Sunday, November 28, 2010

சோனி சைபர்ஷாட் வழியாக ஒரு நீள் பார்வை



நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு சபதம். சோனி கேமரா வாங்குவதில்லை என்று. வாங்கிய முதல் டிஜிட்டல் கேமரா சோனி சைபர்ஷாட். 2001ல், 3.x மெகா பிக்சல்கள். 350 அமெரிக்க டாலர்கள் என்ற ஞாபகம். இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அதில் ஏதோ பிரச்சினை. அதைத் தள்ளி வைத்து விட்டு, புதிதாக வந்திருந்த 4.x மெகா பிக்சல் சைபர் ஷாட் வாங்கினேன். அதிலும் சொற்ப காலத்திற்குள்ளேயே ஏதேதோ பிரச்சினைகள் வந்தன. பாட்டரி பழுது. சார்ஜர் உடைந்தது. லென்ஸ் மூடி திறக்காது. திறந்தால் மூடாது. அதை ஒதுக்கி வைத்து விட்டு இனிமேல் சோனி வாங்குவதில்லை என்று முடிவு செய்து பானசோனிக் செமி எஸ்.எல்.ஆர் மாடல்கள் ஒன்றிற்கு மாறினேன். நல்ல கேமராதான். ஆனால் அதைத் தூக்கிச் சுமக்க முடியாமல் பல கோடாக் தருணங்களை நழுவ விட வேண்டியதாயிற்று. எனவே மறுபடியும் கையடக்கமான மாடல் ஒன்றைத் தேட வேண்டியதாயிற்று. பார்னம் என்ற அமெரிக்க சர்க்கஸ் முதலாளி “ஒவ்வொரு நிமிடமும் ஒரு மடையன் பிறந்து கொண்டிருக்கிறான்” என்றார். அந்த வகையில் நான் இந்த பூமியில் பல அவதாரங்கள் எடுத்து விட்டேன். சாம்சங்கில் ஒரு மாடல் வாங்க வேண்டும் என்று போனவன் மறுபடியும் ஒரு சோனி சைபர்ஷாட்டிற்காக விழுந்து விட்டேன். வீழ்த்தியது இந்தக் கேமராவில் இருக்கும் ‘ஸ்வீப் பனோரமா’ என்ற சங்கதி. பனோரமிக் எனப்படும் நீழ் காட்சிகளை படமாக்க பிரத்தியேகமான கேமராக்களும், ஃபில்மும் ஒரு காலத்தில் தேவைப்பட்டது. டிஜிட்டல் கேமராவில் இதை சாஃப்ட்வேர் வழியாகத் தீர்வு பண்ணிக் கொண்டிருந்தார்கள். புகைப்பட எடிட்டிங் செய்யும் சாஃப்ட்வேர் துண்டு துண்டாக எடுக்கப்படும் படங்களை ஒட்டி பனோரமிக் படமாக மாற்றி விடும். இப்போது சோனி அந்த தொழில்நுட்பத்தை கேமராவுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டது.



ஸ்வீப் பனோரமா எடுத்த படங்கள் ப்ளாகில் எப்படிக் காட்சியளிக்கும் என்று தெரியாததால் கீழ்க் கண்ட முயற்சி. சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

1.சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். இங்கேதான் கேமராவை வாங்கினேன்



2.டோக்கியோவின் நரிற்றா விமான நிலையம்



3.குவாய் (ஹவாய் தீவுகளில் ஒன்று) கெக்காஹா மீன் பண்ணை



4.புக்கெற் (வெளிச்சப் பிரச்சினையால் பின்னாலுள்ள கடல் சரியாகத் தெரியவில்லை)



5.கோலலம்பூர் பெத்ரோனாஸ் கோபுரங்கள்



6.ஹோச்சிமின் ஏழாம் மாவட்ட இரவுக் காட்சி



கேமரா வாங்கி சுமார் ஐந்து மாதம் ஆகப் போகிறது. இது வரை திருப்தியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா சந்தர்ப்பங்களிலும் நினைத்தது போல பனோரமிக் காட்சிகளை எடுக்க முடியவில்லை. பனோரமிக் எடுக்கும் போது கேமராவை இடதிருந்து வலமாகவோ, கீழிருந்து மேலாகவா ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் பனோரமிக் எடுக்க முடியவில்லையென்று சொல்லி விடுகிறது. ஒளி குறைவாக இருக்கும் போதும் சரி வருவதில்லை. பனோரமிக் அல்லது சாதா காட்சிகளும் நன்றாகவே எடுக்கிறது. பளிச்சென்று படங்கள் வரவேண்டும் என்ற முனைப்பில் சின்னச் சின்ன டீட்டெய்ல்ஸ் எல்லாவற்றையும் பூசி மெழுகி விடுகிறது. மற்றபடி கேமரா பரவாயில்லை. ரொம்ப கைக்கடக்கமாக இருப்பதால் பொத்தான்கள் எல்லாம் ரொம்ப குட்டி, குட்டியாக இருக்கின்றன. முரட்டுத்தனமான உபயோகத்திற்கு உகந்தது என்று தோன்றவில்லை. பேட்டரி இது வரைக்கும் நீடித்து உழைத்துக் கொண்டிருக்கிறது. சோனி மெமரி கார்டுதான் உபயோகிக்க வேண்டும் என்று அடம் பிடிக்காமல், எஸ்.டி. மெமரி கார்டும் உபயோகிக்கலாம் என்பது ஒரு அனுகூலம். 14.1 மெகா பிக்சல் கேமரா, 250 அமெரிக்க டாலர்கள் விலை.

Thursday, November 25, 2010

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும் ... 1

அத்தியாயம் 1: கண்ணாயிரம் பெருமாள் B. எழுத்தாளனை சந்தித்த கதை

ஊஷ் என்ற பேரிரைச்சலுடன் flush ஆகும் ஆகாய விமானத்தின் toilet போல big bang, அதற்குப் பின் அண்டசராசரம், அதிலே சூரியன், சூரியனைச் சுற்றும் பூமி, பூமிக்கு மேலே புல், புல்லைத் தின்ன பசு, பசுவின் பாலைக் குடிக்க மனிதன், மனிதனை வழிநடத்த போலிச் சாமியார்கள் என்று வரிசைக்கிரமமாக காரியங்கள் நடந்தேறி வந்த காலத்தில் நடந்த ஒரு கதை இது.

ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், ஜாம் பஜார், பர்மா பஜார் என்று நிலப்பகுதியில் கடை விரித்தது போதாதென்று அலைகள் வந்து நுறையைப் பரப்பிச் செல்லும் மணல் வெளி வரைக்கும் காரபஜ்ஜி, கருகிய மக்காச் சோளம், பொரித்து, அனல் காற்றில் வரளும் மீன்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளைப் பரத்தி வைத்த சென்னை மாநகர். காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சி, இடையிலும், இரவிலும் உடல்பசி, மற்றும் மக்களின் மற்ற பல தேவைகளை பூர்த்தி செய்து வந்த அதன் முக்கிய கடற்கரையாகிய மெரீனா பீச். கடற்கரையிலிருந்து மேற்கு திசையில், சற்றுத் தொலைவில் சிற்றி சென்ற்றர் பிளாசா என்றழைக்கப்படும் நவீன அங்காடி மையம். அந்த அங்காடி மையத்தின் உச்சியில் ஒரு உணவு வளாகம். அந்த வளாகத்தில் B. எழுத்தாளன் மசால் தோசை தாங்கிய ஒரு பீங்கான் தட்டும், மணமான ஃபில்ற்றர் காஃபி நிறைந்த ஒரு காகிதக் கோப்பையுமாக அமர்ந்திருந்தான். தோசையை நடுவாக்கில் பிய்த்து தேங்காய்ச் சட்னியில் தோய்த்து ஒரு விள்ளல் போட்ட பிறகுதான் அவனுக்கு நினைவு தட்டியது. எச்சல் கையைத் திசுத்தாளில் துடைத்துக் கொண்டே தன் இடுப்புப் பட்டியில் இணைக்கப்பட்டிருந்த கேமராவை உருவி, அதன் கண்ணைத் திறந்து தோசையை ஃபோகஸ் செய்யத் தொடங்கினான். அவனை ஒரு ஜோடிக் கண்கள் ஃபோகஸ் செய்வதை அப்போது உணர்ந்தானில்லை.

