Thursday, August 16, 2007

சிங்கப்பூரில் ஒரு நாள்: செராங்கூன் ரோடு


சிங்கப்பூரின் “லிட்டில் இந்தியா” என்று அழைக்கப்படும் தமிழர்கள் நிறைந்த பகுதியை கீறிச் செல்லும் பிரதான சாலைதான் செராங்கூன் ரோடு. செராங்கூன் சாலையின் ஒரு பக்கம் முழுவதும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்தவர்களுக்கு பொருட்களை விற்கும் பலவிதக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. பல்வேறு வெள்ளைக்காரர்கள் பெயர்களைத் தாங்கிய செராங்கூனின் கிளைச் சாலைகளிலும் இந்தியக் கடைகள் மலிந்திருக்கின்றன. துணிகள், உடுப்புகள், நகைகள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பத்திரிகைகள், குறுந்தகடுகள், உணவகங்கள் என்று வரிசையாக கடைகள். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக முஸ்தஃபா காம்ப்ளெக்ஸ் என்றழைக்கப்படும் பேரங்காடி. சிங்கப்பூரின் புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலும் செராங்கூன் சாலையில்தான் உள்ளது.

நான் முதலும், கடைசியுமாக செராங்கூன் வந்தது 1989ல். பிறகு பலமுறை சிங்கப்பூர் வந்தாலும் செராங்கூன் வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது நண்பர் சிங்கப்பூரில் வேறு பகுதியில் வசித்ததால் செராங்கூன் வர முடியவில்லை. இப்போது பெராக் ஹோட்டலில் இருந்ததால் செராங்கூன் சென்று பார்க்க விரும்பினேன். சில சில்லறை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் தேவைப்பட்டன. முஸ்தாஃபா சென்று அவற்றைப் பார்வையிடவும் வேண்டியிருந்தது.

பெராக் ஹோட்டலில் இருந்து நடையாக சுங்கே வந்து செராங்கூனில் திரும்பும் போது ஒருவர் – ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இந்தியர் – வந்து முஸ்தாஃபா எங்கே இருக்கிறதென்று சொல்ல முடியுமா என்று கேட்டார். நானும் அங்கேதான் போக வேண்டும், எனக்கும் வழி தெரியாது, யாரிடமாவது கேட்போம் என்று அங்கிருந்த ஒருவரிடம் இரண்டு பேரும் வழி கேட்டு விட்டு நடந்தோம்.

அபிஷேக் – அதுதான் என் சக நடைபயணியின் பெயர் – திருவான்மியூரிலிருந்து வருகிறார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலயில் பொறியியல் படித்து விட்டு நேஷனல் யூனிவர்சிடி ஆஃப் சிங்கப்பூரில் பயோ எஞ்சினியரிங்கில் முனைவர் படிப்பு படிக்க வந்திருக்கிறார். இளங்கலையிலிருந்து நேராக முனைவர். முனைவர் பட்டம் பெற நான்காண்டுகளாகுமாம்.

செராங்கூனில் முஸ்தஃபா பேரங்காடியை நோக்கி செல்லும் பாதையில் கடந்த 16 ஆண்டுகளிலும் பெரியதாக மாற்றம் ஏதும் இருப்பதாகப்படவில்லை. முஸ்தாஃபா காலத்திற்கேற்ப பெரிதளவு மாறியிருக்கிறது. கடையை பெரிய அளவில் விரிவுபடுத்தி, தளம் தளமாக, எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி காய்கறி, மளிகை வரை அத்தனையையும் வைத்திருக்கிறார்கள். எனக்கு அங்கு வாங்க வேண்டியது மிகவும் குறிப்பாக சில பொருட்கள். அவற்றை வாங்கிக் கொண்டு நகர ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆயிற்று.

வெளியில் வந்ததும் பசித்தது. முஸ்தஃபாவை சுற்றி, சுற்றி சாப்பாட்டுக் கடைகள்தான். உடுப்பி, செட்டிநாடு, பிஸ்மில்லா பவன்களையெல்லாம் ஒதுக்கி விட்டு, வயிறு பஞ்சாபி உணவு கேட்டது. முஸ்தாஃபின் செராங்கூன் சென்டருக்கு அடுத்துள்ள தந்தூரி ரெஸ்டாரண்டை முயற்சித்தேன். கொடுத்த 34 வெள்ளிகளுக்கு சாப்பாடு சுமார்தான்.

திரும்பி வரும் வழியில் குறுந்தட்டுக் கடை ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கவே உள்ளே ஏறுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. பர்தா அணிந்த ஒரு பெண்மணி ரொம்ப நட்பாக “என்ன படம் வேணும், புதுசா, பழசா?” என்றார்.

“புதுசு”

“டிவிடியா, விசிடியா?”

“டிவிடி”

ஒரு வரிசையைக் காண்பித்தார்.

“பருத்திவீரன்”

போனசாக பம்மல் கே சம்பந்தமும் இருக்கும் டிவிடியைக் கொடுத்தார்.

“போக்கிரி வேணுமா?”

“ம்ஹூம்”

“வரலாறு?”

“ம்ஹூஹூம்”

இவரை விட்டால் ஹூக்களை அதிகப்படுத்தும் படங்களைத்தான் அடுக்குவார் என்பதால் “பிரகாஷ்ராஜ், ஜோதிகா படம்…..”

“பச்சைக்கிளி முத்துச்சரம்?”

நினைவுக்கு வந்துவிட்டது. “இல்லை, மொழி”

"அது டிவிடியில் இல்லை. விசிடியில் இருக்கிறது"

தயங்கினேன்.

“நல்ல சுத்தமான பிரிண்ட்”

“சரி கொடுங்க”

இதற்குள் இன்னொருவர் வந்து “புதுசாக என்ன வந்திருக்கிறது?” என்றார்.

“எல்லாம் இருக்கு. ஆனால் சிவாஜி இன்னும் வரவில்லை. இந்த வாரக் கடைசியில் ரிலீஸ் பண்ணுகிறார்களாம்”

நான் எனது தகடுகளுக்கான 25 வெள்ளியைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். 650 ரூபாய்கள். ஆனாலும் இது சட்டபூர்வமான சரக்கு. சிங்கப்பூர் தணிக்கைக் குழு பார்த்து, "பருத்திவீரன்" 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாமென்றும், "மொழி" பெற்றோர்கள் துணையோடு குழந்தைகள் பார்க்கலாமென்றும், அளித்த ஒப்புதல் ஸ்டிக்கர் ஒட்டிய சுத்தமான சரக்கு.

No comments: