்காரன் ஆவதில்லை”

காலச்சுவடு பதிப்பகத்தில் நான் கடந்த வாரம் வாங்கி வந்த புத்தகங்களில் ஒன்று “ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்” என்பது. இது சுமார் 70 வயதான சுந்தர ராமசாமி அவர்கள், சுமார் 30 வயதுள்ள தடா கைதியான ஏழுமலை என்பவருக்கு எழுதிய பல்வேறு கடிதங்களின் தொகுப்பாகும். இதில் 31.03.03 தேதியிட்ட கடிதத்தில் சுந்தர ராமசாமி பின்வருமாறு எழுதுகிறார்:

“நீங்கள் என்னை ஐயா என்று அழைத்தீர்களானால் அது எனக்குக் கூச்சத்தையே தரும். என் பெயர் சொல்லியே அழைக்கலாம். நட்பும் மதிப்பும் நம் மனதிற்குள் இருந்தால் பிற விஷயங்கள் எல்லாம் சம்பிரதாயமே.”

Monday, October 15, 2007

எலியும் சுண்டெலியும், மணிரத்னத்தின் குரு, அகத்தியனின் அம்னீசியா

இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக் கிழமை கூட தபால் போட முடியாமல் போய் விட்டது. தீவிரமான பணியின் காரணமாக அல்ல; தீவிரமான விடுமுறையின் காரணமாக. பிள்ளைகளுக்கு காலாண்டு விடுமுறை. அதே நாட்களில் எனக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருக்க வேண்டிய கட்டாயம். எனவே மற்ற விடுமுறைகளில் ஏற்படுவது போன்ற “எங்கே போவது” என்பதை தீர்மானிக்கும் குழப்பங்கள் இல்லாத விடுமுறை.

சென்னையில் பிள்ளைகளுக்கென்று பல திருத்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சத்யம் திரையரங்க வளாகம். அங்கே, மேற்கத்திய திரையரங்களுக்கு இணையான ஸ்டுடியோ 5 மற்றும் 6 டிகிரிசில் திரைப்படம் பார்ப்பது எனக்கும் உவப்பான ஒன்றே. ஆனால் இம் முறை குழந்தைகளுக்கான திரைப்படமான ராட்டாட்டூயி (Ratatouille) நாங்கள் பார்க்க விரும்பிய தினத்தில் சத்யம் எலைட்டில் போடப்படுவதாக சத்யத்தின் இணைய தளமான www.thecinema.in சொன்னது. முதலில் சத்யம் எலைட் என்பது சத்யம் வளாகத்திற்குள் இன்னொரு அரங்கமோ என்று நினைத்தேன். போன பிறகுதான் தெரிந்தது சத்யம் அரங்கத்தின் பால்கனிதான் சத்யம் எலைட் என வழங்கப்படுகிறது என.

சில ஆண்டுகளுக்கு முன் முதலாவது ஹாரி பாட்டர் பார்க்க சத்யம் அரங்கம் சென்றோம். வசதியில்லாத இருக்கைகள், தெளிவில்லாத ஒலியனுபவம் என்று அவ்வளவு திருப்திகரமாக அந்த அனுபவம் அமையவில்லை. ஆனால், இப்போது அரங்கத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சத்யம் எலைட் செல்லும் வழியில் ஜப்பானிய உள்ளலங்கார அமைப்புகளைச் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. சத்யம் இணைய தளத்திலேயே முன்பதிவு செய்து கொள்ளலாம் (செக்யூரிட்டி செர்ட்டிபிகேட் எக்ஸ்பைர்ட் என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்டு செய்தேன்). இருக்கைகளை தெரிவு செய்யலாம் (ரூ 10 கட்டணமாகச் செலுத்தி இதையும் செய்தேன்). நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொண்டு இருக்கைக்கு வரவழைக்கலாம் (சோம்பேறித்தனத்திற்கும் ஒரு அளவிருக்கறபடியால் இதை செய்யவில்லை). நுழைவுச் சீட்டுகளை அச்சடித்துக் கொள்ளலாம் (இதைச் செய்யாமலிருக்க முடியாது. அரங்க வாசலில் நமது அச்சடித்த காகிதத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் நுழைவுச் சீட்டை கொடுத்து விடுகிறார்கள்).

ராட்டாட்டூயி அலுப்பு தட்டுகிற படம். “ஏண்டா வந்தோம்” என்ற அளவிற்கல்ல, “கொடுத்த 500 ரூபாய்க்கு வேறு ஏதாவது படம் பார்த்திருக்கலாமே” என்ற எண்ணத்தையும், ஓரிரண்டு கொட்டாவிகளையும் அவ்வப்போது எழுப்பும் அளவிற்கு அலுப்பு தட்டுகிறது. காரணங்கள் பல. ஒன்று, கடந்து 3-4 ஆண்டுகளாக வெளிவந்து, வெற்றி பெற்ற அனிமேஷன் படங்களின் சூத்திரத்தை அப்படியே பின்பற்றுகிறது இந்தக் கதை. கதை சொல்ல வரும் நன்னெறிகளும் டிட்டோ: விடா முயற்சியின் மேன்மை; நட்பின் இலக்கணம்; இத்யாதி, இத்யாதி. இந்த பரிட்சயம் அலுப்பைத் தூண்டுகிறது. இன்னொரு காரணம்: இந்தப் படத்தில் மனிதர்களாக வருகிறவர்கள் அத்தனை பேரும் படு சீரியசான பேர்வழிகள். எலிகளைத் துரத்த துப்பாக்கியைத் தூக்கும் கிழவியிலிருந்து, சிடுசிடு முகத்து சமையல் கலை விமர்சகன் வரை. சிரிக்க மறுக்கிறவர்களால் சிரிக்க வைக்கவும் முடியாது. எலி நாயகனும், அவரது தம்பியும், அப்பாவும் சிரிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: எவ்வளவுதான் நெருங்கிய சொந்தக்காரர்கள் ஆனாலும் சுண்டெலிக்கு இருக்கிற க்யூட்னெஸ் (எ.கா: மிக்கி மவுஸ், டாம் (&ஜெரி), ஸ்டூவர்ட் லிட்டில்) எலிக்கு கிடையாது. கூடவே, இப்படி சொல்வதற்காக உலகம் என்னை பிற்போக்குவாதியாக நிராகரித்தாலும் பரவாயில்லை, ஆனால் சமையல் கலையில் ஒரு எலி வல்லுநர் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒரே படத்திற்கு 500 ரூபாயை விரயம் செய்து விட்ட படியால் இனிமேல் படங்கள் ஒன்று டிவியில், அல்லது டிவிடியில் என்று தீர்மானித்தோம். மணிரத்னத்தின் “குரு”வை ஒரு முறை திருவனந்தபுரத்திலிருந்து மும்பை செல்லும் போது விமானத்தில் அரைகுறையாகப் பார்த்திருந்தேன். இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் உதவியோடு கதை புரிந்தது. பிடித்திருந்தது. எனவே, படத்தை மீண்டும், முழுதாக, தமிழில் அனுபவிக்க எண்ணி, மோசர் பேயரின் விசிடி வட்டில் வந்ததை ஸ்பென்சர் ஃபுட்சில் மளிகை சாமான்கள் வாங்கும் போது 28 ரூபாய்க்கு வாங்கினேன்.

இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் ஓட படத்தை ரசித்த அளவுக்கு தமிழில் ரசிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் படத்தில் உபயோகப்படுத்தப்படும் தமிழ். குஜராத்தின் உடைகளும், உடல் மொழியும் நிறைந்த மனிதர்கள் திருநெல்வேலி் தமிழில் பேசுவது அபத்தமாக இருக்கிறது. கதை ஆரம்பமாகும் பகுதி இலஞ்சி, திருநெல்வேலி ஜில்லா என்று திரையில் போடுவது இந்த அபத்தத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. பூவரசம் பூ போன்ற ஒரு பெரிய மலரை எடுத்து காதில் செருகுகிற உணர்வுதான் ஏற்படுகிறது.

2007ன் தொடக்கத்தில் வந்த “குரு”விற்கு இணையத்தில், குறிப்பாக பதிவு தளங்களில் பல விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. என் கவனத்தை ஈர்த்தது பினாத்தல்கள் என்ற பதிவு தளம் (http://penathal.blogspot.com), குறிப்பாக: http://penathal.blogspot.com/2007/01/16-jan-2007.htmlv. மணிரத்னம் திருந்தவே மாட்டாரா என்று அலுத்துக் கொள்ளும் பதிவர், “குரு” எப்படி மணிரத்னத்தின் சூத்திரத்துக்குள் அடங்கி விடுகிறது என்று விபரமாக சொல்கிறார். மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யா ரை அறிமுகம் – இரண்டு பாடல்களும் எனக்கும் ம.ர.வின் பழைய படங்களை ஞாபகப்படுத்தியது உண்மையே. அது போலவே, “நல்லவனா, கெட்டவனா?” கேள்வியும். ஆனால், மணிரத்னத்தின் படைப்புகளை ஒரு சூத்திரத்திற்குள் அடக்க முயலும் பார்வையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி சூத்திரத்திற்குள் முடியும் என்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்” மற்றும் “ஆய்த எழுத்து” ஆகியவற்றை எங்கே நிறுத்துவது. வரலாற்றை, குறிப்பாக சமீப கால வரலாற்றை சொல்ல முடிவது சுலபமல்ல. அதுவும் “சிவாஜி” போன்ற படங்களை ஓட வைக்கும் தமிழ் ரசிக கூட்டத்தில் இது போன்ற படங்களை வணிக ரீதியாக வெற்றி பெற வைப்பது சுலபமே அல்ல (வேண்டுமானால் ஞானராஜசேகரிடம் கேட்டுப் பாருங்கள்). இந்த ரீதியிலும், படம் அலுக்க வைக்காமல் ஓடுகிறது என்ற வகையிலும் “குரு” வெற்றிதான்.

திருபாய் அம்பானி வாழ்க்கையில் நடந்த அதைக் காண்பிக்கவில்லை, இதைக் காண்பிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமாகாது. எல்லாவற்றையும் காண்பிக்க வேண்டுமானால் படம் 10-12 மணிநேரமாவது ஓட வேண்டும். அப்போதும் இதே குறையைச் சொல்ல ஆட்கள் இருப்பார்கள். திருபாய் அம்பானியின் வாழ்க்கையின் மூலக்கூறு ஒன்றே ஒன்றுதான். அது, ஏற்கனவே உள்ளே சென்று வெற்றி பெற்றவர்கள், மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று பூட்டி வைத்திருந்த இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பிற்குள் அம்பானி முன்னர் எவரும் செய்திராத அளவு தந்திரத்தோடும், உக்கிரத்தோடும் தடைகளை உடைத்தெறிந்து வெற்றியடைந்தார். இதை இந்தப் படம் சாதாரண பார்வையாளனுக்கு கூட வெற்றிகரமாகக் காண்பிக்கிறது என்றே கருதுகிறேன்.

மூன்றாவதாக பார்த்தது கலைஞர் டிவியில் “செல்வம்” என்ற படம். பார்க்க வேண்டும் என்று பார்த்ததல்ல. போட்ட நேரத்தில் தொலைக்காட்சி முன்னர் இருந்த தற்சமயம்தான் காரணம். தலைப்பெல்லாம் முடிந்த பிறகுதான் பார்க்க ஆரம்பித்தோம். ஆரம்பக் காட்சிகள் வித்தியாசமாக இருக்க, “இது என்ன படம்?” என்ற ஆர்வம்தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. தமிழ் திரைப்படங்களில் அநியாயத்திற்கு குதறப்பட்ட மனநல நிலைமைகளில் ஒன்றான அம்னீசியா இந்தப் படத்தில் நடு நாயகம் செலுத்துகிறது.

அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட செல்வம் என்ற இளைஞன் (நடிகர் நந்தா) உண்மையில் யார் என்ற கேள்விக்கான விடையை நோக்கிய பயணம்தான் இந்தப் படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது. நடிகர் நந்தா சிறப்பாக நடித்திருக்கிறார். இயலாமை தரும் கோபம் மற்றும் சோகம், இவற்றோடு இளமை தரும் வேகம் மூன்றையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மருத்துவர்களில் ஒருவரான நடிகை உமாவின் நடிப்பும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக அவரது காதலைச் சொல்லும் காட்சி. தொடக்க காட்சிகளில் வரும் மருத்துவமனைக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன (சிகிட்சைக்கு பலமுறை பணம் கொடுக்க முன்வரும் நந்தாவிடம் “அது வேண்டாம்” என்று மறுக்கும் மருத்துவர் தவிர).

இப்படி விறுவிறுப்பாக செல்லும் படம் செல்வம் யாரென்று தெரிந்ததும் தூய்மையான அபத்தங்களின் திசையில் பயணிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை இயக்குநர் அகத்தியனுக்கும் முன்பாதிப் படத்தைப் பற்றி அம்னீசியா ஏற்பட்டிருக்கலாமோ?

Tuesday, October 2, 2007

காந்தியும் கக்கூசும்

நானும் சுந்தர ராமசாமியும் நடந்து நாகர்கோயிலில் இருளப்பபுரம் போய்ச் சேர்ந்தோம். நெருக்கமான வீடுகள். திறந்த சாக்கடை வாய்கள். குப்பைக் குவியல்கள். எங்கும் மலம் மலம் மலம் … சுந்தர ராமசாமி “பாத்தேளா? சுதந்திரம் கெடைச்சு அம்பது வருஷமாச்சு. இன்னும் கக்கூஸ் போகத் தெரியலை நமக்கு. இந்த ஒரு விஷயத்தால ஹெல்த் பிரச்சினை கெளம்பி நம்ம நாட்டுக்கு வருஷத்தில எவ்வளவு கோடி நஷ்டம்னு கணக்கு போட்டிருக்கோமா? இதைப் பத்திக் கவலைப்பட்ட கடைசி அரசியல்வாதி காந்தி. தேச விடுதலைக்குச் சமானமா கக்கூஸ் போறதைப் பத்திப் பேசிட்டிருந்தார். அவர் ஒரு கிராமத்துக்குப் போறச்ச பின்னால ஒருத்தர் அவரோட டாய்லெட்ட கொண்டு போறார். அதை அவரோட பதாகை மாதிரின்னு டாமினிக் லாப்பியர் அவன் புஸ்தகத்தில சொல்றான். கம்பு வச்சிண்டிருக்க காந்தியை சிலையா நிக்க வைக்கிறோம். கக்கூஸ் க்ளீன் பண்ற குச்சியோட நிக்கிற காந்தியையன்னா வைக்கணும்….அவருக்கு இந்த மக்களோட பிரச்சினை என்னான்னு தெரியும். அதுக்கு உள்ளுணர்வெல்லாம் ஒண்ணும் காரணமில்ல. அவர் இங்கெல்லாம் வந்தார். இந்த ஜனங்க கிட்ட பேசினார். அவ்ளவுதான். இன்னைக்கும் சுதந்திரம் கிடைச்சு அரை நூற்றாண்டுக்கு அப்புறமும் நாம இங்க வர ஆரம்பிக்கலை. நம்ம அரசாங்கம் இந்த மக்களுக்கு கோடிக்கணக்கில பணம் செலவு பண்ணி நலத் திட்டங்களைப் போடறாங்க. ஆனா இவங்க கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேக்கிறதில்ல. வெட்டினரி டாக்டர்னா நம்ம அரசியல்வாதிங்க…இதெல்லாம் ஆடுமாடுங்க….” என்றார். இருளில் ஏதோ ஒரு சாலைக்கு வந்து பஸ் பிடித்து வீடு திரும்பினோம். “இங்க இருந்த அமைப்புகள்லாம் தாறுமாறாப் போச்சு. புதிய அமைப்பை இத்தனை வருஷம் கழிச்சும் சரியா உருவாக்க முடியலை. இந்த அளவுக்குப் பெரிய தேசத்தில கீழ் மட்டத்தை மேல் மட்டம் நேரடியா ஆளணுமானா அந்தத் தொலைவை இணைக்கிற அளவுக்கு அதிபிரமாண்டமான அதிகார வர்க்கம் தேவை. அதை வெள்ளைக்காரன் உருவாக்கினான். நேருவும், அம்பேத்கரும் அதே மையப்படுத்தற போக்கைப் பின்பற்றினதனால அந்த அதிகார அமைப்பு பெரிய பூதம் மாதிரி வளந்து போச்சு. அதுதான் இன்னைக்கு இந்தியாவோட மிகப் பெரிய சாபம். வீட்டு முன்னாடி மரம் நிக்கற மாதிரி அரசாங்கத்துக்குப் பக்கத்தில அதிகார அமைப்பு நிக்கணும். இங்க என்னன்னா மரத்துமேல வீடு இருக்கற மாதிரி இருக்கு…அதை அரசாங்கம் ஒண்ணுமே செய்ய முடியாது, மக்களும் ஒண்ணும் செய்ய முடியாது…உண்மையில் இங்க சுதந்திரம் கிடைச்சது அவங்களுக்கு மட்டும்தான்”

மேற்காணும் பத்தி என் மனதில் நீண்ட நாட்களாகவே நிற்கும் ஒன்று. காந்தி பிறந்த தினமான இன்று இதைப் பதிய விரும்பினேன். இதன் மூலம்: பக்கங்கள் 105-106, ஜெயமோகன் எழுதிய “சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்” புத்தகம். உயிர்மை பதிப்பக தயாரிப்பான இப் புத்தகம் 2005ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலமானபோது வெளியிடப்பட்டது. தமிழில் அஞ்சலியாக எழுதப்பட்டவற்றில் வெகு சிறப்பானது. சுந்தர ராமசாமியின் வாழ்வையும் படைப்புக்களையும் மட்டுமின்றி, அவரது சமகாலத்தில் சமூகத்தைப் பாதித்த நபர்களையும், போக்குகளையும், நிகழ்வுகளையும் பற்றிய அவரது சிந்தனைகளை எடுத்து வைக்கிறது இந்த நூல்.

Monday, September 17, 2007

கால் தலை கணவாய்

மனஓசை என்ற பதிவுத்தளத்தில் அதன் ஆசிரியர் சந்திரவதனா செல்வகுமரன் என்பவர் “கணவாய்க் கறியும் அப்பாவும்” என்ற தலைப்பில் சில நினைவுகளை எழுதியிருந்தார். அதற்கிட்ட பின்னூட்டங்கள் பலருக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு, கணவாய் என்பது என்னது என்று தெரியவில்லை என்று சொல்லின. விளக்கி நான் அளித்த பின்னூட்டம் நீண்டு விட்டதால், அதையே தனியாக ஒரு பதிவாக இடலாம் என்று எண்ணி இந்த முயற்சி.

ஈழத்தில் கணவாய் என்றழைக்கப்படுவது தமிழ்நாட்டில் கணவாய், கடம்பா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. வட தமிழ்நாட்டிலும், தென் தமிழ்நாட்டிலும் பல மீன்களுக்கு பெயர்கள் வேறுபடுகின்றன (உதாரணம்: வடக்கு – வவ்வால், தெற்கு – வாவல்; வடக்கு – வஞ்சிரம், தெற்கு – சீலா அல்லது நெய்மீன்; வடக்கு – சுதும்பு, தெற்கு – குதிப்பு). அது போல் இதற்கு வடக்கில் பெயர் கடம்பா. தெற்கில் கணவாய். மலையாளத்தில் கணவா.

சிலர் கணவாயை கணவாய் மீன் என்று அழைத்தாலும் இது மீனல்ல. முதுகுத்தண்டு இல்லாத ஒரு கடல் வாழி (Marine invertebrate). கணவாயில் இரண்டு வகை இருக்கிறது – (1) squid எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கண்ணாடி போல தெளிவாக, மெல்லியதாக இருக்கும்; (2) cuttlefish எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கனமாக, வெள்ளையாக இருக்கும். கணவாய் cephalopod எனப்படும் வகையினது. Cephalo என்றால் தலை, pod என்றால் கால் – அதாவது தலையோடு கால்கள் உள்ள பிராணி. மொத்தமாக எட்டுக் கால்கள். ஆனால் சிலந்திக்கும் இதற்கும் நெருங்கிய சொந்தம் கிடையாது. நத்தை, சங்கு, சிப்பி வகைகளுக்கு ரொம்ப சொந்தம். அவைகளுக்கு வெளியே இருக்கும் ஓடு, இவற்றிற்கு உள்ளே இருக்கிறது. இவைகளுக்கு வெளியே இருக்கும் ருசியான தசைப் பகுதி, அவற்றிற்கு உள்ளே இருக்கிறது. அவைகளுக்கு ஓடு பாதுகாப்பு. இவற்றிற்கு ஓடுவதுதான் பாதுகாப்பு. கருப்பு மையை உமிழ்ந்து விட்டு அதி விரைவாக நீந்தி தப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திமிங்கிலம், சுறா, சந்திரவதனா அவர்களின் வீட்டுச் சட்டி முதலானவற்றில் விதி முடிந்து விடும்.

கணவாய் மீன்கள் தமிழ்நாட்டில் ஓரளவு கிடைத்தாலும் கடல்புரத்து மக்கள் தவிர வேறு எவரும் விரும்பி உண்பதில்லை. கேரளாவில் ஓரளவு பரவலாக கணவாய் உண்ணப்படுகிறது. கடல் உணவை ரொம்ப தீவிரமாக உட்கொள்ளும் வங்காளிகள் இதை சாப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.

உலகளவில் சீனா, ஜப்பான், கொரியா, தென்கிழக்காசியாவிலும், மத்திய தரைக்கடலையொட்டிய தென் ஐரொப்பாவிலும் (குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின்), இக்கலாச்சாரம் உள்ள தென்னமரிக்காவிலும், இது விரும்பி உண்ணப்படுகிறது. கணவாய்க்கு மிக நெருங்கிய சொந்தமான ஓக்டோபஸும் இந்நாடுகளில் உண்ணப்படுகிறது. ஜப்பான், கொரியாவில் பச்சையாகவும், காய்கறிகளுடன் லேசாக வதக்கியும் உண்கிறார்கள். ஜப்பானிய டெம்பூரா (tempura) முறையில் வட்ட, வட்டமாக நறுக்கிய கணவாயை மாவில் போட்டு பஜ்ஜி போல பொரித்தெடுத்து சாப்பிடலாம். இதையே கலமாரி (kalamari) என்ற பெயரில் பல அமெரிக்க உணவகங்கள் இப்போது வழங்குகின்றன. ஆனால் கலமாரி என்பது ஸ்பானிய மொழியில் கணவாயின் பெயர். இப்போது பாருங்கள்:

கட்டில் ஃபிஷ், ஸ்க்யிட் -- ஆங்கிலம்
கணவாய், கடம்பா – தமிழ்
கணவா – மலையாளம்
இகா – ஜாப்பனிஸ்
கலமாரி – ஸ்பானிஷ்

ஆக, க் அல்லது க்-ன் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லா மொழிகளிலும் கணவாயின் பெயரில் இருக்கின்றன. இது தற்செயலானதா?

கணவாய் சமைக்கும் போது இதை எவ்வளவு விரைவாக சமைத்து முடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் இதன் தசை பச்சையாகவே சற்று ரப்பர் பதம் கொண்டது. சமைக்க சமைக்க இது மேலும், மேலும் ரப்பராகி விடும். இருப்பினும் நம் ஊரில் இதை, மற்ற இறைச்சி வகைகளாக நினைத்துக் கொண்டு, அதிகமான நேரம் அடுப்பில் வைத்துக் கிண்டிக், கிளறியே சாப்பிடுகிறோம். இப்படி சமைக்கப்பட்ட உணவில் நாம் சுவைப்பது தசையையல்ல, அது சுமந்து கொண்டிருக்கும் மசாலா வகைகளையே.

மேலதிக தகவல்களுக்கு காண்க: http://en.wikipedia.org/wiki/Squid

புகைப்படத்தில் வலது முன்பக்கத்தில் குவிந்திருக்கும் கொள கொளா வஸ்துதான் கணவாய். சீனாவின் தென்கடற்கரையோர நகரான ஷாஞ்ஜாங்கில் 2005 எடுக்கப்பட்டது.


Posted by Picasa

Saturday, September 15, 2007

ஆட்டம் விறுவிறுப்பு, முடிவு அசமஞ்சம்



இருபது-20தான் எதிர்கால கிரிக்கெட்டின் அடையாளம். மூன்று மணி நேர ஆட்டம். முழுவதும் விறுவிறுப்பு. ஆட்டம் முழுவதையும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. புவியியல் ரீதியாக கிரிக்கெட் வளர்ந்து வருவதையும், ஆட்டத்தின் இந்த புதிய அமைப்பையும் வைத்துப் பார்க்கும் போது, ஒலிம்பிக்சில் கூட கிரிக்கெட் விளையாடப்படலாம் என்ற நம்பிக்கை உண்டாகிறது. பார்த்தது

கல்லூரி நாட்களுக்குப் பிறகு இரவில் கண் விழித்து முழு ஆட்டத்தையும் பார்த்தது இந்தியா-பாகிஸ்தானின் முதல் உலகக் கோப்பை இருபது-20தான். ஆர்.பி. சிங்கும், ஸ்ரீசாந்தும் பந்து வீசிய லட்சணத்தில் காரியம் கெட்டு பாகிஸ்தான் வெல்வது நிச்சயம் என்று ஏற்பட்ட சமயத்தில், பதானும், அகர்கரும், ஹர்பஜனும் பந்தைக் கையிலெடுத்து வயிற்றில் பால் வார்த்தனர். இந்தியா வெல்வது நிச்சயம் என்று கொஞ்சம் ஆசுவாசமாக நாற்காலியில் சாய்ந்தால் மிஸ்பா நாலும், ஆறுமாக அடித்து பாலுக்குள் புளியை ஊற்றிக் கலக்கினார். காரியம் கெட்டே விட்டது என்ற கடைசி இறுதி இரண்டு பந்துகளில் பாகிஸ்தான் குளறுபடி செய்து ஆட்டம் 141-141 என்று சமம். வீட்டில் அனைவரும் தூங்குகிறார்கள் என்பதால் தொலைக்காட்சியை ஊமையாக்கி ஆட்டத்தைப் பார்த்ததில் இந்த மாதிரி இழுபறிக்கெல்லாம் இருபது-20 ஒரு தீர்வு வைத்திருக்கிறது என்று தெரியாமலே தூங்கப் போய் விட்டேன்.

காலையில் மனைவியிடம் “தெரியுமா, இருபது-20ல் முதல் இழுபறி ஆட்டம். அதை இரவு இரண்டரை வரை பார்த்து விட்டுத்தான் தூங்கினேனாக்கும்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள அடுத்த சில நிமிடங்களில் வந்த வானொலி செய்தி “தென்னாப்பிரிக்காவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து சூப்பர் எட்டுக்குள் நுழைந்தது” என்று சொல்லி மூக்குடைத்தது. கிரிக்கின்ஃபோ சென்று பார்த்தால் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி என்று சொல்லியது. அது என்ன பவுல் அவுட் என்பது பகல் நேரத்தில் ஈஎஸ்பிஎன் விளையாட்டின் முக்கிய காட்சிகளை காட்டிய போதுதான் புரிந்தது.

ஸ்டம்புகளுக்குப் பின்னால் விக்கெட் கீப்பர். ஆனால் துடுப்பாட்டக்காரர் கிடையாது. ஒவ்வொரு அணியிலிருந்தும் ஐந்து பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாறி, மாறி பந்து வீசுகிறார்கள். வீச்சாளர் ஸ்டம்பைத் தாக்கி விட்டால் அணிக்கு ஒரு புள்ளி. கால்பந்து டை ப்ரேக்கரின் கலப்படமில்லாத காப்பி. சேவாக், ஹர்பஜன், உத்தப்பா என்று மூன்று பந்து வீச்சாளர்களுமே லெக் ஸ்டம்பைத் தூக்க, பாகிஸ்தானின் மூன்று பந்து வீச்சாளர்களுமே ஸ்டம்பைத் தாக்காமல் கோட்டை விட்டார்கள். இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி.

கிரிக்கின்ஃபோவில் பாகிஸ்தானின் வீரர்களுக்கு இந்த டை ப்ரேக்கர் ஆட்ட முறை புரியவில்லை என்பது போல போட்டிருந்தார்கள். இதில் புரிய என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. தன்னந்தனியாக வில்லனிடம் மாட்டிக் கொண்ட தங்கை நடிகையைப் போல எந்தவித பாதுகாப்பில்லாமல் ஸ்டம்ப் இருக்கிறது. பந்து வீசச் சொல்கிறார்கள். ஸ்டம்பைக் காலி செய்வது தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. முதலாவது ஸ்டம்பைக் காலி செய்த சேவாக்கை எல்லா இந்திய வீரர்களும் கொண்டாடினார்கள். இவையெல்லாம் பார்த்த பின்னும் என்ன குழப்பம் என்பதுதான் நமக்கு குழப்பம்.

எப்படியிருந்தாலும் மூன்று மணி நேரம் பரபரப்பாக ஆடப்பட்ட ஒரு ஆட்டம் இப்படி அசமஞ்சத்தனமாக முடிவுக்கு வந்தது வருத்தம்தான். இந்தியா தோற்றிருந்தால் இன்னும் அதிகமாக வருத்தம் இருந்திருக்கும். நல்ல வேளையாக தோனி ஆர்.பி. சிங்கையும், ஸ்ரீசாந்தையும் டை பிரேக்கரில் பந்து வீச விடவில்லை.

பி.கு: மழையினால் ரத்து செய்யப்படுகிற ஆட்டங்களுக்கு தீர்வு காண இரண்டு அணிகளையும் புக் கிரிக்கெட் விளையாட விடலாமே என்ற ஆலோசனையை இருபது-20க்கு கொடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
Posted by Picasa

Monday, September 10, 2007

தன்னந்தனியாய் ஒரு தேசம்

 

பிரசிலின் பரப்பளவு சுமார் 85 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இந்தியாவை விட 2.5 மடங்கு பெரிதான இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 18 கோடியே.

தென்னமரிக்காவின் மற்ற நாடுகளனைத்தும் ஸ்பானிஷ் பேச, பிரசில் மட்டும் போர்ச்சுக்கீஸ் சம்சாரிக்கிறது. போர்ச்சுக்கீஸில் வந்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கொரியா நாடுகளிலிருந்து குடிபுகுந்தவர்களும், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கர்களும், பூர்வீகக் குடிமக்களும் பெரும்பாலும் இனம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை மறந்து வசிக்கும் தேசம் பிரசில்.

மொழியில் மட்டுமல்ல, மற்ற பல அம்சங்களிலும் பிரசில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தெளிவாகத் தெரிந்த ஒன்று: பிரசிலின் பெரும்பாலான அமைப்புகளும், நிறுவனங்களும், தொழில்களும், வியாபாரங்களும் பிரசிலியர்களை முன்னிறுத்தி மட்டுமே இயங்குகின்றன. போர்ச்சுக்கல் மொழியில் அல்லாது பிற மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், உணவக பட்டியல்கள், விமான அறிவிப்புகள் ஆகியவை இங்கு வெகு குறைவு. மிக அழகான கடற்கரைகள் கொண்ட வடகிழக்கு நகரங்கள் பிரசிலிய, உள்நாட்டுப் பயணிகளுக்கான சேவைகளை அளிப்பது போன்று, வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை ஊக்கமளிப்பது போல் தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிய போது

“பிரசிலின் கடற்கரைகளுக்கு விடுமுறைக்காக வருபவர்களில் முக்கால்வாசிக்கு மேல் பிரசிலியர்கள். ஐரோப்பாவிலிருந்து கொஞ்சம் பேர் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து அதிகம் வருவதில்லை” என்றார்.

அமெரிக்காவிக்காவிற்கும் பிரசிலுக்கும் இடையே ஒரு வித இறுக்கமான உறவு நிலை நிலவுகிறது. அமெரிக்கர்கள் விசா எடுத்து செல்ல வேண்டிய வெகுசில நாடுகளில் பிரசிலும் ஒன்று. பிரசிலியர்களுக்கு ஐரோப்பா செல்ல விசா அவசியமில்லை. அமெரிக்கா செல்ல தேவைப்படுகிறது. இது பிரசிலியர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, அமெரிக்கர்கள் விசா எடுத்துத்தான் வரமுடியும் என்றாக்கி விட்டார்கள்.

பிரசிலின் ஆதாரம் வேளாண்மை. இங்கிருந்துதான் முந்திரிப் பருப்பு, பப்பாளி, கொய்யா என்று பல தாவரங்கள் ஆசியாவிற்கு வந்தது (பதிலுக்கு இந்தியாவிலிருந்து மாம்பழம் பிரசிலுக்கு சென்றது). கரும்பு, சோளம், சோயா மொச்சை, காப்பி முதலான பல பயிர்களின் உற்பத்தியில் உலகில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றது இந்த நாடு. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விரிந்த பண்ணைகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இறைச்சி வகைகளில் பிரசிலியருக்கு பிரதானமானது மாட்டிறைச்சி. நெல்லூர் இன மாடுகள் கொண்டு வரப்பட்டு இங்கு கலப்பினமாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. கோழி உற்பத்தியில் விரைந்து, வளர்ந்து அமெரிக்காவுடன் போட்டியிடுகிறது இந்த நாடு. மீன், இறால் உற்பத்தியும் விரைந்து, பெருகி வருகிறது.

கரும்பிலிருந்து எரிசாராயம் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது பிரசில். மக்காச்சோளத்திலிருந்து தயாரிப்பதை விட கரும்பிலிருந்து விலை குறைவாக சாராயம் தயாரிக்கலாமாம். பிரசிலின் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் சாராய எரிபொருளும் விற்கப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 40. எரிசாராயம் லிட்டருக்கு ரூ 20. பெட்ரோல் லிட்டருக்கு 12 கி.மீ. கொடுக்குமென்றால் சாராயம் 8-9 கி.மீ. கொடுக்குமென்கிறார்கள். இப்போது சாராயம் விலை குறைவு என்றாலும், அறுவடை முடிந்து கரும்பு வரத்து குறையும் போது விலை கூடி விடும் என்கிறார்கள்.

வாகனங்களுக்குப் போட்டியாக பிரசிலியர்களும் கரும்பிலிருந்து பெறப்படும் மது வகைகளை குடிக்கிறார்கள். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒருவித ரம் வகை மது கஷாஷா எனப்படுகிறது. இதை எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறை தொட்டுக் கொண்டு, அப்படியே குடிக்கிறார்கள், அல்லது எலுமிச்சங்காய், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் போட்டுக் குலுக்கி கப்ரினா என்ற காக்டெயிலாகவும் குடிக்கிறார்கள். ஒரு லிட்டர் கஷாஷா 75-100 ரூபாய்க்குள் கிடைக்கிறது.

பரந்த நிலப்பரப்பில் குறைந்த மக்கள் தொகை, வற்றாத நீர்வளம், மற்றும் இயற்கையின் தாராளமான உயிரின, கனிம வளங்கள் எல்லாம் இருந்தும் பிரசிலில் வறுமை தாராளமாகவே இருக்கிறது. சா பாலோவின் அடுக்கு மாடிக் கட்டங்களின் பின்னால் சேரிகள். முதுகிற்குப் பின்னால் தாக்கும் வன்முறைக் கலாசாரம். சா பாலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற 50 லட்சம்-ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களிலும், பத்திருபது லட்சம் கொண்ட சிறு நகரங்களான சால்வடோர், ஃபோர்ட்டலிசாவிலும், துப்பாக்கி முனையில் வழிப்பறி, கொள்ளை, ஆட்கடத்தல் என்பன பரவலாக நடைபெறுகின்றன. நண்பர் ஒருவர் சமீபத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் துப்பாக்கி தாங்கிய மோட்டார் சைக்கிள்காரர்களால் மிரட்டப்பட்டு பணம் இழந்திருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை விவரிக்கையில்:

“குடிவெறியர்களுக்கும், போதை மருந்து உபயோகிப்பவர்களுக்கும், வேசிகளுக்கும் பிறந்து, ஏழ்மையில் உழலும் இளைஞர்கள்தான் பெரும்பாலும் இந்த வகையான குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். அன்பு, மனித உயிரின் மதிப்பு முதலியவற்றை அறியாத இவர்கள் உயிரைப் பறிக்க சற்றும் தயங்குவதில்லை. இவர்களிடம் மாட்டிக் கொண்டால் கேட்கும் பொருளைக் கொடுத்துவிட்டு தப்புவதுதான் புத்திசாலித்தனம்” என்றார்.

கூடவே, “நாம் மேல்தளத்தில் இருந்து இரவுணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கீழே கடற்கரை சாலையில் ஒரு பெண்ணின் பையை பறித்துக் கொண்டு ஒருவன் ஓடினானே. நீ பார்த்தாயா?” என்றார்.

“காண வேண்டிய காட்சிகளை நீர் எங்கே காட்டுகிறீர்?” என்று அலுத்துக் கொண்டேன்.

இரவுணவு முடித்து விட்டு விடுதியை நோக்கி சென்ற போது சாலையில் ஓரிடத்தில் தனியாக நின்றிருந்த ஒரு இளம் பெண்ணைச் சுட்டிக் காட்டி “காட்ட வேண்டிய காட்சிகளை சுட்டிக் காட்டவில்லையென்று நீ அலுத்துக் கொள்வதால் சொல்கிறேன், இந்தப் பெண்
ஒரு வேசி. வாடிக்கையாளரை எதிர்பார்த்து நிற்கிறாள்” என்றார்.

அதற்குள் எங்கள் வாகனம் அவளைப் போலவே தனியாக நின்றிருந்த இன்னொரு பெண்ணையும் கடந்து சென்று கொண்டிருந்தது.

“இவளுமா?” என்றேன்.

“இவனுமா? என்று கேள். இது அறுவை சிகிட்சை மூலம் பெண்ணாக மாற்றம் செய்து கொண்ட ஒரு ஆண்” என்றார்.

ஒரு லிட்டர் கஷாஷா குடித்தால்தான் தலைசுற்றுவது நிற்கும் போலிருந்தது.
Posted by Picasa

Sunday, September 2, 2007

சா பாலோவில் உழவர் சந்தை

சா பாலோவின் ஓரளவு வசதி மிக்க குடியிருப்பு பகுதிளில் ஒன்றில் வசிக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். வெள்ளிக் கிழமை காலை 9 மணி. மேக மூட்டமும், குளிரும் அகன்று சுகமான வெம்மை பரவும் வேளை.















நண்பர் என்னிடம், “வா என்னுடன். உனக்கு ஒன்றைக் காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றார். சென்ற இடம் அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெரு. ஒவ்வொரு வெள்ளியும் அந்தத் தெரு உழவர் சந்தையாக மாறி விடுகிறதாம்.














பிரசில் -- காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மொச்சை மற்றும் கடலை வித்துக்கள், இறைச்சி, மீன் -- என்று எல்லா விதமான உணவு உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகும். இங்கும் எல்லா இடங்களையும் போலவே உழவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. சா பாலோவில் உணவின் விலை அதிகமாக இருப்பதை உணவகங்களிலும், செல்ல நேரிட்ட ஒரு நடுத்தர அங்காடியிலிருந்தும் அறிந்து கொண்டேன்.

சா பாலோ அரசு உழவர் சந்தை என்று ஒரு இடத்தை நிரந்தரமாக ஏற்படுத்தாமல், நகரிலுள்ள பல தெருக்களில் உழவர் அமைப்புக்கள் வாரத்தில் ஒரு நாள் சந்தை ஏற்படுத்த ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. சா பாலோ போன்ற பெரிய நகரில் இந்த ஏற்பாடு உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. நுகர்வோர் நடந்து சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உழவர்கள் ஒரு பரந்த சந்தையில் பங்கு கொள்ள முடிகிறது. ஆனால், உழவர்கள் ஏதாவது வாகனங்களை சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்துக் கொள்ள வேண்டி வரும். நம்மூர் போல் பேருந்தில் கொண்டு செல்ல முடியாது.

பச்சைப் பசலேன்று காய்கறிகளும், வித, விதமான பழங்களும் சந்தையில் குவிந்திருந்தன. இறைச்சி விற்க இரு கடைகள் இருந்தன. ஒன்றில் விசா க்ரெடிட் கார்டு வசதி உண்டு. மீன்கள் விற்க ஒரு கடை. சாளை மீன்கள் கிலோவுக்கு 4.80 ரியால்கள், ஏறக்குறைய 100 ரூபாய். இறால்கள் ஏறக்குறைய 900 ரூபாய். ஆனால் காய்கறிகள், பழங்கள் விலை ஏகத்துக்கும் மலிவு. ஒரு டஜன் ஆரஞ்சு வாங்கினேன். விலை 60 ரூபாய். ஆனால் விற்றவர் 40 ரூபாய் போதும் என்று சொல்லி விட்டார். கொசுறாக ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்தும் கொடுத்தார்.














எங்கு இருந்தாலும் உழவர்களுக்கு ஒரு குணம் இருக்கிறது: தங்களது உழைப்பின் பலனை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பார்த்து மகிழ்வது.