கேமராவை அப்படியும், இப்படியுமாகத் திருப்பி 2-3 படங்கள் எடுத்து, அவை எப்படி வந்திருக்கின்றன என்று பார்வையிட்டான். திருப்தியில்லை. ஒரோரு பதிவர்கள் என்னமாய் புகைப்படங்கள் எடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். சின்னவஞ்சி என்ற பதிவர் தோசையைப் படமெடுத்தால், எப்படி அந்த முறுமுறு தோசை முறிந்து, லேசான எண்ணெய் பிசுபிசுப்புடன் மூன்று கடுகு, ஒரு பச்சைப் பட்டாணி, முந்திரிப் பருப்பின் ஒடிந்த ஒரு துணுக்கு ஆகியன மஞ்சள் நிற உருளைக் கிழங்கு பின்னணியில் துல்லியமாகப் புலப்படுகின்றன. தான் எடுக்கும் படங்களோ, அமெரிக்காவிற்குப் போன ஐ.டி. இளைஞர்கள் சமைக்கும் உருளை மசால் போல் அசமஞ்சமாக தெரிகிறது. ஒரு வேளை தன்னுடைய கேமராவில்தான் எதோ குறைபாடோ, இல்லை தன்னுடைய தோசைதான் சரியில்லையோ என்று பலவாறாக அவன் குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் தன் பக்கத்தில் யாரோ நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான்.

சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரம், பூப்போட்ட சட்டை, சட்டைக்கு சம்பந்தமில்லாத 55 வயது முகமும் உடல் மொழியும், சற்று வழிசல் கலந்த ஒரு சிரிப்பு.

“பத்திரிகையாளரா நீங்க?”

ஒரு காலத்தில் பத்திரிகையாளனாக வேண்டுமென்ற கனவில் திரிந்தவன் B. எழுத்தாளன். விதி வேறு திசைக்கு இழுத்துச் சென்று விட்டது. அப்படியும் பத்திரிகையுலகம் தப்பவில்லையே என்ற விசனம் B. எழுத்தாளனுக்கு உண்டு. இப்படி சடுதியில் தோன்றிய எண்ண ஓட்டத்தை நிறுத்தி விட்டு ”இல்லையே, நீங்க?” என்று இழுத்தான்.

“I am Kannayiram Perumal” என்று கையை நீட்டினான் அவன்.

B. எழுத்தாளனுக்கு அந்த பெயர் எங்கேயோ கேட்டது போல இருந்தது. ஆனால் பிடிபடவில்லை. அவனுக்கு அவகாசம் எதுவும் கொடுக்காமலே, கண்ணாயிரம் பெருமாள் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு எதிரில் அமர்ந்தான். அவன் கையிலே BARRISTA என்று எழுதப்பட்ட ஒரு ப்ரௌன் நிறக் காகிதக் கோப்பையிலிருந்து காஃபியும், சாக்கலேற்றும் கலந்த நல்ல மணம் எழும்பிக் கொண்டிருந்தது. அடர்த்தியான மீசையை நறுக்காகக் கத்தரித்திருந்தான். ஒரு காதிலே கடுக்கண். கழுத்தை ஒட்டிய பொன் சங்கிலி. கொஞ்சம் முறைப்பாக இருக்க முடிந்தால் தமிழ்ப் பட தாதாவின் கையாட்களைப் போலிருந்திருக்கலாம். ஆனால் வழிசலான சிரிப்பு அவனை ஒரு மலையாளப் பட காமெடியன் போலாக்கி விட்டது.

“நீங்க கட்டாயமா ஒரு எழுத்தாளர்தான். குறைந்த பட்சம் ஒரு ப்ளாக் எழுத்தாளராகவாவது இருக்க வேண்டும். சரியா?” என்றான். இப்போது வழிசல் குறைந்து அவன் பேச்சில் gravitas கொஞ்சம் கூடியிருந்தது.

B. எழுத்தாளனுக்கு இப்போது பெருமாள் மீது கொஞ்சம் மதிப்பு ஏற்பட்டு விட்டது. எப்படி இந்த ஆள் சரியாகச் சொல்கிறார் என்று சற்று திகைத்தான்.

அந்த திகைப்பே அவன் ப்ளாக் எழுத்தாளன்தான் என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டதை உணர்ந்த பெருமாள் ஒரு வித பெருமிதமாக புன்னகை செய்தான். அதில் வழிசல் குறைவாக இருந்ததனாலோ, அல்லது பெருமாள் மீதிருந்த மரியாதை அதிகரித்திருந்ததாலோ, அல்லது ஒரு எழுத்தாளனாக அறியப்பட்டபடியினாலோ, B. எழுத்தாளனுக்கு அந்த புன்னகை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

“எனக்கு உன்னால் ஒரு உதவி தேவைப்படுகிறது, செய்ய முடியுமா?” என்று நேரடியாகவும், நைச்சியமாகவும் விஷயத்திற்கு வந்தான் பெருமாள்.

B. எழுத்தாளன் மறுபடியும் alert ஆனான். மல்ற்றி லெவல் மார்க்கெற்றிங் ஆசாமிகளிடம் மாட்டிக் கொண்டு சில கசப்பான அனுபவங்களைப் பெற்றவன் அவன். அது முதல் பொது இடங்களில் முன்னே பின்னே தெரியாத நபர்கள் நைச்சியமாகப் பேசினாலே அவனுக்கு வயிற்றுக்குள் ஜிவ்வென்று ஆகி விடும்.

“வேற ஒண்ணுமில்ல. என்னப் பத்தி உன்னோட ப்ளாக்ல எழுத முடியுமான்னு கேக்கத்தான் வந்தேன்… அப்படி என்ன பாக்கற? என்கிட்ட ஒலகத்துக்கு சொல்றதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. அதைப் பரவலா கொண்டு போய் சேக்கறதுக்கு வழிகளைத்தான் தேடிட்டிருக்கிறேன்.... அட…என்னப்பா சந்தேகம்? பெரிய எழுத்தாளரான சாரு நிவேதிதா கூட என்னுடைய கதையை எழுதியிருக்கிறார் தெரியுமா? சொல்லப் போனா என்னுடைய கதையை எழுதிதான் அவரால சொந்தமா கதை எழுத முடியும்னே நிரூபிக்க முடிஞ்சுது. அதுக்கு முன்னால அவர் பேர்ல வந்த “ஸீரோ டிகிரி’ங்கற நாவலை நான்தான் எழுதினேன், நான்தான் எழுதினேன்னு அவனவன் சொன்னான்ல. அவனுங்க வாயையெல்லாம் அடைக்கறதுக்குத்தான் என்னோட கதையை எழுதி புஸ்தகமாவே போட்டார்ப்பா. நானூறு, நானுத்தம்பது பக்க புஸ்தகம்”

இப்போதுதான் B. எழுத்தாளனுக்கு கண்ணாயிரம் பெருமாள் என்ற பெயரை எங்கே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று புலப்பட்டது. சட்டென்று பதட்டத்திற்கும் உள்ளானான் அவன்.

“சார், புகழ் பெற்ற எழுத்தாளராகிய அவர் எங்கே, நான் எங்கே? நாள் ஒன்றுக்கு 3000-4000 பேர் வந்து வாசிக்கும் தளம் அவருடையது. என் ப்ளாகை என்னைத் தவிர வாசிப்பது என் மனைவி, என் மைத்துனன், என் இரண்டு தம்பிகளில் ஒருவன் என்று மொத்தம் மூன்று பேர்” என்று திணறினான் B. எழுத்தாளன்.

“B, எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம். தீவிரவாதிகள் மும்பை ஓட்டல்களைத் தாக்கிய போது, அக் காட்சிகள் சன் டி.வி.யிலும், ஜெயா டி.வி.யிலும், கலைஞர் டி.வி.யிலும், கேப்டன் டி.வி.யிலும் காட்டப்பட்டன அல்லவா? அவை கவனிக்கப்பட்டன என்பதுதான் முக்கியமே ஒழிய, எங்கே காட்டப்பட்டன என்பதா முக்கியம்?”

B. எழுத்தாளனுக்கு க. பெருமாள் சொன்னது புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனால், நிலைமை தெளிவடைவதற்கு முன்னரே கேட்கப்பட்ட உதவியை செய்து தருவதாக மண்டையை ஆட்டி விட்டான் அவன். அதன் விளைவாக உருவானதே இந்தக் கதை. எப்படி சீதைக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து, ராமாயணம் தோன்றியதோ, எப்படி த்ரௌபதிக்கு நேர்ந்த சோதனையிலிருந்து மகாபாரதம் தோன்றியது, எப்படி கண்ணகிக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து சிலப்பதிகாரம் தோன்றியதோ, அப்படி B. எழுத்தாளனுக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து தோன்றியதே இந்தக் கதை. அந்த வகையில் பார்த்தால், உலகிலேயே ஒரு ஆண்மகனுக்கு ஏற்பட்ட சோதனையால் உருவான முதல் காவியம் என்றும் இந்தக் கதையைக் கூறலாம்.

