Showing posts with label வினாக்கள். Show all posts
Showing posts with label வினாக்கள். Show all posts

Sunday, August 5, 2007

இந்த வாரம் முழுவதும் பாலியில்

புவியியலில் தட்டுத் தடுமாறுபவர்களுக்கு சிறு குறிப்பு: பாலி என்பது இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. இந்தோனேசியாவின் பிரதான தீவாகிய ஜாவா தீவிற்கு வடகிழக்கில் ஒரு சிறிய தீவு. காரில் ஒரு ஐந்து மணி நேரத்திற்குள் தீவை சுற்றி வந்து விடலாம். பவழப்பாறைகள் சூழ்ந்த தீவு. வெண்மணல் கடற்கரை. அடர்ந்த நீலக் கடல். எரிமலைகள் உமிழ்ந்த கரும்பாறைகள் பொடிந்து உருவான வளமான மண். வஞ்சகமில்லாமல் பெய்யும் மழை. விளைவாக எங்கும் பசுமை. கடவுள் ஓரவஞ்சனையாக சில இடங்களுக்கு எல்லாவித அழகையும் கொடுக்கும் வழக்கம் உண்டல்லவா. அதில் இதுவும் ஒன்று.

பாலியின் அழகைக் காண வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். கண்டால் மட்டும் போதாது என்று கண்டபடி கொண்டாட்டமும் போடுகிறார்கள். இப்படிக் கொண்டாட்டம் போடுபவர்களுக்கு குண்டு போட இந்தோனேசியாவின் மற்ற தீவுகளிலிருந்து தீவிரவாதிகள் வருகிறார்கள். இரண்டு தடவை வெடித்த குண்டுகளால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து இப்போது மறுபடியும் பெருகி வருகிறது. மழை குறைவான, மிதமான வெப்பம் கொண்ட ஜூலை-அக்டோபர்தான் இங்கு சீசன். அரைகுறை ஆடைகளோடு, கரையில் படுத்துறங்கவா, அலையில் சாகசம் செய்யவா, அடியில் மூழ்கி பவழப்பாறைகளைப் பார்க்கவா என்று வெள்ளைக்காரர்கள் திரிகிறார்கள். ஆங்காங்கே ஜப்பான், கொரிய, சீன சுற்றுலாப் பயணிகளும் உண்டு.

பாலியின் தெற்குப் பகுதியில்தான் பிரதானமான கடற்கரைகள் உள்ளன. நான் இம்முறை தங்கியது கிழக்கு நோக்கிய சனூர் கடற்கரை. கரையிலிருந்து ஒரு 300 மீட்டர்கள் தூரம் ஆழமில்லா கடல் (ஆனால் பாறைகள் அடியில் இருப்பதால் சுலபமாக கடக்க முடியவில்லை). அதன் பின்னர் திடீரென ஆழம் 30 அடிக்கு அதிகரிக்கிறது. அங்குதான் பவழப்பாறைகள் உள்ளன.

சனூர் தவிர நுசதுவா, ஜிம்பரன், குட்டா என்று பல கடற்கரைகள் உள்ளன. நுசதுவாவில் இரண்டாண்டுகளுக்கு முன் தங்கியிருக்கிறேன். நம்மூர் கன்னியாகுமரி போல் தென்முனை என்பதால் சுற்றிலும் கடலைப் பார்க்கலாம். ஜிம்பரனில் வரிசையாக உணவகங்கள் உள்ளன. எல்லா உணவகங்களிலும் உயிரோடு மீன், இறால், நண்டு வைத்திருக்கிறார்கள். எது வேண்டுமென்று தெரிவு செய்தால், எடை போட்டு, அவித்து, வறுத்து, பொரித்து, சுட்டு – உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி சமைத்து – பரிமாறுவார்கள். இந்தோனேசியர்களுக்கு மீனைச் சுட்டு, அதாவது grill செய்து சாப்பிடுவது பிடிக்கும் போல. ஜாவாவிலும் சரி, பாலியிலும் சரி எங்கு பார்த்தாலும் ‘இங்கு இக்கான் பக்கார் கிடைக்கும்” என்று போர்டுகள் கூப்பாடு போடுகின்றன. பஹாசா மொழியில் இக்கான் என்றால் மீன்; பக்கார் என்றால் சுடுவது என்பதாம். பசியோடு இருக்கும் போது சுடு சாதம், சம்பல் என்றழைக்கப்படும் சட்னி/பச்சடி கலவைகள், சூடான இக்கான் பக்கார் கொண்டா, கொண்டா என்று இழுக்கிறது.

