Sunday, November 28, 2010

சோனி சைபர்ஷாட் வழியாக ஒரு நீள் பார்வை



நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு சபதம். சோனி கேமரா வாங்குவதில்லை என்று. வாங்கிய முதல் டிஜிட்டல் கேமரா சோனி சைபர்ஷாட். 2001ல், 3.x மெகா பிக்சல்கள். 350 அமெரிக்க டாலர்கள் என்ற ஞாபகம். இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அதில் ஏதோ பிரச்சினை. அதைத் தள்ளி வைத்து விட்டு, புதிதாக வந்திருந்த 4.x மெகா பிக்சல் சைபர் ஷாட் வாங்கினேன். அதிலும் சொற்ப காலத்திற்குள்ளேயே ஏதேதோ பிரச்சினைகள் வந்தன. பாட்டரி பழுது. சார்ஜர் உடைந்தது. லென்ஸ் மூடி திறக்காது. திறந்தால் மூடாது. அதை ஒதுக்கி வைத்து விட்டு இனிமேல் சோனி வாங்குவதில்லை என்று முடிவு செய்து பானசோனிக் செமி எஸ்.எல்.ஆர் மாடல்கள் ஒன்றிற்கு மாறினேன். நல்ல கேமராதான். ஆனால் அதைத் தூக்கிச் சுமக்க முடியாமல் பல கோடாக் தருணங்களை நழுவ விட வேண்டியதாயிற்று. எனவே மறுபடியும் கையடக்கமான மாடல் ஒன்றைத் தேட வேண்டியதாயிற்று. பார்னம் என்ற அமெரிக்க சர்க்கஸ் முதலாளி “ஒவ்வொரு நிமிடமும் ஒரு மடையன் பிறந்து கொண்டிருக்கிறான்” என்றார். அந்த வகையில் நான் இந்த பூமியில் பல அவதாரங்கள் எடுத்து விட்டேன். சாம்சங்கில் ஒரு மாடல் வாங்க வேண்டும் என்று போனவன் மறுபடியும் ஒரு சோனி சைபர்ஷாட்டிற்காக விழுந்து விட்டேன். வீழ்த்தியது இந்தக் கேமராவில் இருக்கும் ‘ஸ்வீப் பனோரமா’ என்ற சங்கதி. பனோரமிக் எனப்படும் நீழ் காட்சிகளை படமாக்க பிரத்தியேகமான கேமராக்களும், ஃபில்மும் ஒரு காலத்தில் தேவைப்பட்டது. டிஜிட்டல் கேமராவில் இதை சாஃப்ட்வேர் வழியாகத் தீர்வு பண்ணிக் கொண்டிருந்தார்கள். புகைப்பட எடிட்டிங் செய்யும் சாஃப்ட்வேர் துண்டு துண்டாக எடுக்கப்படும் படங்களை ஒட்டி பனோரமிக் படமாக மாற்றி விடும். இப்போது சோனி அந்த தொழில்நுட்பத்தை கேமராவுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டது.



ஸ்வீப் பனோரமா எடுத்த படங்கள் ப்ளாகில் எப்படிக் காட்சியளிக்கும் என்று தெரியாததால் கீழ்க் கண்ட முயற்சி. சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

1.சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். இங்கேதான் கேமராவை வாங்கினேன்



2.டோக்கியோவின் நரிற்றா விமான நிலையம்



3.குவாய் (ஹவாய் தீவுகளில் ஒன்று) கெக்காஹா மீன் பண்ணை



4.புக்கெற் (வெளிச்சப் பிரச்சினையால் பின்னாலுள்ள கடல் சரியாகத் தெரியவில்லை)



5.கோலலம்பூர் பெத்ரோனாஸ் கோபுரங்கள்



6.ஹோச்சிமின் ஏழாம் மாவட்ட இரவுக் காட்சி



கேமரா வாங்கி சுமார் ஐந்து மாதம் ஆகப் போகிறது. இது வரை திருப்தியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா சந்தர்ப்பங்களிலும் நினைத்தது போல பனோரமிக் காட்சிகளை எடுக்க முடியவில்லை. பனோரமிக் எடுக்கும் போது கேமராவை இடதிருந்து வலமாகவோ, கீழிருந்து மேலாகவா ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் பனோரமிக் எடுக்க முடியவில்லையென்று சொல்லி விடுகிறது. ஒளி குறைவாக இருக்கும் போதும் சரி வருவதில்லை. பனோரமிக் அல்லது சாதா காட்சிகளும் நன்றாகவே எடுக்கிறது. பளிச்சென்று படங்கள் வரவேண்டும் என்ற முனைப்பில் சின்னச் சின்ன டீட்டெய்ல்ஸ் எல்லாவற்றையும் பூசி மெழுகி விடுகிறது. மற்றபடி கேமரா பரவாயில்லை. ரொம்ப கைக்கடக்கமாக இருப்பதால் பொத்தான்கள் எல்லாம் ரொம்ப குட்டி, குட்டியாக இருக்கின்றன. முரட்டுத்தனமான உபயோகத்திற்கு உகந்தது என்று தோன்றவில்லை. பேட்டரி இது வரைக்கும் நீடித்து உழைத்துக் கொண்டிருக்கிறது. சோனி மெமரி கார்டுதான் உபயோகிக்க வேண்டும் என்று அடம் பிடிக்காமல், எஸ்.டி. மெமரி கார்டும் உபயோகிக்கலாம் என்பது ஒரு அனுகூலம். 14.1 மெகா பிக்சல் கேமரா, 250 அமெரிக்க டாலர்கள் விலை.

Thursday, November 25, 2010

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும் ... 1

அத்தியாயம் 1: கண்ணாயிரம் பெருமாள் B. எழுத்தாளனை சந்தித்த கதை

ஊஷ் என்ற பேரிரைச்சலுடன் flush ஆகும் ஆகாய விமானத்தின் toilet போல big bang, அதற்குப் பின் அண்டசராசரம், அதிலே சூரியன், சூரியனைச் சுற்றும் பூமி, பூமிக்கு மேலே புல், புல்லைத் தின்ன பசு, பசுவின் பாலைக் குடிக்க மனிதன், மனிதனை வழிநடத்த போலிச் சாமியார்கள் என்று வரிசைக்கிரமமாக காரியங்கள் நடந்தேறி வந்த காலத்தில் நடந்த ஒரு கதை இது.

ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், ஜாம் பஜார், பர்மா பஜார் என்று நிலப்பகுதியில் கடை விரித்தது போதாதென்று அலைகள் வந்து நுறையைப் பரப்பிச் செல்லும் மணல் வெளி வரைக்கும் காரபஜ்ஜி, கருகிய மக்காச் சோளம், பொரித்து, அனல் காற்றில் வரளும் மீன்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளைப் பரத்தி வைத்த சென்னை மாநகர். காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சி, இடையிலும், இரவிலும் உடல்பசி, மற்றும் மக்களின் மற்ற பல தேவைகளை பூர்த்தி செய்து வந்த அதன் முக்கிய கடற்கரையாகிய மெரீனா பீச். கடற்கரையிலிருந்து மேற்கு திசையில், சற்றுத் தொலைவில் சிற்றி சென்ற்றர் பிளாசா என்றழைக்கப்படும் நவீன அங்காடி மையம். அந்த அங்காடி மையத்தின் உச்சியில் ஒரு உணவு வளாகம். அந்த வளாகத்தில் B. எழுத்தாளன் மசால் தோசை தாங்கிய ஒரு பீங்கான் தட்டும், மணமான ஃபில்ற்றர் காஃபி நிறைந்த ஒரு காகிதக் கோப்பையுமாக அமர்ந்திருந்தான். தோசையை நடுவாக்கில் பிய்த்து தேங்காய்ச் சட்னியில் தோய்த்து ஒரு விள்ளல் போட்ட பிறகுதான் அவனுக்கு நினைவு தட்டியது. எச்சல் கையைத் திசுத்தாளில் துடைத்துக் கொண்டே தன் இடுப்புப் பட்டியில் இணைக்கப்பட்டிருந்த கேமராவை உருவி, அதன் கண்ணைத் திறந்து தோசையை ஃபோகஸ் செய்யத் தொடங்கினான். அவனை ஒரு ஜோடிக் கண்கள் ஃபோகஸ் செய்வதை அப்போது உணர்ந்தானில்லை.