Posted by Picasa

Tuesday, August 28, 2007

சா பாலோ நோக்கி

பிரேசிலுக்கு போவது முதல் தடவை இல்லையென்றாலும், போகும் வழி புதிது: மும்பை- ஜொகனஸ்பர்க்-சா பாலோ.

சென்னையிலிருந்து ப்ரான்க்பர்ட் அல்லது லண்டன் சென்று அங்கிருந்து சா பாலோ செல்லலாம். ஆனால் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ இரண்டுமே நரகங்களாகிவிட்ட இந்த நாட்களில் இவற்றை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்கிறேன். எனவே, எனது பயண அமைப்பாளர், ட்ராவல் மாஸ்டர்ஸின் சயனம் புதிய வழியை பரிந்துரைத்த போது அது மும்பை வழி என்பதை பொருட்படுத்தாமல் சரி சொன்னேன். மும்பையில் தங்க வேண்டிய 8 மணி நேரத்தைக் கணக்கில் சேர்க்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா மூலமாக பிரேசில் செல்வது, ஐரோப்பா செல்வதை விட தூரமும் நேரமும் குறைவு.

மும்பையிலிருந்து ஜொகனஸ்பர்க் ஆறாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் எட்டு மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க்கிலிருந்து சா பாலோ ஏழாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் ஒன்பது மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இடைத் தங்கல். சகல வசதிகளோடும், குறைவான நெரிசலுடனும், நட்புடன், இனிமையாகப் பேசும் தென்னாப்பிரிக்கர்களுடனும் இருக்கும் ஜொகனஸ்பர்க் விமான நிலையம் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ, பாரிஸ் டீகால் மூன்றையும் விட ஆயிரம் மடங்கு உயர்வு.

இப்போதுதான் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க ஏர்வேய்ஸைப் பயன்படுத்துகிறேன். பொழுதுபோக்கு என்ற ஒன்றை மட்டும் தவிர்த்து, மற்ற அத்தனை அம்சங்களிலும் ஐரோப்பிய, அமெரிக்க விமான சேவைகளை விஞ்சுகிறது இந்த ஏர்வேய்ஸ்.

மும்பை- ஜொகனஸ்பர்க் விமானம் கால்வாசி காலியாக இருந்தது வசதியாக இருந்தது. ஜொகனஸ்பர்க்-சா பாலோ நிறைந்திருந்தது. எனக்கு பக்கத்தில் குண்டூரிலிருந்து வந்து பங்களூரு கோவான்சிசில் பணிபுரியும் பிரசாத், அவர் சமீபத்தில் மணமுடித்த அதே கோவான்சிசை சேர்ந்த லதா. இருவரும் இரண்டாண்டுகளுக்கு பெருவில் பணியாற்றப் போகிறார்களாம். பெரு தலைநகர் லிமாவில் உள்ள ஃபிடலிட்டி வங்கி இவர்களது நிறுவனத்தின் மென்பொருளை வாங்கியிருக்கிறதாம். அது தொடர்பான சேவை விவகாரத்திற்காக செல்கிறார்களாம். “ஸ்பானிஷ் தெரியுமா?” என்றதற்கு “பொக்யிட்டோ” (ரொம்பக் கொஞ்சம்) என்று சிரித்தார் பிரசாத். பெரு மாதிரி ஒரு நாட்டில் இரண்டாண்டுகள் தங்கியிருந்தால் ஸ்பானிஷ் தானாக வந்துவிடும்.

சா பாலோ விமான நிலையம் பிரமாண்டமானது. ஒரு கணிசமான நடைக்குப் பின்னர் குடியுரிமை சோதனைக்கு வந்தோம். பிரேசிலின் குடியுரிமை சோதனை ரொம்ப எளிமையானது. பிரேசில் நாட்டவராக இருந்தால் ஒருவர் நின்று கடவுச் சீட்டை பரிசோதிக்கிறார். ஆளின் முகத்தையும், கடவுச் சீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிடுகிறார். பிறகு நட்பாகவோ, தமாஷாகவோ ஏதாவது பேசிக் கொண்டே அனுப்பி விடுகிறார். வெளிநாட்டினர் மட்டும் வரிசையில் நின்று, அதிகாரிகளிடம் சென்று சோதிக்கப்பட வேண்டும். அதிலும், மற்ற தென்னமரிக்க நாடுகளில் செய்வது போல் இந்திய பாஸ்போர்ட் என்றால் ஒரு வித சந்தேகத்துடன் ஆராய்வது எல்லாம் கிடையாது. கடவுச் சீட்டையும், விசாவையும் துரிதமாக சரிபார்த்து விட்டு, புன்னகையுடன் ஒரு சீல். அவ்வளவுதான்.

அலுப்பு தட்டிய சிவாஜி

27 ஆகஸ்ட் 2007 அதிகாலை 2 மணி
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை

இரண்டாண்டுகளுக்கு முன் இந்த விமான நிலையத்தை உபயோகப்படுத்தும்போது ஏற்பட்ட சில்லறை சிரமங்களால், இதைத் தவிர்த்து விட்டு சென்னை வழியாகவே வான் பயணம் மேற்கொள்ளுவதை நாடி வந்திருக்கிறேன். இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களால் மறுபடியும் மும்பை.

கடந்த முறைக்கு மும்பை விமான நிலையத்தில் சில, நல்ல மாற்றங்கள். நெரிசல் குறைந்தது போலிருக்கிறது. கடந்த முறை கைப்பைகள் பரிசோதிக்கும் வரிசையில் 50-60 பேர். அவர்களில் பந்தா துளிகூட காட்டாது பொறுமையாக நின்றிருந்த ரத்தன் டாட்டாவும் உண்டு. இம்முறை குடியுரிமை சோதனையில் கூட கூட்டமில்லை. பதினாறு அதிகாரிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வரிசையில் போய் நின்றவுடன் அழைத்தார்கள். என்னை சோதித்த நீலப் புடவை உடுத்திய பெண் அதிகாரி என்னையும், என் கடவுச் சீட்டையும் ரொம்ப சந்தேகமாக பார்த்தார். பல கேள்விகள் கேட்டார். திருப்தியில்லாமல்தான் என்னை மேற்கொண்டு செல்ல அனுமதித்தது போல் தோன்றியது.

சிவாஜியின் பயணிகள் காத்திருப்பு கூடம் மகா விசாலமாக இருக்கிறது. வசதியற்ற நாற்காலிகளில் பலர் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். பார்த்தவுடன் பசியடங்கி விடும் வகையில் காட்சியளிக்கும் சாண்ட்விச்களையும், அக்காமாலா பானங்களையும் விற்கும் இரு கடைகள், டாலரை 39.75 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, அதையே 44.50 ரூபாய்க்கு விற்கும் இரு அந்நிய செலாவணிக் கடைகள், சுங்கவரி விலக்கு பெற்ற பொருட்களை விற்கும், கொஞ்சமும் ஆர்வத்தைத் தூண்டாத இரு கடைகள் – இப்படி பயணிகளோடு சேர்ந்து அரைத் தூக்கத்திலிருக்கிறது விமான நிலையம். கடந்த முறை ஏற்பட்ட எரிச்சல் மாறி, இந்த முறை அலுப்புதான் தட்டியது.

அடுத்த முறையாவது இந்த விமான நிலையம் நல்ல அனுபவத்தை தரலாம் என்ற நம்பிக்கையோடு விமானம் நோக்கி நடந்தேன்.

Saturday, August 25, 2007

கி.ரா. தாத்தா என்றால் ஜெயமோகன் என்ன சித்தப்பாவா?

கி. ராஜநாராயணன் அவர்களது கட்டுரைகளின் தொகுப்பை வாசிக்க தொடங்கியது பற்றி இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சமீபத்திய பயணங்களின் போது அதை எடுத்துச் சென்று வாசித்து முடித்து விட்டேன்.

கி.ரா. கட்டுரைகள் என்ற தலைப்பில் அகரம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இத் தொகுப்பு 487 பக்கங்கள் கொண்டது. முதல் பதிப்பு 2002ல் வெளியாகியிருக்கிறது. 275 ரூ.

கி.ரா. கடந்த சுமார் 46 வருடங்களாக ஆக்கிய பல படைப்புகளை கோர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். கட்டுரை என்று தலைப்பில் இருந்தாலும் சில படைப்புகள் கதை வகை. உதாரணம்: பிள்ளையார்வாள். ஏற்கனவே சொன்னபடி முக்கால்வாசிக் கட்டுரைகளிலே ஏதாவது ஒரு கதையாவது இருக்கும். நூலின் இறுதியில் அமைந்திருப்பது ஒரு நீண்ட நேர்காணல். “பஞ்சுவின் கேள்விகளும் கி.ரா.வின் பதில்களும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த அத்தியாயம் எங்கே, எப்போது செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் இல்லை. இது இந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு குறை. சில படைப்புகளில் எந்தக் கால கட்டத்தில் எங்கே வெளியானது என்ற குறிப்புகள் இல்லை. இன்னொரு குறை இப்படைப்புக்களை தொகுத்தவர்கள் என்ன அடைப்படையில் அவற்றை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள் என்று யூகிக்க முடியவில்லை. சில படைப்புகள், உதாரணமாக தி.க.சி. அவர்களைப் பற்றிய குறிப்புகள், வரிசையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மற்றவை காலம், பொருள் தவறி ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.

வெகுஜன வாசிப்பின் மூலமாக கி.ரா.வை தெரிந்து கொண்ட என் போன்றவர்களுக்கு இந்த தொகுப்பு கி.ரா.வின் சிந்தனைகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை தெரியப்படுத்துகிறது. 1970ல் தீவிர பொதுவுடமை சித்தாந்தத்தின் உச்சக்கட்ட கிடுக்கிப்பிடியில் அவருக்கு பிச்சைக்காரன் கூட லெனினை நினைவு படுத்துகிறான் (“நமக்கு இப்போது ஒரு லெனின் வேண்டும்” பக்கங்கள்: 88-92). பிறகு (எப்போது என்று தெரியவில்லை), தி.க.சி.யைப் பற்றி எழுதும் போது இப்படி எழுதுகிறார் (பக்கம் 359):

“நாங்கள் அவரோடு பழகிய காலத்தில் எங்கள் மண்டைக்குள்ளேயும் ஒரு “பண்ணிக்குட்டி” இருந்தது; அரசியல்ப் பண்ணிக்குட்டி! திறந்த மனசோடு நாங்கள் அவரை அணுகவிடவில்லை அது. … இதனால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரொம்ப.”

இருப்பினும், வாழ்வைப் பற்றி; மக்கள் கலைகளைப் பற்றி, அதிலும் குறிப்பாக இசையைப் பற்றி, மக்களின் மொழிகள்; பழக்க வழக்கங்கள் பற்றி; கி.ரா.வின் ஆவல், அவற்றை எழுத அவர் தேர்ந்தெடுத்த நடை, அவற்றை சொல்வதிலுள்ள நேர்மை ஆகியவை இறுதி வரை மாறவில்லை. நமக்குள் இருக்கும் ரசிகனைத் தட்டியெழுப்பி, தனது ஆத்மாவை திறந்து காட்டி, நமது வரவேற்பரையிலோ, சாப்பாடு மேசையிலோ அமர்ந்து பேசுவது போல சுலபமான மொழியிலே பேச இவரைப் போல் எவருண்டு என்றுதான் தோன்றுகிறது கி.ரா.வின் கட்டுரைகளை மூடி வைக்கும் போது.

இப் புத்தகத்திலுள்ள பல கட்டுரைகள் வெறும் வாசிப்பு சுகத்திற்கு மட்டுமின்றி. பல வாழ்வியல் பாடங்களும் இவற்றில் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்று “முதுமக்களுக்கு” என்ற கட்டுரை (பக்கம் 347-353). இதில் பொய்யாளி நாயக்கர் என்று ஒருவர் வருகிறார். கண் ரெப்பைகள் நரைத்த வயோதிகரான இவருக்கு ஒன்பது பிள்ளைகள். திருமணத்திற்குப் பின் பிள்ளைகளை கண்டிப்பாக தனிக்குடித்தனம் செய்ய அனுப்பி வைத்தவர். சொத்தை பத்துப் பங்கு வைத்து பிள்ளைகளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டு தனக்கும் மனைவிக்குமாக ஒரு பங்கு வைத்து வாழ்பவர். பிள்ளைகள் கூட இருந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு, “பிள்ளைகங்கிறது சொத்துக்கும் வாரீசுக்கும்தான்; பாசத்துக்கு இல்ல” என்பவர். பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் பாசமானவர்கள் என்பது இவரது கருத்து. இதைப் பற்றி கேட்கும் போது பாச உறவு என்பது செடியின் வேரைப் போல் கீழ் நோக்கித்தான் போகும்; தண்டைப் போல் மேல் நோக்கிப் போகாது என்கிறார். அதையே விளக்கமாக “நீ உன் பிள்ளைக பேர்ல பிரியமா இருக்க; அது போல அவங்க தன்னுடைய பிள்ளைக பேர்ல பிரியமா இருக்காங்க. அது – அந்தப் பிரியம் – உன்னெ நோக்கி வராது. இதுதான் நெசம்” என்கிறார். கூடவே இவரது தத்துவங்கள் கி.ரா.வின் மொழியிலேயே:

-- பிள்ளகயிட்ட ரொம்பத்தான் செல்லங் கொஞ்சக்கூடாது பாத்துக்க. “தேனைத் தொட்டயோ, நீரைத் தொட்டயோ’ன்னு இருக்கணும் பாத்துக்க.

-- இந்தச் சொத்தெல்லாம் ஒனக்குத்தான், இந்த வீடெல்லாம் ஒனக்குத்தாம்னு எந்த அப்பன், ஆத்தா பிள்ளைகயிட்டச் சொல்லுதாங்களோ அந்த அப்பனையும், ஆத்தாளையும் கட்டாயம் அந்த வீட்டெ விட்டுத் துரத்தாம இருக்க மாட்டாங்க.

