Monday, October 29, 2007

தலித்திய விமர்சனம்

கடந்த வார இறுதியில் வாசித்தது ராஜ் கௌதமன் எழுதிய “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” (காலச்சுவடு பதிப்பகம், 2005 வெளிவந்த இரண்டாவது பதிப்பு, ரூ 90).

இப் புத்தகத்தை வாங்கியதற்கு பல காரணங்கள் உண்டு. ராஜ் கௌதமன் அவர்களை “சிலுவைராஜ் சரித்திரம்” என்ற அவரது நூலின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் தெரிந்து கொண்டேன். சுயசரிதையினடிப்படையில் பின்னப்பட்ட புதினமான அந்நூல் என்னுடைய மனதைக் கவரவே, தொடர்ந்து அவரது “காலச்சுமை” என்ற நூலையும் வாங்கி வாசித்தேன். இது “சிலுவைராஜ் சரித்திரம்” நூலின் தொடர்ச்சியே. இந்த இரண்டு நூல்களும் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளில் சிலவற்றை நான் புரிந்து கொள்ள உதவி செய்யவே, ராஜ் கௌதமன் எழுத்துக்களை மேலும் வாசிக்கும் எண்ணம் எழுந்தது. கூடவே, நமது சமூகத்தில் சாதியமைப்பின் எதிர்காலம் பற்றி எனது மனதில் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும் கேள்விகளில் சிலவற்றிற்காவது “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” நூலில் விடைகள் இருக்கலாம் என்று தோன்றியது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

“தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” 15 கட்டுரைகள் அடங்கிய 185 பக்கப் புத்தகம். 1991லிருந்து 2002 முடிய எழுதப்பட்ட கட்டுரைகள் கால வரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று ரணஜித் குகா என்பவர் எழுதிய ஆங்கில நூலின் சுருக்கமான தமிழ் தொகுப்பு. ஒன்பது நூல் விமர்சனங்கள். இவை தவிர இரண்டு கட்டுரைகள் தீவிர இலக்கியம் சார்ந்தவை. இவற்றில் “பின்னை நவீனத்துவமும் தலித் சிந்தனைகளும்” என்பதையும், “குடும்பம், பெண்ணியம்” ஆகிய இரண்டு கட்டுரைகளையும் என்னால் வாசிக்க முடியவில்லை. மிகவும் செறிவு வாய்ந்த என் கபாலத்திற்குள் மிகவும் செறிவு வாய்ந்த அக் கட்டுரைகள் இறங்க மறுத்து விட்டன.

“தலித்தியப் பார்வையில் பாரதி,” “காலம் பார்த்து வந்த ‘தோட்டியின் மகன்’,” “புனித ஆறுமுகம்” மற்றும் “புதுமைப்பித்தன்: விமர்சனமும் சாதியமும்” ஆகிய நான்கும் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரைகள். ராஜ் கௌதமனின் எள்ளல் தெறிக்கும் உற்சாக நடை எல்லாக் கட்டுரைகளிலும் இருக்கிறதென்றாலும், அது உச்சாணியை எட்டுவது “ஒரு டவுசர் கிழிந்த கதை” என்ற கடைசிக் கட்டுரையில்தான். அக்கட்டுரையின் பொருளுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கதை நடக்கும் ஊர்தான் எனது முன்னோர்களின் கிராமம். அந்த டவுசரின் வலது காலை அணிந்திருந்தவர்கள்தான் எனது முன்னோர்கள். இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.

நூலின் முதல் கட்டுரையான “தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்” என்ற கட்டுரை தேசிய விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் வழிவந்த இலக்கிய முயற்சிகள் எல்லாம் தலித் சமுதாயத்தை ஒடுக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டன என்று சொல்லிவிட்டு, தலித் இலக்கியம் என்றால் என்ன என்று வரையிட முயற்சி செய்கிறது:

எல்லா வகையிலுமுள்ள ஒடுக்கு முறைகளை எதிர்த்து, இனி தனக்குக் கீழ் ஒடுக்குவதற்கு எதுவும் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்குடைய இலக்கியத்தைத்தான் தலித் இலக்கியம் என்று கூறலாம்” என்று சொல்லி விட்டு “இனியொரு சாதியோ, மதமோ, குடும்பமோ, சுரண்டலோ உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம். இத்தகைய அரசியலை மேற்கொண்ட, கருத்தியல் ரீதியில் தலித்துக்களான அனைவராலும் இத்தகு தலித் இலக்கியத்தைப் படைக்க முடியும்” என்கிறது இக் கட்டுரை.

