Saturday, January 28, 2012

ஜெயமோகனின் ‘ரப்பர்’: ஒரு வாசக விமர்சனம்


ஜெயமோகன் எழுதிய ‘ரப்பர்’ நாவலை சமீபத்தில் வாசித்தேன். இந்த நாவலைப் பற்றி பல ஆண்டுகளாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் நாவல் என்ற கலை வடிவத்தில் முழுமை அமைந்த முதல் தமிழ் படைப்பு என்பது போல ஜெயமோகன் பேசி, அது சர்ச்சைக்குள்ளானதாக ஜெயமோகனே அவர் தளத்தில் எழுதியதை வாசித்திருக்கிறேன். மேலும், இது அவரது முதல் நாவல் என்பதையும் அறிந்திருந்தேன், அவரது பிந்தைய நாவல்களான காடு, ஏழாம் உலகம், கன்னியாகுமரி முதலிய நாவல்களையும், பல சிறுகதைத் தொகுப்புகளையும், புனைவல்லாத படைப்புகளையும் வாசித்து, அவற்றில் பலவற்றை சிறப்பாகக் கருதி வருவதால், அவரது முதலாவது நாவலை வாசிக்க ஆர்வம் கொண்டிருந்தேன். நாவல் எழுதப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அதைக் குறித்து பிறர் எழுதிய விமர்சனங்களும், பிற கருத்துக்களும் இணையத்தில் இருக்குமென்பதால், நாவலை வாசித்து முடித்த கையோடு அவற்றையும் தேடி வாசித்தேன். எனவே, இந்த விமர்சனம் நாவலைப் பற்றியது மட்டுமல்ல, சில விமர்சனங்களின் மீதும்.
‘ரப்பர்’ நான் வாசித்த ஜெயமோகன் நாவல்களுக்குள்ளேயே வாசித்த எளிதான நாவல். சில மணிநேரங்களுக்குள்ளேயே வாசித்து முடித்து விட்டேன். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இது ஆரம்ப நிலை வாசகர்களைக் கவரும் வண்ணம், எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது. நாவலில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு தெரியாதவர்களை கொஞ்சம் பயமுறுத்தலாம். மற்றபடி, எளிய நடை; எளிய தத்துவ அணுகுமுறை; வெளிப்படையான, சற்று அதீதமான உணர்ச்சித் தெறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கதை சொல்லப்பட்டுள்ளது. நாவலின் நீளம் குறை. இது ஒரு போட்டிக்காக எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் போட்டியின் விதிப்படி 200 பக்கங்கள்தான் எழுதலாம். எனவே, 290 பக்கங்களாக எழுதப்பட்டதில் மூன்றிலொரு பங்கு வெட்டப்பட்டிருக்கிறது. பின்னர் சேர்க்கப்படவில்லை. நாவலை வாசிக்கும் போது அந்த வெட்டுத் தழும்புகள் ஆங்காங்கே புலப்படுகின்றன. கதையில் வரும் சில கதாபாத்திரங்களும், சம்பவங்களும் தேவைப்படும் அளவிற்கு விரிவாக சொல்லப்படவில்லை. உதாரணம், தங்கம் என்ற கதாபாத்திரமும், அவளது வாழ்வும்.
நாவலில் ஜெயமோகன் பயன்படுத்தும் நடை அவர் பின்னர் பயன்படுத்திய நடையை விட கச்சிதமாக இருக்கிறது. ஆங்காங்கே சுஜாதா வந்து எட்டிப்பார்ப்பதாகத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு:
“உள்ளிருந்து ஒரு பெண் தட்டில் காப்பியுடன் வந்தாள். பாவாடை தாவணி அணிந்திருந்தாள். முகமும் கழுத்தும் வெளிறிய வெண்ணிறத்தில், மெல்லிய தேமல்களுடன் இருந்தன. ஆரோக்கியமின்மை அவள் உடலெங்கும் தெரிந்தது. கண்கள் மட்டும் பெரிதாக, பிரகாசமாய், தயக்கத்தையும் சட்டென்று புண்படக்கூடிய ஆவலையும் காட்டக் கூடியனவாய் இருந்தன. காபியை வைத்த போது அவள் பார்வை ராமின் கண்களைத் தொட்டு விலகியது.”