கேமராவை அப்படியும், இப்படியுமாகத் திருப்பி 2-3 படங்கள் எடுத்து, அவை எப்படி வந்திருக்கின்றன என்று பார்வையிட்டான். திருப்தியில்லை. ஒரோரு பதிவர்கள் என்னமாய் புகைப்படங்கள் எடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். சின்னவஞ்சி என்ற பதிவர் தோசையைப் படமெடுத்தால், எப்படி அந்த முறுமுறு தோசை முறிந்து, லேசான எண்ணெய் பிசுபிசுப்புடன் மூன்று கடுகு, ஒரு பச்சைப் பட்டாணி, முந்திரிப் பருப்பின் ஒடிந்த ஒரு துணுக்கு ஆகியன மஞ்சள் நிற உருளைக் கிழங்கு பின்னணியில் துல்லியமாகப் புலப்படுகின்றன. தான் எடுக்கும் படங்களோ, அமெரிக்காவிற்குப் போன ஐ.டி. இளைஞர்கள் சமைக்கும் உருளை மசால் போல் அசமஞ்சமாக தெரிகிறது. ஒரு வேளை தன்னுடைய கேமராவில்தான் எதோ குறைபாடோ, இல்லை தன்னுடைய தோசைதான் சரியில்லையோ என்று பலவாறாக அவன் குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் தன் பக்கத்தில் யாரோ நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான்.

சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரம், பூப்போட்ட சட்டை, சட்டைக்கு சம்பந்தமில்லாத 55 வயது முகமும் உடல் மொழியும், சற்று வழிசல் கலந்த ஒரு சிரிப்பு.

“பத்திரிகையாளரா நீங்க?”

ஒரு காலத்தில் பத்திரிகையாளனாக வேண்டுமென்ற கனவில் திரிந்தவன் B. எழுத்தாளன். விதி வேறு திசைக்கு இழுத்துச் சென்று விட்டது. அப்படியும் பத்திரிகையுலகம் தப்பவில்லையே என்ற விசனம் B. எழுத்தாளனுக்கு உண்டு. இப்படி சடுதியில் தோன்றிய எண்ண ஓட்டத்தை நிறுத்தி விட்டு ”இல்லையே, நீங்க?” என்று இழுத்தான்.

“I am Kannayiram Perumal” என்று கையை நீட்டினான் அவன்.

B. எழுத்தாளனுக்கு அந்த பெயர் எங்கேயோ கேட்டது போல இருந்தது. ஆனால் பிடிபடவில்லை. அவனுக்கு அவகாசம் எதுவும் கொடுக்காமலே, கண்ணாயிரம் பெருமாள் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு எதிரில் அமர்ந்தான். அவன் கையிலே BARRISTA என்று எழுதப்பட்ட ஒரு ப்ரௌன் நிறக் காகிதக் கோப்பையிலிருந்து காஃபியும், சாக்கலேற்றும் கலந்த நல்ல மணம் எழும்பிக் கொண்டிருந்தது. அடர்த்தியான மீசையை நறுக்காகக் கத்தரித்திருந்தான். ஒரு காதிலே கடுக்கண். கழுத்தை ஒட்டிய பொன் சங்கிலி. கொஞ்சம் முறைப்பாக இருக்க முடிந்தால் தமிழ்ப் பட தாதாவின் கையாட்களைப் போலிருந்திருக்கலாம். ஆனால் வழிசலான சிரிப்பு அவனை ஒரு மலையாளப் பட காமெடியன் போலாக்கி விட்டது.

“நீங்க கட்டாயமா ஒரு எழுத்தாளர்தான். குறைந்த பட்சம் ஒரு ப்ளாக் எழுத்தாளராகவாவது இருக்க வேண்டும். சரியா?” என்றான். இப்போது வழிசல் குறைந்து அவன் பேச்சில் gravitas கொஞ்சம் கூடியிருந்தது.

B. எழுத்தாளனுக்கு இப்போது பெருமாள் மீது கொஞ்சம் மதிப்பு ஏற்பட்டு விட்டது. எப்படி இந்த ஆள் சரியாகச் சொல்கிறார் என்று சற்று திகைத்தான்.

அந்த திகைப்பே அவன் ப்ளாக் எழுத்தாளன்தான் என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டதை உணர்ந்த பெருமாள் ஒரு வித பெருமிதமாக புன்னகை செய்தான். அதில் வழிசல் குறைவாக இருந்ததனாலோ, அல்லது பெருமாள் மீதிருந்த மரியாதை அதிகரித்திருந்ததாலோ, அல்லது ஒரு எழுத்தாளனாக அறியப்பட்டபடியினாலோ, B. எழுத்தாளனுக்கு அந்த புன்னகை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

“எனக்கு உன்னால் ஒரு உதவி தேவைப்படுகிறது, செய்ய முடியுமா?” என்று நேரடியாகவும், நைச்சியமாகவும் விஷயத்திற்கு வந்தான் பெருமாள்.

B. எழுத்தாளன் மறுபடியும் alert ஆனான். மல்ற்றி லெவல் மார்க்கெற்றிங் ஆசாமிகளிடம் மாட்டிக் கொண்டு சில கசப்பான அனுபவங்களைப் பெற்றவன் அவன். அது முதல் பொது இடங்களில் முன்னே பின்னே தெரியாத நபர்கள் நைச்சியமாகப் பேசினாலே அவனுக்கு வயிற்றுக்குள் ஜிவ்வென்று ஆகி விடும்.

“வேற ஒண்ணுமில்ல. என்னப் பத்தி உன்னோட ப்ளாக்ல எழுத முடியுமான்னு கேக்கத்தான் வந்தேன்… அப்படி என்ன பாக்கற? என்கிட்ட ஒலகத்துக்கு சொல்றதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. அதைப் பரவலா கொண்டு போய் சேக்கறதுக்கு வழிகளைத்தான் தேடிட்டிருக்கிறேன்.... அட…என்னப்பா சந்தேகம்? பெரிய எழுத்தாளரான சாரு நிவேதிதா கூட என்னுடைய கதையை எழுதியிருக்கிறார் தெரியுமா? சொல்லப் போனா என்னுடைய கதையை எழுதிதான் அவரால சொந்தமா கதை எழுத முடியும்னே நிரூபிக்க முடிஞ்சுது. அதுக்கு முன்னால அவர் பேர்ல வந்த “ஸீரோ டிகிரி’ங்கற நாவலை நான்தான் எழுதினேன், நான்தான் எழுதினேன்னு அவனவன் சொன்னான்ல. அவனுங்க வாயையெல்லாம் அடைக்கறதுக்குத்தான் என்னோட கதையை எழுதி புஸ்தகமாவே போட்டார்ப்பா. நானூறு, நானுத்தம்பது பக்க புஸ்தகம்”

இப்போதுதான் B. எழுத்தாளனுக்கு கண்ணாயிரம் பெருமாள் என்ற பெயரை எங்கே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று புலப்பட்டது. சட்டென்று பதட்டத்திற்கும் உள்ளானான் அவன்.

“சார், புகழ் பெற்ற எழுத்தாளராகிய அவர் எங்கே, நான் எங்கே? நாள் ஒன்றுக்கு 3000-4000 பேர் வந்து வாசிக்கும் தளம் அவருடையது. என் ப்ளாகை என்னைத் தவிர வாசிப்பது என் மனைவி, என் மைத்துனன், என் இரண்டு தம்பிகளில் ஒருவன் என்று மொத்தம் மூன்று பேர்” என்று திணறினான் B. எழுத்தாளன்.

“B, எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம். தீவிரவாதிகள் மும்பை ஓட்டல்களைத் தாக்கிய போது, அக் காட்சிகள் சன் டி.வி.யிலும், ஜெயா டி.வி.யிலும், கலைஞர் டி.வி.யிலும், கேப்டன் டி.வி.யிலும் காட்டப்பட்டன அல்லவா? அவை கவனிக்கப்பட்டன என்பதுதான் முக்கியமே ஒழிய, எங்கே காட்டப்பட்டன என்பதா முக்கியம்?”

B. எழுத்தாளனுக்கு க. பெருமாள் சொன்னது புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனால், நிலைமை தெளிவடைவதற்கு முன்னரே கேட்கப்பட்ட உதவியை செய்து தருவதாக மண்டையை ஆட்டி விட்டான் அவன். அதன் விளைவாக உருவானதே இந்தக் கதை. எப்படி சீதைக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து, ராமாயணம் தோன்றியதோ, எப்படி த்ரௌபதிக்கு நேர்ந்த சோதனையிலிருந்து மகாபாரதம் தோன்றியது, எப்படி கண்ணகிக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து சிலப்பதிகாரம் தோன்றியதோ, அப்படி B. எழுத்தாளனுக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து தோன்றியதே இந்தக் கதை. அந்த வகையில் பார்த்தால், உலகிலேயே ஒரு ஆண்மகனுக்கு ஏற்பட்ட சோதனையால் உருவான முதல் காவியம் என்றும் இந்தக் கதையைக் கூறலாம்.

இந்தக் கதையை பிற்காலத்தில் படித்துப் பார்த்த அமுதினி-மெய்மை பதிப்பகத்தின் உரிமையாளர் இளவேனில்குமரன் இதை நூல்வடிவத்தில் கொண்டுவர முடிவு செய்தார். அச்சின் பின்னட்டையில் இந்த நூலைப் பற்றி இப்படிப் போடலாம் என்று தீர்மானித்தார்:

“மனித வாழ்வின் அபத்தங்களை வேடிக்கையாகவும், அதே நேரத்தில் கூர்த்த சிந்தனையுடன் கடுமையாகவும் எதிர்கொண்ட 21ம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்கள், அதே அபத்தங்களின் வடிவமாகவும், பிரதிநிதிகளாகவும் விளங்கினார்கள் என்பதை வேடிக்கையாகவும், அதே நேரத்தில் கூர்த்த சிந்தனையுடன் கடுமையாகவும் எதிர்கொள்ளும் இந்நூல் … இப்போது இந்தப் பத்தியை முதலிலிருந்து வாசிக்கவும்”

பின்குறிப்பு (எச்சரிக்கை): இன்னும் இந்தக் கதை பின்நவீனத்துவ முறையில் எழுதப்படவில்லை. காரணம் என்னவென்றால் பின்நவீனத்துவம் சம்பந்தமான உபதேசத்தை இனி மேல்தான் க. பெருமாள் B. எழுத்தாளனுக்கு அருளப் போகிறான். ஆனால், கிருஷ்ணபகவான் தர்மோபதேசம் செய்யு முன்பே தர்மம் உலகத்திலே நிலவியது போலவே, க. பெருமாள் பின் நவீனத்துவ உபதேசம் செய்யு முன்னரே பின் நவீனத்துவம் உலகில் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த அத்தியாயம்: கண்ணாயிரம் பெருமாள் அருளிய ‘மலை’ப் பிரசங்கம்

தவளைகளின் சப்தம்



ஹோ சி மின் நகரில் …. மீண்டும் ஏழாவது மாவட்டம்.

ஒரு கொரிய உணவகத்தில் இரவுச் சாப்பாடு.

வெளியே வரும் போது மழை பெய்து முடித்து தெருவெல்லாம் ஈரம்.

தவளைகள் ஒரே ஸ்வரத்தில் விட்டு விட்டு பாடிக் கொண்டிருந்தன.

ங்கொய்…ங்கொய்…ங்கோய் … ங்கொய் …

“எனக்கு இந்த தவளைச் சத்தம் ரொம்பப் பிடிக்கும்” என்றார் இந்தோனேசிய நண்பர் நிங்.