இவ்வளவு விரிவாக சொன்ன பிறகும் தலித்திய இலக்கியம் என்றால் என்ன என்பதை என்னால் சரிவர புரிந்து கொள்ள முடியாததற்கு என் கபால ஓட்டின் செறிவு ஒரு காரணமென்றாலும், “எவர்தான் ராஜ் கௌதமன் அவர்கள் தலித் இலக்கியம் புனைவோருக்கு விதிக்கும் மிகக் கடினமான தகுதியினை எட்ட முடியும்?” என்ற மலைப்பும் ஒரு காரணம். இன்னொரு இடத்தில் (தலித்தியப் பார்வையில் பாரதி, பக்கம் 149) “சாதி, அரசியல், நாடு, இனம், மொழி, மதம், பால், பொருளாதாரம் முதலிய பல்வேறு நிலைகளில் ஏதாவது ஒரு சிலவற்றால் மனிதர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்களே” என்கிறார். இதனுடைய இன்னொரு பக்கம், எவ்வளவுதான் ஒடுக்கப்பட்டாலும், மனிதன் தன் தன்மையிலேயே ஒடுக்குபவனாகவும் இருக்கிறான். இது மனிதனுக்கு மட்டுமல்ல மனுசிக்கும் பொருந்துவதுதான். எனவேதான் ராஜ் கௌதமன் அவர்களின் தகுதிக்கு உட்பட்டு யார் இலக்கியம் படைக்க முடியும் என்று தோன்றுகிறது. மேலும் சாதியும், மதமும், குடும்பமும் உருவாகாதபடி செயல்படுவதையே தலித் இலக்கியம் எனலாம் என்பதும் விவாதத்திற்குரியதாகிறது. இம் மூன்றில் மதமும், குடும்பமும் உருவாகதபடி செய்வதன் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே. ஒரு வேளை சுரண்டலுக்குட்படுத்தும் சாதியும், மதமும், குடும்பமும் உருவாகாதபடியான செயல்பாட்டையே ஆசிரியர் குறிப்பிடுகிறாரோ என்னவோ. மூன்றாவது வரையறையான தலித்துகள்தான் தலித் இலக்கியத்தைப் படைக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பது மட்டுமே எனக்கு தெளிவாக புரிகிறது.

தலித் இலக்கியம் பற்றி ஒரு தெளிவான பார்வை ராஜ் கவுதமன் அவர்களது கட்டுரையில் எனக்கு கிட்டவில்லை என்பதற்கு இக்கட்டுரை எழுதப்பட்ட காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். இது எழுதப்பட்ட 1991ல் தலித் இலக்கியம் என்று ஒன்று உருவாக்கப்படவில்லை என்றே ராஜ் கவுதமன் கருதுகிறார். இல்லாத ஒன்றைப் பற்றி தெளிவான பார்வையை எப்படி உருவாக்க முடியும்? ஆனால் பிற்காலத்தில் தலித்திய இலக்கியம் உருவெடுக்க ஆரம்பித்தபின் தனது கருத்துக்களை தெளிவு படுத்தியிருக்கலாம். தனது குறுகிய முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்:

இங்கு பிரசுரமாகும் கட்டுரைகளில் நான் கை வைக்கவில்லை. அந்தந்தக் காலத்தில் வெளிவந்த தடயங்கள் இருக்கட்டும் என்பது என் விருப்பம். இந்தப் பத்தாண்டு காலத்தில் சில கருத்துக்களை நான் மாற்றிக் கொண்டிருக்கலாம்; சில வளர்க்கப்பட்டிருக்கலாம்; சில கைவிடப்பட்டிருக்கலாம்

இருக்கலாம், ஆனால் புத்தகத்தின் தலைப்பை வலியுறுத்தும் முதல் கட்டுரையிலாவது, குறைந்த பட்சம் ஒரு பின்குறிப்பு மூலமாகவாவது தனது கருத்துக்களை ஆசிரியர் தெளிவு படுத்தியிருந்திருக்கலாம். அல்லது பின்னர் எழுதப்பட்ட “புனித ஆறுமுகம்”, “சனதருமபோதினி: சின்னக் கதையாடல்கள்” போன்ற விமரிசனங்களிலாவது தலித் இலக்கியம் என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கியிருக்கலாம்.

“புனித ஆறுமுகம்” என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். இமையம் என்பவர் எழுதி, க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஆறுமுகம்’ என்ற புதினத்தின் விமர்சனமே இக்கட்டுரை. தலித் ஒருவன் நாயகனாக இருப்பதால் ஒரு நூல் தலித் இலக்கியமாகி விட முடியாது என்பது இக்கட்டுரையில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் இருக்கிறதாக கருதுகிறேன். இக்கட்டுரையை நான் தமிழில் படித்த நூல் விமர்சனங்களில் சிறப்பானதாகக் கருதுகிறேன். தவறுகளைக் காணும் போது, நாவலாசிரியர் தனது படைப்புச் சுதந்திரத்தை முன்னிட்டு தப்பிப்போக இடமுள்ள இடங்களில் கூட அவரை நழுவ விடாமல் நறுக்கென்று தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்யும் ராஜ் கவுதமன், நாவலின் சிறப்புக்களையும் வெகு உற்சாகமாக பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. இதைப் போன்றே, அல்லது இதை விடச் சிறப்பாகவே புதுமைப்பித்தன் அவர்களது மற்றும் புதுமைப்பித்தன் பற்றிய படைப்புக்களையும் அணுகியிருக்கிறார். புதுமைப்பித்தன் மீது ராஜ் கவுதமனுக்கு ஒரு பெரும் கிறக்கமே இருக்கிறது இக்கட்டுரைகளில் புலனாகிறது. இருப்பினும், அவர் மீது கறாரான விமர்சனங்களை வைக்க தயங்குவதில்லை. புதுமைப்பித்தன் ஸ்ரீராமாநுஜலு நாயுடு என்பவரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதினார் சொல்லிவிட்டு, இது புதுமைப்பித்தனுக்கும் பொருந்தும் என்கிறார்.

ஸ்ரீராமாநுஜலுநாயுடு கதை சொல்வதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த்தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திர அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞர் என்பதை நாம் மறந்து விடுகிறோமா? அம்மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்க வேண்டும்

இந்தப் பார்வை ராஜ் கவுதமனுக்கு வாய்த்திருப்பது அவரது விமரிசனங்களிலெல்லாம் வெளிப்படுகிறது. “தலித்தியப் பார்வையில் பாரதி” என்ற கட்டுரையில் அவர் பாரதியை மூன்று நிலைகளில் பார்க்கின்றார். ஒன்று, தான் பிறந்த சாதியின் கொள்கைக்கு மாறான கொள்கையை பின்பற்றியதால் அந்த சாதியால் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பாரதி. இரண்டாவது, சொந்தச் சாதியின் ஒடுக்குமுறைகளைக் கடுமையாக விமர்சித்த பாரதி. மூன்றாவது, தலித் விடுதலை பற்றிய ஆர்வம் கொண்ட பாரதி. இரண்டாவது, மூன்றாவது அணுகுமுறைகளில் பாரதியின் கருத்துக்களில் இருந்த பிழைகளை சுட்டிக் காட்டத் தயங்கவில்லை. அவரது காலத்தின் பிடிக்குள்ளிருந்து பாரதியால் முற்றிலுமாக மீள முடியவில்லை என்றும், வருணம், சாதிபேதம் பற்றி இந்து அறிவுலகம் கூறி வந்ததை பாரதியும் பிரதிபலித்தார் என்று கூறும் ராஜ் கௌதமன், சமத்துவத்தை நிலவ வேண்டும் என்பதில் பாரதியிடம் வெளிப்படுத்திய விதத்தை “உள்ளார்ந்த ஆர்வத்தை, நேர்மையை, ஒரு குழந்தையின் கபடமின்மையை, ஒரு கவிஞனின் கனவை, ஒரு பித்தனின் கற்பனையை யாராலும் சந்தேகிக்க முடியாது” என்று விவரிப்பது ராஜ் கௌதமனின் உள்ளத்தைத் திறந்து கொட்டும் வார்த்தைகளாகத் தோன்றுகிறது.

தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும், நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்.” என்று முதல் கட்டுரையில் வரைந்த தலித்திலக்கியத் தகுதியனடிப்படையில் ராஜ் கௌதமனின் “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” தலித்திலயக்கியம் ஆகாது. இப்புத்தகம் சுகமான வாசிப்பனுபவத்தைத் தருவது மட்டுமல்ல, தனது நிதானமான, அறிவுபூர்வமான பார்வையிலும், அழகான, தெளிவான நடையிலும், ஆங்காங்கு கொப்பளிக்கின்ற குறும்பிலும், உற்சாகத்திலும், உணர்விலும் வாசிப்பவர்களிடம் செறிவான கருத்துத் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

தமிழ் பேராசிரியர் என்பதாலோ என்னவோ, சில நூல் விமர்சனங்களில் நூலில் கண்ட சிறு பிழைகளை கூட குறிப்பிட ராஜ் கௌதமன் மறப்பதில்லை. ஒரு நூலின் ஒற்றுப் பிழைகள் கூட கடும் கண்டனத்துக்குள்ளாகின்றன. அது போன்றே, காலச்சுவடு நிறுவனத்தால் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் இந் நூலில் முதல் கட்டுரையில் பின்குறிப்புகள் ஒன்று (குறிப்பு எண் 5) விட்டுப் போனது, குறிப்பு எண் 13 வரை குழப்பங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
Posted by Picasa

Monday, October 22, 2007

தமிழரின் பணிவும் குழைவும்

சில புத்தகங்கள் வாங்க கடந்த வாரம் நாகர்கோவிலிலுள்ள காலச்சுவடு பதிப்பக அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். பதிப்பக நிறுவனரும், தமிழ் எழுத்தாளருமான காலம் சென்ற சுந்தர ராமசாமி அவர்களது இல்லத்தின் முன்பகுதி பதிப்பக அலுவலகமாக இயங்குகிறது.