ஜெயமோகனின் படைப்புகளில் பத, தர வேறுபாடுகள் எப்போதுமே அதிகமாக இருக்கும். காடு, ஏழாம் உலகம் முதலிய தரமிக்க நாவல்களைப் படைத்தவரா கன்னியாகுமரி என்ற நாவலையும் எழுதினார் என்று வியக்க வைப்பார். சிந்தனையிலும், மொழியிலும் பல படைப்புகளில் உச்சத்தைத் தொடும் அவர் சில படைப்புகளில், சிந்தனையிலும், மொழியிலும் பாமரத்தனத்தை வெளிப்படுத்தி பாதாளத்தைத் தொடுதுவதும் உண்டு. சமயங்களில் ஒரே படைப்புக்குள்ளும் இந்த வேறுபாடுகளைக் காணலாம். “ரப்பர்” நாவலிலும் இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:
“பிரான்ஸிஸ் சட்டென்று புல்லரித்தான். எத்தனை அற்புதமான வரிகள்! இவை ஏன் இதுவரை புரியவில்லை? திரும்பத் திரும்பக் கேட்டும் என் மனசைத் தாக்கவில்லை? ஒவ்வொன்றுக்கும் ஒரு மனோபாவம் வேண்டுமா?  ஒரு சந்தர்ப்பம், ஒரு காலம் வர வேண்டுமா? அந்த வார்த்தைகளைப் பலமுறை மனசுக்குள் திரும்பத் திரும்பக் கூறினான். சொல்லச் சொல்ல அவை மந்திரம் போல அவனுள் விரிந்தன. புதுப் புது அர்த்தங்களுடன் வளர்ந்தன. ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை.”
ரமணிச்சந்திரன் எழுதுவது போலிருக்கிறது மேற்கண்டது. அதிலும் “ஆகாயத்துப் பறவைகள்! ஆகாயத்தில் ஒரு பறவை” ரொம்ப சூப்பர். அப்போதே மணிரத்னம் படத்திற்கு வசனம் எழுதத் தயாராகி இருந்திருக்கிறார் ஜெயமோகன்.
===
“ரப்பர்” மீதான விமர்சனங்களைக் கண்ட போது என் கவனத்தை ஈர்த்தது பெரும்பாலோர் இதை ஒரு சூழியல் நாவலாக சித்தரித்திருப்பது. காடுகளை, அல்லது வாழைத் தோட்டங்களை அழித்து ரப்பர் மரங்களை நட்டது சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தியுள்ளது; அதை எதிர்த்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்று பலர் சிலாகித்திருக்கிறார்கள் (உதாரணத்திற்கு சிலிக்கான் ஷெல்ஃப் என்ற தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரை வேக்காட்டு விமர்சனத்தைக் குறிப்பிடலாம்). “ரப்பர்” என்று தலைப்பைச் சூட்டப்பட்டுள்ள 175 பக்க நாவலில் ரப்பரின் தீமைகள் சொல்லப்படுவதும், அதை எதிர்க்கும் இயக்கம் பற்றி குறிப்பிடப்படுவதும் மொத்தமாக நான்கு பக்கங்களைத் தாண்டாது.
“ரப்பர்” சூழியல் நாவல் இல்லையெனில் வேறென்ன? நூலிலேயே அது சமூக நாவல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் சரியும் கூட. “ரப்பர்” என்பது இந்த நாவலில் ஒரு உபகரணம்தான். நாவலின் அடிநாதம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுரபலம் பெற்றெழுந்த நாடார்களின், குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சமூக வரலாறுதான். நாடார்களின் எழுச்சி, பல இடை, உயர் நிலைச் சாதிக்காரர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தில் நடந்தது. அதில் நாயர் சாதிக்காரர்களின் சமூக வரலாற்றையும் “ரப்பர்” ஓரளவுக்குத் தொடுகிறது.
“பண்புடன்” என்ற மின்னிதழில் “வன்மம் தோய்ந்த வசை” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள மதிப்புரை கிறிஸ்தவ நாடார்களின் சாதி, மத வரலாற்றை “ரப்பர்” காழ்ப்புடன் சொல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறது. சுட்டிக் காட்டப்பட்ட பல குறைகளுக்கு நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை ஜெயமோகன் தான் எழுத வந்த விஷயத்தைப் பற்றி பெரிதாக ஆய்வோ, உழைப்போ செய்ததாகத் தோன்றவில்லை.
“பண்புடன்” இதழில் விமர்சனம் எழுதியவர் நாவலில் பாஸ்டராகக் குறிப்பிடப்படும் ‘ஜோசப் ராஜேந்திரன்’ உண்மையில் பாதிரியார்தான். ப்ரோட்டஸ்டாண்டு பாஸ்டருக்கும், கத்தோலிக்க பாதிரியாருக்கும் வேறுபாடு தெரியாமல் ஜெயமோகன் குழப்புகிறார் என்கிறார். நுட்பமாக வாசித்தால் நாவலின் மையமாக இருக்கும் பெருவட்டர் குடும்பம் ப்ரோட்டஸ்டாண்டு பிரிவைப் பின்பற்றும் குடும்பம் என்பது புலப்படும். ‘ஜோசப் ராஜேந்திரன்’ குறித்த வர்ணனையிலேயே அவர் ப்ரோட்டஸ்டாண்டு பாஸ்டர்தான் என்று துலங்கி விடுகிறது. ஏனென்றால், கத்தோலிக்க பாதிரிமார்கள் தங்கச் சங்கிலி அணிவது வழக்கமில்லை. அதே நேரத்தில் பெருவட்டர் குடும்பத்தைச் சேர்ந்த “திரேஸ்,” “பிரான்சிஸ்” போன்ற பெயர்கள் ப்ரோட்டஸ்டாண்டு குடும்பங்களில் வைக்கப்படுவது வெகு அபூர்வம். ஆக மொத்தம், தான் எழுத முன்வந்த ப்ரோட்டஸ்டாண்டு நாடார்கள் சமூகத்தைப் பற்றிய ஜெயமோகனின் அறிவு மேலோட்டமானது என்றுதான் தோன்றுகிறது.  
நாவல் ப்ரோட்டஸ்டாண்டு நாடார்களை நான்கு தலைமுறைகளாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க, இடையிடையே நாயர்களைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. போதிய விபரமும், விவரிப்பும் இல்லாததால்தான் இவற்றைக் குறிப்புகள் என்கிறேன். ஒரு வேளை, இவையெல்லாம் நாவலின் நீளத்தைக் குறைக்கும் போது பலி கொடுக்கப்பட்டனவோ என்னவோ. தங்கம் என்னும் நாயர் பெண் நாவலின் முக்கிய பாத்திரமாக காண்பிக்கப்படுகிறாள். செல்வாக்குள்ள குடும்பத்திலிருந்து, அந்தக் குடும்பம் சரிவைச் சந்தித்தபின் பெருவட்டர் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வருகிறாள். அவளுக்கும், பெருவட்டர் வீட்டிலிருக்கும் திருமணமாகாத இளைஞனுக்கும் காம உறவிருக்கிறது. அவளுக்கு நாவலில் சொல்ல எவ்வளவோ இருக்கலாம். ஆனால், அவள் ஒரு தடாகத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டு போய் விடுகிறாள். ஜெயமோகன் படைப்புகளில் இளம் நாயர் பெண்களும், தடாகமும் சந்தித்தால் விபரீதம்தான் விளைகின்றது என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டபடியால் இந்தச் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் ஆயாசத்தைத்தான் ஏற்படுத்துகிறது.           