“நீரும், நிலமும், காற்றும் தூய்மையாக இருக்குமிடத்தில்தான் தவளைகள் இருக்கும். எனவே இங்கே சுற்றுப்புறச் சூழல் நன்றாக இருக்கிறதென்று அர்த்தம்” என்றேன் நான். சமீபத்தில் தவளைகளைப் பற்றி ஜெயமோகன் எழுதியதிருந்த நல்ல கட்டுரை ஒன்றும் நினைவுக்கு வந்தது.

“மறுபடியும் எனக்குப் பசிக்கிறது” என்று தன் வயிற்றைத் தட்டிக் கொண்டே சொல்லிச் சிரித்தார் கொரிய நண்பர் ஜங்.

(தவளை படம் சுட்ட இடம் இங்கே)

Tuesday, November 23, 2010

ஸ்பெக்ட்ரம்: பிரபல பதிவர்களின் கருத்துக்கள் சரியா?

எந்தத் தீமைக்குள்ளும் ஒரு சிறு நன்மை உண்டு. ஸ்பெக்டரம் விஷயத்தில் அது என்னவென்றால் பலரைச் சில காலமும், சிலரைப் பல காலமும் ஏமாற்றலாம்; ஆனால் எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணம் ஆனது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது இது வரை இந்தியாவில் நடந்த பெரிய ஊழல்களிலேயே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட முதல் ஊழலாக அநேகமாக அமையும். இந்த ஊழலால் நாட்டிற்கெற்பட்ட இழப்பு 1.71 லட்ச கோடிகளாக இருக்கலாம். அதற்குக் குறைவாகவும் இருக்கலாம். ஆனால் இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆதாரங்களை வெளிக் கொண்டு வர உதவியவர்களில் பிரதானமானவர்கள் இந்த ஊழலால் பாதிக்கப்பட்ட பல தனியார் நிறுவனங்களாகவே இருக்கக்கூடும். அதிகார, அரசியல், சட்ட வாய்க்கால்கள் வழியாக இந்த ஆதாரங்கள் மெல்ல, மெல்ல நகர்ந்து இறுதியாக ஆ. ராசாவை அவரது நாற்காலியிலிருந்து நகர்த்தியிருக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் பல பரிமாணங்களில் ஒன்று ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியானது. ராடியா – ராசா, ராடியா-கனிமொழி தொலைபேசி உரையாடல்களில் சில டெய்லி பயனியரில் பல மாதங்களுக்கு முன்னர் வெளியான போது, இந்த விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அச்சு ஊடகங்களும் சரி, தொலைக்காட்சி ஊடகங்களும் சரி, இந்த உரையாடல்களை மூடி மறைக்கவே முயற்சி செய்தன. இதற்கு ஊகமாகச் சொல்லப்பட்ட காரணம்: இந்த உரையாடல்கள் டாடாவிற்கும், அம்பானி சகோதரர்களுக்கும் ஏற்படுத்தும் சங்கடங்கள் ஊடகங்களைப் பழி வாங்குவதில் கொண்டு முடியும். அதாவது, டாடா, அம்பானி நிறுவனங்கள் பத்திரிகைகளுக்கும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கும் வழங்கும் விளம்பரங்களை நிறுத்தி இழப்பை ஏற்படுத்தும் என்பது. இப்போது வெளியாகி வரும் உண்மைகளோ, அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் டாடா, அம்பானிகளின் கோபத்திற்கு அஞ்சுவதை விட, தங்களது உடுப்புகளே உரியப்படுமென்று நடுநடுங்கிதான் அமைதி காத்தார்கள் என்று உணர்த்துகின்றன.