ஓடு வேய்ந்த முகப்பு பகுதியில் நின்றிருந்த ஒருவர் நட்புடன் புன்னகைத்து என் தேவையைக் கேட்டார். கட்டிடத்தின் வலது புறமிருந்த முன்னறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, பதிப்பகத்தின் விலைப்பட்டியலைக் கொடுத்தார். எனக்கு தேவையான புத்தகங்களை தெரிவு செய்து விட்டு, அவை எடுத்துக் கொடுக்கப்படும் வரையில் காத்திருந்த போது, அந்த அலுவலகத்தின் அலமாரி ஒன்றின் கீழ்ப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு தாள் என் கவனத்தை ஈர்த்தது. அது அந்த அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பட்டியல். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த தாளில் பெயர்கள் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தப்பட்டிருந்தன:

Sudarshan Stores
Sudarshan Books
Sir
Madam



முதலாளியின் பெயரைத் தட்டச்சு செய்தால் கூட அவரது மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடுமென அஞ்சி “Sir” என்று விளித்த, அந்த முகமறியா ஊழியர் தமிழர்கள் காட்டும் மிதமிஞ்சிய பணிவின் அடையாளமாக எனக்குத் தோன்றினார்.

இறைவனையும் தோழனாகப் பாவித்து, நீ, அவன் என்று அழைத்த தமிழ் சமுதாயம் தனக்கு மேலிருக்கும் மனிதர்களிடம் மிதமிஞ்சிய பணிவினைக் காட்டத் தொடங்கியது எப்போது என்று தெரியவில்லை.

நம் மண்ணில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த சாதியமைப்பும், நிலவுடமையாளர் ஆதிக்கமும், பின்னர் காலனியாதிக்கமும், அதன் விளைவாகப் பிறந்த அதிகார வர்க்கமும் இந்த மனநிலைக்கு காரணமாக இருப்பதில் சந்தேகமில்லை. உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களின் குடும்பத்திலுள்ள சிறுவர்கள் கூட, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதியவர்களின் பெயர் சொல்லி, ஒருமையில் அழைப்பதை கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன். எனது நண்பரொருவர் காவல் துறையில் உயர்ந்த நிலை பதவி ஒன்றில் இருக்கிறார். அவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவராதலால் அனைவரிடமும் பணிவாக, இனிமையாக பழகுபவர். ஒரு முறை அவர் அலுவலகத்தில் இருக்கும் போது வயது முதிர்ந்த காவலர் ஒருவரை “நீ, போ” என்று ஒருமையில் அழைப்பதை வியந்து பார்த்த போது “இங்கயெல்லாம் இதுதான் வழக்கம். இப்படி நடத்தலேனா நம்ம தலைக்கு மேல ஏறி உக்காந்துருவாங்க” என்றார். நமது தமிழ்ச் சமுதாயத்தின் பணிவும் மரியாதையும் பெரும்பாலும் மனித நேயத்தில் விளைவதில்லை; ஒரு வித அச்சத்திலும், அடிமையுணர்விலுமே விளைகிறது. முகத்திற்கு முன்னால் பணிவும் குழைவும் காட்டும் பலர், முகம் மறைந்ததும் சம்பந்தப்பட்ட நபரை சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சிப்பதை நாம் பல தடவை பார்த்திருக்கலாம்.

ரோபோர்ட்டோ பெனினியின் “Life is beautiful” படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் பெனினி அவரது மாமா நடத்தும் விடுதி ஒன்றில் உணவு பரிமாறும் பணியில் சேர செல்வார். அவரது மாமா அவரிடம் பல கேள்விகள் கேட்பார். அதில் ஒன்று எப்படி விடுதிக்கு உணவருந்த வருகிறவர்களிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டுமென்பது, குறிப்பாக தலையை எப்படி தாழ்த்த வேண்டுமென்பது. பெனினி முதலில் லேசாக தலையைத் தாழ்த்துவார். அதற்கு அவர் மாமா எதுவும் சொல்லாமல் இருக்கவே, தாழ்த்தி, தாழ்த்தி இடுப்பை வளைத்து வணங்குமளவுக்கு போய் விடுவார். அதற்கு அவர் மாமா சொல்வது:

“முட்டாள், சூரியகாந்தி மலர்களைப் பார்த்திருக்கிறாயா? அவை சூரியனுக்கு முன்னால் லேசாகத் தலை வணங்கி நிற்கின்றனவே. அப்படி செய்தால் போதுமானது. ஒரேடியாக சூரியகாந்தி தலையை சாய்த்து விட்டதென்றால் அது செத்துப் போய் விட்டதென்று அர்த்தம். நீ பரிமாறுபவன். பணிவிடைக்காரன் அல்ல (You serve. You are not a servant). பரிமாறுவது என்பது உன்னதமான ஒரு கலை. கடவுள்தான் மனிதனின் முதல் பரிசாரகன். கடவுள் மனிதனுக்கு பரிமாறுகிறார். ஆனால் பணிவிடைக்காரன் ஆவதில்லை”

காலச்சுவடு பதிப்பகத்தில் நான் கடந்த வாரம் வாங்கி வந்த புத்தகங்களில் ஒன்று “ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்” என்பது. இது சுமார் 70 வயதான சுந்தர ராமசாமி அவர்கள், சுமார் 30 வயதுள்ள தடா கைதியான ஏழுமலை என்பவருக்கு எழுதிய பல்வேறு கடிதங்களின் தொகுப்பாகும். இதில் 31.03.03 தேதியிட்ட கடிதத்தில் சுந்தர ராமசாமி பின்வருமாறு எழுதுகிறார்:

“நீங்கள் என்னை ஐயா என்று அழைத்தீர்களானால் அது எனக்குக் கூச்சத்தையே தரும். என் பெயர் சொல்லியே அழைக்கலாம். நட்பும் மதிப்பும் நம் மனதிற்குள் இருந்தால் பிற விஷயங்கள் எல்லாம் சம்பிரதாயமே.”

Monday, October 15, 2007

எலியும் சுண்டெலியும், மணிரத்னத்தின் குரு, அகத்தியனின் அம்னீசியா

இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக் கிழமை கூட தபால் போட முடியாமல் போய் விட்டது. தீவிரமான பணியின் காரணமாக அல்ல; தீவிரமான விடுமுறையின் காரணமாக. பிள்ளைகளுக்கு காலாண்டு விடுமுறை. அதே நாட்களில் எனக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருக்க வேண்டிய கட்டாயம். எனவே மற்ற விடுமுறைகளில் ஏற்படுவது போன்ற “எங்கே போவது” என்பதை தீர்மானிக்கும் குழப்பங்கள் இல்லாத விடுமுறை.

சென்னையில் பிள்ளைகளுக்கென்று பல திருத்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சத்யம் திரையரங்க வளாகம். அங்கே, மேற்கத்திய திரையரங்களுக்கு இணையான ஸ்டுடியோ 5 மற்றும் 6 டிகிரிசில் திரைப்படம் பார்ப்பது எனக்கும் உவப்பான ஒன்றே. ஆனால் இம் முறை குழந்தைகளுக்கான திரைப்படமான ராட்டாட்டூயி (Ratatouille) நாங்கள் பார்க்க விரும்பிய தினத்தில் சத்யம் எலைட்டில் போடப்படுவதாக சத்யத்தின் இணைய தளமான www.thecinema.in சொன்னது. முதலில் சத்யம் எலைட் என்பது சத்யம் வளாகத்திற்குள் இன்னொரு அரங்கமோ என்று நினைத்தேன். போன பிறகுதான் தெரிந்தது சத்யம் அரங்கத்தின் பால்கனிதான் சத்யம் எலைட் என வழங்கப்படுகிறது என.

சில ஆண்டுகளுக்கு முன் முதலாவது ஹாரி பாட்டர் பார்க்க சத்யம் அரங்கம் சென்றோம். வசதியில்லாத இருக்கைகள், தெளிவில்லாத ஒலியனுபவம் என்று அவ்வளவு திருப்திகரமாக அந்த அனுபவம் அமையவில்லை. ஆனால், இப்போது அரங்கத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சத்யம் எலைட் செல்லும் வழியில் ஜப்பானிய உள்ளலங்கார அமைப்புகளைச் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. சத்யம் இணைய தளத்திலேயே முன்பதிவு செய்து கொள்ளலாம் (செக்யூரிட்டி செர்ட்டிபிகேட் எக்ஸ்பைர்ட் என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்டு செய்தேன்). இருக்கைகளை தெரிவு செய்யலாம் (ரூ 10 கட்டணமாகச் செலுத்தி இதையும் செய்தேன்). நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொண்டு இருக்கைக்கு வரவழைக்கலாம் (சோம்பேறித்தனத்திற்கும் ஒரு அளவிருக்கறபடியால் இதை செய்யவில்லை). நுழைவுச் சீட்டுகளை அச்சடித்துக் கொள்ளலாம் (இதைச் செய்யாமலிருக்க முடியாது. அரங்க வாசலில் நமது அச்சடித்த காகிதத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் நுழைவுச் சீட்டை கொடுத்து விடுகிறார்கள்).