 நாவலின் போக்கில் பல தருணங்களில் நாடகத்தனத்தைப் பார்க்க முடிகிறது. முடிவு கூட சினிமாவாகத்தான் இருக்கிறது. பிரான்சிஸ் திருந்துகிறான். ரப்பரின் தீமைகளை உணர்கிறான். சூழியல் இயக்கத்தில் இணைகிறான்.  தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரின் புறக்கணிக்க முடியாத படைப்பல்ல இது என்ற எண்ணம்தான் நாவலை முடிக்கும் போது எழுகிறது.
பின்குறிப்பு: நாவலைக் குறித்து இணையத்தில் தேடிய போது ஜெயமோகனின் படைப்புலகம் குறித்த இரு பதிவுகளைக் கண்டேன். ஜெகத் என்பவர் கைமண் அளவு என்ற தனது வலைப்பூவில் பதிவு செய்தவை இவை. மிக விரிவாகவும், தெளிவாகவும் எழுதப்பட்ட விமர்சனங்கள் இவை. வேறு எவராவது ஜெயமோகன் படைப்புகள் பற்றி இவ்வளவு சிறப்பாக விமர்சனங்களை எழுதியிருப்பார்களா என்று தோன்றுகிறது. ஏதோ காரணத்தால் இவர் தன் முயற்சியை நடுவிலேயே நிறுத்தி விட்டார் என்பது துரதிர்ஷ்டம்.      

Saturday, January 21, 2012

மாமல்லனுக்கு சுஜாதாவின் குஞ்சொன்று கூறும் பதில்


"கல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்" என்ற மாமல்லனின் கருத்தின் மேலிருந்த சந்தேகத்தை அவரிடமே கேட்டுத் தெளிவு பெறலாம் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். கூடவே, சாரு நிவேதிதா தன் வாசகர்களின் தரத்தை உயர்த்துவதற்காக எதுவும் செய்ததில்லை என்ற அவரது குற்றச்சாட்டை மறுத்தும் எழுதியிருந்தேன். எனக்கான பதிலை “விஞ்ச இயலாதவர்களின் குஞ்சுகள்”என்ற தலைப்பில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
 கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் ஆகியோர் பெரிய வாசக வட்டத்தை உருவாக்கி, வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கினார்கள். அதனால்தான் அவர்களை இடைவழிப் பாலமாக இருக்கிறார்கள் என்றேன் என்பது மாமல்லன் கருத்து. தமிழ்வாணன், பி.டி. சாமி, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் இந்த இ.வ.பா குழுமத்தில் சேருவார்களா என்று தெரியவில்லை. எட்டு வயதில் தமிழ்வாணன்; பத்தில் கல்கி; பனிரெண்டில் கையில் கிடைத்த சகலமும்; பதினைந்தில் சுஜாதா, ஜெயகாந்தன், அபூர்வமாகக் கிடைத்த ராஜம் கிருஷ்ணன்; பதினெட்டில் விகடன் மூலமாக கி.ராஜநாராயணன்; இருபத்தி ஆறில் இந்தியா டுடே இலக்கிய மலர் மூலமாக நாஞ்சில் நாடன்; முப்பத்து நான்கில் சென்னைப் புத்தகக் கண்காட்சி வாயிலாக புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன்; அதன் பின்னர் வந்த புத்தகக் கண்காட்சிகள் வழியாக ராஜ் கவுதமன், ஜோ டி க்ரூஸ் சாரு நிவேதிதா; சாரு மூலமாக ப. சிங்காரம், ஜி. நாகராஜன் இந்திரா பார்த்தசாரதி; சுஜாதா வழியாக மனுஷ்யபுத்திரன்; மனுஷ்யபுத்திரன் மூலமாக அ. முத்துலிங்கம்; அ. முத்துலிங்கம் வழியாக பி.ஏ. கிருஷ்ணன்; ஜெயமோகன் மூலமாக கண்மணி குணசேகரன் – இப்படியாக இந்த நாற்பத்து நான்கு வரை விரிந்ததே எனது வாசிப்பனுபவம். வரும் காலங்களில் நகுலனையும், பிரமிளையும் கூட வாசிக்கலாம். சாவதற்கு முன் கோணங்கியைக் கூட வாசிக்க முடியலாம், அல்லது அவரை வாசிக்கும் முயற்சியிலேயே செத்தும் விடலாம், யாருக்குத் தெரியும்?
வாசிப்பதும், எழுதுவதும்; திரைப்படங்களைப் பார்ப்பதும், உருவாக்குவதும்; ஓவியங்களைக்  காண்பதும், தீட்டுவதும், சில அதிர்ஷ்டசாலிகளுக்கே முழு நேரத் தொழிலாக அமைய முடியும். என்னைப் போன்ற பெரும்பாலானவர்களுக்கு வேறு தொழில்கள் அமைந்து விடுகின்றன. கலையைக் கண்டு கொள்வது, ரசிப்பது, அபூர்வமாக படைத்துப் பார்ப்பது இவையனைத்திற்கும் எங்களுக்குக் கிடைக்கும் நேரம் சொற்பமே. கடலளவு இருக்கும் கலைப் படைப்புகளில், புல்லளவே இருக்கும் மானிட வாழ்வில், கடுகளவே காண முடியும் என்பதால்தான் குருநாதர்களும், வழிகாட்டிகளும் தேவைப்படுகிறார்கள். அவர்களில் யார், என்ன செய்தார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
மாமல்லன் சொல்கிறார்: “சுஜாதா சுஜாதா என்கிறீர்களே அவர் அறிமுகப்படுத்தியதெல்லாம் வெகுஜன வாசகர்களுக்கு வித்தியாசமாய் இருப்பதுபோல் தோன்றும் அதே சமயம் ரொம்ப பயமுறுத்தாத வேலியோர வண்ணதாசன்களைத்தான்.
அதில் பெரிய தவறும் இல்லை. அதற்காக, அப்படி அறிமுகப்படுத்தியதன் மூலம் அவர் ஏதோ பெரும் இலக்கியத் தொண்டாற்றியதைப் போன்ற தொனிதான் சகிக்க முடியவில்லை. மாபெரும் சாதனைகள் புரிந்த இலக்கியவாதிகளையே ‘தொண்டு’ ஆற்றினார் என்று சொல்வது ஏதோ திட்டுவதுபோலத்தான் தோன்றுகிறது. தேனீ தனக்காக சேகரிக்கும் தேனை, சேகரிக்க முடியாமல் இருக்க முடியாததால் சேகரிக்கும் தேனை, தேன் சேகரிப்பு தவிர அதற்கு வேறு ஏதும் தெரியாது என்பதால் அது சேகரிப்பதைத் தொண்டு என்று சொல்ல முடியுமா? தேனின் அற்புதங்கள் அனைத்தையும் அறிந்தேதான் இது சொல்லப்படுகிறது.
கலையின் சிகரங்களுக்கே இதுதானென்கையில், சிறந்த கேளிக்கையாளராய் இருந்த பல தருணங்களில் ஏற்கெனவே எவனெவனோ சேகரித்த ’தேனை’ சொந்த லேபிள் ஒட்டி விநியோகித்த சுஜாதவை இலக்கிய குலதெய்வமாய் இணையத்தில் கொண்டாடுவதை அவரே ஏளனமாய்த்தான் பார்ப்பார் என்பது ஏன் இந்தத் தலைமுறைக்குப் புரிவதில்லை.