என்.டி. டிவியின் பர்கா தத், இந்துஸ்தான் டைம்சின் வீர் சிங்வி, இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, மற்றும் சில பிரபல பத்திரிகையாளர்கள் ராடியா என்னும் அதிகாரத் தரகருக்கு உபதரகு வேலை பார்த்திருப்பது இப்போது வெளியாகும் உரையாடல்களிலிருந்து வெளியாகிறது. உரையாடல்களை வெளியிட்ட ஓப்பன் மாகசீனுக்கு என்.டி. டிவி எழுதியிருக்கும் எதிர்ப்புக் கடிதத்தின் சாராம்சம் என்னவென்றால் பர்கா தத்திற்கு பதிலளிக்க வாய்ப்பு தராமல் உரையாடல்களை வெளியிட்டது பத்திரிகா தர்மத்தை மீறுவதாம். என்.டி. டிவி யாராவது செய்யும் தப்பை வெளியாக்கப் போகிறதென்றால் அந்த நபரிடம் போய் உங்களுடைய தப்பை வெளியே கொண்டு வருகிறோம், அதற்கு பதிலளிக்கும் வாய்ப்பை முன்னதாகவே தருகிறோம் என்றா கேட்டுக் கொண்டிருக்கிறது? இப்படி, இந்த உரையாடல்களின் வெளியீடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த பலரை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. புனிதர்களாக முன்னே அறியப்பட்ட சிலருக்கோ அங்கிகள் மட்டுமல்ல கௌபீனங்களே கழற்றப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் வழி வகுத்துக் கொடுத்திருப்பது இணையமென்னும் கட்டற்ற பெருவெளியே.

ஸ்பெக்ட்ரம் தீமைக்குள் நன்மை என்னவென்று தெரிகிறது. ஆனால் அந்த நன்மைக்குள் ஒரு பெரும் தீமையும் தெரிகிறது. அது, இவ்வளவு தூரம் உண்மைகள் வெளியாகியும் நம்மில் பலர் இவற்றை வெகு சாதாரணமாக உதறி விட்டுப் போய்க் கொண்டிருப்பது. லக்கிலுக், கிழக்கு பதிப்பகம் பத்ரி போன்ற வலுவான சிந்தனையும், மொழித் திறனும் கொண்ட பதிவர்களே நாட்டிற்கு இழப்பு 1.71 லட்சம் கோடிகளாக இருக்காது; அப்படியே இருந்தாலும் அவ்வளவு பணத்தையும் ராசாவே அடித்திருக்க முடியாது என்ற வகையில் எழுதினார்கள். பின்னூட்டமிடும் கணவான்களில் பலர் தேனெடுப்பவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் என்பது போல் எழுதினார்கள். ஜெயலலிதா ராசாவைக் கைது செய்யுங்கள் என்று சொன்னது ஏதோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே சொல்லப்பட்டது போல சற்றேறக்குறைய எல்லோராலும் பார்க்கப் பட்டது. சற்று யோசித்துப் பார்ப்போம். கள்ளக் கணக்கு காட்டியதன் மூலம் பங்குதாரர்களுக்கு 14,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜூ சகோதரர்கள் விசாரணைக்கும், வழக்கிற்கும் குந்தகம் ஏற்படுத்துவார்கள் என்ற காரணத்தால் ஏறக்கறைய இரண்டாண்டு காலமாக சிறையில் இருக்கிறார்கள். நாட்டிற்கு அதை விட பன்னிரண்டு மடங்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா சென்னை விமான நிலையத்தில் கதாநாயகன் போல வந்திறங்குகிறார். அவரை மானமிகு தலைவர் என்கிறார் வீரமணி.



அகில இந்திய அளவில் ராசாவின் ஊழலும், ராடியாவின் தொலைபேசி உரையாடல்களும் நாட்டில் அரசியல், அதிகார, வணிக, ஊடகத் துறைகள் சராசரி மனிதனை எவ்வளவு தூரம் மடையனாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மறுக்க முடியாத ஆதாரமாக விளங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் முக்கியத்துவம் பெறுவதோ கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் நாடகங்கள். கிழக்கு பதிப்பகம் பத்ரி, உண்மைத் தமிழன், சவுக்கு போன்ற பதிவர்கள் இந்த நாடகங்களை முதன்மைப்படுத்தியே கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த வகை வியாக்யானங்களின் பலவீனம் என்னவென்றால், இந்த உரையாடல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சத்தியசீலர்கள், இவர்கள் ஒருவருக்கொருவரிடம் உண்மையை மட்டுமே பேசிக் கொள்கிறார்கள் என்ற அனுமானம்தான். உதாரணமாக, ராடியா மாறன் இப்படிச் செய்தார், அப்படிச் செய்தார் என்று சொல்லுவது அனைத்தையுமே மாறன் செய்திருப்பார் என்று எடுத்துக் கொள்ளும் அனுமானம். ஆனால், எல்லா உரையாடல்களையும் ஊன்றிக் கவனித்தால், ராடியாவிற்கு மாறனை ஒழிக்க வேண்டும் என்ற தீவிரம் இருப்பது புரியும். அனேகமாக, இது டாடா ராடியாவிற்கு கொடுத்த வேலைகளுள் ஒன்றாக இருக்கலாம். ஏற்கனவே டாடாவிற்கும் மாறனுக்கும் முட்டிக் கொண்டது அறிந்ததே. இந்த வேலையின் ஒரு பகுதியாகவே ராடியா கனிமொழி மற்றும் ராசாவிடம் மாறனைப் பற்றி போட்டுக் கொடுப்பது, அழகிரியை மாறனை வீழ்த்தும் ஆயுதமாக செயல்படுத்துவது முதலான தந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதைப் போல் தோன்றுகிறது.