-- நா எப்படிக் கஷ்டப்பட்டு இந்த வீட்டெக் கட்டுனனே நாங்க எப்படி அரும்பாடு பட்டு இந்தச் சொத்தெச் சேத்தமோ இது போல சம்பாதிச்சு வீட்டெ நீங்க கட்டிக் கிடணும்னு சொல்லணும்

-- கஷ்டத்தச் சொல்லி பிள்ளெகள வளக்கணும். “நா இருக்கும்போது உனக்கென்னடா”ன்னு பிள்ளைகள வளக்கிற அப்பனும் ஆத்தாளும் கடைசிக் காலத்துல நிம்மண்டு நாயக்கரும் பெஞ்சாதியும் பிச்சை எடுத்து செத்தது போலத்தான் சாக வேண்டி வரும்.

பல குடும்பங்களில் நடப்பவற்றைப் பார்க்கும் போது பொய்யாளி நாயக்கர் சொன்னது 100க்கு 100 உண்மை என்றுதான் தோன்றுகிறது.

பி.கு: கடந்த சென்னை புத்தக விழாவிலே கி.ரா.வைத் தாத்தா என்று அடைமொழி கொடுத்து விளித்திருந்தார்கள். இந்தப் பட்டத்தை அவருக்கு யார் அளித்தது; அதை அவர் மனதாற ஏற்றுக் கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் கி.ரா.வை தாத்தா என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு சமவயது நண்பராகத்தான் எனக்கு இருபது வயதிருக்கும் போதுதான் தோன்றினார். இருபதாண்டுகள் கழித்தும் அப்படித்தான் தோன்றுகிறது. அப்புறம் இந்த தாத்தா முறையெல்லாம் எதற்கு என்றும் புரியவில்லை. கி.ரா. தாத்தா என்றால் ஜெயமோகன் என்ன சித்தப்பாவா?

Thursday, August 16, 2007

சிங்கப்பூரில் ஒரு நாள்: செராங்கூன் ரோடு


சிங்கப்பூரின் “லிட்டில் இந்தியா” என்று அழைக்கப்படும் தமிழர்கள் நிறைந்த பகுதியை கீறிச் செல்லும் பிரதான சாலைதான் செராங்கூன் ரோடு. செராங்கூன் சாலையின் ஒரு பக்கம் முழுவதும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்தவர்களுக்கு பொருட்களை விற்கும் பலவிதக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. பல்வேறு வெள்ளைக்காரர்கள் பெயர்களைத் தாங்கிய செராங்கூனின் கிளைச் சாலைகளிலும் இந்தியக் கடைகள் மலிந்திருக்கின்றன. துணிகள், உடுப்புகள், நகைகள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பத்திரிகைகள், குறுந்தகடுகள், உணவகங்கள் என்று வரிசையாக கடைகள். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக முஸ்தஃபா காம்ப்ளெக்ஸ் என்றழைக்கப்படும் பேரங்காடி. சிங்கப்பூரின் புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலும் செராங்கூன் சாலையில்தான் உள்ளது.

நான் முதலும், கடைசியுமாக செராங்கூன் வந்தது 1989ல். பிறகு பலமுறை சிங்கப்பூர் வந்தாலும் செராங்கூன் வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது நண்பர் சிங்கப்பூரில் வேறு பகுதியில் வசித்ததால் செராங்கூன் வர முடியவில்லை. இப்போது பெராக் ஹோட்டலில் இருந்ததால் செராங்கூன் சென்று பார்க்க விரும்பினேன். சில சில்லறை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் தேவைப்பட்டன. முஸ்தாஃபா சென்று அவற்றைப் பார்வையிடவும் வேண்டியிருந்தது.

பெராக் ஹோட்டலில் இருந்து நடையாக சுங்கே வந்து செராங்கூனில் திரும்பும் போது ஒருவர் – ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இந்தியர் – வந்து முஸ்தாஃபா எங்கே இருக்கிறதென்று சொல்ல முடியுமா என்று கேட்டார். நானும் அங்கேதான் போக வேண்டும், எனக்கும் வழி தெரியாது, யாரிடமாவது கேட்போம் என்று அங்கிருந்த ஒருவரிடம் இரண்டு பேரும் வழி கேட்டு விட்டு நடந்தோம்.

அபிஷேக் – அதுதான் என் சக நடைபயணியின் பெயர் – திருவான்மியூரிலிருந்து வருகிறார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலயில் பொறியியல் படித்து விட்டு நேஷனல் யூனிவர்சிடி ஆஃப் சிங்கப்பூரில் பயோ எஞ்சினியரிங்கில் முனைவர் படிப்பு படிக்க வந்திருக்கிறார். இளங்கலையிலிருந்து நேராக முனைவர். முனைவர் பட்டம் பெற நான்காண்டுகளாகுமாம்.

செராங்கூனில் முஸ்தஃபா பேரங்காடியை நோக்கி செல்லும் பாதையில் கடந்த 16 ஆண்டுகளிலும் பெரியதாக மாற்றம் ஏதும் இருப்பதாகப்படவில்லை. முஸ்தாஃபா காலத்திற்கேற்ப பெரிதளவு மாறியிருக்கிறது. கடையை பெரிய அளவில் விரிவுபடுத்தி, தளம் தளமாக, எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி காய்கறி, மளிகை வரை அத்தனையையும் வைத்திருக்கிறார்கள். எனக்கு அங்கு வாங்க வேண்டியது மிகவும் குறிப்பாக சில பொருட்கள். அவற்றை வாங்கிக் கொண்டு நகர ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆயிற்று.

வெளியில் வந்ததும் பசித்தது. முஸ்தஃபாவை சுற்றி, சுற்றி சாப்பாட்டுக் கடைகள்தான். உடுப்பி, செட்டிநாடு, பிஸ்மில்லா பவன்களையெல்லாம் ஒதுக்கி விட்டு, வயிறு பஞ்சாபி உணவு கேட்டது. முஸ்தாஃபின் செராங்கூன் சென்டருக்கு அடுத்துள்ள தந்தூரி ரெஸ்டாரண்டை முயற்சித்தேன். கொடுத்த 34 வெள்ளிகளுக்கு சாப்பாடு சுமார்தான்.

திரும்பி வரும் வழியில் குறுந்தட்டுக் கடை ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கவே உள்ளே ஏறுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. பர்தா அணிந்த ஒரு பெண்மணி ரொம்ப நட்பாக “என்ன படம் வேணும், புதுசா, பழசா?” என்றார்.

“புதுசு”

“டிவிடியா, விசிடியா?”

“டிவிடி”

ஒரு வரிசையைக் காண்பித்தார்.

“பருத்திவீரன்”

போனசாக பம்மல் கே சம்பந்தமும் இருக்கும் டிவிடியைக் கொடுத்தார்.

“போக்கிரி வேணுமா?”

“ம்ஹூம்”

“வரலாறு?”

“ம்ஹூஹூம்”

இவரை விட்டால் ஹூக்களை அதிகப்படுத்தும் படங்களைத்தான் அடுக்குவார் என்பதால் “பிரகாஷ்ராஜ், ஜோதிகா படம்…..”

“பச்சைக்கிளி முத்துச்சரம்?”

நினைவுக்கு வந்துவிட்டது. “இல்லை, மொழி”

"அது டிவிடியில் இல்லை. விசிடியில் இருக்கிறது"

தயங்கினேன்.

“நல்ல சுத்தமான பிரிண்ட்”

“சரி கொடுங்க”

இதற்குள் இன்னொருவர் வந்து “புதுசாக என்ன வந்திருக்கிறது?” என்றார்.

“எல்லாம் இருக்கு. ஆனால் சிவாஜி இன்னும் வரவில்லை. இந்த வாரக் கடைசியில் ரிலீஸ் பண்ணுகிறார்களாம்”

நான் எனது தகடுகளுக்கான 25 வெள்ளியைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். 650 ரூபாய்கள். ஆனாலும் இது சட்டபூர்வமான சரக்கு. சிங்கப்பூர் தணிக்கைக் குழு பார்த்து, "பருத்திவீரன்" 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாமென்றும், "மொழி" பெற்றோர்கள் துணையோடு குழந்தைகள் பார்க்கலாமென்றும், அளித்த ஒப்புதல் ஸ்டிக்கர் ஒட்டிய சுத்தமான சரக்கு.

சிங்கப்பூரில் ஒரு நாள்: பெராக், பெராக், பெராக்


சிங்கப்பூர் செல்வது இது முதல் முறை இல்லை. என்றாலும் சில புதிய அனுபவங்கள்.

முதலாவது தங்குமிடம். இது வரை சிங்கப்பூரில் தங்குமிடம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஒரு நெருங்கிய நண்பர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் வீட்டில் தங்குவதை தவிர வேறு எதையும் அனுமதிக்க மாட்டார். இப்போது நண்பர் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டதால் தங்குமிடம் ஒன்றை ஏற்பாடு செய்யும் பொறுப்பு என் தலையில். வழக்கம் போலவே அந்தப் பொறுப்பை நான் கடைசி நிமிடம் வரை தட்டிக் கழித்தேன். புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னர்தான் பண்டாரிலிருந்து ஹோட்டல் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிய வந்தது சிங்கப்பூரில் முக்கால்வாசி விடுதிகள் நான் தங்க வேண்டிய நாளன்று முழுமையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன என்று. வேறு வழியில்லாமல் எக்ஸ்பீடியா.காம்-ஐ நாட வேண்டியதாயிற்று. எக்ஸ்பீடியா காண்பித்த 7-8 ஹோட்டல்களில் ஒன்றே ஒன்றுதான் அமெரிக்க டாலர் 200க்கும் குறைவு. அந்த ஹோட்டலின் பெயர்: பெராக் ஹோட்டல். லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் செராங்கூன் பகுதியில் உள்ளது என்றும், அங்கு ஏற்கனவே தங்கியவர்கள் இதற்கு நான்கு நட்சத்திரங்கள் வழங்கி கவுரப்படுத்தியிருந்ததாலும் இங்கேயே தங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

சிங்கப்பூரில் வாடகை ஊர்தியில் ஏறியதும் வாகன ஓட்டியிடம் “பெராக் ஹோட்டல்” என்றேன்.

“அப்படியா, அது எங்கே இருக்கிறது?”

நான் – “பெராக் ரோடு என்று போட்டிருந்தார்கள்”

அவர் – “கேள்விப்பட்டதில்லை”

நான் – “செராங்கூன் சாலை பக்கத்தில் என்று படித்தேன்”

அவர் – “செராங்கூன் ரொம்ப நீளமான சாலை”

இப்படிச் சொன்னவர் வாகனத்தில் இருக்கும் திசைகாட்டியை இயக்கி பெராக் ரோடைத் தேட அங்கும் அது இல்லை. இதற்கிடையில் நான் கணிணியத் திறந்து, ஹோட்டல் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து அவரிடம் சொல்ல, செல்போன் மூலமாக ஹோட்டலைத் தொடர்பு கொண்டு இடத்தைக் கண்டுபிடித்தார்.

இத்தனைக்கும் பெராக் ரோடு ஒதுக்குப்புறம் என்று சொல்ல முடியாது. ஜலன் பெசார் (Jalan Besar) என்கிற பிரதான சாலையும், சுங்கேய் (Sungei) என்கிற இன்னொரு பிரதான சாலையும் சந்திக்கும் இடத்திலிருந்து சுங்கேயில் மேற்கு நோக்கி சென்றால் முதலாவது வலது புறத் திருப்பம்தான் பெராக் ரோடு.

பெராக் ஹோட்டல் “பெராக் லாட்ஜ்” என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓரளவு பெயர் வாய்ந்த விடுதியாக இருந்திருக்கிறது. இடையில் தொய்ந்து, பழையதான ஹோட்டலை இப்போது புதுப்பித்திருக்கிறார்கள். சுவர்களை சரிசெய்து வண்ணம் பூசி, அறைகளுக்கு மிகையில்லாத உள் அலங்காரங்கள் செய்து, மரப்பலகைகள் வேய்ந்த தளங்களை மீண்டும் பளபளப்பாக்கி, தேவைப்படும் இடங்களில் சிவப்பு தள ஓடுகள் பதித்து – மொத்தத்தில் ஒரு ஆடம்பரமில்லாத, ஆனால் தூய்மையையும், எளிமை துலங்கும் ஒரு வித கலையுணர்வையும் கொண்டு வந்திருக்கிறார்கள். அறைகளின் அளவுதான் அநியாயத்திற்கு சின்னது. நான் இருந்தது சுப்பீரியர் அறை. ஸ்டாண்டர்ட் அறையை விட சற்று பெரிது என்றார்கள். எனக்கு போதுமானது. இன்னொருவர் இருந்தால் இடைஞ்சலாக இருக்கலாம். கணவன்-மனைவி-குழந்தைகள் என்றால் கட்டாயம் முடியாது. ஆனால் ட்ரிப்பிள் ரூம் என்று பெரிய அறைகளும் உள்ளன.

இந்த இடத்திற்கு எக்ஸ்பீடியா என்னிடம் சுமார் வரிகள் உள்ளிட்டு 118 அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. நேரடியாக பதிந்தால் என்ன வாடகை என்றேன். சிங்கை டாலர்கள் 170 என்றார்கள். அது ஏறக்குறைய 110 அமெரிக்க டாலர்கள் வருகிறது. 2001-ல் 9/11க்குப் பிறகு பான் பசிபிக்கில் (சிங்கப்பூரின் 5 நட்சத்திர விடுதிகளில் ஒன்று) 100 அமெரிக்க டாலர்களுக்கு குறைவான வாடகையில் தங்கியிருக்கிறேன். இப்போது நிலைமை மாறி விட்டது. மறுபடியும் சிங்கப்பூரில் தங்குமிட தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.