இந்தக் கதையை பிற்காலத்தில் படித்துப் பார்த்த அமுதினி-மெய்மை பதிப்பகத்தின் உரிமையாளர் இளவேனில்குமரன் இதை நூல்வடிவத்தில் கொண்டுவர முடிவு செய்தார். அச்சின் பின்னட்டையில் இந்த நூலைப் பற்றி இப்படிப் போடலாம் என்று தீர்மானித்தார்:

“மனித வாழ்வின் அபத்தங்களை வேடிக்கையாகவும், அதே நேரத்தில் கூர்த்த சிந்தனையுடன் கடுமையாகவும் எதிர்கொண்ட 21ம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்கள், அதே அபத்தங்களின் வடிவமாகவும், பிரதிநிதிகளாகவும் விளங்கினார்கள் என்பதை வேடிக்கையாகவும், அதே நேரத்தில் கூர்த்த சிந்தனையுடன் கடுமையாகவும் எதிர்கொள்ளும் இந்நூல் … இப்போது இந்தப் பத்தியை முதலிலிருந்து வாசிக்கவும்”

பின்குறிப்பு (எச்சரிக்கை): இன்னும் இந்தக் கதை பின்நவீனத்துவ முறையில் எழுதப்படவில்லை. காரணம் என்னவென்றால் பின்நவீனத்துவம் சம்பந்தமான உபதேசத்தை இனி மேல்தான் க. பெருமாள் B. எழுத்தாளனுக்கு அருளப் போகிறான். ஆனால், கிருஷ்ணபகவான் தர்மோபதேசம் செய்யு முன்பே தர்மம் உலகத்திலே நிலவியது போலவே, க. பெருமாள் பின் நவீனத்துவ உபதேசம் செய்யு முன்னரே பின் நவீனத்துவம் உலகில் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த அத்தியாயம்: கண்ணாயிரம் பெருமாள் அருளிய ‘மலை’ப் பிரசங்கம்

தவளைகளின் சப்தம்



ஹோ சி மின் நகரில் …. மீண்டும் ஏழாவது மாவட்டம்.

ஒரு கொரிய உணவகத்தில் இரவுச் சாப்பாடு.

வெளியே வரும் போது மழை பெய்து முடித்து தெருவெல்லாம் ஈரம்.

தவளைகள் ஒரே ஸ்வரத்தில் விட்டு விட்டு பாடிக் கொண்டிருந்தன.

ங்கொய்…ங்கொய்…ங்கோய் … ங்கொய் …

“எனக்கு இந்த தவளைச் சத்தம் ரொம்பப் பிடிக்கும்” என்றார் இந்தோனேசிய நண்பர் நிங்.

“நீரும், நிலமும், காற்றும் தூய்மையாக இருக்குமிடத்தில்தான் தவளைகள் இருக்கும். எனவே இங்கே சுற்றுப்புறச் சூழல் நன்றாக இருக்கிறதென்று அர்த்தம்” என்றேன் நான். சமீபத்தில் தவளைகளைப் பற்றி ஜெயமோகன் எழுதியதிருந்த நல்ல கட்டுரை ஒன்றும் நினைவுக்கு வந்தது.

“மறுபடியும் எனக்குப் பசிக்கிறது” என்று தன் வயிற்றைத் தட்டிக் கொண்டே சொல்லிச் சிரித்தார் கொரிய நண்பர் ஜங்.

(தவளை படம் சுட்ட இடம் இங்கே)

Tuesday, November 23, 2010

ஸ்பெக்ட்ரம்: பிரபல பதிவர்களின் கருத்துக்கள் சரியா?

எந்தத் தீமைக்குள்ளும் ஒரு சிறு நன்மை உண்டு. ஸ்பெக்டரம் விஷயத்தில் அது என்னவென்றால் பலரைச் சில காலமும், சிலரைப் பல காலமும் ஏமாற்றலாம்; ஆனால் எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணம் ஆனது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது இது வரை இந்தியாவில் நடந்த பெரிய ஊழல்களிலேயே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட முதல் ஊழலாக அநேகமாக அமையும். இந்த ஊழலால் நாட்டிற்கெற்பட்ட இழப்பு 1.71 லட்ச கோடிகளாக இருக்கலாம். அதற்குக் குறைவாகவும் இருக்கலாம். ஆனால் இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆதாரங்களை வெளிக் கொண்டு வர உதவியவர்களில் பிரதானமானவர்கள் இந்த ஊழலால் பாதிக்கப்பட்ட பல தனியார் நிறுவனங்களாகவே இருக்கக்கூடும். அதிகார, அரசியல், சட்ட வாய்க்கால்கள் வழியாக இந்த ஆதாரங்கள் மெல்ல, மெல்ல நகர்ந்து இறுதியாக ஆ. ராசாவை அவரது நாற்காலியிலிருந்து நகர்த்தியிருக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் பல பரிமாணங்களில் ஒன்று ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியானது. ராடியா – ராசா, ராடியா-கனிமொழி தொலைபேசி உரையாடல்களில் சில டெய்லி பயனியரில் பல மாதங்களுக்கு முன்னர் வெளியான போது, இந்த விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அச்சு ஊடகங்களும் சரி, தொலைக்காட்சி ஊடகங்களும் சரி, இந்த உரையாடல்களை மூடி மறைக்கவே முயற்சி செய்தன. இதற்கு ஊகமாகச் சொல்லப்பட்ட காரணம்: இந்த உரையாடல்கள் டாடாவிற்கும், அம்பானி சகோதரர்களுக்கும் ஏற்படுத்தும் சங்கடங்கள் ஊடகங்களைப் பழி வாங்குவதில் கொண்டு முடியும். அதாவது, டாடா, அம்பானி நிறுவனங்கள் பத்திரிகைகளுக்கும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கும் வழங்கும் விளம்பரங்களை நிறுத்தி இழப்பை ஏற்படுத்தும் என்பது. இப்போது வெளியாகி வரும் உண்மைகளோ, அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் டாடா, அம்பானிகளின் கோபத்திற்கு அஞ்சுவதை விட, தங்களது உடுப்புகளே உரியப்படுமென்று நடுநடுங்கிதான் அமைதி காத்தார்கள் என்று உணர்த்துகின்றன.



என்.டி. டிவியின் பர்கா தத், இந்துஸ்தான் டைம்சின் வீர் சிங்வி, இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, மற்றும் சில பிரபல பத்திரிகையாளர்கள் ராடியா என்னும் அதிகாரத் தரகருக்கு உபதரகு வேலை பார்த்திருப்பது இப்போது வெளியாகும் உரையாடல்களிலிருந்து வெளியாகிறது. உரையாடல்களை வெளியிட்ட ஓப்பன் மாகசீனுக்கு என்.டி. டிவி எழுதியிருக்கும் எதிர்ப்புக் கடிதத்தின் சாராம்சம் என்னவென்றால் பர்கா தத்திற்கு பதிலளிக்க வாய்ப்பு தராமல் உரையாடல்களை வெளியிட்டது பத்திரிகா தர்மத்தை மீறுவதாம். என்.டி. டிவி யாராவது செய்யும் தப்பை வெளியாக்கப் போகிறதென்றால் அந்த நபரிடம் போய் உங்களுடைய தப்பை வெளியே கொண்டு வருகிறோம், அதற்கு பதிலளிக்கும் வாய்ப்பை முன்னதாகவே தருகிறோம் என்றா கேட்டுக் கொண்டிருக்கிறது? இப்படி, இந்த உரையாடல்களின் வெளியீடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த பலரை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. புனிதர்களாக முன்னே அறியப்பட்ட சிலருக்கோ அங்கிகள் மட்டுமல்ல கௌபீனங்களே கழற்றப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் வழி வகுத்துக் கொடுத்திருப்பது இணையமென்னும் கட்டற்ற பெருவெளியே.

ஸ்பெக்ட்ரம் தீமைக்குள் நன்மை என்னவென்று தெரிகிறது. ஆனால் அந்த நன்மைக்குள் ஒரு பெரும் தீமையும் தெரிகிறது. அது, இவ்வளவு தூரம் உண்மைகள் வெளியாகியும் நம்மில் பலர் இவற்றை வெகு சாதாரணமாக உதறி விட்டுப் போய்க் கொண்டிருப்பது. லக்கிலுக், கிழக்கு பதிப்பகம் பத்ரி போன்ற வலுவான சிந்தனையும், மொழித் திறனும் கொண்ட பதிவர்களே நாட்டிற்கு இழப்பு 1.71 லட்சம் கோடிகளாக இருக்காது; அப்படியே இருந்தாலும் அவ்வளவு பணத்தையும் ராசாவே அடித்திருக்க முடியாது என்ற வகையில் எழுதினார்கள். பின்னூட்டமிடும் கணவான்களில் பலர் தேனெடுப்பவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்பது போல் எழுதினார்கள். ஜெயலலிதா ராசாவைக் கைது செய்யுங்கள் என்று சொன்னது ஏதோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே சொல்லப்பட்டது போல சற்றேறக்குறைய எல்லோராலும் பார்க்கப் பட்டது. சற்று யோசித்துப் பார்ப்போம். கள்ளக் கணக்கு காட்டியதன் மூலம் பங்குதாரர்களுக்கு 14,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜூ சகோதரர்கள் விசாரணைக்கும், வழக்கிற்கும் குந்தகம் ஏற்படுத்துவார்கள் என்ற காரணத்தால் ஏறக்கறைய இரண்டாண்டு காலமாக சிறையில் இருக்கிறார்கள். நாட்டிற்கு அதை விட பன்னிரண்டு மடங்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா சென்னை விமான நிலையத்தில் கதாநாயகன் போல வந்திறங்குகிறார். அவரை மானமிகு தலைவர் என்கிறார் வீரமணி.