ராட்டாட்டூயி அலுப்பு தட்டுகிற படம். “ஏண்டா வந்தோம்” என்ற அளவிற்கல்ல, “கொடுத்த 500 ரூபாய்க்கு வேறு ஏதாவது படம் பார்த்திருக்கலாமே” என்ற எண்ணத்தையும், ஓரிரண்டு கொட்டாவிகளையும் அவ்வப்போது எழுப்பும் அளவிற்கு அலுப்பு தட்டுகிறது. காரணங்கள் பல. ஒன்று, கடந்து 3-4 ஆண்டுகளாக வெளிவந்து, வெற்றி பெற்ற அனிமேஷன் படங்களின் சூத்திரத்தை அப்படியே பின்பற்றுகிறது இந்தக் கதை. கதை சொல்ல வரும் நன்னெறிகளும் டிட்டோ: விடா முயற்சியின் மேன்மை; நட்பின் இலக்கணம்; இத்யாதி, இத்யாதி. இந்த பரிட்சயம் அலுப்பைத் தூண்டுகிறது. இன்னொரு காரணம்: இந்தப் படத்தில் மனிதர்களாக வருகிறவர்கள் அத்தனை பேரும் படு சீரியசான பேர்வழிகள். எலிகளைத் துரத்த துப்பாக்கியைத் தூக்கும் கிழவியிலிருந்து, சிடுசிடு முகத்து சமையல் கலை விமர்சகன் வரை. சிரிக்க மறுக்கிறவர்களால் சிரிக்க வைக்கவும் முடியாது. எலி நாயகனும், அவரது தம்பியும், அப்பாவும் சிரிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: எவ்வளவுதான் நெருங்கிய சொந்தக்காரர்கள் ஆனாலும் சுண்டெலிக்கு இருக்கிற க்யூட்னெஸ் (எ.கா: மிக்கி மவுஸ், டாம் (&ஜெரி), ஸ்டூவர்ட் லிட்டில்) எலிக்கு கிடையாது. கூடவே, இப்படி சொல்வதற்காக உலகம் என்னை பிற்போக்குவாதியாக நிராகரித்தாலும் பரவாயில்லை, ஆனால் சமையல் கலையில் ஒரு எலி வல்லுநர் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒரே படத்திற்கு 500 ரூபாயை விரயம் செய்து விட்ட படியால் இனிமேல் படங்கள் ஒன்று டிவியில், அல்லது டிவிடியில் என்று தீர்மானித்தோம். மணிரத்னத்தின் “குரு”வை ஒரு முறை திருவனந்தபுரத்திலிருந்து மும்பை செல்லும் போது விமானத்தில் அரைகுறையாகப் பார்த்திருந்தேன். இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் உதவியோடு கதை புரிந்தது. பிடித்திருந்தது. எனவே, படத்தை மீண்டும், முழுதாக, தமிழில் அனுபவிக்க எண்ணி, மோசர் பேயரின் விசிடி வட்டில் வந்ததை ஸ்பென்சர் ஃபுட்சில் மளிகை சாமான்கள் வாங்கும் போது 28 ரூபாய்க்கு வாங்கினேன்.

இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் ஓட படத்தை ரசித்த அளவுக்கு தமிழில் ரசிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் படத்தில் உபயோகப்படுத்தப்படும் தமிழ். குஜராத்தின் உடைகளும், உடல் மொழியும் நிறைந்த மனிதர்கள் திருநெல்வேலி் தமிழில் பேசுவது அபத்தமாக இருக்கிறது. கதை ஆரம்பமாகும் பகுதி இலஞ்சி, திருநெல்வேலி ஜில்லா என்று திரையில் போடுவது இந்த அபத்தத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. பூவரசம் பூ போன்ற ஒரு பெரிய மலரை எடுத்து காதில் செருகுகிற உணர்வுதான் ஏற்படுகிறது.

2007ன் தொடக்கத்தில் வந்த “குரு”விற்கு இணையத்தில், குறிப்பாக பதிவு தளங்களில் பல விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. என் கவனத்தை ஈர்த்தது பினாத்தல்கள் என்ற பதிவு தளம் (http://penathal.blogspot.com), குறிப்பாக: http://penathal.blogspot.com/2007/01/16-jan-2007.htmlv. மணிரத்னம் திருந்தவே மாட்டாரா என்று அலுத்துக் கொள்ளும் பதிவர், “குரு” எப்படி மணிரத்னத்தின் சூத்திரத்துக்குள் அடங்கி விடுகிறது என்று விபரமாக சொல்கிறார். மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யா ரை அறிமுகம் – இரண்டு பாடல்களும் எனக்கும் ம.ர.வின் பழைய படங்களை ஞாபகப்படுத்தியது உண்மையே. அது போலவே, “நல்லவனா, கெட்டவனா?” கேள்வியும். ஆனால், மணிரத்னத்தின் படைப்புகளை ஒரு சூத்திரத்திற்குள் அடக்க முயலும் பார்வையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி சூத்திரத்திற்குள் முடியும் என்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்” மற்றும் “ஆய்த எழுத்து” ஆகியவற்றை எங்கே நிறுத்துவது. வரலாற்றை, குறிப்பாக சமீப கால வரலாற்றை சொல்ல முடிவது சுலபமல்ல. அதுவும் “சிவாஜி” போன்ற படங்களை ஓட வைக்கும் தமிழ் ரசிக கூட்டத்தில் இது போன்ற படங்களை வணிக ரீதியாக வெற்றி பெற வைப்பது சுலபமே அல்ல (வேண்டுமானால் ஞானராஜசேகரிடம் கேட்டுப் பாருங்கள்). இந்த ரீதியிலும், படம் அலுக்க வைக்காமல் ஓடுகிறது என்ற வகையிலும் “குரு” வெற்றிதான்.

திருபாய் அம்பானி வாழ்க்கையில் நடந்த அதைக் காண்பிக்கவில்லை, இதைக் காண்பிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமாகாது. எல்லாவற்றையும் காண்பிக்க வேண்டுமானால் படம் 10-12 மணிநேரமாவது ஓட வேண்டும். அப்போதும் இதே குறையைச் சொல்ல ஆட்கள் இருப்பார்கள். திருபாய் அம்பானியின் வாழ்க்கையின் மூலக்கூறு ஒன்றே ஒன்றுதான். அது, ஏற்கனவே உள்ளே சென்று வெற்றி பெற்றவர்கள், மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று பூட்டி வைத்திருந்த இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பிற்குள் அம்பானி முன்னர் எவரும் செய்திராத அளவு தந்திரத்தோடும், உக்கிரத்தோடும் தடைகளை உடைத்தெறிந்து வெற்றியடைந்தார். இதை இந்தப் படம் சாதாரண பார்வையாளனுக்கு கூட வெற்றிகரமாகக் காண்பிக்கிறது என்றே கருதுகிறேன்.

மூன்றாவதாக பார்த்தது கலைஞர் டிவியில் “செல்வம்” என்ற படம். பார்க்க வேண்டும் என்று பார்த்ததல்ல. போட்ட நேரத்தில் தொலைக்காட்சி முன்னர் இருந்த தற்சமயம்தான் காரணம். தலைப்பெல்லாம் முடிந்த பிறகுதான் பார்க்க ஆரம்பித்தோம். ஆரம்பக் காட்சிகள் வித்தியாசமாக இருக்க, “இது என்ன படம்?” என்ற ஆர்வம்தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. தமிழ் திரைப்படங்களில் அநியாயத்திற்கு குதறப்பட்ட மனநல நிலைமைகளில் ஒன்றான அம்னீசியா இந்தப் படத்தில் நடு நாயகம் செலுத்துகிறது.

அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட செல்வம் என்ற இளைஞன் (நடிகர் நந்தா) உண்மையில் யார் என்ற கேள்விக்கான விடையை நோக்கிய பயணம்தான் இந்தப் படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது. நடிகர் நந்தா சிறப்பாக நடித்திருக்கிறார். இயலாமை தரும் கோபம் மற்றும் சோகம், இவற்றோடு இளமை தரும் வேகம் மூன்றையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மருத்துவர்களில் ஒருவரான நடிகை உமாவின் நடிப்பும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக அவரது காதலைச் சொல்லும் காட்சி. தொடக்க காட்சிகளில் வரும் மருத்துவமனைக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன (சிகிட்சைக்கு பலமுறை பணம் கொடுக்க முன்வரும் நந்தாவிடம் “அது வேண்டாம்” என்று மறுக்கும் மருத்துவர் தவிர).

இப்படி விறுவிறுப்பாக செல்லும் படம் செல்வம் யாரென்று தெரிந்ததும் தூய்மையான அபத்தங்களின் திசையில் பயணிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை இயக்குநர் அகத்தியனுக்கும் முன்பாதிப் படத்தைப் பற்றி அம்னீசியா ஏற்பட்டிருக்கலாமோ?

Tuesday, October 2, 2007

காந்தியும் கக்கூசும்

நானும் சுந்தர ராமசாமியும் நடந்து நாகர்கோயிலில் இருளப்பபுரம் போய்ச் சேர்ந்தோம். நெருக்கமான வீடுகள். திறந்த சாக்கடை வாய்கள். குப்பைக் குவியல்கள். எங்கும் மலம் மலம் மலம் … சுந்தர ராமசாமி “பாத்தேளா? சுதந்திரம் கெடைச்சு அம்பது வருஷமாச்சு. இன்னும் கக்கூஸ் போகத் தெரியலை நமக்கு. இந்த ஒரு விஷயத்தால ஹெல்த் பிரச்சினை கெளம்பி நம்ம நாட்டுக்கு வருஷத்தில எவ்வளவு கோடி நஷ்டம்னு கணக்கு போட்டிருக்கோமா? இதைப் பத்திக் கவலைப்பட்ட கடைசி அரசியல்வாதி காந்தி. தேச விடுதலைக்குச் சமானமா கக்கூஸ் போறதைப் பத்திப் பேசிட்டிருந்தார். அவர் ஒரு கிராமத்துக்குப் போறச்ச பின்னால ஒருத்தர் அவரோட டாய்லெட்ட கொண்டு போறார். அதை அவரோட பதாகை மாதிரின்னு டாமினிக் லாப்பியர் அவன் புஸ்தகத்தில சொல்றான். கம்பு வச்சிண்டிருக்க காந்தியை சிலையா நிக்க வைக்கிறோம். கக்கூஸ் க்ளீன் பண்ற குச்சியோட நிக்கிற காந்தியையன்னா வைக்கணும்….அவருக்கு இந்த மக்களோட பிரச்சினை என்னான்னு தெரியும். அதுக்கு உள்ளுணர்வெல்லாம் ஒண்ணும் காரணமில்ல. அவர் இங்கெல்லாம் வந்தார். இந்த ஜனங்க கிட்ட பேசினார். அவ்ளவுதான். இன்னைக்கும் சுதந்திரம் கிடைச்சு அரை நூற்றாண்டுக்கு அப்புறமும் நாம இங்க வர ஆரம்பிக்கலை. நம்ம அரசாங்கம் இந்த மக்களுக்கு கோடிக்கணக்கில பணம் செலவு பண்ணி நலத் திட்டங்களைப் போடறாங்க. ஆனா இவங்க கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேக்கிறதில்ல. வெட்டினரி டாக்டர்னா நம்ம அரசியல்வாதிங்க…இதெல்லாம் ஆடுமாடுங்க….” என்றார். இருளில் ஏதோ ஒரு சாலைக்கு வந்து பஸ் பிடித்து வீடு திரும்பினோம். “இங்க இருந்த அமைப்புகள்லாம் தாறுமாறாப் போச்சு. புதிய அமைப்பை இத்தனை வருஷம் கழிச்சும் சரியா உருவாக்க முடியலை. இந்த அளவுக்குப் பெரிய தேசத்தில கீழ் மட்டத்தை மேல் மட்டம் நேரடியா ஆளணுமானா அந்தத் தொலைவை இணைக்கிற அளவுக்கு அதிபிரமாண்டமான அதிகார வர்க்கம் தேவை. அதை வெள்ளைக்காரன் உருவாக்கினான். நேருவும், அம்பேத்கரும் அதே மையப்படுத்தற போக்கைப் பின்பற்றினதனால அந்த அதிகார அமைப்பு பெரிய பூதம் மாதிரி வளந்து போச்சு. அதுதான் இன்னைக்கு இந்தியாவோட மிகப் பெரிய சாபம். வீட்டு முன்னாடி மரம் நிக்கற மாதிரி அரசாங்கத்துக்குப் பக்கத்தில அதிகார அமைப்பு நிக்கணும். இங்க என்னன்னா மரத்துமேல வீடு இருக்கற மாதிரி இருக்கு…அதை அரசாங்கம் ஒண்ணுமே செய்ய முடியாது, மக்களும் ஒண்ணும் செய்ய முடியாது…உண்மையில் இங்க சுதந்திரம் கிடைச்சது அவங்களுக்கு மட்டும்தான்”

மேற்காணும் பத்தி என் மனதில் நீண்ட நாட்களாகவே நிற்கும் ஒன்று. காந்தி பிறந்த தினமான இன்று இதைப் பதிய விரும்பினேன். இதன் மூலம்: பக்கங்கள் 105-106, ஜெயமோகன் எழுதிய “சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்” புத்தகம். உயிர்மை பதிப்பக தயாரிப்பான இப் புத்தகம் 2005ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலமானபோது வெளியிடப்பட்டது. தமிழில் அஞ்சலியாக எழுதப்பட்டவற்றில் வெகு சிறப்பானது. சுந்தர ராமசாமியின் வாழ்வையும் படைப்புக்களையும் மட்டுமின்றி, அவரது சமகாலத்தில் சமூகத்தைப் பாதித்த நபர்களையும், போக்குகளையும், நிகழ்வுகளையும் பற்றிய அவரது சிந்தனைகளை எடுத்து வைக்கிறது இந்த நூல்.