Showing posts with label பயணங்கள். Show all posts
Showing posts with label பயணங்கள். Show all posts

Sunday, May 8, 2011

சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்


இப்போது மாதம் ஒரு முறை சிங்கப்பூர் செல்வதால் அங்கு நடந்து முடிந்த தேர்தலில் ஒரு சிறிய ஆர்வம் தோன்றியது. கூடவே, லீ குவான் யூவின் From Third World To First படித்து வருவதும் ஒரு காரணம்.

எல்லோரும் எதிர்பார்த்தபடியே ஆளும் கட்சியான PAP பேரளவில் வெற்றி பெற்றுள்ளது; ஆனால் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்து விட்டது; அல்ஜூனிட் என்ற ஒரு தொகுதியில் பாட்டாளிகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தொகுதியில் பாட்டாளிகள் கட்சி தலைவரிடம் கடந்த அமைச்சரவையின் வெளிநாட்டு அமைச்சர் தோற்று விட்டார்.

எண்பத்தேழு வயதான லீ குவான் யூ எந்த வித எதிர்ப்புமின்றி ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். PAPகாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழக்கம் போல் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசினார். அல்ஜூனிட் வாக்காளர்கள் PAPஐ தோற்கடித்தால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். PAP எம்.பி.க்கள் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதியைத்தான் கவனிப்பார்கள் என்ற ரீதியில் மிரட்டினார். பட்டாளிகள் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக அரசியலில் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் நோக்கம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் அப்படிக் கைப்பற்றினால் அவர்களில் பிரதமர், நிதியமைச்சர், வெளிநாட்டு அமைச்சர், வர்த்தக அமைச்சர் போன்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் கிடையாது என்பதை வாக்காளர்கள் யோசிக்க வேண்டும் என்றார். நாமும் யோசிக்க வேண்டிய விஷயம்தான் அது. விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும் பல இளைஞர்களை அரசியலுக்கும் பிறகு ஆட்சியதிகாரத்திற்கும் கொண்டு வந்தது. சேலத்திலிருந்த ராஜாஜி அவர்கள் ஈரோட்டிலிருந்த ஈ.வே.ரா. அவர்களைத் தேடிச் சென்று காங்கிரஸ் இயக்கத்திற்குள் கொண்டு வந்தார் என்று அறிகிறோம். மக்கள் சார்ந்த இயக்கங்கள் தேய்ந்து விட்ட நிலையில் இன்று அரசியலுக்குள் வருகை என்பது ஏற்கனவே வெளிச்சத்திலுள்ள நடிகர்களுக்கும், தலைவர்களின் வாரிசுகளுக்கும், ஆட்சியதிகாரத்திலுள்ள அதிகாரிகளுக்கும் (உதாரணம்: பிரதமர் மன்மோகன் சிங்) மட்டுமே சாத்தியமாகிறது. இதனால்தான் நமது ஆட்சியமைப்பு சீர்குலைந்து கொண்டே வருகிறது. மீண்டும் மக்கள் சார்ந்த இயக்கங்கள் தலை தூக்கினால்தான் இந்த நிலைமை மாறும்.

லீ குவான் யூவின் From Third World To First பற்றி…

சிங்கப்பூரை எப்படி முதல்தர நாடாக மாற்றினார் என்பதை லீ குவான் யூ தன்னுடைய மனம் திறந்த, நேரடி பாணியில் எழுதுவதுதான் இந்த நூல். சுமார் 700 பக்கங்கள் கொண்ட தண்டியான புத்தகம்தான். ஆனால் சுலபமாக வாசிக்கலாம். எளிமையான ஆங்கிலம், நேரடியான நடை, சுவையான சம்பவங்கள், ஒளிவு மறைவில்லாத விமர்சனங்கள். இதை வாசிக்கும் போது வெறும் சிங்கப்பூரின் வரலாற்றை மட்டுமல்ல, தென்கிழக்காசியாவின் கடந்த ஐம்பதாண்டு வரலாற்றின் சுருக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.

Sunday, January 9, 2011

30000 அடி உயரத்தில் சில எச்சரிக்கை மணிகள்



2011ன் முதல் பயணம் மதுரையின் புதிய விமான நிலையத்திலிருந்து. பளபளப்பாக, ஜொலிப்பாக, தூய்மையாக இருக்கிறது இந்த நிலையம். மதுரையை அடையாளப்படுத்த முகப்பில் ஏதாவது கட்டிடக் கலை வேலைகள் செய்திருக்கலாம். ஆனால் திருச்சியில் செய்தது போல் முனைந்து சரிவராமல் போனதற்கு செய்யாததே தேவலாம் என்று தோன்றுகிறது. உள்ளே கருங்கல்லில் எளிமையாக ஒரு சிறு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். பல புகைப்படங்கள் உள்ளன. ஒரு படத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரு வருகிறார். பக்கத்தில் காமராசர் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு நிற்கிறார். கொடைக்கானல் ஏரியின் நீள்தோற்றப் படமொன்றும் இருக்கிறது. இந்தப் படத்தை இன்னும் சிரத்தையெடுத்து நகலாக்கியிருக்கலாம். பழைய விமான நிலையத்திலிருந்து இருக்கைகளை கொண்டு போட்டு விட்டார்கள். அங்கேயே இந்த இருக்கைகள் பழையதாகத் தெரிந்தன. இங்கே கண் திருஷ்டிப் பூசணி இல்லாததை நிறைவு செய்கின்றன. கடைகளும் அங்கே இருந்து இங்கே மாறிவிட்டன என்று நினைக்கிறேன். புத்தகக் கடை கொஞ்சம் பெரிதாக இருப்பதால் கொஞ்சம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வழக்கமான விமான நிலைய புத்தகங்கள்தான். “யூ கேன் வின்” ஷிவ் கெரா, “அக்கினிச் சிறகுகள்” அப்துல் கலாம், ப்ளாஸ்டிக் தாளில் பொதிந்த காமசூத்ரா, மில்ஸ் & பூன், ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், இத்யாதிகள். ஆனால் சில புதியவைகளும் தென்பட்டன. ரிச்சர்ட் டாக்கின்ஸின் “God Delusion” ஒரு உதாரணம். கடையில் பதிவர் தருமி ஒரு பங்குதாரராக இருப்பாரோ என்று தோன்றியது. கிழக்கு பதிப்பகம் சுஜாதாவின் நூல்களை அருமையான பதிப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து “பாரதி இருந்த வீடு” என்ற நாடகத் தொகுப்பையும், கடந்த ஆண்டு பெங்குவின் வெளியிட்ட “அப்சலூட் குஷ்வந்த்” என்கிற குஷ்வந்த் சிங்கின் புத்தகத்தையும் வாங்கினேன்.

மதுரை-சென்னை விமானத்தில் வைகோவும் வந்திருந்தார். மிடுக்காக இருக்கிறார். இவர் வருங்காலத்தில் முதல்வராக வருவார் என்று மனதிற்குள் பட்ஷி சொல்கிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அநேகமாக மறுபடியும் நாயக்கர்களின் ஆட்சிதான்.

விமானம் சென்னையைச் சேர்ந்த போது இரவு 10:20. கூட்டமிருக்காது என்று நினைத்தேன். அலை மோதியது. மறுநாள் சயின்ஸ் காங்கிரஸ். பிரதமர் சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் வந்திருந்தார். மும்பை, பெங்களூரு, மதுரை மூன்று விமானங்களின் பெட்டிகளையும் ஒரே பெல்ட்டில் போட்டு விட்டார்கள். 12:15 மணிக்குப் புறப்படும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏற 11:15 மணிக்கு சர்வதேச முனையகத்தில் இருக்க வேண்டும். மதுரை விமானப் பெட்டிகள் வர 10:50 ஆகி விட்டது. சர்வதேச முனையகம் வழக்கமாகவே கூட்டத்தில் திண்டாடும். நல்ல வேளையாக, அன்று கூட்டம் குறைவு. 11:10க்கு ஆஜர் கொடுத்து தப்பித்தேன்.

2010ன் இறுதியில் விமானப் பயணங்கள் சுகப்படவில்லை. டிசம்பரில் சிங்கப்பூரிலிருந்து திருவனந்தபுரம் வந்த விமானம் இறங்கப் போவதற்கு முன் நடுவானில் காற்றில் தள்ளாடியது. விமானத்தின் எச்சரிக்கை அறிவிப்பு தானாகவே தொடங்கி “விமானம் இப்போது தரையில் விழும் அபாயம் இருக்கிறது. உங்கள் இருக்கைக்கு கீழ் மிதவை இருக்கிறது. அதை எடுத்து அணிந்து கொள்ளுங்கள்” என்றெல்லாம் பினாத்த ஆரம்பித்து விட்டது. பயணிகளெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். “இந்த அறிவிப்பை இதற்கு முன் எப்போதாவது கேட்டிருக்கிறாயா?” என்கிறார் சக பயணி. “இல்லை” என்கிறேன் நான். பைலட்டோ, விமானப் பணியாளர்களோ ஏதாவது அறிவிப்பு கொடுப்பார்களா என்றால், அதுவும் இல்லை. இதற்கிடையில் கீழே விமான நிலையத்தின் விளக்குகள் தெரியமளவுக்கு பறந்து வந்து விட்டதால் போன உயிர் திரும்ப வந்தது.

சில நாட்களுக்குப் பின் சென்னை மார்க்கமாக பாங்காக் வழியாக சீனாவின் குவாங்சூ. சென்னையிலிருந்து புறப்பட்ட தாய் ஏர்வேஸ் விமானம் முக்கால் மணி நேரம் பறந்து விட்டு, வானத்திலே ஒரு வட்டமடித்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டது. தரையில் இறங்கி அரை மணி நேரம் ஆகியும் காரணம் சொல்லப்படவில்லை. பயணிகள் கத்த ஆரம்பித்த பிறகுதான் தகவல் சொன்னார்கள். விமானத்தில் சரக்குகள் வைக்குமிடத்திலிருந்து ஏதோ எச்சரிக்கை சமிக்ஞைகள் வந்தனவாம். அதைச் சரி பார்க்க விமானத்தை தரையில் இறக்கி இருக்கிறார்களாம். ஒரு வழியாக விமானம் மூன்று மணி நேரத் தாமத்திற்குப் பிறகு பாங்காக் சென்றது. அதிர்ஷ்டவசமாக எங்களது குவாங்சூ விமானத்தைக் கடைசி நிமிடத்தில் பிடித்து விட்டோம்.

2010ன் கடைசிப் பயணமாக சென்னை-தூத்துக்குடி கிங் ஃபிஷர். காலை 11:15 புறப்பாடு. 10:15க்கு சென்னை விமான நிலையம் முன் காரில் வந்து இறங்குகிறோம். விமான நிலைய விரிவாக்கத்தாலும், தொடர் மழையாலும் ரயில் நிலையத்தைவிடக் கேவலமாகி இருக்கும் சென்னை விமான நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். ஹஜ் சென்று திரும்பி வரும் பயணிகளை வரவேற்க வந்த கூட்டமும், ஹஜ் பயணிகளின் வருகையும். ஒரு வழியாக ஜனப் பெருந்திரளுக்கு எதிர் நீச்சல் போட்டு முனையகத்திற்குள் நுழையும் போது 10:25. பெட்டிகளை எக்ஸ்ரே செய்து வரிசையில் நிற்கும் போது 10:31. என்னுடைய முறை வரும் போது 10:36. செக்-இன் செய்யும் நேரம் முடிந்து விட்டது என்றார் பணிப்பெண். 10:35ற்கு மூடிவிடுவார்களாம். நான் என்ன சொல்ல முயன்றாலும் நிர்த்தாட்சண்யமாக முடியாது, முடியாது என்றபடியே இருந்தார். இதற்குள் பக்கத்துக் கொண்டரில் இருக்கும் நபர் “அந்த விமானம் இன்னும் திறந்துதான் இருக்கிறது. உடனடியாக செக்-இன் செய்தால் பிரச்சினை இல்லை” என்று கூற இந்தப் பெண்ணோ எந்த உதவியும் செய்யும் மனப்பாங்கில் இல்லை. திரும்ப, திரும்ப, “நீ தாமதம்” என்று பல்லவியையே பாடிக் கொண்டிருந்தார். அதற்குள் பக்கத்துக் கவுண்டர்காரர் எழுந்து வந்து என்னுடைய தகவல்களை உபயோகித்து செக்-இன் தொடங்கி விட்டார். அதன் பின்னும் பல்லவியை இந்தப் பெண் நிறுத்தவில்லை. “கொஞ்சம் வாயைப் பொத்துகிறீர்களா? நாங்கள் வாடிக்கையாளர்கள். அதற்கேற்றபடி நடத்துங்கள்” என்று என் மனைவி கடுமையாகக் கேட்ட பிறகுதான் பெண்மணி வாயை மூடினார். விஜய் மல்லையா கிங் ஃபிஷர் ஏர்லைன்சின் பணிப்பெண்கள் ஒவ்வொருவரையும் நேரடியாகத் தெரிவு செய்கிறாராம். உருவ அழகோடு வாடிக்கையாளர் சேவை செய்யத் தகுதியானவர்களா என்று பார்த்து அவர் தெரிவு செய்வது நலம்.

Sunday, June 13, 2010

ஏழாவது மாவட்டத்தில் எனது நாள்


ஜூன் 13, 2010.ஞாயிறு காலை. எட்டரை மணி.

ஹோசிமின் நகர் விமான நிலையம் எங்களது விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் தவிர வேறு யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. விசா வழங்கும் பிரிவு அசமஞ்சமாக இயங்கிக் கொண்டிருந்தது.

விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது வழக்கமான ஹோசிமின் நகரின் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனால், வழக்கமான வாகன நெரிசல் இல்லை.

விடுதி ஒழுங்கு செய்தவர்கள் வாகனமும் அனுப்பியிருந்தார்கள். எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்ததால், நான் விடுதி எங்கே இருக்கிறதென்று கவனிக்கவில்லை. வழக்கமாக விடுதிகள் அனைத்துமே டிஸ்ட்ரிக்ற் 1 என்று அழைக்கப்படும் ஹோசிமின் நகரின் சைகான் நதியை ஒட்டிய நகர் பகுதியிலேயே அமைந்திருக்கும். இந்த முறையும் அப்படியேதான் என்று நினைத்து வந்திருந்தேன். ஓட்டுநர் டிஸ்ட்ரிக்ற் 1 செல்லும் பாதையை விட்டு விலகிய ஒரு பாலத்தில் ஏறியபோதுதான் வேறெங்கோ விடுதி ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என்று புரிய வந்தது.

10-15 நிமிடங்களில் விசாலமான வீதிகளும், வானைத் தொடும் கட்டங்களும், கடைகளும் நிறைந்த சிங்கப்பூர் போன்ற ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். விடுதிக்குப் போன பிறகு முகவரியைக் கவனித்தால், அது டிஸ்ட்ரிக்ற் 7 என்று சொன்னது. கூகுளைத் தட்டி டிஸ்ட்ரிக்ற் 7 பற்றிக் கேட்டேன். இது சமீபத்தில் அமைக்கப்பட்ட ஒரு நகரமாம். கொரியர்களும், ஜப்பானியர்களும் இங்கு பெருமளவு வசிக்கிறார்களாம். இங்குள்ள விடுதிகளில் மேற்கத்திய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தங்குவதால், இங்கு பல பார்களும், ரெஸ்தாரந்துகளும் உள்ளனவாம்.

எனக்கு ஒரு தொழில் கண்காட்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அக் கண்காட்சி எஸ்.ஈ.சி.சி. என்னும் சைகான் எக்சிபிஷன் & கன்வென்ஷன் சென்ற்றரில் நடைபெறுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இதே கண்காட்சி டிஸ்ட்ரிக்ற் 1ல் உள்ள ஒரு இடத்தில் நடைபெற்ற போது சென்றிருக்கிறேன். அந்த இடம்தான் எஸ்.ஈ.சி.சி. என்று நினைத்திருந்தேன். ஆனால், எஸ்.ஈ.சி.சி. விடுதியிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்குள்ளேயே இருந்தது. போகிற வழியில் டாக்சியை நிறுத்தி ஏடிஎம்மிலிருந்து 20 லட்சம் டாங் எடுத்துக் கொண்டேன் (ஒரு ரூபாய் இன்றைய கணக்கில் 435 டாங். குறைந்தபட்ச நோட்டு 1000 டாங். 1000, 2000, 5000, பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம், ஒரு லட்சம், ஐந்து லட்சம் என்று கலர், கலராக அடித்து வைத்திருக்கிறார்கள்).

கண்காட்சி முடிந்து, சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து, சற்று நேரம் உறங்கி விட்டு, மாலை 6 மணிக்கு வெளியில் நடக்கச் சென்றேன். தெருவிற்கு தெரு விடுதிகளும், பார்களும், உணவகங்களும்தான். நானிருக்கும் விடுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கணேஷ் வட இந்திய தென் இந்திய உணவகம் என்று ஒன்றைக் கண்டேன். உள்ளே போகத் தோன்றவில்லை. எதிர்ப்புறம் ஒரு திறந்தவெளி உணவகத்தில், பிரமாண்டமான திரையில் ஸ்லோவேனியாவும், அல்ஜீரியாவும் கால்பந்து ஆடுவதைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே போய் உட்கார்ந்தேன்.

இந்த உலகக் கோப்பையில் நான் பார்த்த முதல் முழு ஆட்டம் இதுதான். வரைபடத்திலே எங்கே இருக்கிறதென்று சரியாக தெரியாத இரு நாடுகள் ஆடுவதைப் பார்ப்பதன் சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த அணியையும் ஆதரிக்க வேண்டியதில்லை, ஆட்டத்தை மட்டும் ரசித்தால் போதும். இரண்டுமே ஏறக்குறைய சமமான அணிகள்தான், ஆனால் ஸ்லோவேனியாவின் கை லேசாக ஓங்கியிருந்தது. ஓவர்டைமில் ஒரு கோல் போட்டு ஸ்லோவேனியாதான் வென்றது.

இரவுணவு: இஞ்சியும் வெங்காயமும் போட்டு சோயா சாஸிலே அவிக்கப்பட்ட கொடுவா மீன், பாக்சோய் என்ற சீன முட்டைக்கோசு, சாதம், மாம்பழ ஜூஸ். ஒரு வேளையாவது ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற முனைப்பில் பெறப்பட்ட உணவு. சோயா சாஸிலே மறைந்திருந்த சமைக்கப்படாத முழு மிளகாயைக் கடித்து விட்டு நான் சொரிந்த கண்ணீரைப் பார்த்து விட்டு பரிசாரகருக்கே இரக்கம் வந்து, பக்கத்தில் வந்து போதும் என்கிற வகையில் தண்ணீரை தம்ளரில் நிரப்பிக் கொண்டேயிருந்தார்.

Thursday, June 10, 2010

சிங் டா, சீனா: சிறு குறிப்புகள்



இந்தியாவிற்கு மீன் கொத்தி

சிங்கப்பூருக்கு புலி

சீனாவிற்கு சிங் டா

இவையெல்லாம் அந்தந்த நாட்டின் பிரபலமான பியர் வகைகள்.

Tsing Tao என்ற பியரின் பெயர் அது தயாரிக்கப்படும் ஊரின் பெயரிலேயே இருக்கிறது. பீகிங்கை, பெய்ஜிங் என்று உச்சரிப்பு மாற்றம் செய்தது போல ட்சிங் ற்றா இப்போது ஷிங் டா (Qing Dao) என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் வட பசிபிக் கரையில் ஷாண்டோங் மாநிலத்தில் இருக்கிறது இந்த நகரம்.

மே 30 முதல் ஜூன் 6 வரை இந்த ஊரில் இருந்தேன்.

பெய்ஜிங்கிலிருந்து ஒரு மணி நேர விமானப் பயணம். தரை இறங்குமுன் விமானம் அதிகக் காற்றில் தள்ளாடியது. ரொம்ப மெதுவாக, ஜாக்கிரதையாக தரை இறக்கினார் விமானி. காலை பத்து மணிக்கு இரவு பத்து மணி போல வானம் இருண்டிருக்க, குளிரான ஊதல் காற்று வீசி, அடர்த்தியாக மழை தொடங்கியது. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் விமானத்திற்கு பிறகு தரையிறங்க முயற்சித்த விமானங்களெல்லாம் வேறு, வேறு இடங்களுக்கு திசை திருப்பப்பட்டன.

விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு அரை மணி நேரப் பயணம். நான் சென்ற மாநாட்டிற்கு செல்பவர்கள் 8 பேர் ஒரே விமானத்தில் வந்திறங்கினோம். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதால் ஒரு பெரிய வேனை அமர்த்திக் கொண்டு விடுதிக்கு சென்றோம். தாய்லாந்திலிருந்து வந்திருந்த டாக்டர் சூட்டிமா பத்தாண்டுகளுக்கு முன்னால் ஷிங் டா வந்திருக்கிறார். அடையாளம் தெரியாமல் நகரம் வளர்ந்து விட்டது என்றார்.

விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலிருந்து கடல் காட்சி அருமையாக இருந்தது (புகைப்படம்).

மறுநாள் என்னுடைய உரை ஒன்று இருந்தது. மதிய உணவிற்குப் பின், என் உரையை சீனத்தில் மொழிபெயர்ப்பவரோடு சந்தேகங்களை விளக்கி விட்டு, அறைக்கு வந்து மாலை 4 மணி போல் படுக்கையில் சாய்ந்து சில நொடிகளில் உறங்கி விட்டேன். எழுந்த போது இருண்டு விட்டது. கைக்கடிகாரம் 8 மணி காட்டியது. முகத்தைக் கழுவி, உடை மாற்றிக் கொண்டு கீழே போனால், விடுதி உணவகம் மூடும் நேரம் இரவு 8 என்றிருந்தது. “என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, மலேசிய நண்பர் டாக்டர் விங் கியோங் வந்தார். அவரோடு இருவர் வந்தார்கள். ஆஸ்திரேலியா யுனிவர்சிட்டி ஆஃப் டாஸ்மேனியாவில் சபாடிக்கல் போயிருந்தபோது பழக்கமான அங்குள்ள மாணவர்கள் என்றார். இருவருமே யூடாஸில் பிஎச்.டி படிக்கிறார்கள். மாணவர் ஒன்று இந்தியர் போல இருந்தார். பெயர் பஷீர். இந்திய மூதாதையர், மரூஷியஸ்காரர். மாணவர் இரண்டு, ரமீஸ், சிரியாக்காரர். எடுத்த எடுப்பிலேயே தோழமையாகப் பழகினார்கள்.

வெளியே எங்காவது சாப்பிடலாம் என்று புறப்பட்டோம். ஒரு கடலுணவு சாப்பிடும் இடம் நன்றாக இருக்கும் என்று டாக்சிக்காரர் அழைத்துச் சென்றார். விங்கிடம் சீன மொழி பேசுவீர்களா என்றேன் (அவர் மலேசிய சீனர்). கொஞ்சம், கொஞ்சம் சமாளிக்கலாம் என்றார். ஆனால் ரமீஸ் நன்றாக சீனம் பேசுவார் என்றார். ரமீஸ் தைவானில் படித்திருக்கிறார். கடலுணவு ரெஸ்தாரந்தில் ரமீஸ் உணர்ச்சிவசப்பட்டு நிறைய விலையுயர்ந்த மீன் வகைகளை, குறிப்பாக பெரிய, பெரிய இறால்களை வாங்கி விட்டார். தலைக்கு 2500 ரூபாய்க்கு சமமான தொகை பில்லாக வந்து விட்டது.

விடுதிக்கு வந்த பிறகு கைக்கடிகாரம் பார்த்தேன்: இரவு பதினொரு மணி. விடுதிக் கடிகாரம் 10 என்று காட்டியது. தாய்லாந்தில் கடிகாரத்தை மாற்றியமைத்த நான் சீனா வந்த பிறகு ஒரு மணி நேரம் கூட்டி வைக்க மறந்தது புரிந்தது.

மறுநாளிலிருந்து மாநாட்டிற்கு போய் வருவது, தனிப்பட்ட சந்திப்புகள் என்று எல்லோருமே பிசியாகி விட்டோம். மாநாட்டிற்கு வந்த 600 பேரையும் ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து, நீளமான ஓலை போலிருந்த படத்தைச் சுருட்டி, கலையழகு மிக்க ஒரு நீள்செவ்வக பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார்கள்.

செர்ஜியோ வழக்கம் போல் மாநாட்டு விடுதியில் தங்காமல் ஷாங்ரிலாவில் தங்கினார். நாளொன்றுக்கு அறைக்கு குறைந்தபட்சமாக 12,000 ரூபாய் வசூலிக்கும் விடுதி. அவர் தங்கியிருந்த அறைக்காரர்களுக்கென்று விடுதி உச்சியில் ஒரு லவுஞ்ஜ் இருக்கிறது. மாலை 5 முதல் 7:30 வரை இலவச உணவு, பானங்கள். இரண்டு தினங்கள் நானும், ப்ரேசிலிய நண்பரான டானியலும் செர்ஜியோ விடுதிக்காக செலுத்தும் பணம் வீணாகமல் பார்த்துக் கொண்டோம்.

ஒரு நாள் இரவு மாநாட்டு நண்பர்கள் பலர் பியர் தெருவிற்குப் போகிறோம் என்று அழைத்துச் சென்றார்கள். வைன் தெரு, பியர் தெரு என்று இரண்டு தெருக்கள் ஷிங் டாவில் உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளின் போது படகு விடும் போட்டிகள் ஷிங் டாவில் நடத்தப்பட்டன. அப்போது நிர்மாணிக்கப்பட்டவையே இந்த தெருக்கள். 800-1000 மீட்டர் நீளமான தெருவில் நூற்றுக்கணக்கான பார்கள். ஒரு பிட்சர் பியர் சுமார் 150 ரூபாய். (விடுதியில் 300 மிலி பாட்டில் 150 ரூபாய்). கேட்க வேண்டுமா, மக்கள் பியரில் குளித்தார்கள். நானும், போர்ச்சுகல் நண்பர் பெட்ரோவும், அவரது போர்ச்சுக்கல் நண்பர்களும் கொலோனியலிசம், மெகல்லன், கோவா பற்றியெல்லாம் இரவு 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் கிளம்பும் போதும், நார்வே குழுவினர் அரட்டை அடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். காலை 4:30க்குத்தான் திரும்பியதாக மறு நாள் சொன்னார்கள்.

சீனாவில் டாக்சி வாடகை சொற்பம். ஐம்பது ரூபாய் குறைந்தபட்சம். 5-10 கிலோமீட்டருக்குள் இருக்கும் இடங்கள் 100 ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது. எல்லா டாக்சி ஓட்டுநர்களும் உபதொழில் ஒன்றை வைத்துள்ளார்கள். பாக்கெட்டிற்குள்ளிருந்து பெண்கள் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்து மசாஜ் வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

இறுதிநாள் இரவு பெரிய உணவு விருந்து. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்த உணவு விருந்துதான் பிரசித்தி பெற்றது. மாநாடு முடிந்த பிறகும் பேசப்படும் விஷயம் இது. உதாரணமாக 1998ல் இந்த மாநாடு ஜப்பானில் நடைபெற்ற போது, ஒரு மிகப் பெரிய நீலத் துடுப்பு சூரை மீனை (ப்ளு ஃபின் ட்யூனா) விருந்திற்கு கொண்டு வந்து, ஷஷிமி முறையில் பச்சையாக வெட்டி பரிமாறினார்கள். இந்த மாநாட்டில் விதவிதமான சீன உணவுகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தன. ஊர்வன, மிதப்பன, நீந்துவன, ஓடுவன, பறப்பன, கடிப்பன என்று ஒரு 20-25 ஐட்டங்கள். என் பக்கத்தில் ஒரிசாவிலிருந்து வந்த ஒரு விஞ்ஞானியும், ஆந்திராவிலிருந்து வந்திருந்த டாக்டர் அஜய் பாஸ்கர் என்ற நண்பரும். ஒரிசாக்காரர் மாடு, பன்றி சாப்பிடமாட்டார் என்பதால் பரிமாறப்படும் ஒவ்வொரு அயிட்டமும் என்னது என்பதை தெரிந்து சொல்லும் பணி எங்கள் இருவர் மேலும் விழுந்தது. சீன கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு பெண் பாட்டுப் பாடினார். சீன பாரம்பர்ய சங்கீதம் தொண்டையிலிருந்து என்னென்ன சப்தங்களை வேறு வேறு ஸ்தாய்களில் உருவாக்க முடியும் என்பதைக் காண்பிப்பது போலிருந்தது. ஒரு கட்டத்தில் உச்ச ஸ்தாயில் காதைப் பிளந்து விடும் ஓலமாக அது மாற எங்கள் மேசையிலிருந்த நார்வேஜியன் ஒருவர் காதைப் பொத்திக் கொண்டு வெளியே எழுந்து போய் விட்டார்.

அடுத்த நாள் இரவு இன்ற்றர் கான்ற்றினென்றல் விடுதியில் நடந்த நிகழ்ச்சியையும், தனி விருந்தையும் முடித்து விடுதிக்கு திரும்பினோம். ஷிங்டாவின் பிரதான சாலையெங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் பல்வேறு ஒளி மாயாஜாலங்களில் மூழ்கியிருந்தன. என்னருகில் அமர்ந்திருந்த எகிப்திய-கனேடிய அடெல், சீனா ஒரு வளரும் நாடு என்பதை நம்ப முடியவில்லை என்றார். இருபது ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதுதான். ஷாங்ரிலா லவுஞ்சிலிருந்து மாலை 5:30 மணிக்கு பார்த்த போது, மஞ்சள் ஹெல்மட் அணிந்த நூறு பணியாளர்கள் ஒரு உயரமான கட்டிடத்திற்கு மேல் நின்று எறும்புகள் போல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். சீனர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்தை மிகவும் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறொரு விருந்தில் என்னருகில் அமர்ந்திருந்தவர் சீனர் என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் எந்த மாநிலத்திலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன். அவர் “நான் இங்கிருந்தல்ல. தைவான்” என்றார். நான் விளையாட்டாக “அதுவும் சீனாவின் ஒரு மாநிலம்தானே” என்றேன். விருந்தை நடத்தும் சீன நண்பர் அவர் இடத்திலிருந்து உணர்ச்சிவசப்ப்பட்டு எழுந்து வந்து என் கோப்பையோடு, அவரது கோப்பையை க்ளிங் செய்தார். முகமெல்லாம் சிரிப்பு அவருக்கு. அந்த அளவிற்கு தங்கள் நாடு மீது வெறியாக இருக்கிறார்கள் சீனர்கள்.

இந்த முன்னேற்றத்தின் விலையாக அவர்கள் கொஞ்சம் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. யூட்யூப், ஃபேஸ்புக், ப்ளாகர் எதுவும் அங்கு அணுக முடியாது. அதனால்தான் இந்த தபால் வியாழன்று வெளியாகிறது.

தாய்லாந்தின் தாக்சினுக்கு ஆசிரியர் ஜெயலலிதாவா?


மே 29- சுவர்ணபூமி விமான நிலையத்தில் கால் பதித்த போது பாங்காக்கில் அமைதி நிலவ ஆரம்பித்து சில நாட்களே ஆகியிருந்தது. எப்போதும் ஜேஜே என்றிருக்கும் விமான நிலையம் அரவமில்லாமல் கிடந்தது. வெளிநாட்டவர் நுழைவு, சுங்கம் ஆகிய வழமைகளை சில நிமிடங்களில் முடித்துக் கொண்டு வெளியேறினேன். பாங்காக்கிலிருந்து சீனப் பயணம் தொடங்க 13 மணிநேரங்களே இருந்தபடியால், சுவர்ணபூமி பக்கத்திலேயே எக்ஸ்பீடியா மூலமாக க்ரேட் ரெசிடென்ஸ் என்ற ஒரு விடுதியை பதிந்து வைத்திருந்தேன். அவர்கள் அனுப்பி வைத்த வாகனம் எக்சிட் 4ல் இருக்கும் என்றபடியால் நேரடியாக அங்கு சென்று விடுதிக்குப் போனேன். காரில் ஐந்து நிமிடம் ஆகிறது. ரேட் 600 ரூ. கடந்த முறை சுவர்ணபூமி நிலையத்திற்குள்ளேயே 4 மணிநேரத்திற்கு 3000 ரூ கொடுத்து தங்கியதை நொந்து கொண்டேன்.

க்ரேட் ரெசிடென்சில் இருந்த சிறிய உணவகத்திலேயே மதிய உணவிற்கு மீனும் சோறும். தாய்லாந்தில் எந்த உணவகத்திலும் இதை நம்பி சாப்பிடலாம். சாப்பாட்டிற்குப் பிறகு நகர் விஜயம். வாடகை வாகனம் 600 ரூ கேட்டார்கள். நான் அறைக்கே 600தான் தருகிறேன் என்று பேரம் பேசி 400 ரூபாயாக்கினேன். போகும் போது டாக்சி ஓட்டுநர் நண்பராகி விட்டபடியால், எனக்காக நகரிலேயே 4-5 மணிநேரம் காத்திருந்து, திரும்பவும் கொண்டு வந்து விட்டார்.

கேமராவை எடுத்து படம் எடுக்க முற்பட்டால் அதற்குள்ள மெமரி கார்டை ப்ரூனேயிலேயே விட்டு விட்டு வந்து விட்டேன் என்று தெரிந்தது. போகிற வழியில் சிட்லோம் சென்ட்ரலில் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். பாங்காக்கில் எனக்குப் பிடித்த ஷாப்பிங் தலம் இந்த சிட்லோம் சென்ட்ரல்தான். எதிர்பார்த்ததைவிட சென்ட்ரலில் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலும் உள்ளூர் மக்கள்தான். சிவப்புச் சட்டை தொந்தரவுகள் முடிந்ததால் நிம்மதியாக வெளியே வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கூடவே சிட்லோமிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிற சென்ட்ரல் வேர்ல்டு (தென் மேற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய மால் என்கிறார்கள்) கலவரத்தில் எரிக்கப்பட்டு விட்டதால் கூட இந்த சென்ட்ரலில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கலாம்.

சென்ட்ரலில் இருந்து வான்ரயிலில் சுக்கும்வித். மார்ச் முதல் வாரம் பாங்காக் வந்திருந்தபோது அங்கிருக்கும் எனது வழமையான தையல்காரர் ஜஸ்விந்தர் சிங்கிடம் (Barrons, நானா வான்ரயில் நிலையத்திற்கு கீழ், லாண்ட்மார்க் ஹோட்டல் எதிர்புறம்) துணிகள் தைக்க கொடுத்திருந்தேன். மார்ச் நான்காவது வாரம் பாங்காக் திரும்பப் போகும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாக ஏற்பாடு. அந்த ஏற்பாட்டை சிவப்புச் சட்டைக்காரர்கள் ரத்து செய்து விட்டார்கள்.

ஜஸ்விந்தர் புலம்பித் தள்ளினார். அவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். வருடத்தில் ஒரு தடவை ஜஸ்விந்தர் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனிக்கெல்லாம் போய் ஆர்டர் எடுத்துக் கொண்டு வந்து தைத்து கூரியரில் அனுப்பி வைப்பார். இது தவிர பாங்காக்கிற்கு வரும் ஐரோப்பியர்கள் வேறு. யூரோ படுத்து விட்டதால் அவர்கள் வியாபாரம் ஏற்கனவே குறைந்து விட்டது. இதில் சிவப்புச் சட்டைக்காரர்கள் வேறு பயணிகளை பயமுறுத்தி விட்டார்கள். சிவப்புச் சட்டை பிரச்சினைக்கு தாக்சின்தான் காரணம் என்றார். அப்புறம், ரகசியமாக தாக்சின் எங்கேயிருந்து தேர்தலில் வெற்றி பெறும் தந்திரத்தைப் படித்தார் தெரியுமா என்றார். எனக்குத்தான் அந்த ரகசியம் தெரியுமே. “இந்தியாவா?” என்றேன். “ஆமாம், என்னுடைய ரெஸ்தாரந்தில் (துணிக்கடைக்குப் பக்கத்திலேயே ஒரு பஞ்சாபி உணவகமும் வைத்திருக்கிறார்) இந்தியாவிலிருந்து வந்த ஆட்கள் தாக்சினுக்கு அரசியல் ஆலோசகர்களாக செயல்பட வந்திருக்கிறோம் என்று பல தடவை சொல்லியிருக்கிறார்கள்” என்று அசைக்க முடியாத ஆதாரத்தையும் வைத்தார். ஜஸ்விந்தர் சில தலைமுறைகளாக தாய்லாந்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருடத்திற்கு ஓரிரு முறை இந்தியா போய் வந்தாலும் அவருக்கு அங்குள்ள நிலவரங்களெல்லாம் அத்துப்படியாக தெரியாது. “ஒரு பெண்மணி, பெயர் ஏதோ நிதாவோ என்னதோ அவர்தானே பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கத்தை தொடங்கி வைத்தாராமே” என்றார். ஓ, இது நம்மூர் அம்மையார் பெயர் போல இருக்கிறதே என்று தோன்றியதால் பெயரைச் சொன்னேன். ரொம்ப உற்சாகமாக “ஆமாம், ஆமாம், அந்தப் பெயர்தான்” என்று ஆமோதித்தார். “அந்த அம்மையார் முதல் தடவை ஆட்சியில் இருக்கும் போது இந்தியாவில் இல்லாமலிருக்க எனக்கு கொடுத்து வைத்திருந்தது. இரண்டாவது முறை தேர்தல் முடிந்த பிறகுதான் அங்கு சென்றேன். ஏதோ இடைத் தேர்தல்களில் எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இப்போது ஓட்டுப் போட பணம் கொடுப்பதை தொழில்முறையாக அமல் படுத்தி விட்டார்கள்” என்றேன்.

உண்மையில் தாக்சின் மாடல், ராஜசேகர ரெட்டியின் மாடல் மற்றும் தற்போதைய தமிழகத்தின் மாடல் எல்லாமே ஒன்றுதான். இதில் ஏழை மக்களுக்கு இன்சூரன்ஸ், மருத்துவ உதவி என்று உபயோகமான காரியங்களும் உண்டு; தேவையில்லாத இலவசங்கள், நேரடி பண விநியோகம் என்று அப்பட்டமான ஓட்டிற்கு லஞ்சம் வழங்குவதும் உண்டு.

விடுதிக்கு திரும்பி வரும்போது ஓட்டுநர் எரிந்து போயிருந்த சென்ட்ரல் வேர்ல்டைக் காண்பித்தார். பக்கத்திலிருக்கும் இன்னும் பணக்காரத்தனமான சயாம் பாரகனை விட்டு விட்டு இதை ஏன் எரித்தார்கள் என்று கேட்டேன். “அபிசித் குடும்பம் சென்ட்ரல் கடைகளின் உரிமையாளர்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்” என்றார். அபிசித் தற்போதைய பிரதமர், இங்கிலாந்தில் படித்த கெட்டிக்கார இளைஞர். “அபிசித் எப்படி?” என்றேன். “good, good man” என்றார். “சுதெப்?” “bad, very bad man” என்றார். சுதெப் அபிசித்தின் துணைப் பிரதமர், இவர் மேல்தான் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு மிகுந்த கோபம். பிறகு நான் கேட்காமலேயே “தாக்சின் very, very good” என்று இரண்டு கட்டை விரல்களையும் தூக்கிக் காட்டிச் சொன்னார்.

Saturday, February 13, 2010

புலிக்கு முன்னால் வந்த கிலி

பிப்ரவரி 8 ஹோச்சிமின் நகரில் வந்திறங்கிய போது சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான தயாரிப்புகள் தீவிரமடைந்திருந்தன.

உலகெங்கிலும் சீனர்கள் (இதில் கலாசார ரீதியாக வியட்நாமியர்களும் அடங்குவர்) தங்கள் புத்தாண்டை அக்கறையாக கொண்டாடுகிறார்கள். ஒரு வாரமோ, இரண்டு வாரங்களோ விடுமுறை எடுத்துக் கொண்டு, பிறந்த ஊருக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி விட்டுத்தான் மறு வேலை பார்க்கிறார்கள்.

மஞ்சளும், வெளிர் மற்றும் அடர் சிவப்பு நிறங்களும்தான் வியட்நாமின் புத்தாண்டு நிறங்கள். ஹோச்சிமின் நகரின் தெருக்களும், கடைகளும், வீடுகளும் இந்த நிறத்து மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாலை வேளைகளில் பிரதான சாலைகளெல்லாம் மக்கள் கூட்டத்தால் தளும்புகின்றன.

ஹோச்சிமின் நகர் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் ஒரு ஊர். இதில் முக்கால்வாசிப் பேரின் பூர்வீகம் ஹோச்சிமின் நகருக்கு வெளியே. வழக்கமாக ஹோச்சிமின் நகருக்குள் வருபவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். இப்போது தத்தம் பூர்வீக கிராமங்களை நோக்கி நகரை விட்டு வெளியே பயணிப்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். ஹோச்சிமின் நகரிலிருந்து மேக்காங் ஆற்றைக் கடக்கும் வின் லாங் படகுத் துறையில் சாதாரணமாக 15-20 நிமிடம் காத்திருந்தால் போதுமானது. இப்போது 3 மணி நேரம் காக்க வேண்டியுள்ளது.

நாளை (பெப்ரவரி 14) பிறக்கும் புத்தாண்டு புலியின் ஆண்டு. பன்னிரண்டு ஆண்டு சுழற்சியில் வரும் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் பிரச்சினை வரும்; குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கிலியைக் கிளப்பி விட்டு விட்டார்கள். எனவே புத்தாண்டு பிறக்கு முன்னே திருமணங்கள் நடத்த ஒரே பரபரப்பு.

அப்போதிலிருந்து இப்போது வரை

நவம்பர் 19, 2007: ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் நாலு மடங்கு ரேட்டுக்காரன் பதிவு. அதற்குப் பின் ஜனவரி 17, 2010: அது இது பதிவு

இந்த இடைவெளியில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். நிறைய விஷயங்களில் ஞாபகத்தில் இருப்பது, பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடிவது கீழே சில.

முதலில் நம்மூர் ஆட்டோக்காரர்களிடம் ஒரு சிறு மன்னிப்பு: 2008 நவம்பரில் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி நகரே திகைத்து நின்ற போது கை கொடுத்தவர்கள் ஆட்டோக்காரர்கள்தான். எந்த கால் டாக்சியைக் கூப்பிட்டாலும் வர மறுத்தார்கள். ஆட்டோக்கள் ஒழுங்காக ஓடின. மழையை முன்னிட்டு கட்டணம் அதிகமாக வசூலித்தார்கள். ஆனால், போக வேண்டிய இடத்திற்கு போக முடிந்ததே பெரிய விஷயம்.

ஆட்டோவைப் பற்றிப் பேசும் போது டாக்சிகளை விட முடியாது:

ஹைதராபாதில் (டிசம்பர் 2008) கால் டாக்சி உபயோகித்த பிறகு சென்னை கால் டாக்சி சேவை மோசமாகத் தோன்றுகிறது. சென்னையில் கால் டாக்சியென்றால் மாருதி ஓம்னி, அல்லது டாடா இண்டிகாதான். அவற்றில் பெரும்பாலனவை கட்டாய ஓய்வுக் காலத்தை நெருங்கி விட்டவை. ஹைதராபாதில் கணிசமான எண்ணிக்கையில் புத்தம் புதிய ரேனால்ட்கள். ஹைதராபாத் புதிய விமான நிலையத்தில் டாக்சி சேவை அருமையாக செய்திருக்கிறார்கள். முன்னர் மும்பை விமான நிலையத்தில் இருந்தது போல வரிசையாக வண்டிகள் வர, வர ஏறிச் செல்லலாம். சென்னை விமான நிலையத்தில் டாக்சி சேவை குத்தகை எடுத்திருக்கும் அக்பர் ட்ராவல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும், கால் டாக்சி நிறுவனங்களுக்கும் தொழில் போட்டி. கால் டாக்சிகள் பயணிகளை இறக்கி விட்டு, வேறு பயணிகளை ஏற்றிச் சென்றால் அதற்கு பார்க்கிங் வசூலித்து விடுகிறார்கள். இதைத் தவிர்க்க கால் டாக்சிகள் பயணிகளை சற்று தூரம் வெளியே நடந்து வரும்படி கேட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சேவைக் குளறுபடிகள்.

இந்தியாவில் டாக்சி சேவைகளுக்குச் சிறந்த நகரங்கள் என்றால் மும்பையும் கொல்கத்தாவும்தான். மும்பை பழைய உள்நாட்டு முனையகம் (டெர்மினல்தான்) எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அங்கு டாக்சி சேவை நன்றாக இருந்தது. கத்தி போய் வாலு வந்த கதையாக, புதிய, அழகான மும்பை உள்நாட்டு விமான முனையகம் வந்த பிறகு டாக்சி சேவை சீரழிந்து விட்டது (2008-09). முன்னைப் போல் டாக்சிகள் நம்மைத் தேடி வருவதில்லை. நாம் அவற்றைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. வெர்சோவா செல்ல ஒரு சீக்கிய டாக்சி ஓட்டுநர் 700 ரூபாய் கேட்டார். போன தடவை 100 ரூபாயில் போனேன் என்றால், எனக்கு இன்று முழுவதும் சவாரியே கிடைக்கவில்லை; நீதான் முதல் சவாரி என்கிறார். நல்லவேளை இந்த ஆளுக்கு நேற்று ஏதோ சவாரி கிடைத்திருக்கிறது, இல்லையென்றால் 3000 ரூபாய் கேட்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டே ஆட்டோ பிடித்துப் போனேன்.

டெல்லியில் (ஜூலை 2009) நானும் கொலம்பிய நண்பர் செர்ஜியோவும் ஒரு டாக்சி பிடித்தோம். ஓட்டுநர் சீக்கிய இளைஞர். சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார். “என்னுடைய ஆங்கிலம் எப்படியிருக்கிறது” என்று கேட்டார். “நன்றாக இருக்கிறது. ஏன் கேட்கிறீர்?” “இப்போது கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறேன். முடித்து விட்டு ஆஸ்திரேலியா போகிறேன். அதற்குத்தான் ஆங்கிலப் பயிற்சி” அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது தொடங்கியிருந்தது. “பயமில்லையா?” “பயமா, எனக்கா?” என்று அட்டகாசமாகச் சிரித்தார் அந்த ஆறடி, 80 கிலோ எடையுள்ள இளைஞர்.

ஓர்லாண்டோவில் (ஃபெப்ரவரி 2008) டாக்சி என்று கேட்டால் ஒரு சிறு பஸ்ஸைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். டிஸ்னிலேண்ட் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் வருவதால் 12 பேர் உட்காரக்கூடிய வேன்தான் அங்கு பிரதானமான டாக்சி. அமெரிக்காவில் பத்து ரூபாய்க்கு லிற்றர் பெட்ரோல் கிடைத்த போது பரவாயில்லை. 30 ரூபாய்க்கு லிற்றர் விற்கப்படும்போது அந்த டாக்சியில் செல்லும் போது திக், திக் என்று இருந்தது. நினைத்தது போலவே, ஸ்பீடாமீற்றரைவிட டாக்சி மீற்றர் வேகமாக ஓடியது. ஊருக்குள் போய்ச் சேர 40-50 டாலர் ஆகிவிடுகிறது.

சியாற்றிலும் (ஃபெப்ரவரி & நவம்பர் 2009) டாக்சி வாடகை ஓர்லாண்டோவிற்கு குறைந்தது அல்ல. காரணம்: சியாற்றில்-டகோமா விமான நிலையத்திலிருந்து சியாற்றில் 25 மைல் தூரம். ஊருக்குள் வருவதற்கு வாடகை நாற்பத்தைந்து டாலரைத் தொட்டு விடுகிறது. முதல் தடவை நான் பழைய ஞாபகத்தில் ஒரு டாலரோ, இரண்டு டாலரோ tip கொடுத்தேன். ஓட்டுநர் இந்தியர் மாதிரி தெரிந்தார். ஒரு மாதிரி பார்த்தார். நண்பர்களிடம் விசாரித்ததற்கு 45 டாலர் பில் வந்தால் 5 டாலர் tip கொடுக்க வேண்டும் என்றார்கள். அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்தில் டாலர் தண்ணீர் போல செலவாகிறது.

கொரியாவில் பூசான் (மே 2009) விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு செல்ல எடுத்த டாக்சி ஓட்டுநர் என்னிடமிருந்தும் நண்பர் அனிலிடமிருந்தும் இரண்டு லட்சம் வான் கறந்து விட்டார். சரியான கட்டணம் ஒரு லட்சத்து இருபதாயிரம் வான்தான் என்று மறு நாள் தெரிய வந்தது. மற்றபடி, பூசானில் எடுத்த டாக்சியனைத்திலும் மீற்றர்படிதான் வசூலித்தார்கள். பூசானின் அட்டகாசமான உள்ளூர் ரயில் (எம்.ஆர்.டி.) பழகி விட்டால் அந்த நகரில் டாக்சியே தேவையில்லை. அதே போல்தான் சிங்கபூரிலும் (ஜனவரி 2010). விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் செல்ல 20-25 டாலர் ஆகிறது. அதுவும், காலை, மாலை அலுவலக நேரங்களில் ஆர்ச்சர்ட் ரோடில் செல்ல நெரிசல் கட்டணம் என்று கூடுதலாக 35% வசூலித்து விடுவார்கள். முதன் முறையாக சிங்கப்பூர் எம்.ஆர்.டியில் விமான நிலையத்திலிருந்து ஆர்ச்சர்ட் ரோடு சென்றேன். 1.8 சிங்கப்பூர் டாலர் அவ்வளவுதான்.

கோலாலம்பூரில் (நவம்பர் 2009) விமான நிலையத்திலிருந்து நகருக்கு விரைவு ரயில் (26 ரிங்கிட்டுகள்) + நகர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு டாக்சி 11 ரிங்கிட்டுகள். திரும்பிப் போகும் போது செர்ஜியோ தங்கும் விடுதியிலேயே டாக்சி எடுத்து விடலாம் என்றார். அவரிடம் இன்னொரு நண்பர் விடுதியிலேயே டாக்சி எடுக்காதீர், கொள்ளையடிப்பார்கள், வெளியே போய் மீற்றர் டாக்சி எடும் என்று சொல்லியிருக்கிறார். விடுதி டாக்சி ஓட்டுநர்களிடம் விசாரித்தார். 120 ரிங்கிட் சொல்லி 100க்கு இறங்கி வந்தார்கள். செர்ஜியோ வெளியே போய் டாக்சி எடுத்தால் இன்னும் மலிவாக இருக்கும் என்று மீற்றர் டாக்சியை நிறுத்தி ஏறினார். கோலாலம்பூர் விமான நிலையம் அடைந்த போது மீற்றர் சரியாக 100 ரிங்கிட் காட்டியது. வெளியே போய் மீற்றர் டாக்சி எடுக்கச் சொன்ன நண்பரை அடுத்த தடவை பார்த்தால் உதைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இறங்கினார்.

ஹோச்சிமின் நகரில் (பெப்ரவரி 2010) மோட்டார் சைக்கிள் டாக்சிக்காரர்கள் மூலைக்கு மூலை நிற்கிறார்கள். ஒரு இரவு கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் என்று கிளம்பி, சீனப்புத்தாண்டு தினத்தையொட்டிய தெரு அலங்காரங்களால் கவரப்பட்டு நடந்து, நடந்து, கால் அசந்து விடுதிக்கு திரும்பலாம் என்று நினைத்தால், திசை சரியாக தெரியவில்லை. தெற்கும், மேற்கும், வடக்கும், கிழக்கும் உத்தேசமாக நடந்த பிறகும் விடுதி தென்படுகிற மாதிரி தெரியவில்லை. கடைசியில் மோட்டார் சைக்கிள் டாக்சிக்காரர் ஒருவரிடம்தான் தஞ்சமடைய வேண்டி வந்தது. விடுதியின் முகவரியைப் பார்த்து விட்டு “பத்தாயிரம் டாங்” என்றார். பத்தாயிரம் டாங் என்பது 23 ரூபாய். “சரி”யென்று கிளம்பினேன். 200 அடி போய் ஒரு வலது திருப்பம், இன்னொரு 100 அடி போய் ஒரு இடது திருப்பம். விடுதி வந்து விட்டது. Knowledge is power.

உலகெங்கும் சுற்றி விட்டு மறுபடியும் சென்னை கால் டாக்சி. அநேகமாக 2009ன் தொடக்க மாதங்களில் ஒன்று. வேளச்சேரியிலிருந்து கோடம்பாக்கம். தி. நகர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் வர நெடுநேரம் காத்திருந்து வாகனத்தை வலது பக்கம் திருப்பினால், “யாமிருக்க பயமேன்” ஸ்டைலில் கையைக் காட்டிக் கொண்டு ஒரு பெண்மணி. அதாவது அவர் சாலையை கடக்கப் போகிறாராம், வாகனத்தை நிறுத்தி வழி விட வேண்டுமாம். ஓட்டுநர் சன்னல் வழியாக தலையை திருப்பி “ஆமாம்மா, பெரிய வி.ஐ.பி. நீ. இத்தனை காரும் உனக்காக நிற்க வேண்டும்” என்று வைதார். பிறகு சென்னை நகரத்துப் பெண்களைப் பற்றி பெரிய முறைப்பாடு வைத்தார். “இதெல்லாம் பரவாயில்லை சார், இந்த ஐ.டி. பொண்ணுங்க டார்ச்சர் தாங்க முடியல” என்றார். “என்னாச்சு?” என்றேன். “ஓல்டு மகாபலிபுரம் ரோட்ல நின்னுக்கிட்டிருந்த ஒரு பஸ்ஸைக் க்ராஸ் பண்றேன். ஸ்கூட்டில ஒரு பொண்ணு ஒரு 20-22 வயது இருக்கும். பஸ் முன்னாடி இருந்து சாடுது” (ஓட்டுநர் நம்மூர்க்காரர்). “ஏம்மா இப்படி பண்ணறியேனு கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?” என்று கேட்டு விட்டு சொன்னார் “போடா” (ஓட்டுநருக்கு 60 வயது இருக்கும்). “உடனே வண்டிய ஸ்லோ பண்ணி அவள மொறச்சேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?” என்று மறுபடியும் கேட்டுவிட்டு “டேய் போடா, மொறச்சீன்னா ஈவ் டீசிங்னு கம்ப்ளைண்ட் பண்ணிருவேன் அப்டிங்குது. இப்டியெல்லாம் பொண்ணுங்க இருக்கு சார்” என்ற ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டார். உவரியிலிருந்து வரும் அவர் பையனை பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டு, கால் டாக்சி ஓட்டுநராக பணி புரிகிறாராம்.

Monday, November 19, 2007

ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன், நாலு மடங்கு ரேட்டுக்காரன்

பெங்களுர் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியிலிருந்து கேரளா வழியாக பெங்களூர் செல்கிறது.

அட்டவணையில் குறிப்பிட்டபடியே காலை 10:55க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது.

பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன. நானிருந்த பெட்டியில் நானும், கன்னியாகுமரியிலிருந்து ஏறியிருந்த ஒரு வட இந்தியக் குடும்பம் மட்டுமே. பகல் நேர பயணம் என்பதால் அலுவல் சம்பந்தமாக வாசித்து குறிப்பெடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து விரித்துப் போட வசதியான தனிமை. மதியம் 12:30க்கு திருவனந்தபுரம் வந்தடைந்தது. தூரம் 90 கி.மீ. என்றாலும், நெரிசலான சாலை வழியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் அடைய இப்போதெல்லாம் இரண்டு மணி நேரங்கள் ஆகி விடுகிறது.

திருவனந்தபுரத்தில் கொஞ்சம் பேர் ஏறினர். வர்கலாவில் எதிர்பார்த்தது போலவே ஒரு இளம், வெள்ளைக்கார தம்பதி ஏறியது. முதுகில் சுமந்து வந்த பெரு மூட்டைப் பொதியை இறக்கி வைத்து விட்டு, ஒரு டான் ப்ரௌன் நாவலையும், ஒரு ப்ரிட்டானியா பிஸ்கட் பொட்டலத்தையும் பிரித்துக் கொண்டு இரண்டையும் ஒரு கை பார்க்க ஆரம்பித்தது. கொல்லம் போன்ற தெரிந்த ஊர்கள் வழியாகவும், கருநாகப்பள்ளி போன்ற தெரியாத, திகிலூட்டும் பேர்கள் கொண்ட ஊர்கள் வழியாகவும் பயணம் தொடர்ந்தது. சங்கனாசேரி வரை எனது நீண்ட இருக்கைக்கும், எதிரேயுள்ள இருக்கைக்கும் போட்டியில்லை.

சங்கனாசேரியில் ஒரு பிரமாண்டமான சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகளோடு ஏறினார். எனக்கு எதிரான இருக்கை அவர்களுக்கு. துருதுருவென்று இருந்த பையன் – 4 வயதிருக்கும் – பெயர் ஜோ. சற்று அமைதியாக 7 வயதான பெண் – பெயர் ரீட்டா. உள்ளே நுழைந்து, அமர்ந்த அடுத்த நொடி பேச ஆரம்பித்து விட்டான் ஜோ. ரீட்டாவும் அதிகம் தாமதிக்கவில்லை. ரீட்டா கையில் ஒரு இளம்சிவப்பு நிறக் காகிதம். அதில் பெங்களூர் எக்ஸ்பிரசின் கால அட்டவணை அச்சிடப்பட்டிருந்தது. மிகத் தெளிவான ஆங்கிலேயே உச்சரிப்பில்:

“ஜோ உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால், நான் இதில் இந்த ரயில் இது வரை கடந்து வந்த நிலையங்களையெல்லாம் அடித்து விடுகிறேன், சரியா?” என்று சொல்லி விட்டு, ஒவ்வொரு நிலையமாக அடித்துக் கொண்டே வந்து, சரி அடுத்த நிலையம் “கோட்டயம்” என்றாள். பிறகு அடித்து விட்ட நிலையங்களையெல்லாம் இந்தியில் எண்ணி விட்டு “அம்மா, இந்த ரயில் 20 நிலையங்களைத் தாண்டி வந்து விட்டது” என்றாள்.

“கோட்டயத்திற்குப் பிறகு பெங்களூரா?” என்றான் ஜோ.

“இல்லை, நாளைக் காலையில்தான் பெங்களூர்”

“நான் மேலே போகலாமா?”

“போகலாம், ஆனால் மேலேயும், கீழேயும் போய் விட்டு வந்து விட்டு இருக்கக் கூடாது”

“வந்தால்?”

“அப்புறம் மேலே அனுப்ப மாட்டேன்”

பிள்ளைகள் இருவரும் மேலே செல்ல எத்தனிக்க

“இன்னொரு விஷயம் மேலே சிவப்பு நிறத்தில் சங்கிலி ஒன்று இருக்கிறதல்லவா. அதைத் தொடக்கூட முயற்சி செய்யாதே”

“தொட்டால்?”

“ஒருவர் வந்து உன்னை ரயிலிலிருந்து தூக்கி வீசி விடுவார்”

பிள்ளைகள் மேல் பெர்த்திற்குப் போனார்கள். அம்மா என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

“பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்?”

“டெல்லியில்”

“ஓ…”

எனது ‘ஓ’வில் இருந்த குழப்பம் அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். “இங்கிலாந்தில் நெடுநாட்கள் இருந்து விட்டு இந்தியா திரும்பி ஆறு மாதமாகிறது”

“இந்திய வாழ்க்கை எப்படியிருக்கிறது?”

“பழகத் தொடங்கி விட்டோம்”

“சொந்த ஊர் சங்கனாசேரியா?”

“ஆமாம். பெங்களூர் வரைக்குமா?”

“இல்லை, எர்ணாகுளம் வரையில்தான். அங்கு ஒரு தொழில் ரீதியாக ஒரு பட்டறை”

எர்ணாகுளம் வந்தது.

எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். தமிழ்நாட்டில் இருப்பது போல் “சார் ஆட்டோ வேணுமா?” தொந்தரவுகள் கிடையாது. வேண்டுமென்றால் ஆட்டோவை அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

“சாருக்கு எவிட போணும்?”

“ரீஜெண்ட் அவென்யூ”

என் சூட்கேஸை வாங்கி ஆட்டோவில் வைத்தார் ஓட்டுநர். நான் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பியது. மீட்டர் போடவில்லை.

“மீட்டரா, ஃபிக்சட் ரேட்டா?”

“30 ருப்பீஸ்”

தமிழ்நாட்டில் 30 ருப்பீஸ் என்றால் 5 நிமிடப் பயணம். கேரளாவில் சுமார் 10 நிமிடமாவது ஆனது.

ரீஜண்ட் அவென்யூ எம்.ஜி. ரோட்டில் இருக்கும் ஒரு நான்கு நட்சத்திர விடுதி. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் பிரமாதமாக இருந்திருக்க வேண்டும். இப்போது வயது தெரிகிறது. விசாலமான, வசதியான, தூய்மையான அறைகள். குறை சொல்ல முடியாத, ஆனால் விஷேஷமில்லாத உணவு.

சனிக்கிழமை இரவு பட்டறைக்கு வந்தவர்களையெல்லாம் எர்ணாகுளம் படகுத் துறையிலிருந்து புறப்பட்ட ஒரு படகில் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள். கப்பல்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதியில் ரசிக்க என்று அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால், குளிருமில்லாமல், அனலுமில்லாமல் நிலவிய மிதமான சூழல் நன்றாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் சூடாக சுட்டு பரிமாறப்பட்ட ஆப்பங்களை மீன் கறியோடு வெட்டினார்கள்.

ஞாயிறு மாலை கொச்சியின் பிரதான சுற்றுலாத் தளங்களான மட்டாஞ்சேரிக்கும், ஃபோர்ட் கொச்சினுக்கும் சென்றேன். எர்ணாகுளத்தையும், மட்டாஞ்சேரியையும் பெரியாறின் இரண்டு கிளைகள் பிரிக்கின்றன. மட்டாஞ்சேரி ஒரு பெரிய மீனவ கிராமம். அதன் ஒரு புறத்தில் யூதர்கள் வசித்து, காலி செய்த தெருக்களில், வீடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கலைப் பொருட்கள், புராதனப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறியிருக்கின்றன. பல கடைகள் வழக்கமான மரச்சிற்பங்கள், கம்பளங்கள், பாஷ்மினா கம்பளி போர்வைகள் விற்கின்றன. சிலவற்றில் அதி நூதனமான பொருட்கள் இருக்கின்றன. ஒரு கடையில் 100 அடி நீளமான ஒரு சுண்டன் வள்ளத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு கடையில் உலகத்திலேயே பெரிய வார்ப்பு என்று ஒரு மகா பெரிய உருளியை செய்து வைத்திருக்கிறார்கள். அதில் அல்வா கிண்டினால் சுண்டன் வள்ளத்துக்காரர்கள்தான் அவர்களது துடுப்பை வைத்து கிண்டி விட வேண்டும். அம்மாம் பெரிசு.

ஃபோர்ட் கொச்சினின் கடற்கரையில் வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம். சீன மீன் பிடி வலைகளுடன் கடல்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. கரையில் பல பழைய கட்டிடங்கள் விடுதிகளாக உருமாறி விட்டன. ஐரோப்பாவில் இருப்பது போல் உணவு விடுதிகளுக்கு வெளியில் உணவுப் பட்டியலை விலைகளுடன் அச்சிட்டு பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் இரண்டு இத்தாலிய உணவு வகைகள், இரண்டு ஃப்ரெஞ்ச் வகைகள், இரண்டு பஞ்சாபி தினுசுகள், சில கேரளா தினுசுகள் என ஒரு அயிட்டத்துக்கு ரூ. 200 முதல் 800 வரை இருக்கின்றன.

நண்பரொருவர் எர்ணாகுளத்தில் பாரத் டூரிஸ்ட் ஹோம் என்று ஒரு இடம் இருக்கிறது, அங்கே சாப்பிட்டுப் பார் என்று சொல்லியிருந்ததால் அதை முயற்சி செய்தேன். அது வெஜிடேரியன் என்று தெரியாது. இரவு பஃபே, அதுவும் சாப்பாடு என்று தெரியாது. இரவு முழுச் சாப்பாடு சாப்பிட விரும்பாததால், அந்த விடுதிக்குள்ளேயிருக்கும் காஃபி ஷாப்பில் சப்பாத்தி சாப்பிட்டேன். மிக மிருதுவான சப்பாத்திக்கு ஒரு கொள,கொளா வெண்டைக்காய், உருளைக்கிழங்கு குருமா வைத்து கெடுத்திருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி உணவுப் பொருட்களில் எனக்கிருக்கும் விலைவாசி ஞானக் குறைவை சுட்டிக் காட்டியிருந்தபடியால் இந்த விடுதியில் 3 சப்பாத்தி கொண்ட ஒரு செட் ரூ 35, ஒரு காஃபி ரூ 15 என்பதையும் மனதில் குறித்துக் கொண்டேன்.

இரவு 11 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ். 10:30க்கு அவென்யூ ரீஜெண்டில் இருந்து புறப்பட்டேன். ஆட்டோக்காரரிடம் விலை பேசவில்லை. வருவதற்கு ரூ 30. இரவு பத்துக்கு மேல் கிளம்புவதால் 10ஓ, 20ஓ கூட இருக்கலாம் என்று நினைத்தேன். ரயில் நிலையம் சேர்ந்தவுடன் 50 ரூபாய் தாளை நீட்டினேன். எந்த வித தயக்கமும் இல்லாமல் மீதி 20 ரூபாயை எடுத்து நீட்டினார்.

காலை 5:30க்கு நாகர்கோவில். நிலைய வாசலுக்கு வருவதற்கு முன்னே “சார், ஆட்டோ வேணுமா?” என்று ஆரம்பித்து விட்டார்கள். கோட்டாறிலிருந்து வெட்டூர்ணிமடம் செல்ல ரூ. 60. இதை விட இரு மடங்கு தூரத்திற்கு கேரளாவில் பாதி விலை. கேட்டால், “காலை வேளை, சவாரி கிடைக்காது, பெட்ரோல் விலை ஏறி விட்டது, மற்ற ஊர்களையும் இங்கேயும் ஒப்பீடு செய்யாதீர்கள்” என்பார்கள். நம்மூர் ஆட்டோக்காரனை விட பக்கத்து மாநில ஓட்டோக்காரன்தான் நியாயமானவனாக பட்டான் எனக்கு.
Posted by Picasa

Monday, September 10, 2007

தன்னந்தனியாய் ஒரு தேசம்

 

பிரசிலின் பரப்பளவு சுமார் 85 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இந்தியாவை விட 2.5 மடங்கு பெரிதான இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 18 கோடியே.

தென்னமரிக்காவின் மற்ற நாடுகளனைத்தும் ஸ்பானிஷ் பேச, பிரசில் மட்டும் போர்ச்சுக்கீஸ் சம்சாரிக்கிறது. போர்ச்சுக்கீஸில் வந்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கொரியா நாடுகளிலிருந்து குடிபுகுந்தவர்களும், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கர்களும், பூர்வீகக் குடிமக்களும் பெரும்பாலும் இனம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை மறந்து வசிக்கும் தேசம் பிரசில்.

மொழியில் மட்டுமல்ல, மற்ற பல அம்சங்களிலும் பிரசில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தெளிவாகத் தெரிந்த ஒன்று: பிரசிலின் பெரும்பாலான அமைப்புகளும், நிறுவனங்களும், தொழில்களும், வியாபாரங்களும் பிரசிலியர்களை முன்னிறுத்தி மட்டுமே இயங்குகின்றன. போர்ச்சுக்கல் மொழியில் அல்லாது பிற மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், உணவக பட்டியல்கள், விமான அறிவிப்புகள் ஆகியவை இங்கு வெகு குறைவு. மிக அழகான கடற்கரைகள் கொண்ட வடகிழக்கு நகரங்கள் பிரசிலிய, உள்நாட்டுப் பயணிகளுக்கான சேவைகளை அளிப்பது போன்று, வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை ஊக்கமளிப்பது போல் தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிய போது

“பிரசிலின் கடற்கரைகளுக்கு விடுமுறைக்காக வருபவர்களில் முக்கால்வாசிக்கு மேல் பிரசிலியர்கள். ஐரோப்பாவிலிருந்து கொஞ்சம் பேர் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து அதிகம் வருவதில்லை” என்றார்.

அமெரிக்காவிக்காவிற்கும் பிரசிலுக்கும் இடையே ஒரு வித இறுக்கமான உறவு நிலை நிலவுகிறது. அமெரிக்கர்கள் விசா எடுத்து செல்ல வேண்டிய வெகுசில நாடுகளில் பிரசிலும் ஒன்று. பிரசிலியர்களுக்கு ஐரோப்பா செல்ல விசா அவசியமில்லை. அமெரிக்கா செல்ல தேவைப்படுகிறது. இது பிரசிலியர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, அமெரிக்கர்கள் விசா எடுத்துத்தான் வரமுடியும் என்றாக்கி விட்டார்கள்.

பிரசிலின் ஆதாரம் வேளாண்மை. இங்கிருந்துதான் முந்திரிப் பருப்பு, பப்பாளி, கொய்யா என்று பல தாவரங்கள் ஆசியாவிற்கு வந்தது (பதிலுக்கு இந்தியாவிலிருந்து மாம்பழம் பிரசிலுக்கு சென்றது). கரும்பு, சோளம், சோயா மொச்சை, காப்பி முதலான பல பயிர்களின் உற்பத்தியில் உலகில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றது இந்த நாடு. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விரிந்த பண்ணைகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இறைச்சி வகைகளில் பிரசிலியருக்கு பிரதானமானது மாட்டிறைச்சி. நெல்லூர் இன மாடுகள் கொண்டு வரப்பட்டு இங்கு கலப்பினமாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. கோழி உற்பத்தியில் விரைந்து, வளர்ந்து அமெரிக்காவுடன் போட்டியிடுகிறது இந்த நாடு. மீன், இறால் உற்பத்தியும் விரைந்து, பெருகி வருகிறது.

கரும்பிலிருந்து எரிசாராயம் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது பிரசில். மக்காச்சோளத்திலிருந்து தயாரிப்பதை விட கரும்பிலிருந்து விலை குறைவாக சாராயம் தயாரிக்கலாமாம். பிரசிலின் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் சாராய எரிபொருளும் விற்கப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 40. எரிசாராயம் லிட்டருக்கு ரூ 20. பெட்ரோல் லிட்டருக்கு 12 கி.மீ. கொடுக்குமென்றால் சாராயம் 8-9 கி.மீ. கொடுக்குமென்கிறார்கள். இப்போது சாராயம் விலை குறைவு என்றாலும், அறுவடை முடிந்து கரும்பு வரத்து குறையும் போது விலை கூடி விடும் என்கிறார்கள்.

வாகனங்களுக்குப் போட்டியாக பிரசிலியர்களும் கரும்பிலிருந்து பெறப்படும் மது வகைகளை குடிக்கிறார்கள். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒருவித ரம் வகை மது கஷாஷா எனப்படுகிறது. இதை எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறை தொட்டுக் கொண்டு, அப்படியே குடிக்கிறார்கள், அல்லது எலுமிச்சங்காய், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் போட்டுக் குலுக்கி கப்ரினா என்ற காக்டெயிலாகவும் குடிக்கிறார்கள். ஒரு லிட்டர் கஷாஷா 75-100 ரூபாய்க்குள் கிடைக்கிறது.

பரந்த நிலப்பரப்பில் குறைந்த மக்கள் தொகை, வற்றாத நீர்வளம், மற்றும் இயற்கையின் தாராளமான உயிரின, கனிம வளங்கள் எல்லாம் இருந்தும் பிரசிலில் வறுமை தாராளமாகவே இருக்கிறது. சா பாலோவின் அடுக்கு மாடிக் கட்டங்களின் பின்னால் சேரிகள். முதுகிற்குப் பின்னால் தாக்கும் வன்முறைக் கலாசாரம். சா பாலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற 50 லட்சம்-ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களிலும், பத்திருபது லட்சம் கொண்ட சிறு நகரங்களான சால்வடோர், ஃபோர்ட்டலிசாவிலும், துப்பாக்கி முனையில் வழிப்பறி, கொள்ளை, ஆட்கடத்தல் என்பன பரவலாக நடைபெறுகின்றன. நண்பர் ஒருவர் சமீபத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் துப்பாக்கி தாங்கிய மோட்டார் சைக்கிள்காரர்களால் மிரட்டப்பட்டு பணம் இழந்திருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை விவரிக்கையில்:

“குடிவெறியர்களுக்கும், போதை மருந்து உபயோகிப்பவர்களுக்கும், வேசிகளுக்கும் பிறந்து, ஏழ்மையில் உழலும் இளைஞர்கள்தான் பெரும்பாலும் இந்த வகையான குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். அன்பு, மனித உயிரின் மதிப்பு முதலியவற்றை அறியாத இவர்கள் உயிரைப் பறிக்க சற்றும் தயங்குவதில்லை. இவர்களிடம் மாட்டிக் கொண்டால் கேட்கும் பொருளைக் கொடுத்துவிட்டு தப்புவதுதான் புத்திசாலித்தனம்” என்றார்.

கூடவே, “நாம் மேல்தளத்தில் இருந்து இரவுணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கீழே கடற்கரை சாலையில் ஒரு பெண்ணின் பையை பறித்துக் கொண்டு ஒருவன் ஓடினானே. நீ பார்த்தாயா?” என்றார்.

“காண வேண்டிய காட்சிகளை நீர் எங்கே காட்டுகிறீர்?” என்று அலுத்துக் கொண்டேன்.

இரவுணவு முடித்து விட்டு விடுதியை நோக்கி சென்ற போது சாலையில் ஓரிடத்தில் தனியாக நின்றிருந்த ஒரு இளம் பெண்ணைச் சுட்டிக் காட்டி “காட்ட வேண்டிய காட்சிகளை சுட்டிக் காட்டவில்லையென்று நீ அலுத்துக் கொள்வதால் சொல்கிறேன், இந்தப் பெண்
ஒரு வேசி. வாடிக்கையாளரை எதிர்பார்த்து நிற்கிறாள்” என்றார்.

அதற்குள் எங்கள் வாகனம் அவளைப் போலவே தனியாக நின்றிருந்த இன்னொரு பெண்ணையும் கடந்து சென்று கொண்டிருந்தது.

“இவளுமா?” என்றேன்.

“இவனுமா? என்று கேள். இது அறுவை சிகிட்சை மூலம் பெண்ணாக மாற்றம் செய்து கொண்ட ஒரு ஆண்” என்றார்.

ஒரு லிட்டர் கஷாஷா குடித்தால்தான் தலைசுற்றுவது நிற்கும் போலிருந்தது.
Posted by Picasa

Sunday, September 2, 2007

சா பாலோவில் உழவர் சந்தை

சா பாலோவின் ஓரளவு வசதி மிக்க குடியிருப்பு பகுதிளில் ஒன்றில் வசிக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். வெள்ளிக் கிழமை காலை 9 மணி. மேக மூட்டமும், குளிரும் அகன்று சுகமான வெம்மை பரவும் வேளை.















நண்பர் என்னிடம், “வா என்னுடன். உனக்கு ஒன்றைக் காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றார். சென்ற இடம் அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெரு. ஒவ்வொரு வெள்ளியும் அந்தத் தெரு உழவர் சந்தையாக மாறி விடுகிறதாம்.














பிரசில் -- காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மொச்சை மற்றும் கடலை வித்துக்கள், இறைச்சி, மீன் -- என்று எல்லா விதமான உணவு உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகும். இங்கும் எல்லா இடங்களையும் போலவே உழவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. சா பாலோவில் உணவின் விலை அதிகமாக இருப்பதை உணவகங்களிலும், செல்ல நேரிட்ட ஒரு நடுத்தர அங்காடியிலிருந்தும் அறிந்து கொண்டேன்.

சா பாலோ அரசு உழவர் சந்தை என்று ஒரு இடத்தை நிரந்தரமாக ஏற்படுத்தாமல், நகரிலுள்ள பல தெருக்களில் உழவர் அமைப்புக்கள் வாரத்தில் ஒரு நாள் சந்தை ஏற்படுத்த ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. சா பாலோ போன்ற பெரிய நகரில் இந்த ஏற்பாடு உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. நுகர்வோர் நடந்து சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உழவர்கள் ஒரு பரந்த சந்தையில் பங்கு கொள்ள முடிகிறது. ஆனால், உழவர்கள் ஏதாவது வாகனங்களை சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்துக் கொள்ள வேண்டி வரும். நம்மூர் போல் பேருந்தில் கொண்டு செல்ல முடியாது.

பச்சைப் பசலேன்று காய்கறிகளும், வித, விதமான பழங்களும் சந்தையில் குவிந்திருந்தன. இறைச்சி விற்க இரு கடைகள் இருந்தன. ஒன்றில் விசா க்ரெடிட் கார்டு வசதி உண்டு. மீன்கள் விற்க ஒரு கடை. சாளை மீன்கள் கிலோவுக்கு 4.80 ரியால்கள், ஏறக்குறைய 100 ரூபாய். இறால்கள் ஏறக்குறைய 900 ரூபாய். ஆனால் காய்கறிகள், பழங்கள் விலை ஏகத்துக்கும் மலிவு. ஒரு டஜன் ஆரஞ்சு வாங்கினேன். விலை 60 ரூபாய். ஆனால் விற்றவர் 40 ரூபாய் போதும் என்று சொல்லி விட்டார். கொசுறாக ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்தும் கொடுத்தார்.














எங்கு இருந்தாலும் உழவர்களுக்கு ஒரு குணம் இருக்கிறது: தங்களது உழைப்பின் பலனை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பார்த்து மகிழ்வது.

Posted by Picasa

Tuesday, August 28, 2007

சா பாலோ நோக்கி

பிரேசிலுக்கு போவது முதல் தடவை இல்லையென்றாலும், போகும் வழி புதிது: மும்பை- ஜொகனஸ்பர்க்-சா பாலோ.

சென்னையிலிருந்து ப்ரான்க்பர்ட் அல்லது லண்டன் சென்று அங்கிருந்து சா பாலோ செல்லலாம். ஆனால் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ இரண்டுமே நரகங்களாகிவிட்ட இந்த நாட்களில் இவற்றை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்கிறேன். எனவே, எனது பயண அமைப்பாளர், ட்ராவல் மாஸ்டர்ஸின் சயனம் புதிய வழியை பரிந்துரைத்த போது அது மும்பை வழி என்பதை பொருட்படுத்தாமல் சரி சொன்னேன். மும்பையில் தங்க வேண்டிய 8 மணி நேரத்தைக் கணக்கில் சேர்க்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா மூலமாக பிரேசில் செல்வது, ஐரோப்பா செல்வதை விட தூரமும் நேரமும் குறைவு.

மும்பையிலிருந்து ஜொகனஸ்பர்க் ஆறாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் எட்டு மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க்கிலிருந்து சா பாலோ ஏழாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் ஒன்பது மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இடைத் தங்கல். சகல வசதிகளோடும், குறைவான நெரிசலுடனும், நட்புடன், இனிமையாகப் பேசும் தென்னாப்பிரிக்கர்களுடனும் இருக்கும் ஜொகனஸ்பர்க் விமான நிலையம் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ, பாரிஸ் டீகால் மூன்றையும் விட ஆயிரம் மடங்கு உயர்வு.

இப்போதுதான் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க ஏர்வேய்ஸைப் பயன்படுத்துகிறேன். பொழுதுபோக்கு என்ற ஒன்றை மட்டும் தவிர்த்து, மற்ற அத்தனை அம்சங்களிலும் ஐரோப்பிய, அமெரிக்க விமான சேவைகளை விஞ்சுகிறது இந்த ஏர்வேய்ஸ்.

மும்பை- ஜொகனஸ்பர்க் விமானம் கால்வாசி காலியாக இருந்தது வசதியாக இருந்தது. ஜொகனஸ்பர்க்-சா பாலோ நிறைந்திருந்தது. எனக்கு பக்கத்தில் குண்டூரிலிருந்து வந்து பங்களூரு கோவான்சிசில் பணிபுரியும் பிரசாத், அவர் சமீபத்தில் மணமுடித்த அதே கோவான்சிசை சேர்ந்த லதா. இருவரும் இரண்டாண்டுகளுக்கு பெருவில் பணியாற்றப் போகிறார்களாம். பெரு தலைநகர் லிமாவில் உள்ள ஃபிடலிட்டி வங்கி இவர்களது நிறுவனத்தின் மென்பொருளை வாங்கியிருக்கிறதாம். அது தொடர்பான சேவை விவகாரத்திற்காக செல்கிறார்களாம். “ஸ்பானிஷ் தெரியுமா?” என்றதற்கு “பொக்யிட்டோ” (ரொம்பக் கொஞ்சம்) என்று சிரித்தார் பிரசாத். பெரு மாதிரி ஒரு நாட்டில் இரண்டாண்டுகள் தங்கியிருந்தால் ஸ்பானிஷ் தானாக வந்துவிடும்.

சா பாலோ விமான நிலையம் பிரமாண்டமானது. ஒரு கணிசமான நடைக்குப் பின்னர் குடியுரிமை சோதனைக்கு வந்தோம். பிரேசிலின் குடியுரிமை சோதனை ரொம்ப எளிமையானது. பிரேசில் நாட்டவராக இருந்தால் ஒருவர் நின்று கடவுச் சீட்டை பரிசோதிக்கிறார். ஆளின் முகத்தையும், கடவுச் சீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிடுகிறார். பிறகு நட்பாகவோ, தமாஷாகவோ ஏதாவது பேசிக் கொண்டே அனுப்பி விடுகிறார். வெளிநாட்டினர் மட்டும் வரிசையில் நின்று, அதிகாரிகளிடம் சென்று சோதிக்கப்பட வேண்டும். அதிலும், மற்ற தென்னமரிக்க நாடுகளில் செய்வது போல் இந்திய பாஸ்போர்ட் என்றால் ஒரு வித சந்தேகத்துடன் ஆராய்வது எல்லாம் கிடையாது. கடவுச் சீட்டையும், விசாவையும் துரிதமாக சரிபார்த்து விட்டு, புன்னகையுடன் ஒரு சீல். அவ்வளவுதான்.

அலுப்பு தட்டிய சிவாஜி

27 ஆகஸ்ட் 2007 அதிகாலை 2 மணி
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை

இரண்டாண்டுகளுக்கு முன் இந்த விமான நிலையத்தை உபயோகப்படுத்தும்போது ஏற்பட்ட சில்லறை சிரமங்களால், இதைத் தவிர்த்து விட்டு சென்னை வழியாகவே வான் பயணம் மேற்கொள்ளுவதை நாடி வந்திருக்கிறேன். இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களால் மறுபடியும் மும்பை.

கடந்த முறைக்கு மும்பை விமான நிலையத்தில் சில, நல்ல மாற்றங்கள். நெரிசல் குறைந்தது போலிருக்கிறது. கடந்த முறை கைப்பைகள் பரிசோதிக்கும் வரிசையில் 50-60 பேர். அவர்களில் பந்தா துளிகூட காட்டாது பொறுமையாக நின்றிருந்த ரத்தன் டாட்டாவும் உண்டு. இம்முறை குடியுரிமை சோதனையில் கூட கூட்டமில்லை. பதினாறு அதிகாரிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வரிசையில் போய் நின்றவுடன் அழைத்தார்கள். என்னை சோதித்த நீலப் புடவை உடுத்திய பெண் அதிகாரி என்னையும், என் கடவுச் சீட்டையும் ரொம்ப சந்தேகமாக பார்த்தார். பல கேள்விகள் கேட்டார். திருப்தியில்லாமல்தான் என்னை மேற்கொண்டு செல்ல அனுமதித்தது போல் தோன்றியது.

சிவாஜியின் பயணிகள் காத்திருப்பு கூடம் மகா விசாலமாக இருக்கிறது. வசதியற்ற நாற்காலிகளில் பலர் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். பார்த்தவுடன் பசியடங்கி விடும் வகையில் காட்சியளிக்கும் சாண்ட்விச்களையும், அக்காமாலா பானங்களையும் விற்கும் இரு கடைகள், டாலரை 39.75 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, அதையே 44.50 ரூபாய்க்கு விற்கும் இரு அந்நிய செலாவணிக் கடைகள், சுங்கவரி விலக்கு பெற்ற பொருட்களை விற்கும், கொஞ்சமும் ஆர்வத்தைத் தூண்டாத இரு கடைகள் – இப்படி பயணிகளோடு சேர்ந்து அரைத் தூக்கத்திலிருக்கிறது விமான நிலையம். கடந்த முறை ஏற்பட்ட எரிச்சல் மாறி, இந்த முறை அலுப்புதான் தட்டியது.

அடுத்த முறையாவது இந்த விமான நிலையம் நல்ல அனுபவத்தை தரலாம் என்ற நம்பிக்கையோடு விமானம் நோக்கி நடந்தேன்.