இதற்குப் பதிலாக ஒரு பதிவரின் கருத்தை முன்வைக்கிறேன்:
நல்ல படைப்புகள் பற்றிய  அறிமுகங்களில் இரண்டுவகை உண்டு.
“அறிமுகப்படுத்தி உயர் பிம்பம் அடைதல்.
பிரபலம் என்கிற பெரும் பிம்பம் கிடைத்தபின் நல்ல விஷயம் என நாம் நம்புகிறவற்றை பிராபல்யத்தைப் பயன்படுத்தி வெகுஜனங்களிடம் அறிமுகப்படுத்துதல்.
பின்னதன் முற்றமுழுமுதல் உதாரணம் சுஜாதா. அவரது வடிவ பங்களிப்பு போலவே இலக்கிய அறிமுகப் பங்களிப்பும் அபாரமானது. இலக்கியவாதிகளின் பெயர்களை குமுதத்தில் ‘உதிர்த்ததால்’ அவருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏகப்பட்ட இளைஞர்களுக்கு பிரயோஜனம். இன்னும் சொல்லப்போனால் இதில் சுஜாதாவுக்கு நஷ்டம் என்று கூட சொல்லலாம்.
சுஜாதா மூலம் கிடைத்த அறிமுகத்தால் தீவிர இலக்கிய வாசிப்பிற்கு வந்து சுஜாதாவைத் தாண்டிப் போனவர்கள் கனிசமானோர் எனலாம். அதைப் பற்றி அறியாதவர் அல்லர் என்பது மட்டுமின்றி அதைப்பற்றி கவலைப்படாதவராகவும் அவர் இருந்தார்.”
மேற்கண்ட பதிவை எழுதியதும் மாமல்லனே. ஆக, சுஜாதா இலக்கியத் தொண்டாற்றினார், தேநீர் ஆற்றினார் என்றெல்லாம் குஞ்சுகள் சொல்வது இருக்கட்டும். பெரிசே அதைத்தானே சொல்லியிருக்கிறது.  ஆனால், 20.10.2010ல் அபாரமான இலக்கிய அறிமுகப் பங்களிப்பு செய்த சுஜாதா, 20.01.2012ல் வேலியோரம் லேபிள் ஒட்டப் போய் விடுவதன் மர்மம்தான் புரியவில்லை. ஒரு வேளை இணைய இலக்கிய மும்மூர்த்திகள் மேலிருக்கும் கடுப்புதான் சுஜாதா மேல் பொசிகிறதோ, என்னவோ.
எழுத்தாளப் பெரிசுகள் நாக்கைப் புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொள்ளட்டும். சுஜாதாவே எழுதியிருக்கிறார்: க.நா.சு எப்படி டில்லியில் முகத்தைத் திருப்பிக் கொண்டார்; சுரா நாகர்கோவிலில் எப்படிப் புறக்கணித்தார் என்று. இந்தப் பெரிசுகளிடம் இருந்த/இருக்கும் பொறாமையோ, காழ்ப்புணர்ச்சியோ, வியாபாரத் தந்திரங்களோ கிடையாது வாசகக் குஞ்சுகளுக்கு. தான் கண்டுபிடித்த எழுத்தாளர்களையும், படைப்புகளையும் – அது Bill Bryson-ஆக இருக்கலாம்; ஜெமினி ஸ்டுடியோ காண்டீன் சமையற்காராக இருக்கலாம் – அறிமுகம் செய்து வைத்த சுஜாதாவின் நோக்கங்களிலும், எழுத்துக்களிலும் இந்தக் குஞ்சுகள் ஒரு குழந்தையின் தேடலையும், தேடியதை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டு, பிற படைப்பாளிகளை மனதார பாராட்டும் பண்பையும் கண்டார்கள். அதனால்தான் சுஜாதாவை ஒரு தலைமுறையே தன் காலம் முழுவதும் போற்றிக் கொண்டிருக்கிறது. 