அகில இந்திய அளவில் ராசாவின் ஊழலும், ராடியாவின் தொலைபேசி உரையாடல்களும் நாட்டில் அரசியல், அதிகார, வணிக, ஊடகத் துறைகள் சராசரி மனிதனை எவ்வளவு தூரம் மடையனாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மறுக்க முடியாத ஆதாரமாக விளங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் முக்கியத்துவம் பெறுவதோ கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் நாடகங்கள். கிழக்கு பதிப்பகம் பத்ரி, உண்மைத் தமிழன், சவுக்கு போன்ற பதிவர்கள் இந்த நாடகங்களை முதன்மைப்படுத்தியே கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த வகை வியாக்யானங்களின் பலவீனம் என்னவென்றால், இந்த உரையாடல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சத்தியசீலர்கள், இவர்கள் ஒருவருக்கொருவரிடம் உண்மையை மட்டுமே பேசிக் கொள்கிறார்கள் என்ற அனுமானம்தான். உதாரணமாக, ராடியா மாறன் இப்படிச் செய்தார், அப்படிச் செய்தார் என்று சொல்லுவது அனைத்தையுமே மாறன் செய்திருப்பார் என்று எடுத்துக் கொள்ளும் அனுமானம். ஆனால், எல்லா உரையாடல்களையும் ஊன்றிக் கவனித்தால், ராடியாவிற்கு மாறனை ஒழிக்க வேண்டும் என்ற தீவிரம் இருப்பது புரியும். அனேகமாக, இது டாடா ராடியாவிற்கு கொடுத்த வேலைகளுள் ஒன்றாக இருக்கலாம். ஏற்கனவே டாடாவிற்கும் மாறனுக்கும் முட்டிக் கொண்டது அறிந்ததே. இந்த வேலையின் ஒரு பகுதியாகவே ராடியா கனிமொழி மற்றும் ராசாவிடம் மாறனைப் பற்றி போட்டுக் கொடுப்பது, அழகிரியை மாறனை வீழ்த்தும் ஆயுதமாக செயல்படுத்துவது முதலான தந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதைப் போல் தோன்றுகிறது.



இது வரை வெளியான உரையாடல்கள் ஒட்டுக் கேட்டு பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் ஒரு சிறு பங்கே. எல்லா உரையாடல்களையும் தாங்கிய நூற்றிற்கும் மேற்பட்ட குறுந்தகடுகளை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளார். குறுந்தகடுகளிலுள்ள உரையாடல்கள் ஓப்பன் மாகசின் மற்றும் அவுட்லுக் இணைய தளங்களிலும் கேட்கக் கிடைக்கின்றன. இந்த விவகாரத்தைத் தோண்டத் தோண்ட இன்னமும் பல பூதங்கள் வெளியே வரும் என்று நம்பலாம். இதன் இறுதி பலன் இனிமேல் இது போன்ற பெரிய அளவு ஊழல்கள் துணிகரமாக செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக இருக்கலாம். அப்படி நடந்தால் 1.71 லட்சம் கோடி ரூபாய் அதற்கு நாம் கொடுத்த விலையென்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

Monday, November 22, 2010

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும்

“பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும்” என்ற தலைப்பில் 10-15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு கதை எழுதுவதாக ஒரு திட்டம் உள்ளது.

சில முன்குறிப்புகள்:

1. இக் கதையில் வரும் நபர்கள், அவர்களுடைய, சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று நம்பும் உரிமை உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

2. இக் கதை பின் நவீனத்துவ முறையைப் பின்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. பின் நவீனத்துவ முறை எவையெல்லாம் அல்ல அன்று தெளிவாக விளக்கப்பட்டது போல, பின் நவீனத்துவ முறை எது என்பது இன்னமும் விளக்கப்படாமலே உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், பல பேர் விளக்கியும் விளக்கியவர்கள் உட்பட எவராலும் புரிந்து கொள்ளப் படாமல் உள்ளது. பிரபல எழுத்தாளர் ஒருவர் பிரபல வார இதழ் ஒன்றில் பின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள வைக்காமல் கூந்தலை அள்ளி முடியேன் என்று சபதமெடுத்துள்ளார். இது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு சபதம். ஏனென்றால் எழுத்தாளர் கடவுளைக் கண்டவர். இந்த முன்னுரை எழுதப்படும் காலத்தில் சபதம் நிறைவேறவில்லையென்றாலும், இது வாசிக்கப்படும் காலகட்டத்தில் ஏதாவது ஒன்றில் அது நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அப்படி ஆகியிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள். கோனார் தமிழ் உரை கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பின் தமிழ் பயின்ற மாணவர்கள் போல.

3. இந்த முன்குறிப்புகளின் பட்டியல் நீட்டிக்கப்படுமேயொழிய தவிர எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது. அவ்வப்போது இந்த முன்குறிப்புகள் மாற்றம் பெற்றிருக்கின்றனவா என்று படித்துத் தெரிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களுடைய கடமையாகும் தவிர, அவற்றை அறிவிப்பது B. எழுத்தாளனின் கடமையோ, இந்த ப்ளாக் உரிமையாளர் AVS கடமையோ ஆகாது.


Monday, July 26, 2010

சவுக்கு.நெட்டிற்கு ஆதரவு திரட்ட வேண்டுகோள்

தமிழக அரசியல், அதிகார வர்க்கங்களில் நடக்கும் முறைகேடுகளை துணிச்சலாக வெளிப்படுத்தும் சவுக்கு.நெட் (www.savukku.net) இன்று என் கவனத்திற்கு வந்தது.

கடந்த 15-20 வருடங்களாக தமிழகம் கடுமையாக சூறையாடப்பட்டு வருகிறது என்பதை கற்றவர்களாகிய நாம் அறிவோம். முன்னேற்றப் பாதையில் இருந்த தமிழகம் அநேகமாக ஒவ்வொரு துறையிலும் தேக்க நிலையையோ, பின் தங்குவதையோ உணர்ந்து வருகிறோம். அதே வேளையில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும், அதிகாரப் பொறுப்புகளில் உள்ளவர்களும் கற்பனைக்கும் மீறிய வகையில் பொதுச் சொத்துகளைச் சுரண்டி சம்பாதித்து வருகிறார்கள் என்பதும், இப்படிச் சேர்க்கப்படும் செல்வம் நாளை நமது சந்ததியினரின் எதிர்காலத்தை அவர்கள் அபகரித்துக் கொள்ள வழி வகுக்கும் என்பதும் மிகுந்த கலக்கத்தை உண்டாக்கும் போக்குகளாகும்.

முறைகேடுகளைத் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடுவது சிரமமும், அபாயமும் மிகுந்த ஒன்று. தமிழகத்தில் இருக்கும் எந்த செய்தித் தாளும், பத்திரிகையும், தொலைக்காட்சியமைப்பும் இதைச் செய்யப் போவதில்லை. ஏனென்றால், பல ஊடக நிறுவனங்கள் அரசியல், அதிகார வர்க்கங்களாலேயே நடத்தப்படுகின்றன. அப்படி நடத்தப்படாத நிறுவனங்களும் விளம்பரங்களுக்காக அதிகார வர்க்கத்தையே நாடியிருப்பதால் அவை அதிகார வர்க்கத்தில் நடக்கும் பெரிய முறைகேடுகளை வெளிப்படுத்த முன்வரா. இது தவிர, அதிகார வர்க்கத்திற்கு துணையாக நின்று, முறைகேடுகளை நடத்தும் பத்திரிகைகளும் உள்ளன.

இப்படி மக்களின் சுதந்தரமும், நல வாழ்வும், நாலா பக்கங்களிலிருந்தும் தொடர்ந்து நெருக்கப்படும் சூழ்நிலையில், தெளிவும், விடிவும் காண ஒரே ஒரு ஊடகம்தான் உள்ளது. அதுதான் இணையம் என்னும் ஊடகம். அதில் துணிவுடன் பணியாற்ற இது வரை யாரும் வந்தது போல் தெரியவில்லை. ஆனால், இப்போது சவுக்கு.நெட் தளத்தை வாசித்துப் பார்க்கும் போது ஒரு நம்பிக்கை எழுகிறது.