குட்டாதான் பாலியில் பிரபல இடம். குட்டா கடற்கரையில் ஆதவன் மறையும் காட்சி அருமையாக இருக்குமாம். எனக்கு இது வரை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. குட்டாவில் இரவு கேளிக்கை விடுதிகள் பிரபலம். குண்டுகள் வெடித்தது இங்கேதான். இம்முறை ஒரு இரவு குட்டாவிலிருக்கும் ஒரு ஜப்பானிய உணவகத்திற்கு சாப்பிடச் சென்றோம். இன்னொரு முறை பக்கத்திலிருக்கும் கொரிய உணவகத்திற்கு. அவ்வளவுதான் குட்டா அனுபவம்.

பாலியின் மையப்பகுதி முழுவதும் மலைப் பிரதேசம். ஒரு நாள் வடக்குப் பகுதியிலிருக்கும் சிங்கராஜா வரை செல்ல வேண்டியதாயிற்று. அடர்ந்த பசுங்காடுகளிக்கிடையில் ஊசிக் கொண்டை வளைவு சாலைகள் வழியாக மூன்றரை நேரப் பயணம். வழியெங்கும் இந்துக் கோவில்கள் தென்படுகின்றன.

பாலியின் இந்து மதம் இந்தியாவிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். மந்திர தந்திரம், ஆவி, மூதாதையர் வழிபாடு, உயிர்ப்பலி என்று இந்து மதத்தின் பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்து நிற்கிறது. இதன் வரலாறு – குறிப்பாக இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து, எப்போது வந்தது; எப்படி இந்தோனேசியா முழுவதும் பரவிய இஸ்லாமினால் பாதிக்கப்படவில்லை – எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி படித்து விட்டு எழுதுகிறேன். கடந்த ஆண்டு கம்போடியாவிலுள்ள அங்க்கோர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. சோழர்களின் பரம்பரையினர்தான் கம்போடியாவை ஆண்டதாகவும், அங்க்கோரில் தென்படும் பல கோவில்களை (அங்க்கோர் வாட் அவற்றில் புகழ் வாய்ந்த ஒன்று) வடிவமைத்ததாகவும் நமது பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகங்கள் கூறியதாக ஒரு மங்கலான நினைவு. ஆனால், நான் கம்போடியாவில் வாங்கிப் படித்த புத்தகமொன்றில் அது சோழர்களா, அல்லது ஒரிசாவிலிருந்து வந்தவர்களா என்று தெரியவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். கோவிலுக்குள் இருந்த கல்வெட்டில் ஐ, க, த, ப போன்ற எழுத்துக்களை கண்டுபிடித்து, எங்களை அழைத்துச் சென்ற வழிகாட்டியிடம் அவற்றை உச்சரிக்க சொல்லி கேட்டுக் கொண்ட போது அவர் அவைகளை ஐ, க, த, ப என்றே உச்சரித்தார். தென்மேற்காசியாவில் இந்திய கலாசார வரலாறு பற்றி தெரிந்து கொள்ள நல்ல புத்தகங்கள் இருந்தால் தெரிவியுங்கள். கையடக்கமான அளவில் இருந்தால் நல்லது.
Posted by Picasa

Sunday, July 22, 2007

இது என் முதல் ஞாயிறு தபால்

கடந்த வாரம் பெரும்பாலும் சென்னையில் பல்வேறு பணிகள் நிமித்தமாக.