சிங்கப்பூரில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்குபவர்களுக்கு, குறிப்பாக இந்திய உணவு சாப்பிட விரும்புவர்களுக்கு, முஸ்தாபாவில் பொருட்கள் வாங்க செல்கிறவர்களுக்கு, பெராக் ஹோட்டல் நல்ல தீர்வாக இருக்கும். ஆன் லைன் முன்பதிவு செய்யும் வசதியுடன் உள்ள பெராக் ஹோட்டலின் இணைய தளம்: www.peraklogdge.net.

Sunday, August 12, 2007

கடந்த வாரத்தில் தமிழ் பதிவுலகம்

தமிழ்மணத்தில் சேர்ந்தபின் பல தமிழ் பதிவுகளை அறிய நேர்ந்துள்ளது. பதிவுலகத்தின் மொழியும் மெல்ல, மெல்ல புரிந்து வருகிறது. கருவிப் பட்டை போன்ற சில சொற்கள் உடனே புரிந்து விடுகின்றன. பல மரமண்டையில் இறங்க நேரமாகின்றன. இளவஞ்சியிடம் “மறுமொழி” என்றால் என்ன என்று கேட்க வேண்டியதாயிற்று. “கும்மி” என்பது பாரதி பெண் விடுதலை பெற்றவுடன் அடிக்க சொன்ன வகையினது அல்ல என்று தெரிகிறது. ஆனால் “மொக்கை” – சவரன் செய்யும் வகையினதா என்பது தெளிவாகவில்லை.

கடந்த வாரம் தமிழ்மணம் சென்னையில் நடந்த பதிவர் வட்டக் கூட்டத்தில் மாலன் பேசிய பேச்சைக் குறித்த சர்ச்சைகளில் பரபரப்பாக இருந்தது. நானும் தமிழனல்லவா? எனவே இது போன்ற சர்ச்சைகளில், அதிகமாகப் புரிந்து கொள்ளாமல், ஆழமாகப் போகாமல் அரைவேக்காட்டுத்தனமாக ஏதாவது கூறவேண்டுமல்லவா? கூறி விடுகிறேன்.
கோபம், கண்ணீர், கேலி, கிண்டல், இயலாமை, தன் விளக்கம், சுய இரக்கம், கலப்படமில்லாத உளறல் கலந்த மாலன் சர்ச்சையின் இரு துருவங்களுக்குமிடையில் தெளிவாக புலப்படுவது ஒன்றே ஒன்று. அது நாம் விதிகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கும் அளவுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ள தீவிரமாக மறுப்பது.

முதலில் மாலனின் ‘நன்னடத்தை’ குறித்த கருத்துக்கள். இணையத்தில் நன்னடத்தை என்பது என்னைப் பொறுத்த வரை க்ரெடிட் கார்டு திருடாமலிருப்பது; ஸ்பாம் அனுப்பாமலிருப்பது. கருத்துக்களை சொல்வதில் நன்னடத்தை எங்கே வருகிறது என்று தெரியவில்லை. பதிய நினைத்ததை மட்டற்ற சுதந்திரத்தோடு பதிவதில்தான் இணையத்தின் பேராற்றலே இருக்கிறது. திரட்டியில் வருவதால் நீ எழுத நினைத்ததை எழுதாதே என்பதன் அடிப்படை ரொம்ப பலவீனமாக இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது அம்மணமாக இருக்க தயங்காதவன், மனைவி கூட இருக்கும் போது பெர்முடாஸ் தேடுவான் என்னும் வாதம் சிந்திக்க வைக்கிறது. ஆனால் சிந்தனையின் இறுதியில் என்ன தோன்றுகிறதென்றால்: பெர்முடாஸ் போடுபவர்கள் போடட்டும்; பெர்முடாஸ் போட விரும்பாதவர்கள் அப்படியே இருக்கட்டும்; ஏன் பெர்முடாஸ் போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள் கூட அப்படியே இருக்கட்டும். கோட், சூட் போட்டவன், வேட்டி கட்டினவன், லுங்கி அவிழ்ந்தது தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பவன், பெர்முடாஸ் போட்டாலும் நாடாவைக் கட்டாதவன் என்று அத்தனை பேருக்கும் சம வாய்ப்புகள் தரும் இடங்கள் இந்த உலகில் அதிகமில்லை. அவற்றில் இணையமும் ஒன்று. இதை மாற்ற யாரால் முடியும்? இந்த நிலைமைக்கு அஞ்சி சிலர் இணையத்தை புறக்கணிப்பது, பாறையை உதைத்த கழுதை காலாகத்தான் முடியும்.

மாலனின் ‘நன்னடத்தை’ குறித்த ஆழமற்ற வாதங்களை விட அவர் கூறிய இலங்கைத் தமிழர் பாஸ்போர்ட் விவகாரம் ஆய்பூய் ஆக்கப்பட்டிருக்கிறது. மாலன் பேச்சின் மூல உரையைப் படிக்கும் போது இது ஒரு பெரிய விவகாரமே அல்ல என்பது தெளிவாகிறது. கண்டனமல்ல, விமர்சனம் கூட அல்ல, ஒரு சாதாரண ஒப்பிடலைக் கூட தாங்க இயலாதவர்களும், அவர்களைத் தாங்கிப் பிடிப்பவர்களும் போடும் ஓலங்கள் பெரிதுபடுத்த தகுதியற்றவை. ‘நன்னடத்தை’ விதிகள் மூலம் இணையத்தின் சுதந்திரத்தை மட்டுப் படுத்தலாம் என்று ஒரு சாரார் கனவு கண்டால், கூக்குரலிடுவதன் மூலம் மாற்றுக் கருத்துக்களை கேட்காமல் பண்ணலாம் என்று மறு சாரார் எண்ணுகிறார்கள் போலும். இவ்விரண்டு குழுக்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் பதிவு செய்யும் இணையமோ அகழ்வார்ப் பொறுக்கும் பூமி போல் இருக்கிறது; இருக்கும்.

ப்ரூனே வந்தேன்


 

பிரிட்டிஷாரால் போர்னியோ என்றும் மலாய்காரர்களால் கலிமான்றான் என்றும் அழைக்கப்படும் தீவை மூன்று நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. வடக்குப் பாகத்தின் பெரும்பகுதி, கிழக்கு மலேசியாவின் சாரவாக், சாபா மாநிலங்கள். தெற்குப் பாகம் இந்தோனேசியாவின் கலிமான்றான். சாரவாக், சாபாவுக்கு நடுவில் ஒரு சிறு கீற்று ப்ரூனே. எரி எண்ணெயும், வாயுவும் கொழிக்கும் ஒரு சிறு நாடு.

பாலியிலிருந்து ப்ரூனேக்கு நேரடியாக விமான சேவை இருப்பது எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருந்தது. ப்ரூனேயின் மொத்த மக்கள் தொகை நான்கு லட்சம் (கன்னியாகுமரி மாவட்ட ம.தொ.வில் நான்கில் ஒரு பங்கு). ப்ரூனேக்கு செல்பவர்கள் பெரும்பாலும் தொழில் சம்பந்தமாக செல்பவர்கள். பாலிக்கு செல்கிறவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பவர்கள். இதில் பாலிக்கும், ப்ரூனேக்கும் இடையில் விமானம் விடக் கூடிய அளவு பயணிகள் எப்படிக் கிடைக்கிறார்கள்; ஒரு வேளை ரொம்ப சின்ன விமானமாக இருக்கலாம். அல்லது, விமானத்தில் கூட்டமிருக்காது; ஹாயாக பயணம் செய்து கொண்டு போகலாம் என்ற நினைத்துக் கொண்டு விமான நிலையம் வந்தேன். இரண்டு கணிப்புகளும் தவறாக இருந்தது. ராயல் ப்ரூனே ஏர்லைன்ஸ் இயக்கிய ஏர்பஸ் A320 விமானம் 150 பயணிகளை ஏற்றிச் செல்வது; முழுவதும் நிறைந்திருந்தது. பல வெள்ளைக்கார யுவதிகள் பாலியின் கடற்கரைகளில் அணிந்த உடுப்புகளை அதிகம் மாற்றாமலே விமானம் ஏறியிருந்தார்கள். ப்ரூனேயில் இவர்களை எப்படி அனுமதிக்கப் போகிறார்கள் என்ற கவலையோடுதான் பயணம் செய்தேன். பெரும்பாலான கவலைகளைப் போலவே இந்தக் கவலையும் தேவையில்லாதுதான் என்பது பிறகு தெரிய வந்தது.

பண்டார் செரி பெகவான் – இதுதான் ப்ரூனேயின் தலைநகர். சுருக்கமாக பண்டார் என்றழைக்கிறார்கள். பண்டார் விமான நிலையத்தில், விமானத்திலிருந்து வருகையை நோக்கிப் போகும் வழியில் பராக்கு பார்த்துக் கொண்டே (அல்லது எதையோ நினைத்துக் கொண்டே) செம்மறி ஆடாக எனக்கு முன்னால் சென்றவர்களோடு ட்ரான்சிட் தளத்திற்குள் நுழைந்து விட்டேன். தவறை உணர்ந்து திரும்பிப் போக எத்தனித்தால் கதவு ஒரு வழியாகத்தான் திறக்கும் என்று தெரிகிறது. அதாவது, உள்ளே வரலாம். வெளியே போக முடியாது. நல்ல வேளையாக கதவிற்கு அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒருவரை அழைத்து, கதவைத் திறக்க சைகை காட்ட, அவரும் மறுப்பேதும் சொல்லாமல் திறந்து விட்டார்.

பண்டாரின் வருகை தளம் காலியாக காற்றாடிக் கிடந்தது. குடியுரிமை சோதிப்பில் முக்காடு அணிந்த நான்கு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். எனது கடவுப் புத்தகத்தில் கலர், கலராக ரப்பர் ஸ்டாம்புகள் குத்தி அனுப்பினர். சுங்கவரிக்காரர் தூரத்திலிருந்தே கையசைத்து விட்டார் சோதனை தேவையில்லை என்று. ஆக மொத்தத்தில் நான் வந்த விமானத்தில் ப்ரூனே வந்தது 10 பேருக்கும் குறைவுதான். மற்ற பயணிகளெல்லாம் ப்ரூனேயிலிருந்து பாங்காக், சிங்கப்பூர், கோலாலம்பூர் என்று வழியிறங்கிச் செல்லும் பயணிகள் போல.

பண்டார் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரும் வழியிலெல்லாம் 10 அடிக்கு ஒரு முறை ப்ரூனே சுல்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு 61 வயது பிறந்த நாள் சமீபத்தில்தான் கொண்டாடினார்களாம். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனர்களை எல்லா இடங்களிலும் தொங்க விட்டிருந்தார்கள். அவரைப் பார்த்தால் 61 வயது என்று மதிக்க முடியாது. 20 வயது இளமையாகத் தெரிகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் வயதில் 30 குறைந்த ஒரு மலேசிய தொலைக்காட்சி அறிவிப்பாளரை இரண்டாவது மனைவியாக மணம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் உலகத்தின் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தவர். பில் கேட்ஸை கார்லோஸ் ஸ்லிம் முந்திவிட்ட இந்தக் காலத்தில் கொஞ்சம் பின் தங்கி விட்டார். அவருடைய தம்பி, இளவரசர் ஜெப்ரி, ப்ரூனே முழுக்க கட்டிடங்களை எழுப்புகிறேன் என்று கொஞ்சம் பில்லியன்களை ஆற்றில் போட்டு விட்டாராம். இருந்தாலும் சுல்தானின் இப்போதைய சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்களாம். ஐந்து அல்லது ஆறு சைபருக்கு மேல் கொண்ட எண்கள் அனைத்துமே என் மூளையை மழுங்கடித்து விடுவதால் 10 பில்லியன் டாலர் என்பது ரூபாயில் எத்தனை என்றெல்லாம் எழுத விரும்பவில்லை. ஒரு டாலருக்கு 9000 ருப்பையா கொண்ட இந்தோனேசியாவில் மனக்கணக்காக கரன்சி மாற்றி, மாற்றி மண்டை காய்ந்து இப்போதுதான் வந்திருக்கிறேன்.

ப்ரூனே மக்கள் பொதுவாக எந்த விஷயத்திலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்று படுகிறது. நிதானமாக நடக்கிறார்கள்; பேசுகிறார்கள்; வண்டியோட்டுகிறார்கள். எப்போதும் ஒரு வித புன்னகை முகத்தில் தவழ்கிறது. கீழ் நிலைகளில் லஞ்சம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் திருட்டு போன்ற சிறு குற்றங்கள் பரவலாக நடைபெறுகின்றன. அரசாங்கம் விமரிசிக்கப்படுவதை விரும்பவதில்லை என்று இணையதளங்களில் படித்தேன். ஆனால், ப்ரூனேயைக் கடுமையாக விமரிசிக்கும் இணையதளங்களைக் கூட இங்கிருந்து அணுக முடிகிறது. எனவே, சீனா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும் போது ப்ரூனேயில் இணைய சென்சார் கெடுபிடிகள் குறைவு என்றே நினைக்கிறேன்.

கலிமன்றான் தீவு தாவர, மிருக வளம் மிக்க ஒன்று. பசுமைமாறாக் காடுகள், சதுப்பு நிலக்காடுகள் எங்கும் செழித்து பரந்திருக்கின்றன. சாலையில் ஓரிடத்தில் 3-4 அடி நீளம் கொண்ட ஒரு உடும்பைக் (monitor lizard) காப்பாற்ற வாகனத்தின் சாரதி ப்ரேக் அடித்தார். நம்மூரில் முரண்டு பிடித்துக் கொண்டு வளரும் செம்பனைகள் (red palms) இங்கு காடுகளில் எங்கும் 30-40 அடிகள் வளர்ந்து நிற்கின்றன. பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் நீராவியில் நிற்பதைப் போன்ற வெப்பநிலை இருக்கிறது. காலை 8 மணிக்கு மேல் மாலை 7 மணி வரை வெளியில், அதிலும் வெயிலில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்க முடிவதில்லை.