இந்த தளத்தின் பல பதிவுகளை வாசித்துப் பார்க்கும் போது இதன் ஆசிரியருக்கு என்ன நேரிடுமோ என்று பயமாக உள்ளது. அந்த அளவுக்கு துணிச்சலாக எழுதுகிறார். என்னைப் போல் நம்மில் பலருக்கு அவரைப் போல் ஆதாரங்கள் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் எழுதும் துணிச்சல் இருக்காது. ஆனால் குறைந்த பட்சம், இந்தத் தளத்தை பரவலாகக் கொண்டு சேர்ப்பதில் நாம் ஈடுபடலாம். மக்கள் ஆதரவு இது போன்ற முயற்சிகளுக்கு உண்டு என்றால் அதிகார வர்க்கம் அஞ்சும்.

எனவே சவுக்கு.நெட் ((www.savukku.net) தளத்தைப் பாருங்கள். உங்கள் பின்னூட்டங்களை இடுங்கள். அதைப் பற்றி பதிவெழுதுங்கள். மற்றவர்களிடம் சொல்லுங்கள்.

நன்றி.

Sunday, June 13, 2010

ஏழாவது மாவட்டத்தில் எனது நாள்


ஜூன் 13, 2010.ஞாயிறு காலை. எட்டரை மணி.

ஹோசிமின் நகர் விமான நிலையம் எங்களது விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் தவிர வேறு யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. விசா வழங்கும் பிரிவு அசமஞ்சமாக இயங்கிக் கொண்டிருந்தது.

விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது வழக்கமான ஹோசிமின் நகரின் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனால், வழக்கமான வாகன நெரிசல் இல்லை.

விடுதி ஒழுங்கு செய்தவர்கள் வாகனமும் அனுப்பியிருந்தார்கள். எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்ததால், நான் விடுதி எங்கே இருக்கிறதென்று கவனிக்கவில்லை. வழக்கமாக விடுதிகள் அனைத்துமே டிஸ்ட்ரிக்ற் 1 என்று அழைக்கப்படும் ஹோசிமின் நகரின் சைகான் நதியை ஒட்டிய நகர் பகுதியிலேயே அமைந்திருக்கும். இந்த முறையும் அப்படியேதான் என்று நினைத்து வந்திருந்தேன். ஓட்டுநர் டிஸ்ட்ரிக்ற் 1 செல்லும் பாதையை விட்டு விலகிய ஒரு பாலத்தில் ஏறியபோதுதான் வேறெங்கோ விடுதி ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என்று புரிய வந்தது.

10-15 நிமிடங்களில் விசாலமான வீதிகளும், வானைத் தொடும் கட்டங்களும், கடைகளும் நிறைந்த சிங்கப்பூர் போன்ற ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். விடுதிக்குப் போன பிறகு முகவரியைக் கவனித்தால், அது டிஸ்ட்ரிக்ற் 7 என்று சொன்னது. கூகுளைத் தட்டி டிஸ்ட்ரிக்ற் 7 பற்றிக் கேட்டேன். இது சமீபத்தில் அமைக்கப்பட்ட ஒரு நகரமாம். கொரியர்களும், ஜப்பானியர்களும் இங்கு பெருமளவு வசிக்கிறார்களாம். இங்குள்ள விடுதிகளில் மேற்கத்திய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தங்குவதால், இங்கு பல பார்களும், ரெஸ்தாரந்துகளும் உள்ளனவாம்.

எனக்கு ஒரு தொழில் கண்காட்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அக் கண்காட்சி எஸ்.ஈ.சி.சி. என்னும் சைகான் எக்சிபிஷன் & கன்வென்ஷன் சென்ற்றரில் நடைபெறுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இதே கண்காட்சி டிஸ்ட்ரிக்ற் 1ல் உள்ள ஒரு இடத்தில் நடைபெற்ற போது சென்றிருக்கிறேன். அந்த இடம்தான் எஸ்.ஈ.சி.சி. என்று நினைத்திருந்தேன். ஆனால், எஸ்.ஈ.சி.சி. விடுதியிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்குள்ளேயே இருந்தது. போகிற வழியில் டாக்சியை நிறுத்தி ஏடிஎம்மிலிருந்து 20 லட்சம் டாங் எடுத்துக் கொண்டேன் (ஒரு ரூபாய் இன்றைய கணக்கில் 435 டாங். குறைந்தபட்ச நோட்டு 1000 டாங். 1000, 2000, 5000, பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம், ஒரு லட்சம், ஐந்து லட்சம் என்று கலர், கலராக அடித்து வைத்திருக்கிறார்கள்).

கண்காட்சி முடிந்து, சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து, சற்று நேரம் உறங்கி விட்டு, மாலை 6 மணிக்கு வெளியில் நடக்கச் சென்றேன். தெருவிற்கு தெரு விடுதிகளும், பார்களும், உணவகங்களும்தான். நானிருக்கும் விடுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கணேஷ் வட இந்திய தென் இந்திய உணவகம் என்று ஒன்றைக் கண்டேன். உள்ளே போகத் தோன்றவில்லை. எதிர்ப்புறம் ஒரு திறந்தவெளி உணவகத்தில், பிரமாண்டமான திரையில் ஸ்லோவேனியாவும், அல்ஜீரியாவும் கால்பந்து ஆடுவதைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே போய் உட்கார்ந்தேன்.

இந்த உலகக் கோப்பையில் நான் பார்த்த முதல் முழு ஆட்டம் இதுதான். வரைபடத்திலே எங்கே இருக்கிறதென்று சரியாக தெரியாத இரு நாடுகள் ஆடுவதைப் பார்ப்பதன் சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த அணியையும் ஆதரிக்க வேண்டியதில்லை, ஆட்டத்தை மட்டும் ரசித்தால் போதும். இரண்டுமே ஏறக்குறைய சமமான அணிகள்தான், ஆனால் ஸ்லோவேனியாவின் கை லேசாக ஓங்கியிருந்தது. ஓவர்டைமில் ஒரு கோல் போட்டு ஸ்லோவேனியாதான் வென்றது.

இரவுணவு: இஞ்சியும் வெங்காயமும் போட்டு சோயா சாஸிலே அவிக்கப்பட்ட கொடுவா மீன், பாக்சோய் என்ற சீன முட்டைக்கோசு, சாதம், மாம்பழ ஜூஸ். ஒரு வேளையாவது ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற முனைப்பில் பெறப்பட்ட உணவு. சோயா சாஸிலே மறைந்திருந்த சமைக்கப்படாத முழு மிளகாயைக் கடித்து விட்டு நான் சொரிந்த கண்ணீரைப் பார்த்து விட்டு பரிசாரகருக்கே இரக்கம் வந்து, பக்கத்தில் வந்து போதும் என்கிற வகையில் தண்ணீரை தம்ளரில் நிரப்பிக் கொண்டேயிருந்தார்.

Thursday, June 10, 2010

சிங் டா, சீனா: சிறு குறிப்புகள்



இந்தியாவிற்கு மீன் கொத்தி

சிங்கப்பூருக்கு புலி

சீனாவிற்கு சிங் டா

இவையெல்லாம் அந்தந்த நாட்டின் பிரபலமான பியர் வகைகள்.

Tsing Tao என்ற பியரின் பெயர் அது தயாரிக்கப்படும் ஊரின் பெயரிலேயே இருக்கிறது. பீகிங்கை, பெய்ஜிங் என்று உச்சரிப்பு மாற்றம் செய்தது போல ட்சிங் ற்றா இப்போது ஷிங் டா (Qing Dao) என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் வட பசிபிக் கரையில் ஷாண்டோங் மாநிலத்தில் இருக்கிறது இந்த நகரம்.

மே 30 முதல் ஜூன் 6 வரை இந்த ஊரில் இருந்தேன்.

பெய்ஜிங்கிலிருந்து ஒரு மணி நேர விமானப் பயணம். தரை இறங்குமுன் விமானம் அதிகக் காற்றில் தள்ளாடியது. ரொம்ப மெதுவாக, ஜாக்கிரதையாக தரை இறக்கினார் விமானி. காலை பத்து மணிக்கு இரவு பத்து மணி போல வானம் இருண்டிருக்க, குளிரான ஊதல் காற்று வீசி, அடர்த்தியாக மழை தொடங்கியது. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் விமானத்திற்கு பிறகு தரையிறங்க முயற்சித்த விமானங்களெல்லாம் வேறு, வேறு இடங்களுக்கு திசை திருப்பப்பட்டன.

விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு அரை மணி நேரப் பயணம். நான் சென்ற மாநாட்டிற்கு செல்பவர்கள் 8 பேர் ஒரே விமானத்தில் வந்திறங்கினோம். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதால் ஒரு பெரிய வேனை அமர்த்திக் கொண்டு விடுதிக்கு சென்றோம். தாய்லாந்திலிருந்து வந்திருந்த டாக்டர் சூட்டிமா பத்தாண்டுகளுக்கு முன்னால் ஷிங் டா வந்திருக்கிறார். அடையாளம் தெரியாமல் நகரம் வளர்ந்து விட்டது என்றார்.

விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலிருந்து கடல் காட்சி அருமையாக இருந்தது (புகைப்படம்).