Thursday, August 16, 2007

சிங்கப்பூரில் ஒரு நாள்: செராங்கூன் ரோடு


சிங்கப்பூரின் “லிட்டில் இந்தியா” என்று அழைக்கப்படும் தமிழர்கள் நிறைந்த பகுதியை கீறிச் செல்லும் பிரதான சாலைதான் செராங்கூன் ரோடு. செராங்கூன் சாலையின் ஒரு பக்கம் முழுவதும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்தவர்களுக்கு பொருட்களை விற்கும் பலவிதக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. பல்வேறு வெள்ளைக்காரர்கள் பெயர்களைத் தாங்கிய செராங்கூனின் கிளைச் சாலைகளிலும் இந்தியக் கடைகள் மலிந்திருக்கின்றன. துணிகள், உடுப்புகள், நகைகள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பத்திரிகைகள், குறுந்தகடுகள், உணவகங்கள் என்று வரிசையாக கடைகள். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக முஸ்தஃபா காம்ப்ளெக்ஸ் என்றழைக்கப்படும் பேரங்காடி. சிங்கப்பூரின் புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலும் செராங்கூன் சாலையில்தான் உள்ளது.

நான் முதலும், கடைசியுமாக செராங்கூன் வந்தது 1989ல். பிறகு பலமுறை சிங்கப்பூர் வந்தாலும் செராங்கூன் வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது நண்பர் சிங்கப்பூரில் வேறு பகுதியில் வசித்ததால் செராங்கூன் வர முடியவில்லை. இப்போது பெராக் ஹோட்டலில் இருந்ததால் செராங்கூன் சென்று பார்க்க விரும்பினேன். சில சில்லறை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் தேவைப்பட்டன. முஸ்தாஃபா சென்று அவற்றைப் பார்வையிடவும் வேண்டியிருந்தது.

பெராக் ஹோட்டலில் இருந்து நடையாக சுங்கே வந்து செராங்கூனில் திரும்பும் போது ஒருவர் – ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இந்தியர் – வந்து முஸ்தாஃபா எங்கே இருக்கிறதென்று சொல்ல முடியுமா என்று கேட்டார். நானும் அங்கேதான் போக வேண்டும், எனக்கும் வழி தெரியாது, யாரிடமாவது கேட்போம் என்று அங்கிருந்த ஒருவரிடம் இரண்டு பேரும் வழி கேட்டு விட்டு நடந்தோம்.

அபிஷேக் – அதுதான் என் சக நடைபயணியின் பெயர் – திருவான்மியூரிலிருந்து வருகிறார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலயில் பொறியியல் படித்து விட்டு நேஷனல் யூனிவர்சிடி ஆஃப் சிங்கப்பூரில் பயோ எஞ்சினியரிங்கில் முனைவர் படிப்பு படிக்க வந்திருக்கிறார். இளங்கலையிலிருந்து நேராக முனைவர். முனைவர் பட்டம் பெற நான்காண்டுகளாகுமாம்.

செராங்கூனில் முஸ்தஃபா பேரங்காடியை நோக்கி செல்லும் பாதையில் கடந்த 16 ஆண்டுகளிலும் பெரியதாக மாற்றம் ஏதும் இருப்பதாகப்படவில்லை. முஸ்தாஃபா காலத்திற்கேற்ப பெரிதளவு மாறியிருக்கிறது. கடையை பெரிய அளவில் விரிவுபடுத்தி, தளம் தளமாக, எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி காய்கறி, மளிகை வரை அத்தனையையும் வைத்திருக்கிறார்கள். எனக்கு அங்கு வாங்க வேண்டியது மிகவும் குறிப்பாக சில பொருட்கள். அவற்றை வாங்கிக் கொண்டு நகர ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆயிற்று.

வெளியில் வந்ததும் பசித்தது. முஸ்தஃபாவை சுற்றி, சுற்றி சாப்பாட்டுக் கடைகள்தான். உடுப்பி, செட்டிநாடு, பிஸ்மில்லா பவன்களையெல்லாம் ஒதுக்கி விட்டு, வயிறு பஞ்சாபி உணவு கேட்டது. முஸ்தாஃபின் செராங்கூன் சென்டருக்கு அடுத்துள்ள தந்தூரி ரெஸ்டாரண்டை முயற்சித்தேன். கொடுத்த 34 வெள்ளிகளுக்கு சாப்பாடு சுமார்தான்.

திரும்பி வரும் வழியில் குறுந்தட்டுக் கடை ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கவே உள்ளே ஏறுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. பர்தா அணிந்த ஒரு பெண்மணி ரொம்ப நட்பாக “என்ன படம் வேணும், புதுசா, பழசா?” என்றார்.

“புதுசு”

“டிவிடியா, விசிடியா?”

“டிவிடி”

ஒரு வரிசையைக் காண்பித்தார்.

“பருத்திவீரன்”

போனசாக பம்மல் கே சம்பந்தமும் இருக்கும் டிவிடியைக் கொடுத்தார்.

“போக்கிரி வேணுமா?”

“ம்ஹூம்”

“வரலாறு?”

“ம்ஹூஹூம்”

இவரை விட்டால் ஹூக்களை அதிகப்படுத்தும் படங்களைத்தான் அடுக்குவார் என்பதால் “பிரகாஷ்ராஜ், ஜோதிகா படம்…..”

“பச்சைக்கிளி முத்துச்சரம்?”

நினைவுக்கு வந்துவிட்டது. “இல்லை, மொழி”

"அது டிவிடியில் இல்லை. விசிடியில் இருக்கிறது"

தயங்கினேன்.

“நல்ல சுத்தமான பிரிண்ட்”

“சரி கொடுங்க”

இதற்குள் இன்னொருவர் வந்து “புதுசாக என்ன வந்திருக்கிறது?” என்றார்.

“எல்லாம் இருக்கு. ஆனால் சிவாஜி இன்னும் வரவில்லை. இந்த வாரக் கடைசியில் ரிலீஸ் பண்ணுகிறார்களாம்”

நான் எனது தகடுகளுக்கான 25 வெள்ளியைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். 650 ரூபாய்கள். ஆனாலும் இது சட்டபூர்வமான சரக்கு. சிங்கப்பூர் தணிக்கைக் குழு பார்த்து, "பருத்திவீரன்" 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாமென்றும், "மொழி" பெற்றோர்கள் துணையோடு குழந்தைகள் பார்க்கலாமென்றும், அளித்த ஒப்புதல் ஸ்டிக்கர் ஒட்டிய சுத்தமான சரக்கு.

சிங்கப்பூரில் ஒரு நாள்: பெராக், பெராக், பெராக்


சிங்கப்பூர் செல்வது இது முதல் முறை இல்லை. என்றாலும் சில புதிய அனுபவங்கள்.

முதலாவது தங்குமிடம். இது வரை சிங்கப்பூரில் தங்குமிடம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஒரு நெருங்கிய நண்பர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் வீட்டில் தங்குவதை தவிர வேறு எதையும் அனுமதிக்க மாட்டார். இப்போது நண்பர் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டதால் தங்குமிடம் ஒன்றை ஏற்பாடு செய்யும் பொறுப்பு என் தலையில். வழக்கம் போலவே அந்தப் பொறுப்பை நான் கடைசி நிமிடம் வரை தட்டிக் கழித்தேன். புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னர்தான் பண்டாரிலிருந்து ஹோட்டல் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிய வந்தது சிங்கப்பூரில் முக்கால்வாசி விடுதிகள் நான் தங்க வேண்டிய நாளன்று முழுமையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன என்று. வேறு வழியில்லாமல் எக்ஸ்பீடியா.காம்-ஐ நாட வேண்டியதாயிற்று. எக்ஸ்பீடியா காண்பித்த 7-8 ஹோட்டல்களில் ஒன்றே ஒன்றுதான் அமெரிக்க டாலர் 200க்கும் குறைவு. அந்த ஹோட்டலின் பெயர்: பெராக் ஹோட்டல். லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் செராங்கூன் பகுதியில் உள்ளது என்றும், அங்கு ஏற்கனவே தங்கியவர்கள் இதற்கு நான்கு நட்சத்திரங்கள் வழங்கி கவுரப்படுத்தியிருந்ததாலும் இங்கேயே தங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

சிங்கப்பூரில் வாடகை ஊர்தியில் ஏறியதும் வாகன ஓட்டியிடம் “பெராக் ஹோட்டல்” என்றேன்.

“அப்படியா, அது எங்கே இருக்கிறது?”

நான் – “பெராக் ரோடு என்று போட்டிருந்தார்கள்”

அவர் – “கேள்விப்பட்டதில்லை”

நான் – “செராங்கூன் சாலை பக்கத்தில் என்று படித்தேன்”

அவர் – “செராங்கூன் ரொம்ப நீளமான சாலை”

இப்படிச் சொன்னவர் வாகனத்தில் இருக்கும் திசைகாட்டியை இயக்கி பெராக் ரோடைத் தேட அங்கும் அது இல்லை. இதற்கிடையில் நான் கணிணியத் திறந்து, ஹோட்டல் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து அவரிடம் சொல்ல, செல்போன் மூலமாக ஹோட்டலைத் தொடர்பு கொண்டு இடத்தைக் கண்டுபிடித்தார்.

இத்தனைக்கும் பெராக் ரோடு ஒதுக்குப்புறம் என்று சொல்ல முடியாது. ஜலன் பெசார் (Jalan Besar) என்கிற பிரதான சாலையும், சுங்கேய் (Sungei) என்கிற இன்னொரு பிரதான சாலையும் சந்திக்கும் இடத்திலிருந்து சுங்கேயில் மேற்கு நோக்கி சென்றால் முதலாவது வலது புறத் திருப்பம்தான் பெராக் ரோடு.

பெராக் ஹோட்டல் “பெராக் லாட்ஜ்” என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓரளவு பெயர் வாய்ந்த விடுதியாக இருந்திருக்கிறது. இடையில் தொய்ந்து, பழையதான ஹோட்டலை இப்போது புதுப்பித்திருக்கிறார்கள். சுவர்களை சரிசெய்து வண்ணம் பூசி, அறைகளுக்கு மிகையில்லாத உள் அலங்காரங்கள் செய்து, மரப்பலகைகள் வேய்ந்த தளங்களை மீண்டும் பளபளப்பாக்கி, தேவைப்படும் இடங்களில் சிவப்பு தள ஓடுகள் பதித்து – மொத்தத்தில் ஒரு ஆடம்பரமில்லாத, ஆனால் தூய்மையையும், எளிமை துலங்கும் ஒரு வித கலையுணர்வையும் கொண்டு வந்திருக்கிறார்கள். அறைகளின் அளவுதான் அநியாயத்திற்கு சின்னது. நான் இருந்தது சுப்பீரியர் அறை. ஸ்டாண்டர்ட் அறையை விட சற்று பெரிது என்றார்கள். எனக்கு போதுமானது. இன்னொருவர் இருந்தால் இடைஞ்சலாக இருக்கலாம். கணவன்-மனைவி-குழந்தைகள் என்றால் கட்டாயம் முடியாது. ஆனால் ட்ரிப்பிள் ரூம் என்று பெரிய அறைகளும் உள்ளன.

இந்த இடத்திற்கு எக்ஸ்பீடியா என்னிடம் சுமார் வரிகள் உள்ளிட்டு 118 அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. நேரடியாக பதிந்தால் என்ன வாடகை என்றேன். சிங்கை டாலர்கள் 170 என்றார்கள். அது ஏறக்குறைய 110 அமெரிக்க டாலர்கள் வருகிறது. 2001-ல் 9/11க்குப் பிறகு பான் பசிபிக்கில் (சிங்கப்பூரின் 5 நட்சத்திர விடுதிகளில் ஒன்று) 100 அமெரிக்க டாலர்களுக்கு குறைவான வாடகையில் தங்கியிருக்கிறேன். இப்போது நிலைமை மாறி விட்டது. மறுபடியும் சிங்கப்பூரில் தங்குமிட தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.

சிங்கப்பூரில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்குபவர்களுக்கு, குறிப்பாக இந்திய உணவு சாப்பிட விரும்புவர்களுக்கு, முஸ்தாபாவில் பொருட்கள் வாங்க செல்கிறவர்களுக்கு, பெராக் ஹோட்டல் நல்ல தீர்வாக இருக்கும். ஆன் லைன் முன்பதிவு செய்யும் வசதியுடன் உள்ள பெராக் ஹோட்டலின் இணைய தளம்: www.peraklogdge.net.

Sunday, August 12, 2007

ப்ரூனே வந்தேன்


 

பிரிட்டிஷாரால் போர்னியோ என்றும் மலாய்காரர்களால் கலிமான்றான் என்றும் அழைக்கப்படும் தீவை மூன்று நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. வடக்குப் பாகத்தின் பெரும்பகுதி, கிழக்கு மலேசியாவின் சாரவாக், சாபா மாநிலங்கள். தெற்குப் பாகம் இந்தோனேசியாவின் கலிமான்றான். சாரவாக், சாபாவுக்கு நடுவில் ஒரு சிறு கீற்று ப்ரூனே. எரி எண்ணெயும், வாயுவும் கொழிக்கும் ஒரு சிறு நாடு.

பாலியிலிருந்து ப்ரூனேக்கு நேரடியாக விமான சேவை இருப்பது எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருந்தது. ப்ரூனேயின் மொத்த மக்கள் தொகை நான்கு லட்சம் (கன்னியாகுமரி மாவட்ட ம.தொ.வில் நான்கில் ஒரு பங்கு). ப்ரூனேக்கு செல்பவர்கள் பெரும்பாலும் தொழில் சம்பந்தமாக செல்பவர்கள். பாலிக்கு செல்கிறவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பவர்கள். இதில் பாலிக்கும், ப்ரூனேக்கும் இடையில் விமானம் விடக் கூடிய அளவு பயணிகள் எப்படிக் கிடைக்கிறார்கள்; ஒரு வேளை ரொம்ப சின்ன விமானமாக இருக்கலாம். அல்லது, விமானத்தில் கூட்டமிருக்காது; ஹாயாக பயணம் செய்து கொண்டு போகலாம் என்ற நினைத்துக் கொண்டு விமான நிலையம் வந்தேன். இரண்டு கணிப்புகளும் தவறாக இருந்தது. ராயல் ப்ரூனே ஏர்லைன்ஸ் இயக்கிய ஏர்பஸ் A320 விமானம் 150 பயணிகளை ஏற்றிச் செல்வது; முழுவதும் நிறைந்திருந்தது. பல வெள்ளைக்கார யுவதிகள் பாலியின் கடற்கரைகளில் அணிந்த உடுப்புகளை அதிகம் மாற்றாமலே விமானம் ஏறியிருந்தார்கள். ப்ரூனேயில் இவர்களை எப்படி அனுமதிக்கப் போகிறார்கள் என்ற கவலையோடுதான் பயணம் செய்தேன். பெரும்பாலான கவலைகளைப் போலவே இந்தக் கவலையும் தேவையில்லாதுதான் என்பது பிறகு தெரிய வந்தது.