பகலெல்லாம் கொடுமையான வெயில் அடிப்பதால் இரவில்தான் மனித நடமாட்டம் தென்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) இரவு கெடாங் மால் பக்கம் போகலாம் என்று நண்பர் ஒருவர் அழைத்துக் கொண்டு போனார். இரவு 9 மணி. கெடாங் மால் பகுதியில் வண்டியை நிறுத்த இடமில்லாத அளவுக்கு கூட்டம். ப்ரூனேயில் இருக்கும் நான்கு லட்சம் மக்களும் ஆளுக்கொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதிக்கு வந்து விட்டார்கள் போல. பசியோடு அரை மணி நேரம் பார்க்கிங் தேடி அலுத்துப் போய், வெளியே வந்து வேறு இடத்தில் சாப்பிட்டோம்.

ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் ஹாஜி ஹசன்னல் போல்க்கியா முசாய்தீன் வாதுல்லா, அதாவது இப்போதைய சுல்தானின் தந்தை ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் ஓமர் அலி மூன்றாவது சைபுதீனின் நினைவாக எழுப்பப்பட்ட மசூதியின் இரவுத் தோற்றமே மேலே கண்டது. ஆமாம், இந்த ஹிஸ் மெஜஸ்டியை தமிழில் எழுதுவது எப்படி: ராஜ ராஜ ராஜ மார்த்தண்ட ராஜ குல திலக ராஜ குலோத்துங்க ….?
Posted by Picasa

Saturday, August 11, 2007

உள்ளூர்பட்சிணி



தாவரபட்சிணி … தாவரங்களை சாப்பிடுபவர்

மிருகபட்சிணி … மிருகங்களை சாப்பிடுபவர்

உள்ளூர்பட்சிணி … உள்ளூரை சாப்பிடுபவர் அல்ல

உள்ளூரில் விளையும் தாவரங்கள், மிருகங்களை மட்டுமே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களைத்தான் உள்ளூர்பட்சிணி என்கிறார்கள். நம்மூரில் அப்படி பிடிவாதம் பிடிப்பவர்கள் இன்னும் வரவில்லை. அமெரிக்காவில் வந்து விட்டார்கள். ஆங்கிலத்தில் இவர்களது பெயர்: Locovore. பார்பரா கிங்சால்வர் (Barbara Kingsolver) என்ற ஒரு உள்ளூர்பட்சிணியும் அவரது குடும்பமும் எழுதியிருக்கும் “Animal Vegetable Miracle: A Year of Food Life”ஐ தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பார்பரா அம்மையாரும், அவரது குடும்பமும் அரிசோனா மாநிலத்தின் டூசோன் (Tucson) நகரத்திலிருந்து வர்ஜினியா மாநிலத்திற்கு நகர்ந்து ஒரு ஆண்டு முழுவதும் தங்கள் வீட்டுத் தோட்டத்திலும், சுற்றியுள்ள விளைநிலங்களிலும் உற்பத்தியாகும் உணவை மட்டும் உண்டு வாழும் அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதைவிட தங்கள் நம்பிக்கைகளை வாசகர்கள் தலையில் ஆழமாகத் திணித்து விட வேண்டும் என்ற முனைப்பு புத்தகத்தின் பக்கங்களெங்கும் துடிக்கிறது.

அமெரிக்காவின் உணவுப் பொருட்கள் விளையுமிடத்திலிருந்து, உண்ணப்படும் இடத்தை அடைய சராசரியாக 1000-1500 மைல்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காகும் எரி பொருள் செலவு ஊதாரித்தனத்தின் உச்சக்கட்டமாகும். எனவே உள்ளூர் விளைபொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது இவர்களின் நம்பிக்கைகளில்/வாதங்களில் ஒன்று.

உணவைப் பதப்படுத்தி தொலைதூரங்களுக்கு அனுப்பவது அந்த உணவின் சத்தைக் குலைக்கிறது. அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிடைப்பதை விட அதிக வருமானம் அதை பதப்படுத்தி, அனுப்பி, வியாபாரம் செய்யும் பெரிய நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கிறது. இப்படியாக வேறு சில வாதங்களும் கூடவே வைக்கப்படுகின்றன.

இந்த உள்ளூர்பட்சிணி வாதங்களில் சிலவற்றை ஏற்றுக் கொள்ளலாம்; சிலவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் நம் உணவுகள் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இம்மாதிரி புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன.

சிறு வயதில் எங்கள் சமையலறையின் தலைமை நிர்வாகி எங்கள் ஆச்சி (அம்மாவின் அம்மா). அன்றாடம் என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பது, உணவுப் பொருட்களை வாங்குவது, ஒரு வேலைக்காரியின் ஒத்தாசையுடன் சமைத்து, பரிமாறுவது அனைத்தும் அவர்களின் அதிகாரத்திற்குக் கீழ்தான்.

காலை ஒரு 10 மணியளவில் ஒரு அகன்ற பனையோலைக் கூடையில் காய்கறிகளைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி வருவார். அந்தக் கூடையில் என்னென்ன இருக்கும் என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் ஆச்சி குறிப்பாக சில பக்கத்து ஊர் காய்கறிகளைப் பற்றி வினவுவது இன்னும் நினைவிருக்கிறது.

ஒன்று, தருவைக்குளம் தக்காளி. பருநெல்லிக் கனிகளை ஒத்த அளவிலும், வடிவிலும் இருக்கும் சிறு உருண்டையான தக்காளிப் பழங்கள். இவை தருவைக்குளம் என்ற ஊரில் விளைந்தது என்று கணிக்கிறேன். எல்லா நேரங்களிலும் கிடைக்காது. நான் சிறுவனாக இருந்த போது மட்டுமே இந்தியாவில் இவற்றை சாப்பிட்டிருக்கிறேன். பிறகு, இது வரை இந்த வகைப் பழங்களை நம்மூரில் கண்டதில்லை. வெளிநாடுகளில் கிடைக்கும் செர்ரி தக்காளி வகை இதையொத்ததாக தோன்றுகிறது. ஆனால், நம்மூர் தருவைக்குளம் தக்காளிக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள இப்போது ஆவலாக இருக்கிறது.

இரண்டாவது, குலசேகரன்பட்டிணம் கத்திரிக்காய். இளம் பச்சையாக, நடுத்தர அளவில், குண்டாக இருக்குமென்று நினைவு. காரல் இல்லாமல் ருசியாக இருக்கும் என்று ஆச்சி சொல்வார்கள். அவர்கள், இந்த மாதிரிக் காய்கறிகளை விசாரித்து, வினவும் விதமே அந்த காய்கறிகளுக்காக நாக்கில் எச்சில் ஊற வைத்து விடும். குலசேகரன்பட்டிணம் கத்திரிக்காய் இன்னும் அந்த ஊரில் கிடைக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்.

இப்போது யோசிக்கும் போது அந்தந்த ஊர் காய்கறிகளை அங்கங்கே சாப்பிடும்போதுதான் சுவையாக இருக்கிறது. கோடை வந்துவிட்டால் சென்னை முழுவதும் மாம்பழங்கள் குவிந்து விடுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பங்கனபள்ளி வகையைச் சேர்ந்தவை. சென்னையில் இருக்கும் வரை இந்த வகையின் தரத்தைக் குறித்து எனக்கு மேலான அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால், ஒரு முறை நெல்லூரில் இந்த வகையை சாப்பிட்டு விட்டு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டேன். பங்கனபள்ளி பழம் நெல்லூரில் இப்படி சுவைத்தால், அல்போன்சா ரத்தினகிரியிலும், இமாம்பசந்த் அது எங்கே விளைகிறதோ அங்கும் எப்படி சுவைக்கும் என்று எண்ணுகிறேன்.

காய்கறிகள், பழங்கள் மட்டுமல்ல, பால், மாமிசம், முட்டை, ஏன் மீன் வகைகளில் கூட இடத்திற்கு இடம் ருசி வேறுபடுகிறது. குமரி மாவட்டத்திற்கு குடி பெயர்ந்தபிறகு, சென்னையில் மீன் வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார், குமரி மாவட்டத்தில் கிடைக்கும் வஞ்சிரம் மீன்தான் இந்தியாவிலேயே ருசியில் சிறந்ததென்று. இன்னும் அதை சோதித்துப் பார்க்கும் தருணம் வரவில்லை. ஏனோ, வஞ்சிரம் மீனை மெச்ச என் நாவுக்கு முடியவில்லை.

நாஞ்சில் நாட்டு உணவுகளின் விற்பன்னராகிய நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையில் ஆரல்வாய்மொழியில் கிடைக்கும் தண்டங்கீரையைப் பற்றி கவிமணி ஒரு வெண்பாவே எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். நான் அந்த வெண்பாவையும் பார்த்ததில்லை. என் வீட்டிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் ஆரல்வாய்மொழியின் கீரையையும் பார்த்ததில்லை. ஆனால், ஆரல்வாய்மொழி அருகிலுள்ள ஒரு இடத்தில் கீரை விதை வாங்கி வீட்டில் விதைத்திருக்கிறோம். அது வாரமலர் போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் ஒரு புதுக்கவிதைக்காவது தகுதியானதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
Posted by Picasa

Sunday, August 5, 2007

இந்த வாரம் முழுவதும் பாலியில்

புவியியலில் தட்டுத் தடுமாறுபவர்களுக்கு சிறு குறிப்பு: பாலி என்பது இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. இந்தோனேசியாவின் பிரதான தீவாகிய ஜாவா தீவிற்கு வடகிழக்கில் ஒரு சிறிய தீவு. காரில் ஒரு ஐந்து மணி நேரத்திற்குள் தீவை சுற்றி வந்து விடலாம். பவழப்பாறைகள் சூழ்ந்த தீவு. வெண்மணல் கடற்கரை. அடர்ந்த நீலக் கடல். எரிமலைகள் உமிழ்ந்த கரும்பாறைகள் பொடிந்து உருவான வளமான மண். வஞ்சகமில்லாமல் பெய்யும் மழை. விளைவாக எங்கும் பசுமை. கடவுள் ஓரவஞ்சனையாக சில இடங்களுக்கு எல்லாவித அழகையும் கொடுக்கும் வழக்கம் உண்டல்லவா. அதில் இதுவும் ஒன்று.

பாலியின் அழகைக் காண வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். கண்டால் மட்டும் போதாது என்று கண்டபடி கொண்டாட்டமும் போடுகிறார்கள். இப்படிக் கொண்டாட்டம் போடுபவர்களுக்கு குண்டு போட இந்தோனேசியாவின் மற்ற தீவுகளிலிருந்து தீவிரவாதிகள் வருகிறார்கள். இரண்டு தடவை வெடித்த குண்டுகளால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து இப்போது மறுபடியும் பெருகி வருகிறது. மழை குறைவான, மிதமான வெப்பம் கொண்ட ஜூலை-அக்டோபர்தான் இங்கு சீசன். அரைகுறை ஆடைகளோடு, கரையில் படுத்துறங்கவா, அலையில் சாகசம் செய்யவா, அடியில் மூழ்கி பவழப்பாறைகளைப் பார்க்கவா என்று வெள்ளைக்காரர்கள் திரிகிறார்கள். ஆங்காங்கே ஜப்பான், கொரிய, சீன சுற்றுலாப் பயணிகளும் உண்டு.

பாலியின் தெற்குப் பகுதியில்தான் பிரதானமான கடற்கரைகள் உள்ளன. நான் இம்முறை தங்கியது கிழக்கு நோக்கிய சனூர் கடற்கரை. கரையிலிருந்து ஒரு 300 மீட்டர்கள் தூரம் ஆழமில்லா கடல் (ஆனால் பாறைகள் அடியில் இருப்பதால் சுலபமாக கடக்க முடியவில்லை). அதன் பின்னர் திடீரென ஆழம் 30 அடிக்கு அதிகரிக்கிறது. அங்குதான் பவழப்பாறைகள் உள்ளன.

சனூர் தவிர நுசதுவா, ஜிம்பரன், குட்டா என்று பல கடற்கரைகள் உள்ளன. நுசதுவாவில் இரண்டாண்டுகளுக்கு முன் தங்கியிருக்கிறேன். நம்மூர் கன்னியாகுமரி போல் தென்முனை என்பதால் சுற்றிலும் கடலைப் பார்க்கலாம். ஜிம்பரனில் வரிசையாக உணவகங்கள் உள்ளன. எல்லா உணவகங்களிலும் உயிரோடு மீன், இறால், நண்டு வைத்திருக்கிறார்கள். எது வேண்டுமென்று தெரிவு செய்தால், எடை போட்டு, அவித்து, வறுத்து, பொரித்து, சுட்டு – உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி சமைத்து – பரிமாறுவார்கள். இந்தோனேசியர்களுக்கு மீனைச் சுட்டு, அதாவது grill செய்து சாப்பிடுவது பிடிக்கும் போல. ஜாவாவிலும் சரி, பாலியிலும் சரி எங்கு பார்த்தாலும் ‘இங்கு இக்கான் பக்கார் கிடைக்கும்” என்று போர்டுகள் கூப்பாடு போடுகின்றன. பஹாசா மொழியில் இக்கான் என்றால் மீன்; பக்கார் என்றால் சுடுவது என்பதாம். பசியோடு இருக்கும் போது சுடு சாதம், சம்பல் என்றழைக்கப்படும் சட்னி/பச்சடி கலவைகள், சூடான இக்கான் பக்கார் கொண்டா, கொண்டா என்று இழுக்கிறது.