மறுநாள் என்னுடைய உரை ஒன்று இருந்தது. மதிய உணவிற்குப் பின், என் உரையை சீனத்தில் மொழிபெயர்ப்பவரோடு சந்தேகங்களை விளக்கி விட்டு, அறைக்கு வந்து மாலை 4 மணி போல் படுக்கையில் சாய்ந்து சில நொடிகளில் உறங்கி விட்டேன். எழுந்த போது இருண்டு விட்டது. கைக்கடிகாரம் 8 மணி காட்டியது. முகத்தைக் கழுவி, உடை மாற்றிக் கொண்டு கீழே போனால், விடுதி உணவகம் மூடும் நேரம் இரவு 8 என்றிருந்தது. “என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, மலேசிய நண்பர் டாக்டர் விங் கியோங் வந்தார். அவரோடு இருவர் வந்தார்கள். ஆஸ்திரேலியா யுனிவர்சிட்டி ஆஃப் டாஸ்மேனியாவில் சபாடிக்கல் போயிருந்தபோது பழக்கமான அங்குள்ள மாணவர்கள் என்றார். இருவருமே யூடாஸில் பிஎச்.டி படிக்கிறார்கள். மாணவர் ஒன்று இந்தியர் போல இருந்தார். பெயர் பஷீர். இந்திய மூதாதையர், மரூஷியஸ்காரர். மாணவர் இரண்டு, ரமீஸ், சிரியாக்காரர். எடுத்த எடுப்பிலேயே தோழமையாகப் பழகினார்கள்.

வெளியே எங்காவது சாப்பிடலாம் என்று புறப்பட்டோம். ஒரு கடலுணவு சாப்பிடும் இடம் நன்றாக இருக்கும் என்று டாக்சிக்காரர் அழைத்துச் சென்றார். விங்கிடம் சீன மொழி பேசுவீர்களா என்றேன் (அவர் மலேசிய சீனர்). கொஞ்சம், கொஞ்சம் சமாளிக்கலாம் என்றார். ஆனால் ரமீஸ் நன்றாக சீனம் பேசுவார் என்றார். ரமீஸ் தைவானில் படித்திருக்கிறார். கடலுணவு ரெஸ்தாரந்தில் ரமீஸ் உணர்ச்சிவசப்பட்டு நிறைய விலையுயர்ந்த மீன் வகைகளை, குறிப்பாக பெரிய, பெரிய இறால்களை வாங்கி விட்டார். தலைக்கு 2500 ரூபாய்க்கு சமமான தொகை பில்லாக வந்து விட்டது.

விடுதிக்கு வந்த பிறகு கைக்கடிகாரம் பார்த்தேன்: இரவு பதினொரு மணி. விடுதிக் கடிகாரம் 10 என்று காட்டியது. தாய்லாந்தில் கடிகாரத்தை மாற்றியமைத்த நான் சீனா வந்த பிறகு ஒரு மணி நேரம் கூட்டி வைக்க மறந்தது புரிந்தது.

மறுநாளிலிருந்து மாநாட்டிற்கு போய் வருவது, தனிப்பட்ட சந்திப்புகள் என்று எல்லோருமே பிசியாகி விட்டோம். மாநாட்டிற்கு வந்த 600 பேரையும் ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து, நீளமான ஓலை போலிருந்த படத்தைச் சுருட்டி, கலையழகு மிக்க ஒரு நீள்செவ்வக பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார்கள்.

செர்ஜியோ வழக்கம் போல் மாநாட்டு விடுதியில் தங்காமல் ஷாங்ரிலாவில் தங்கினார். நாளொன்றுக்கு அறைக்கு குறைந்தபட்சமாக 12,000 ரூபாய் வசூலிக்கும் விடுதி. அவர் தங்கியிருந்த அறைக்காரர்களுக்கென்று விடுதி உச்சியில் ஒரு லவுஞ்ஜ் இருக்கிறது. மாலை 5 முதல் 7:30 வரை இலவச உணவு, பானங்கள். இரண்டு தினங்கள் நானும், ப்ரேசிலிய நண்பரான டானியலும் செர்ஜியோ விடுதிக்காக செலுத்தும் பணம் வீணாகமல் பார்த்துக் கொண்டோம்.

ஒரு நாள் இரவு மாநாட்டு நண்பர்கள் பலர் பியர் தெருவிற்குப் போகிறோம் என்று அழைத்துச் சென்றார்கள். வைன் தெரு, பியர் தெரு என்று இரண்டு தெருக்கள் ஷிங் டாவில் உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளின் போது படகு விடும் போட்டிகள் ஷிங் டாவில் நடத்தப்பட்டன. அப்போது நிர்மாணிக்கப்பட்டவையே இந்த தெருக்கள். 800-1000 மீட்டர் நீளமான தெருவில் நூற்றுக்கணக்கான பார்கள். ஒரு பிட்சர் பியர் சுமார் 150 ரூபாய். (விடுதியில் 300 மிலி பாட்டில் 150 ரூபாய்). கேட்க வேண்டுமா, மக்கள் பியரில் குளித்தார்கள். நானும், போர்ச்சுகல் நண்பர் பெட்ரோவும், அவரது போர்ச்சுக்கல் நண்பர்களும் கொலோனியலிசம், மெகல்லன், கோவா பற்றியெல்லாம் இரவு 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் கிளம்பும் போதும், நார்வே குழுவினர் அரட்டை அடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். காலை 4:30க்குத்தான் திரும்பியதாக மறு நாள் சொன்னார்கள்.

சீனாவில் டாக்சி வாடகை சொற்பம். ஐம்பது ரூபாய் குறைந்தபட்சம். 5-10 கிலோமீட்டருக்குள் இருக்கும் இடங்கள் 100 ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது. எல்லா டாக்சி ஓட்டுநர்களும் உபதொழில் ஒன்றை வைத்துள்ளார்கள். பாக்கெட்டிற்குள்ளிருந்து பெண்கள் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்து மசாஜ் வேண்டுமா என்று கேட்கிறார்கள்.

இறுதிநாள் இரவு பெரிய உணவு விருந்து. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்த உணவு விருந்துதான் பிரசித்தி பெற்றது. மாநாடு முடிந்த பிறகும் பேசப்படும் விஷயம் இது. உதாரணமாக 1998ல் இந்த மாநாடு ஜப்பானில் நடைபெற்ற போது, ஒரு மிகப் பெரிய நீலத் துடுப்பு சூரை மீனை (ப்ளு ஃபின் ட்யூனா) விருந்திற்கு கொண்டு வந்து, ஷஷிமி முறையில் பச்சையாக வெட்டி பரிமாறினார்கள். இந்த மாநாட்டில் விதவிதமான சீன உணவுகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தன. ஊர்வன, மிதப்பன, நீந்துவன, ஓடுவன, பறப்பன, கடிப்பன என்று ஒரு 20-25 ஐட்டங்கள். என் பக்கத்தில் ஒரிசாவிலிருந்து வந்த ஒரு விஞ்ஞானியும், ஆந்திராவிலிருந்து வந்திருந்த டாக்டர் அஜய் பாஸ்கர் என்ற நண்பரும். ஒரிசாக்காரர் மாடு, பன்றி சாப்பிடமாட்டார் என்பதால் பரிமாறப்படும் ஒவ்வொரு அயிட்டமும் என்னது என்பதை தெரிந்து சொல்லும் பணி எங்கள் இருவர் மேலும் விழுந்தது. சீன கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. ஒரு பெண் பாட்டுப் பாடினார். சீன பாரம்பர்ய சங்கீதம் தொண்டையிலிருந்து என்னென்ன சப்தங்களை வேறு வேறு ஸ்தாய்களில் உருவாக்க முடியும் என்பதைக் காண்பிப்பது போலிருந்தது. ஒரு கட்டத்தில் உச்ச ஸ்தாயில் காதைப் பிளந்து விடும் ஓலமாக அது மாற எங்கள் மேசையிலிருந்த நார்வேஜியன் ஒருவர் காதைப் பொத்திக் கொண்டு வெளியே எழுந்து போய் விட்டார்.