கல்லூரி நண்பர் சையது யாஹியா தாய்லாந்து, ஜப்பான், நார்வே, நியுசிலாந்து என்று பல இடங்களில் படிப்பும், பணியனுபவமும் பெற்று திரும்பியிருக்கிறார். சென்னையில் அவரோடு சில மணி நேரங்களைக் கழித்தேன். அவரது சகோதரரின் மனிதவள நிறுவனத்தை ஒரு புறம் கவனித்துக் கொண்டு, இன்னொரு புறம் ஒரு பயோடெக் நிறுவனத்தை தொடங்கும் முயற்சிகளில் இருக்கிறார். நிறைய கனவுகளுடனும், திட்டங்களுடனும், பல ஆண்டுகள் வெளிநாடுகளில் வசித்து விட்டு இந்தியாவிற்கு திரும்பி சில மாதங்களே ஆன எல்லோருக்கும் ஏற்படும் சில சந்தேகங்களுடனும் இருக்கின்றார்.

"நான் கார் ஓட்டுறதப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்கங்க" என்றார். சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வந்தால்தான் வண்டியை நகர்த்துவேன் என்ற பிடிவாதம்தான் நகைப்புக்குக் காரணமாம். இதை நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அவருடைய ஸ்கார்ப்பியோவில் மேற்கு மாம்பலத்தின் ஒரு குறுகலான தெருவில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தோம். வாகனத்தின் சாரதி அந்த தெருவில் ஒரு U-வட்டமடித்து திருப்ப முயன்றார். தெருவின் அகலம், வாகனத்தின் அகலம் ஆகிய இரண்டு காரணங்களாலும் அது U-திருப்பமாக இல்லாமல் ஒரு மாதிரி முன்னும் பின்னும் நகர்த்தி ஒரு W-திருப்பமாக, சுமார் ஒரு நிமிடமாவது எடுத்திருக்கும். சாலையின் இரு பக்கங்களிலும் 2-3 கார்கள், சில இரு சக்கர வாகனங்கள் நமது சாரதி தனது W-திருப்பத்தை முடிக்கும் வரையில் நாரச ஒலியெழுப்பாமல் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தனர். நண்பருக்கு சுட்டிக் காட்டி சொன்னேன்: “இதுதான் நம்ம ஊர். கொஞ்ச நாளில் புரிந்து கொண்டு பழகிக் கொள்வீர்கள்.”

ooo

சனிக்கிழமை, ஜுலை 21, அதிகாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் நாகர்கோவில் ரயில் நிலையம் அடைந்தேன். அங்குள்ள புத்தகக்கடையில் ஜூலை 2007 'காலச்சுவடு' தென்பட்டது. வாங்கினேன். “அரசியல், ஊடக வன்புணர்ச்சியின் கதை” என்ற துணைத் தலைப்பில் கண்ணன் அதில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் (இணையத்தில்: www.kalachuvadu.com/issue-91/katturai01.asp). தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் வன்முறை சம்பவங்களின் பின்விளைவுகளை அலசும் ஒரு முயற்சி இந்தக் கட்டுரை எனலாம். கட்டுரை இரண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளிலும் ‘தினகரன்’ சம்பவத்திற்கு தமிழக ஊடக, இலக்கிய, அரசியல் வட்டங்கள் காட்டிய பலவீனமான அணுகுமுறை கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பகுதி, இந்த பலவீனமான அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான காரணமாக மாறன் சகோதரர்களின் போக்கினை வர்ணிக்கிறது. ஆனால் எழுதப்பட்ட தொனி ஒரு விதத்தில் இந்த அணுகுமுறையையே நியாயப்படுத்த முயல்வது போல் உள்ளது. மிகவும் குறிப்பாக, “தினகரன் தாக்குதலில் பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது விவாதத்திற்குரியது” என்று கட்டுரையாசிரியர் கூறுவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. இதே கருத்து சோ ராமசாமி அவர்களாலும் வெளிப்படுத்தப்பட்டது.

“உன்னுடைய கருத்து எனக்கு ஏற்புடையதல்ல எனினும் அதை நீ சுதந்திரமாக சொல்ல என் உயிரையும் கொடுப்பேன்” என்ற கருத்துச் சுதந்திர தத்துவத்தின் அடிப்படையிலே அமைந்ததுதான் பத்திரிகை சுதந்திரம். அதற்கு நேரெதிரான “உன்னுடைய கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அதை நீ சொன்னால் உன் உயிரையும் எடுப்பேன்” என்ற மிரட்டல்தான் மதுரை சம்பவம். பத்திரிகைச் சுதந்திரத்தை இச் சம்பவம் பாதித்துள்ளதா என்பது எந்த விதத்தில் விவாதத்திற்குரியது என்று புரியவில்லை. கண்ணனும் இதை விளக்க முற்படவில்லை. மாறாக அவர் கூறுவது: “சன் குழுமத்தினர் ஊடகச் சுதந்திரத்தையோ கருத்துச் சுதந்திரத்தையோ எந்த விதத்திலும் ஆதரித்தவர்கள் அல்ல.” இந்த குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் வழங்கப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க, கண்ணனின் குற்றச்சாட்டு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் கருத்துச் சுதந்திரம் மட்டுமே பேணிக் காக்கப்பட வேண்டுமா? மனித உரிமைகளுக்காக போராடுபவர்களின் மனித உரிமைகள் மட்டுமே மதிக்கப்பட வேண்டுமா?

கருத்துச் சுதந்திரமும், மனித உரிமைகளும் தமிழகத்தில் தொடர்ந்து மீறப்பட்டு வருவதற்கு மூல காரணம் கண்ணனுடைய அணுகுமுறை போன்றே நாம் பலரின் அணுகுமுறையும் இருப்பதே. தினகரன் சம்பவத்தில் மட்டுமல்ல, குஷ்பு சம்பவத்தில், சங்கராச்சாரியர் கைது விவகாரத்தில், நக்கீரன் கோபால் கைது விஷயத்தில், இப்படி பல உதாரணங்களை அடுக்கலாம் – இவை அனைத்திலுமே இதில் பாதிக்கப்பட்டவர்களையும் குற்றம் சாட்ட சமூகத்தில் ஒரு பெரும் சாரார் எப்போதும் முனைந்து நிற்கிறார்கள். நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட போது “இவருக்கு வேண்டும்” என்று அவருக்கெதிரான உரிமை நசுக்கல்களை ஆதரித்தவர்கள், சங்கராச்சாரியார் மீதான நடவடிக்கைகளில் அதே மீறல்களை கண்டு திகைத்ததை அறிவேன். சங்கராச்சாரியாரின் மீதான நடவடிக்கைகளை நக்கீரன் எப்படி களிப்புடன் நோக்கியது என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி கோட்பாட்டின் (principle) அடிப்படையில் அல்லாமல், தனி நபர் அல்லது குழும/குழுக்கள் விருப்பு-வெறுப்பு அடிப்படையில் மீறல்களைக் குறித்த நமது நிலையற்ற அணுகுமுறைகளே நமது அதிகார மையங்களுக்கு நாம் மீறல்களை நடத்த அளித்துள்ள உரிமங்களாகும். இந்த மூல காரணத்தை கண்ணன் போன்ற சிந்தனையாளர்கள் கூட புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

ooo

Principle என்பதன் சரியான தமிழ்ப்பதம் என்ன என்று தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் இங்கு பதிவு செய்யுங்கள். என்னிடம் இரண்டு தமிழ் அகராதிகள் உள்ளன. LIFCOவின் அகராதி கொள்கை அல்லது நியதி என்கிறது. அது சரியாக தோன்றவில்லை. க்ரியாவின் அகராதி தமிழ்-தமிழ்-ஆங்கிலம். எனவே, இந்த விஷயத்தில் பயனில்லை. http://www.lanka.info/ –வின் ஆன்லைன் அகராதி அடிப்படைக் கோட்பாடு என்கிறது. அது ஓரளவு சரியாகப்பட்டது, ஆனால் அதை விடப் பொருத்தமாக ஒரு சொல் இருக்கும் எனத் தோன்றுகிறது.

ooo

அடுத்த ஞாயிறு சந்திப்போம்.