குட்டாதான் பாலியில் பிரபல இடம். குட்டா கடற்கரையில் ஆதவன் மறையும் காட்சி அருமையாக இருக்குமாம். எனக்கு இது வரை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. குட்டாவில் இரவு கேளிக்கை விடுதிகள் பிரபலம். குண்டுகள் வெடித்தது இங்கேதான். இம்முறை ஒரு இரவு குட்டாவிலிருக்கும் ஒரு ஜப்பானிய உணவகத்திற்கு சாப்பிடச் சென்றோம். இன்னொரு முறை பக்கத்திலிருக்கும் கொரிய உணவகத்திற்கு. அவ்வளவுதான் குட்டா அனுபவம்.

பாலியின் மையப்பகுதி முழுவதும் மலைப் பிரதேசம். ஒரு நாள் வடக்குப் பகுதியிலிருக்கும் சிங்கராஜா வரை செல்ல வேண்டியதாயிற்று. அடர்ந்த பசுங்காடுகளிக்கிடையில் ஊசிக் கொண்டை வளைவு சாலைகள் வழியாக மூன்றரை நேரப் பயணம். வழியெங்கும் இந்துக் கோவில்கள் தென்படுகின்றன.

பாலியின் இந்து மதம் இந்தியாவிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். மந்திர தந்திரம், ஆவி, மூதாதையர் வழிபாடு, உயிர்ப்பலி என்று இந்து மதத்தின் பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்து நிற்கிறது. இதன் வரலாறு – குறிப்பாக இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து, எப்போது வந்தது; எப்படி இந்தோனேசியா முழுவதும் பரவிய இஸ்லாமினால் பாதிக்கப்படவில்லை – எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி படித்து விட்டு எழுதுகிறேன். கடந்த ஆண்டு கம்போடியாவிலுள்ள அங்க்கோர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. சோழர்களின் பரம்பரையினர்தான் கம்போடியாவை ஆண்டதாகவும், அங்க்கோரில் தென்படும் பல கோவில்களை (அங்க்கோர் வாட் அவற்றில் புகழ் வாய்ந்த ஒன்று) வடிவமைத்ததாகவும் நமது பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்கள் கூறியதாக ஒரு மங்கலான நினைவு. ஆனால், நான் கம்போடியாவில் வாங்கிப் படித்த புத்தகமொன்றில் அது சோழர்களா, அல்லது ஒரிசாவிலிருந்து வந்தவர்களா என்று தெரியவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். கோவிலுக்குள் இருந்த கல்வெட்டில் ஐ, க, த, ப போன்ற எழுத்துக்களை கண்டுபிடித்து, எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டியிடம் அவற்றை உச்சரிக்க சொல்லி கேட்டுக் கொண்ட போது அவர் அவைகளை ஐ, க, த, ப என்றே உச்சரித்தார். தென்மேற்காசியாவில் இந்திய கலாசார வரலாறு பற்றி தெரிந்து கொள்ள நல்ல புத்தகங்கள் இருந்தால் தெரிவியுங்கள். கையடக்கமான அளவில் இருந்தால் நல்லது.
Posted by Picasa

என் சமையலறையில்

கோழி முட்டையில் பிறந்ததுதான் என் சமையலறை அனுபவம்.

சிறு வயதில் … அநேகமாக 8-9 வயதிருக்குமென நினைக்கிறேன் … தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாக வேண்டும் என்ற சட்டம் எங்கள் வீட்டில் அமல்படுத்தப்பட்டு பலத்த எதிர்ப்பிற்கு உள்ளான நேரம். சட்டத்தின் கடுமையைக் குறைப்பதற்காக அந்த முட்டை நாங்கள் விருப்பப்பட்ட வகையில் சமைத்துக் கொள்ளப்படலாம் என்றும், நாங்களே அதை சமைத்துக் கொள்ளலாம் என்றும் இரு சலுகைகள் வழங்கப்பட்டன.

பச்சையாக பாலில் அடித்து …
அரைகுறையாக அவித்து, ஓட்டின் மேல் துவாரம் செய்து, உப்பும், மிளகும் போட்டு …
முழுவதாக அவித்து, இரண்டாக பிளந்து, உப்பும், மிளகும் தூவி…
முட்டையை உடைத்து ஊற்றி, திருப்பிப் போட்டோ, போடாமலோ பொரித்து எடுத்து …
அடித்த முட்டையில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து ஆமலெட்டாக பொரித்து, அல்லது கிளறி வறுத்து …

இப்படியாக பெரியவர்கள் முட்டை சமைக்கும் முறைகள் எங்களுக்கு அலுத்துப் போனதால், முட்டையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து பொரித்தாலென்ன என்று பரீட்சார்த்த ரீதியாக ஆரம்பித்து, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா மற்றும் கைக்கு கிடைக்கும் பதார்த்தங்களை சேர்த்து பல விஷப் பரிட்சைகளை நடத்தினோம். கடவுள் கிருபையால் உடலுக்கும் பொருளுக்கும் சேதம் விளைவிக்காத அந்த பரிட்சைகள் எப்போது முடிவுக்கு வந்தன என்பது நினைவில்லை.

இந்த முதல் அனுபவத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து, கல்லூரி நாட்களில் மீண்டும் கரண்டியைப் பிடிக்க நேரிட்டது. நான் படித்த மீன்வள அறிவியலில், சுமார் இரண்டு பருவங்கள் (அப்போதெல்லாம் ஒரு பருவம் என்பது மூன்று மாதங்கள் கொண்ட ட்ரைமெஸ்டர்) மீன் வகைகளை பல விதங்களில் பதப்படுத்துவது பற்றி படிக்க வேண்டும். உறைய வைப்பது (ஃப்ரீசிங்), டப்பாக்களில் அடைப்பது (கேனிங்) என்று பலவகையான முறைகளை கற்றுத் தருவார்கள். மீன்கள் தவிர இறால், நண்டு, சிப்பி வகைகள் (ஓயிஸ்டர், மசல்ஸ்), கணவாய் (ஸ்குயிட்) என்று பலவித கடலுணவுகளை தயார் செய்ய வேண்டி வந்தது. ஆனால், வீட்டில் மூன்று வேளை திவ்யபோசனம் கிடைத்து வந்ததால் சமையலறைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை.

அந்தக் கட்டாயம் ஏற்பட்டது இளநிலை முடித்து விட்டது முதுநிலைப் படிப்பிற்காக வெளிநாடு சென்ற போதுதான். நான் சென்றது ஏசியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்றழைக்கப்படும் ஏ.ஐ.டி. தாய்லாந்தில் பாங்க்காக்கில் இருக்கிறது. விமான நிலையத்திலிருந்து அழைத்துப் போன நண்பர் ஜான் தோமஸ் அன்று இரவு விருந்து என்று ஒரு தாய் உணவகத்திற்கு கூட்டிச் சென்று விட்டார். நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன, மிதப்பன என்று சகலவகையான ஜீவராசிகளையும் உள்ளடக்கிய சுவையான விருந்து அது. இந்திய, சீன உணவு தயாரிப்பின் மிகச் சிறந்த அம்சங்களை உள்ளடக்கியதுதான் தாய் உணவு என்றுதான் அன்று கருதினேன்; இன்று வரை கருதுகிறேன். அப்பாடா, நம்மூர் சாப்பாடு கிடைக்க விட்டால் கூட இந்த உணவை சாப்பிட்டு சமாளித்து விடலாம் என்ற மகிழ்ச்சியுடன் அன்று இரவு அறைக்கு திரும்பி வந்தேன், மறுநாளே அந்த நம்பிக்கை குலையப் போகிறது என்று தெரியாமலே.

ஏ.ஐ.டியில் மாணவர்களுக்கு இரண்டு வகையான உறைவிடங்கள் கொடுக்கப்பட்டன. தனித் தனி அறைகள் கொண்ட நான்கு மாடிக் கட்டங்கள், அல்லது தளமொன்றிற்கு மூன்று அறைகள் + வரவேற்பரை & சமையலறை கொண்ட இரண்டு தள அபார்ட்மெண்ட்கள். இந்திய துணைக்கண்டலத்திலிருந்து அங்கிருந்த மாணவர்கள் பெரும்பாலோர் அபார்ட்மெண்ட்களை நாடினர். காரணம் அங்கு நம் விருப்பப்படி சமையல் செய்து கொள்ளலாம். நம்மூர் சமையல் செய்து கொடுக்க அங்கு 4-5 தாய் பெண்களும் இருந்தனர். ஒரு பெண் 2-3 அபார்ட்மெண்ட்டில் சமைப்பது வழக்கம். பத்து மணிக்கு வேலையை ஆரம்பித்து சைவர்களின் அபார்ட்மெண்டில்: சாம்பார், பொரியல், ரசம்; அசைவம் சாப்பிடும் இடங்களில்: மீன், கோழி, நண்டு, இறால் என்று வரிசையாக ஆக்கி வைத்து விட்டு நாம் சாப்பிட வரும் போது காணாமல் போய் விடுவர். பிறகு மதியம் 3 மணிக்கு வந்து துவைத்து, இஸ்திரி போட்ட துணிகளை அறைகளில் வைத்து விட்டு, அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு போவார்கள். மாலை 4 மணிக்கு ராச்சமையல் ஆரம்பித்து விடுவார்கள். மாலை ஆறு மணிக்கெல்லாம் ஹாட் பாட்டில் சப்பாத்தியோ, பூரியோ, ஆலு பரோட்டாவோ, சித்ரான்னங்களோ தயாராக இருக்கும். வாரத்தில் ஆறு நாட்கள் ஒரு fairy tale போல நடக்கும் இந்த மந்திர, மாய சமையல் ஞாயிறு மட்டும் கிடையாது.

முதல் நாளிரவு சுவையான தாய் உணவை சாப்பிட்டு விட்டு, மறு நாள் ஞாயிறு பெரும் எதிர்பார்ப்புடன் ஏ.ஐ.டி.யின் உணவகத்திற்கு சென்ற எனக்கு கிட்டியது பெருத்த ஏமாற்றமே. முதல் நாள் நாங்கள் ருசித்து சாப்பிட்ட உணவு வகைகளையே ஏ.ஐ.டி. உணவகம் சகிக்க முடியாத சுவையில் ஆக்கியளித்திருந்தது. என்னோடு சாப்பிட வந்திருந்த நண்பர் வி.எம்.பி. என்றழைக்கப்பட்ட வி.எம். பாலசுப்பிரமணியம் (தற்போது ஓஹாயோ ஸ்டேட் பல்கலையில் உணவுத் துறையில் பேராசிரியராக இருக்கிறார்) சைவர். இந்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு பேசாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதமும், தயிரும் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்படியாக மறுபடியும் சமையலறையில் மீண்டும் நுழைய ஒரு வாய்ப்பு கிட்டியது.

இதற்கிடையில் அங்கிருந்த தமிழ் குழாமில் ஏற்கனவே சமையல் தெரிந்தவர்கள் சில பேர் இருந்தார்கள். பி.கே என்றழைக்கப்பட்ட மல்லிகார்ஜீனன் பரமேஸ்வரகுமார் (இப்போது வர்ஜினியா டெக்கில் பேராசிரியராக இருக்கிறார்) மோர்க்குழம்பு வைப்பார். சென்னையிலிருந்து வந்திருந்த நாகேஷின் சிறப்பு வத்தக் குழம்பு + வெண்டைக்காய் பொரியல். எல்லாவற்றுக்கும் மேலே ‘தவசிப்பிள்ளை’ என்று சிறப்புப் பட்டம் கொடுக்கப்பட்டு, எல்லோராலும் அண்ணாச்சி அன்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி கணபதி (தற்போது திருச்சி வேளாண் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்). ஒரு மூட் வந்ததென்றால் சாம்பார், பொரியல், பச்சடி, துவையல் என்று சமைத்து, ஏ.ஐ.டி. பண்ணைக்கு சென்று வாழை இலை பறித்து வந்து விருந்தே போட்டு விடுவார்.

மேலே சொன்ன நண்பர்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்து நானும் சமையல் கற்று வந்தேன். ஆரம்பத்தில் பெரும்பாலும் சைவச் சமையல்தான். அப்புறம் அது அலுத்துப் போய், அசைவச் சமையல் முயன்று பார்த்தோம். கடைக்குப் போய் கோழி வெட்டி வாங்கி வந்தோம். கணபதி, நான், மற்றும் விருதுநகரிலிருந்து நண்பர் அரவிந்தன் (சமீபத்தில் சென்னை எஸ்.எஸ்.என் பொறியல் கல்லூரியில் கணிணித் துறை தலைவராக இருந்ததாக கேள்வி) மூவரும் வெட்டி, சுத்தம் செய்யப்பட்ட கோழியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அது தன்னை எப்படி சமையல் செய்ய வேண்டும் என்ற முறையை சொல்லும் என்று எதிர்பார்த்தோமோ என்று தெரியவில்லை. மவுனத்தை கணபதிதான் உடைத்தார்:

“எல்லாக் குழம்பு வகைகளுக்கும் புளி வேண்டும்”

அடுத்தாற்போல் அரவிந்தன் சொன்னார்:
“கோழிக்கு மஞ்சள் தடவ வேண்டும். மஞ்சள் நல்ல ஆண்ட்டிசெப்டிக்”

நானும் ஏதாவது சொல்ல வேண்டுமல்லவா, எனவே “தேங்காயை அரைத்து கறியில் ஊற்றுவார்கள்” என்றேன்.

கணபதி புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்கினார். அரவிந்தன் மஞ்சளை தடவினார். நான் தேங்காய் மற்றும் மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்தேன். கொதித்து வந்த புளிநீரில் கோழியை போட்டு அவித்து, மசாலாவைக் கூட்டி இறக்கினோம். ஒரு வாய் சாப்பிட முடியவில்லை.

கோழி சமைக்க கற்றுக் கொள்ள ரங்காவுக்கு திருமணம் ஆக வேண்டியிருந்தது. அந்த அனுபவத்தை அப்புறமாக தொடருகிறேன்.