அடுத்த நாள் இரவு இன்ற்றர் கான்ற்றினென்றல் விடுதியில் நடந்த நிகழ்ச்சியையும், தனி விருந்தையும் முடித்து விடுதிக்கு திரும்பினோம். ஷிங்டாவின் பிரதான சாலையெங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் பல்வேறு ஒளி மாயாஜாலங்களில் மூழ்கியிருந்தன. என்னருகில் அமர்ந்திருந்த எகிப்திய-கனேடிய அடெல், சீனா ஒரு வளரும் நாடு என்பதை நம்ப முடியவில்லை என்றார். இருபது ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதுதான். ஷாங்ரிலா லவுஞ்சிலிருந்து மாலை 5:30 மணிக்கு பார்த்த போது, மஞ்சள் ஹெல்மட் அணிந்த நூறு பணியாளர்கள் ஒரு உயரமான கட்டிடத்திற்கு மேல் நின்று எறும்புகள் போல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். சீனர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்தை மிகவும் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறொரு விருந்தில் என்னருகில் அமர்ந்திருந்தவர் சீனர் என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் எந்த மாநிலத்திலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன். அவர் “நான் இங்கிருந்தல்ல. தைவான்” என்றார். நான் விளையாட்டாக “அதுவும் சீனாவின் ஒரு மாநிலம்தானே” என்றேன். விருந்தை நடத்தும் சீன நண்பர் அவர் இடத்திலிருந்து உணர்ச்சிவசப்ப்பட்டு எழுந்து வந்து என் கோப்பையோடு, அவரது கோப்பையை க்ளிங் செய்தார். முகமெல்லாம் சிரிப்பு அவருக்கு. அந்த அளவிற்கு தங்கள் நாடு மீது வெறியாக இருக்கிறார்கள் சீனர்கள்.

இந்த முன்னேற்றத்தின் விலையாக அவர்கள் கொஞ்சம் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. யூட்யூப், ஃபேஸ்புக், ப்ளாகர் எதுவும் அங்கு அணுக முடியாது. அதனால்தான் இந்த தபால் வியாழன்று வெளியாகிறது.

தாய்லாந்தின் தாக்சினுக்கு ஆசிரியர் ஜெயலலிதாவா?


மே 29- சுவர்ணபூமி விமான நிலையத்தில் கால் பதித்த போது பாங்காக்கில் அமைதி நிலவ ஆரம்பித்து சில நாட்களே ஆகியிருந்தது. எப்போதும் ஜேஜே என்றிருக்கும் விமான நிலையம் அரவமில்லாமல் கிடந்தது. வெளிநாட்டவர் நுழைவு, சுங்கம் ஆகிய வழமைகளை சில நிமிடங்களில் முடித்துக் கொண்டு வெளியேறினேன். பாங்காக்கிலிருந்து சீனப் பயணம் தொடங்க 13 மணிநேரங்களே இருந்தபடியால், சுவர்ணபூமி பக்கத்திலேயே எக்ஸ்பீடியா மூலமாக க்ரேட் ரெசிடென்ஸ் என்ற ஒரு விடுதியை பதிந்து வைத்திருந்தேன். அவர்கள் அனுப்பி வைத்த வாகனம் எக்சிட் 4ல் இருக்கும் என்றபடியால் நேரடியாக அங்கு சென்று விடுதிக்குப் போனேன். காரில் ஐந்து நிமிடம் ஆகிறது. ரேட் 600 ரூ. கடந்த முறை சுவர்ணபூமி நிலையத்திற்குள்ளேயே 4 மணிநேரத்திற்கு 3000 ரூ கொடுத்து தங்கியதை நொந்து கொண்டேன்.

க்ரேட் ரெசிடென்சில் இருந்த சிறிய உணவகத்திலேயே மதிய உணவிற்கு மீனும் சோறும். தாய்லாந்தில் எந்த உணவகத்திலும் இதை நம்பி சாப்பிடலாம். சாப்பாட்டிற்குப் பிறகு நகர் விஜயம். வாடகை வாகனம் 600 ரூ கேட்டார்கள். நான் அறைக்கே 600தான் தருகிறேன் என்று பேரம் பேசி 400 ரூபாயாக்கினேன். போகும் போது டாக்சி ஓட்டுநர் நண்பராகி விட்டபடியால், எனக்காக நகரிலேயே 4-5 மணிநேரம் காத்திருந்து, திரும்பவும் கொண்டு வந்து விட்டார்.

கேமராவை எடுத்து படம் எடுக்க முற்பட்டால் அதற்குள்ள மெமரி கார்டை ப்ரூனேயிலேயே விட்டு விட்டு வந்து விட்டேன் என்று தெரிந்தது. போகிற வழியில் சிட்லோம் சென்ட்ரலில் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். பாங்காக்கில் எனக்குப் பிடித்த ஷாப்பிங் தலம் இந்த சிட்லோம் சென்ட்ரல்தான். எதிர்பார்த்ததைவிட சென்ட்ரலில் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலும் உள்ளூர் மக்கள்தான். சிவப்புச் சட்டை தொந்தரவுகள் முடிந்ததால் நிம்மதியாக வெளியே வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கூடவே சிட்லோமிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிற சென்ட்ரல் வேர்ல்டு (தென் மேற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய மால் என்கிறார்கள்) கலவரத்தில் எரிக்கப்பட்டு விட்டதால் கூட இந்த சென்ட்ரலில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கலாம்.

சென்ட்ரலில் இருந்து வான்ரயிலில் சுக்கும்வித். மார்ச் முதல் வாரம் பாங்காக் வந்திருந்தபோது அங்கிருக்கும் எனது வழமையான தையல்காரர் ஜஸ்விந்தர் சிங்கிடம் (Barrons, நானா வான்ரயில் நிலையத்திற்கு கீழ், லாண்ட்மார்க் ஹோட்டல் எதிர்புறம்) துணிகள் தைக்க கொடுத்திருந்தேன். மார்ச் நான்காவது வாரம் பாங்காக் திரும்பப் போகும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாக ஏற்பாடு. அந்த ஏற்பாட்டை சிவப்புச் சட்டைக்காரர்கள் ரத்து செய்து விட்டார்கள்.

ஜஸ்விந்தர் புலம்பித் தள்ளினார். அவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். வருடத்தில் ஒரு தடவை ஜஸ்விந்தர் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனிக்கெல்லாம் போய் ஆர்டர் எடுத்துக் கொண்டு வந்து தைத்து கூரியரில் அனுப்பி வைப்பார். இது தவிர பாங்காக்கிற்கு வரும் ஐரோப்பியர்கள் வேறு. யூரோ படுத்து விட்டதால் அவர்கள் வியாபாரம் ஏற்கனவே குறைந்து விட்டது. இதில் சிவப்புச் சட்டைக்காரர்கள் வேறு பயணிகளை பயமுறுத்தி விட்டார்கள். சிவப்புச் சட்டை பிரச்சினைக்கு தாக்சின்தான் காரணம் என்றார். அப்புறம், ரகசியமாக தாக்சின் எங்கேயிருந்து தேர்தலில் வெற்றி பெறும் தந்திரத்தைப் படித்தார் தெரியுமா என்றார். எனக்குத்தான் அந்த ரகசியம் தெரியுமே. “இந்தியாவா?” என்றேன். “ஆமாம், என்னுடைய ரெஸ்தாரந்தில் (துணிக்கடைக்குப் பக்கத்திலேயே ஒரு பஞ்சாபி உணவகமும் வைத்திருக்கிறார்) இந்தியாவிலிருந்து வந்த ஆட்கள் தாக்சினுக்கு அரசியல் ஆலோசகர்களாக செயல்பட வந்திருக்கிறோம் என்று பல தடவை சொல்லியிருக்கிறார்கள்” என்று அசைக்க முடியாத ஆதாரத்தையும் வைத்தார். ஜஸ்விந்தர் சில தலைமுறைகளாக தாய்லாந்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருடத்திற்கு ஓரிரு முறை இந்தியா போய் வந்தாலும் அவருக்கு அங்குள்ள நிலவரங்களெல்லாம் அத்துப்படியாக தெரியாது. “ஒரு பெண்மணி, பெயர் ஏதோ நிதாவோ என்னதோ அவர்தானே பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கத்தை தொடங்கி வைத்தாராமே” என்றார். ஓ, இது நம்மூர் அம்மையார் பெயர் போல இருக்கிறதே என்று தோன்றியதால் பெயரைச் சொன்னேன். ரொம்ப உற்சாகமாக “ஆமாம், ஆமாம், அந்தப் பெயர்தான்” என்று ஆமோதித்தார். “அந்த அம்மையார் முதல் தடவை ஆட்சியில் இருக்கும் போது இந்தியாவில் இல்லாமலிருக்க எனக்கு கொடுத்து வைத்திருந்தது. இரண்டாவது முறை தேர்தல் முடிந்த பிறகுதான் அங்கு சென்றேன். ஏதோ இடைத் தேர்தல்களில் எல்லாம் பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இப்போது ஓட்டுப் போட பணம் கொடுப்பதை தொழில்முறையாக அமல் படுத்தி விட்டார்கள்” என்றேன்.

உண்மையில் தாக்சின் மாடல், ராஜசேகர ரெட்டியின் மாடல் மற்றும் தற்போதைய தமிழகத்தின் மாடல் எல்லாமே ஒன்றுதான். இதில் ஏழை மக்களுக்கு இன்சூரன்ஸ், மருத்துவ உதவி என்று உபயோகமான காரியங்களும் உண்டு; தேவையில்லாத இலவசங்கள், நேரடி பண விநியோகம் என்று அப்பட்டமான ஓட்டிற்கு லஞ்சம் வழங்குவதும் உண்டு.