இது வரை வெளியான உரையாடல்கள் ஒட்டுக் கேட்டு பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் ஒரு சிறு பங்கே. எல்லா உரையாடல்களையும் தாங்கிய நூற்றிற்கும் மேற்பட்ட குறுந்தகடுகளை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளார். குறுந்தகடுகளிலுள்ள உரையாடல்கள் ஓப்பன் மாகசின் மற்றும் அவுட்லுக் இணைய தளங்களிலும் கேட்கக் கிடைக்கின்றன. இந்த விவகாரத்தைத் தோண்டத் தோண்ட இன்னமும் பல பூதங்கள் வெளியே வரும் என்று நம்பலாம். இதன் இறுதி பலன் இனிமேல் இது போன்ற பெரிய அளவு ஊழல்கள் துணிகரமாக செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக இருக்கலாம். அப்படி நடந்தால் 1.71 லட்சம் கோடி ரூபாய் அதற்கு நாம் கொடுத்த விலையென்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

Monday, November 22, 2010

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும்

“பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும்” என்ற தலைப்பில் 10-15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு கதை எழுதுவதாக ஒரு திட்டம் உள்ளது.

சில முன்குறிப்புகள்:

1. இக் கதையில் வரும் நபர்கள், அவர்களுடைய, சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று நம்பும் உரிமை உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

2. இக் கதை பின் நவீனத்துவ முறையைப் பின்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. பின் நவீனத்துவ முறை எவையெல்லாம் அல்ல அன்று தெளிவாக விளக்கப்பட்டது போல, பின் நவீனத்துவ முறை எது என்பது இன்னமும் விளக்கப்படாமலே உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், பல பேர் விளக்கியும் விளக்கியவர்கள் உட்பட எவராலும் புரிந்து கொள்ளப் படாமல் உள்ளது. பிரபல எழுத்தாளர் ஒருவர் பிரபல வார இதழ் ஒன்றில் பின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள வைக்காமல் கூந்தலை அள்ளி முடியேன் என்று சபதமெடுத்துள்ளார். இது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு சபதம். ஏனென்றால் எழுத்தாளர் கடவுளைக் கண்டவர். இந்த முன்னுரை எழுதப்படும் காலத்தில் சபதம் நிறைவேறவில்லையென்றாலும், இது வாசிக்கப்படும் காலகட்டத்தில் ஏதாவது ஒன்றில் அது நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அப்படி ஆகியிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள். கோனார் தமிழ் உரை கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பின் தமிழ் பயின்ற மாணவர்கள் போல.

3. இந்த முன்குறிப்புகளின் பட்டியல் நீட்டிக்கப்படுமேயொழிய தவிர எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது. அவ்வப்போது இந்த முன்குறிப்புகள் மாற்றம் பெற்றிருக்கின்றனவா என்று படித்துத் தெரிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களுடைய கடமையாகும் தவிர, அவற்றை அறிவிப்பது B. எழுத்தாளனின் கடமையோ, இந்த ப்ளாக் உரிமையாளர் AVS கடமையோ ஆகாது.