பண்டார் செரி பெகவான் – இதுதான் ப்ரூனேயின் தலைநகர். சுருக்கமாக பண்டார் என்றழைக்கிறார்கள். பண்டார் விமான நிலையத்தில், விமானத்திலிருந்து வருகையை நோக்கிப் போகும் வழியில் பராக்கு பார்த்துக் கொண்டே (அல்லது எதையோ நினைத்துக் கொண்டே) செம்மறி ஆடாக எனக்கு முன்னால் சென்றவர்களோடு ட்ரான்சிட் தளத்திற்குள் நுழைந்து விட்டேன். தவறை உணர்ந்து திரும்பிப் போக எத்தனித்தால் கதவு ஒரு வழியாகத்தான் திறக்கும் என்று தெரிகிறது. அதாவது, உள்ளே வரலாம். வெளியே போக முடியாது. நல்ல வேளையாக கதவிற்கு அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒருவரை அழைத்து, கதவைத் திறக்க சைகை காட்ட, அவரும் மறுப்பேதும் சொல்லாமல் திறந்து விட்டார்.

பண்டாரின் வருகை தளம் காலியாக காற்றாடிக் கிடந்தது. குடியுரிமை சோதிப்பில் முக்காடு அணிந்த நான்கு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். எனது கடவுப் புத்தகத்தில் கலர், கலராக ரப்பர் ஸ்டாம்புகள் குத்தி அனுப்பினர். சுங்கவரிக்காரர் தூரத்திலிருந்தே கையசைத்து விட்டார் சோதனை தேவையில்லை என்று. ஆக மொத்தத்தில் நான் வந்த விமானத்தில் ப்ரூனே வந்தது 10 பேருக்கும் குறைவுதான். மற்ற பயணிகளெல்லாம் ப்ரூனேயிலிருந்து பாங்காக், சிங்கப்பூர், கோலாலம்பூர் என்று வழியிறங்கிச் செல்லும் பயணிகள் போல.

பண்டார் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரும் வழியிலெல்லாம் 10 அடிக்கு ஒரு முறை ப்ரூனே சுல்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு 61 வயது பிறந்த நாள் சமீபத்தில்தான் கொண்டாடினார்களாம். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனர்களை எல்லா இடங்களிலும் தொங்க விட்டிருந்தார்கள். அவரைப் பார்த்தால் 61 வயது என்று மதிக்க முடியாது. 20 வயது இளமையாகத் தெரிகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் வயதில் 30 குறைந்த ஒரு மலேசிய தொலைக்காட்சி அறிவிப்பாளரை இரண்டாவது மனைவியாக மணம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் உலகத்தின் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தவர். பில் கேட்ஸை கார்லோஸ் ஸ்லிம் முந்திவிட்ட இந்தக் காலத்தில் கொஞ்சம் பின் தங்கி விட்டார். அவருடைய தம்பி, இளவரசர் ஜெப்ரி, ப்ரூனே முழுக்க கட்டிடங்களை எழுப்புகிறேன் என்று கொஞ்சம் பில்லியன்களை ஆற்றில் போட்டு விட்டாராம். இருந்தாலும் சுல்தானின் இப்போதைய சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்களாம். ஐந்து அல்லது ஆறு சைபருக்கு மேல் கொண்ட எண்கள் அனைத்துமே என் மூளையை மழுங்கடித்து விடுவதால் 10 பில்லியன் டாலர் என்பது ரூபாயில் எத்தனை என்றெல்லாம் எழுத விரும்பவில்லை. ஒரு டாலருக்கு 9000 ருப்பையா கொண்ட இந்தோனேசியாவில் மனக்கணக்காக கரன்சி மாற்றி, மாற்றி மண்டை காய்ந்து இப்போதுதான் வந்திருக்கிறேன்.

ப்ரூனே மக்கள் பொதுவாக எந்த விஷயத்திலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்று படுகிறது. நிதானமாக நடக்கிறார்கள்; பேசுகிறார்கள்; வண்டியோட்டுகிறார்கள். எப்போதும் ஒரு வித புன்னகை முகத்தில் தவழ்கிறது. கீழ் நிலைகளில் லஞ்சம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் திருட்டு போன்ற சிறு குற்றங்கள் பரவலாக நடைபெறுகின்றன. அரசாங்கம் விமரிசிக்கப்படுவதை விரும்பவதில்லை என்று இணையதளங்களில் படித்தேன். ஆனால், ப்ரூனேயைக் கடுமையாக விமரிசிக்கும் இணையதளங்களைக் கூட இங்கிருந்து அணுக முடிகிறது. எனவே, சீனா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும் போது ப்ரூனேயில் இணைய சென்சார் கெடுபிடிகள் குறைவு என்றே நினைக்கிறேன்.

கலிமன்றான் தீவு தாவர, மிருக வளம் மிக்க ஒன்று. பசுமைமாறாக் காடுகள், சதுப்பு நிலக்காடுகள் எங்கும் செழித்து பரந்திருக்கின்றன. சாலையில் ஓரிடத்தில் 3-4 அடி நீளம் கொண்ட ஒரு உடும்பைக் (monitor lizard) காப்பாற்ற வாகனத்தின் சாரதி ப்ரேக் அடித்தார். நம்மூரில் முரண்டு பிடித்துக் கொண்டு வளரும் செம்பனைகள் (red palms) இங்கு காடுகளில் எங்கும் 30-40 அடிகள் வளர்ந்து நிற்கின்றன. பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் நீராவியில் நிற்பதைப் போன்ற வெப்பநிலை இருக்கிறது. காலை 8 மணிக்கு மேல் மாலை 7 மணி வரை வெளியில், அதிலும் வெயிலில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்க முடிவதில்லை.

பகலெல்லாம் கொடுமையான வெயில் அடிப்பதால் இரவில்தான் மனித நடமாட்டம் தென்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) இரவு கெடாங் மால் பக்கம் போகலாம் என்று நண்பர் ஒருவர் அழைத்துக் கொண்டு போனார். இரவு 9 மணி. கெடாங் மால் பகுதியில் வண்டியை நிறுத்த இடமில்லாத அளவுக்கு கூட்டம். ப்ரூனேயில் இருக்கும் நான்கு லட்சம் மக்களும் ஆளுக்கொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பகுதிக்கு வந்து விட்டார்கள் போல. பசியோடு அரை மணி நேரம் பார்க்கிங் தேடி அலுத்துப் போய், வெளியே வந்து வேறு இடத்தில் சாப்பிட்டோம்.

ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் ஹாஜி ஹசன்னல் போல்க்கியா முசாய்தீன் வாதுல்லா, அதாவது இப்போதைய சுல்தானின் தந்தை ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் ஓமர் அலி மூன்றாவது சைபுதீனின் நினைவாக எழுப்பப்பட்ட மசூதியின் இரவுத் தோற்றமே மேலே கண்டது. ஆமாம், இந்த ஹிஸ் மெஜஸ்டியை தமிழில் எழுதுவது எப்படி: ராஜ ராஜ ராஜ மார்த்தண்ட ராஜ குல திலக ராஜ குலோத்துங்க ….?
Posted by Picasa

Sunday, August 5, 2007

இந்த வாரம் முழுவதும் பாலியில்

புவியியலில் தட்டுத் தடுமாறுபவர்களுக்கு சிறு குறிப்பு: பாலி என்பது இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. இந்தோனேசியாவின் பிரதான தீவாகிய ஜாவா தீவிற்கு வடகிழக்கில் ஒரு சிறிய தீவு. காரில் ஒரு ஐந்து மணி நேரத்திற்குள் தீவை சுற்றி வந்து விடலாம். பவழப்பாறைகள் சூழ்ந்த தீவு. வெண்மணல் கடற்கரை. அடர்ந்த நீலக் கடல். எரிமலைகள் உமிழ்ந்த கரும்பாறைகள் பொடிந்து உருவான வளமான மண். வஞ்சகமில்லாமல் பெய்யும் மழை. விளைவாக எங்கும் பசுமை. கடவுள் ஓரவஞ்சனையாக சில இடங்களுக்கு எல்லாவித அழகையும் கொடுக்கும் வழக்கம் உண்டல்லவா. அதில் இதுவும் ஒன்று.

பாலியின் அழகைக் காண வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். கண்டால் மட்டும் போதாது என்று கண்டபடி கொண்டாட்டமும் போடுகிறார்கள். இப்படிக் கொண்டாட்டம் போடுபவர்களுக்கு குண்டு போட இந்தோனேசியாவின் மற்ற தீவுகளிலிருந்து தீவிரவாதிகள் வருகிறார்கள். இரண்டு தடவை வெடித்த குண்டுகளால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து இப்போது மறுபடியும் பெருகி வருகிறது. மழை குறைவான, மிதமான வெப்பம் கொண்ட ஜூலை-அக்டோபர்தான் இங்கு சீசன். அரைகுறை ஆடைகளோடு, கரையில் படுத்துறங்கவா, அலையில் சாகசம் செய்யவா, அடியில் மூழ்கி பவழப்பாறைகளைப் பார்க்கவா என்று வெள்ளைக்காரர்கள் திரிகிறார்கள். ஆங்காங்கே ஜப்பான், கொரிய, சீன சுற்றுலாப் பயணிகளும் உண்டு.

பாலியின் தெற்குப் பகுதியில்தான் பிரதானமான கடற்கரைகள் உள்ளன. நான் இம்முறை தங்கியது கிழக்கு நோக்கிய சனூர் கடற்கரை. கரையிலிருந்து ஒரு 300 மீட்டர்கள் தூரம் ஆழமில்லா கடல் (ஆனால் பாறைகள் அடியில் இருப்பதால் சுலபமாக கடக்க முடியவில்லை). அதன் பின்னர் திடீரென ஆழம் 30 அடிக்கு அதிகரிக்கிறது. அங்குதான் பவழப்பாறைகள் உள்ளன.

சனூர் தவிர நுசதுவா, ஜிம்பரன், குட்டா என்று பல கடற்கரைகள் உள்ளன. நுசதுவாவில் இரண்டாண்டுகளுக்கு முன் தங்கியிருக்கிறேன். நம்மூர் கன்னியாகுமரி போல் தென்முனை என்பதால் சுற்றிலும் கடலைப் பார்க்கலாம். ஜிம்பரனில் வரிசையாக உணவகங்கள் உள்ளன. எல்லா உணவகங்களிலும் உயிரோடு மீன், இறால், நண்டு வைத்திருக்கிறார்கள். எது வேண்டுமென்று தெரிவு செய்தால், எடை போட்டு, அவித்து, வறுத்து, பொரித்து, சுட்டு – உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி சமைத்து – பரிமாறுவார்கள். இந்தோனேசியர்களுக்கு மீனைச் சுட்டு, அதாவது grill செய்து சாப்பிடுவது பிடிக்கும் போல. ஜாவாவிலும் சரி, பாலியிலும் சரி எங்கு பார்த்தாலும் ‘இங்கு இக்கான் பக்கார் கிடைக்கும்” என்று போர்டுகள் கூப்பாடு போடுகின்றன. பஹாசா மொழியில் இக்கான் என்றால் மீன்; பக்கார் என்றால் சுடுவது என்பதாம். பசியோடு இருக்கும் போது சுடு சாதம், சம்பல் என்றழைக்கப்படும் சட்னி/பச்சடி கலவைகள், சூடான இக்கான் பக்கார் கொண்டா, கொண்டா என்று இழுக்கிறது.

குட்டாதான் பாலியில் பிரபல இடம். குட்டா கடற்கரையில் ஆதவன் மறையும் காட்சி அருமையாக இருக்குமாம். எனக்கு இது வரை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. குட்டாவில் இரவு கேளிக்கை விடுதிகள் பிரபலம். குண்டுகள் வெடித்தது இங்கேதான். இம்முறை ஒரு இரவு குட்டாவிலிருக்கும் ஒரு ஜப்பானிய உணவகத்திற்கு சாப்பிடச் சென்றோம். இன்னொரு முறை பக்கத்திலிருக்கும் கொரிய உணவகத்திற்கு. அவ்வளவுதான் குட்டா அனுபவம்.

பாலியின் மையப்பகுதி முழுவதும் மலைப் பிரதேசம். ஒரு நாள் வடக்குப் பகுதியிலிருக்கும் சிங்கராஜா வரை செல்ல வேண்டியதாயிற்று. அடர்ந்த பசுங்காடுகளிக்கிடையில் ஊசிக் கொண்டை வளைவு சாலைகள் வழியாக மூன்றரை நேரப் பயணம். வழியெங்கும் இந்துக் கோவில்கள் தென்படுகின்றன.

பாலியின் இந்து மதம் இந்தியாவிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். மந்திர தந்திரம், ஆவி, மூதாதையர் வழிபாடு, உயிர்ப்பலி என்று இந்து மதத்தின் பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்து நிற்கிறது. இதன் வரலாறு – குறிப்பாக இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து, எப்போது வந்தது; எப்படி இந்தோனேசியா முழுவதும் பரவிய இஸ்லாமினால் பாதிக்கப்படவில்லை – எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி படித்து விட்டு எழுதுகிறேன். கடந்த ஆண்டு கம்போடியாவிலுள்ள அங்க்கோர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. சோழர்களின் பரம்பரையினர்தான் கம்போடியாவை ஆண்டதாகவும், அங்க்கோரில் தென்படும் பல கோவில்களை (அங்க்கோர் வாட் அவற்றில் புகழ் வாய்ந்த ஒன்று) வடிவமைத்ததாகவும் நமது பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்கள் கூறியதாக ஒரு மங்கலான நினைவு. ஆனால், நான் கம்போடியாவில் வாங்கிப் படித்த புத்தகமொன்றில் அது சோழர்களா, அல்லது ஒரிசாவிலிருந்து வந்தவர்களா என்று தெரியவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். கோவிலுக்குள் இருந்த கல்வெட்டில் ஐ, க, த, ப போன்ற எழுத்துக்களை கண்டுபிடித்து, எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டியிடம் அவற்றை உச்சரிக்க சொல்லி கேட்டுக் கொண்ட போது அவர் அவைகளை ஐ, க, த, ப என்றே உச்சரித்தார். தென்மேற்காசியாவில் இந்திய கலாசார வரலாறு பற்றி தெரிந்து கொள்ள நல்ல புத்தகங்கள் இருந்தால் தெரிவியுங்கள். கையடக்கமான அளவில் இருந்தால் நல்லது.
Posted by Picasa