விடுதிக்கு திரும்பி வரும்போது ஓட்டுநர் எரிந்து போயிருந்த சென்ட்ரல் வேர்ல்டைக் காண்பித்தார். பக்கத்திலிருக்கும் இன்னும் பணக்காரத்தனமான சயாம் பாரகனை விட்டு விட்டு இதை ஏன் எரித்தார்கள் என்று கேட்டேன். “அபிசித் குடும்பம் சென்ட்ரல் கடைகளின் உரிமையாளர்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்” என்றார். அபிசித் தற்போதைய பிரதமர், இங்கிலாந்தில் படித்த கெட்டிக்கார இளைஞர். “அபிசித் எப்படி?” என்றேன். “good, good man” என்றார். “சுதெப்?” “bad, very bad man” என்றார். சுதெப் அபிசித்தின் துணைப் பிரதமர், இவர் மேல்தான் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு மிகுந்த கோபம். பிறகு நான் கேட்காமலேயே “தாக்சின் very, very good” என்று இரண்டு கட்டை விரல்களையும் தூக்கிக் காட்டிச் சொன்னார்.

Saturday, May 22, 2010

கூடு விட்டுக் கூடு பாய்வது சாத்தியமா?

எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் செய்தி வந்த போது மனதிற்குள் பிரமிப்பு ஏற்பட்டது.

க்ரெய்க் வென்ற்றர், ஹாமில்ற்றன் ஸ்மித் என்ற இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் செயற்கை உயிரினம் ஒன்றை உருவாக்கியதாக உலகிற்கு அறிவித்ததுதான் கடந்த வாரத்தின் மிகப் பெரிய செய்தி.

மூலக்கூறு உயிரியலில் வென்ற்றர் & ஸ்மித் செய்து காட்டியிருக்கும் சாதனை ஒரு மாபெரும் மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. சென்ற நூற்றாண்டின் அணுபிளப்பு பரிசோதனையின் வெற்றி எப்படி இயற்பியலின் சிகரமோ, அப்படியே இது உயிரியலின் சிகரம் என்கிறார்கள் சிலர். இல்லை செயற்கை உயிரியலின் ஆரம்பமே, உச்சம் அல்ல என்று சொல்கிறார்கள் சிலர். நான் பின்னவர்களின் கட்சி.

க்ரெய்க் வென்ற்றர் & ஹாமில்ற்றன் ஸ்மித் கண்டுபிடிப்புதான் என்ன? அதைப் பார்க்குமுன் சில முன்குறிப்புகள்.

1. வென்ற்றர் & ஸ்மித் கண்டுபிடிப்பு என்று பிரபலப்படுத்தப்பட்டாலும், கிப்சன் என்பவரும், வென்ற்றர், ஸ்மித் உட்பட 24 சக விஞ்ஞானிகளும், சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் விளைவுதான் மேற்சொல்லப்பட்ட கண்டுபிடிப்பு. இவர்களில் சஞ்சய் வஷீ, ராதா கிருஷ்ணகுமார், ப்ரஷாந்த் பார்மர் என்ற மூன்று இந்தியப் பெயர் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட ‘சயின்ஸ்’ பத்திரிகை இதை யாரும் படித்துக் கொள்ளும் வகையில் ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைக்கான இணைப்பு: http://www.sciencemag.org/cgi/rapidpdf/science.1190719v1.pdf

2. கட்டுரையை எழுதிய 25 விஞ்ஞானிகளில் மிகப் பிரபலமானவர் க்ரெய்க் வென்ற்றர்தான். வென்ற்றர் ஏற்கனவே ஒரு பெரிய சாதனையை நடத்திக் காட்டியிருக்கிறார். மனித க்ரோமசோம்களின் மரபணு (டி.என்.ஏ) எழுத்து வரிசை (human genome code) முழுவதுமாக கண்டுபிடிக்கப்படுவதில் அவராற்றிய பங்கே அச் சாதனை. பல்கலைக்கழக மற்றும் அரசு சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றிய வென்ற்றர், தனியார் நிறுவனங்களுக்குத் தாவி (பின்னாட்களில் சொந்தமாக தனியார் நிறுவனங்களைத் தொடங்கி), பிறகு வெளிப்படையாகவே “உங்களை விட நான் சீக்கிரத்தில், குறைந்த செலவில் இன்னின்ன சாதனைகளை நிறைவேற்றுவேன்” என்று பல்கலைக்கழக மற்றும் அரசு சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சவால் விட்டு சாதித்தும் காட்டியவர். சக விஞ்ஞானிகளின் பொறாமை, வயிற்றெரிச்சல், மற்ற வகை எரிச்சல், மரியாதை, மதிப்பு எல்லாவற்றையும் ஒரு சேர சம்பாதித்து வருபவர்தான் இந்த ஜான் க்ரெய்க் வென்ற்றர்.

3. தி ஜே. க்ரெய்க் வென்ற்றர் இன்ஸ்ட்டிட்யூட் என்ற தனியார் நிறுவனத்தில் செய்யப்பட்டதுதான் மேற் சொல்லப்பட்ட கண்டுபிடிப்பு.

வென்ற்றர் குழுவினரின் கண்டுபிடிப்பு என்னவென்றால் ஒரு பாக்டீரியாவின் க்ரோமோசோம் முழுவதையும் சோதனைச்சாலையிலேயே தயாரித்து விட்டு, பிறகு அந்த பாக்டீரியாவின் நெருங்கிய சொந்தக்கார இனமான இன்னொரு பாக்டீரியாவிற்குள் இருந்த க்ரோமோசோமை எடுத்து விட்டு செயற்கை க்ரோமோசோமை உள்ளே திணித்து இரண்டாவது பாக்டீரியாவை மீண்டும் செயல்பட வைத்தது. இந்தக் கூடு விட்டு கூடு மாற்றும் பரிசோதனையில் புதிய ‘செயற்கை’ பாக்டீரியா முழுவதும் முதலாவது பாக்டீரியா போலவே செயல்படுகிறது. இதனால்தான் இதை “செயற்கை உயிரினம்” என்று அழைக்கிறார்கள்.

மேற்சொன்ன சாதனையில் க்ரோமோசோம் மட்டுமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டது. மற்ற எல்லா செல் பாகங்களுமே இயற்கையாகவே அமைந்தவையே. ஆனால், செயற்கை க்ரோமோசோம் இயற்கை க்ரோமோசோம் போலவே செயல்பட்டு புதிய பாக்டீரியா மூச்சு விடுவது, சாப்பிடுவது, கழிவுகளை வெளியேற்றுவது, இனப்பெருக்கம் செய்வது முதலான உயிரினத்தின் பணிகளை செய்ய வைக்கிறது.

புதிய பாக்டீரியாவில் க்ரோமோசோம் தவிர்த்த மற்ற எல்லா பாகங்களுமே இயற்கையாக அமைந்தவை என்பதால் புதிய பாக்டீரியாவை செயற்கை உயிரினம் என்று அழைக்க முடியாது என்று ஆய்வுக் கட்டுரையே சொல்கிறது. வெறும் மூலக்கூறுகளிலிருந்து முழுக்க, முழுக்க ஒரு உயிரினத்தை சோதனைச் சாலையிலேயே உருவாக்க முடியுமா என்பதை விட அந்தச் சாதனையைச் செய்ய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகலாம் என்பதுதான் சரியான கேள்வியாக இருக்கும். இன்னும் இருபதாண்டுகள் ஆகலாம் என்பது என் கணிப்பு. ஆனால் அப்போதும் க்ரோமோசோமை வடிவமைத்துக் கொடுத்த பிறகுதான் உயிரினம் உருவாகுமே ஒழிய, மூலக்கூறுகளிலிருந்து க்ரோமோசோமே தானாக வடிவமைத்துக் கொள்வது நடக்காது. அப்படி மூலக்கூறுகளிலிருந்து க்ரோமோசோமே தானாக வடிவமைத்துக் கொள்வது எப்போது நடக்கும்? இதை எழுதிய காலத்தில் வாசித்தவர்களின் தலைமுறையில் அல்ல என்று மட்டுமே நிச்சயமாகச் சொல்ல முடியும்.

இந்த தொழில் நுட்பத்தின் நன்மை, தீமைகளைப் பற்றிய சூடான விவாதங்கள் ஆரம்பமாகி விட்டன. கண்டுபிடிப்பின் செய்தி வெளியாகி 24 மணிநேரம் முடிவதற்கு முன்பாகவே, இதைப் பற்றி கடவுள் நம்பிக்கையாளர்கள் இது பற்றி எதுவும் சொல்லவில்லை, எனவே கடவுள் இருக்கிறார் என்ற அவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது என்றெல்லாம் பலர் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பால் அவ்வளவு சீக்கிரமாக நன்மை-தீமைகள் நடக்கப் போவதுமில்லை; கடவுள் மறுக்கப்படவும் இயலாது. பொறுமைக்கு நிறைய இடம் இருக்கிறது.