இனிமேல் மும்மூர்த்திகளின் அறிமுகப் பங்களிப்பையும் பார்த்து விடலாம்.
பைபிளில் பவுல் இப்படியாக எழுதுகிறார்:
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
நமது மும்மூர்த்திகள் உயர் பிம்பம் அடைவதற்காக அறிமுகம் செய்திருக்கலாம். “உன் முதுகை நான் சொறிகிறேன், என் முதுகை நீ சொறி” என்று திட்டம் தீட்டி அறிமுகம் செய்திருக்கலாம். இன்னொருவரைப் புறக்கணிக்கின்ற அரசியல் முயற்சியாக மற்றொருவரை அறிமுகம் செய்திருக்கலாம். படைப்பை வாசிக்காமலேயே, இணையத்தில் டௌன்லோடு செய்து எழுதியிருக்கலாம். உள்ளீடற்ற, சொந்த அனுபவமற்ற அறிமுகங்களைச் செய்திருக்கலாம். சுயபுராணம் பாடுவதற்காக அறிமுகம் செய்திருக்கலாம். உண்மையாகவே ஒரு படைப்பாளியாலோ, படைப்பாலோ கவரப்பட்டு அறிமுகம் செய்திருக்கலாம். எப்படியானால் என்ன? இவர்கள் மூலமாக படைப்புகளும், படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.
எஸ். ராமகிருஷ்ணனின் சிந்தனையும், புனைவும் எனக்கு உவப்பளிக்காததால், அவரை நான் அதிகமாகப் படிப்பதில்லை.  ஆனால், சாரு நிவேதிதாவையும், ஜெயமோகனையும் இணையத்திலும், பதிப்பிலும் படித்து வருகிறேன். இருவரின் படைப்புகள் மீதும், இயங்குமுறைகள் மீதும் எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. ஆனால், இருவரும் கணிசமான அளவில் படைப்புகளையும், படைப்பாளிகளையும் அறிமுகம் செய்து வைப்பவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. சாரு நிவேதிதா ஒரு காலத்தில் இந்த அறிமுகங்களைத் தீவிரமாக செய்து கொண்டிருந்தார். நபக்கோவ், யோசா, காபிரியல் கார்சியா மார்க்வெஸ், ப. சிங்காரம் என்று அவர் எழுதியதால் தமிழ் வாசகப் பரப்பிற்கு பரிட்சயமான எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஜெயமோகன் மூலமாக எனக்குத் தெரிய வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வைக்கம் மொகமது பஷீர்,
பால் சக்கரியா, கண்மணி குணசேகரன் முதலியோர். விஷ்ணுபுரம் வாசக வட்ட விருது மூலம் தெரிய வந்த அ. மாதவனை இன்னும் படிக்கவில்லை. ஆனால், ஆர்வமாக இருக்கிறேன்.
இந்த அறிமுகங்களெல்லாம் வாசகன் முதுகில் சுமையை ஏற்றுகின்றன; அவன் கண்களை குருடாக்குகின்றன; தங்களை முன்னிருத்தி இலக்கியத்தைப் பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதெல்லாம் மாமல்லனின் வரட்டு வாதமாகத்தான் படுகிறது. சாருவோ, ஜெயமோகனோ, ஏன் சுஜாதாவே கூட அறிமுகப்படுத்தினார் என்பதற்காகவே ஒரு படைப்பு மேன்மையடைவதுமில்லை; இவர்கள் அறிமுகப்படுத்தாதவை என்பதனால் மட்டுமே தோல்வியடைவதுமில்லை. இன்றைக்கு சாருவும், ஜெயமோகனும் உயர்வாகப் பேசும் எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகள் தனிப்பட்ட வகையில் எனக்கு ஏமாற்றமளிக்கும் படைப்புகளே.
“புல்லுக்குப் பொசிகிறதே” என்று எந்த விவசாயியும் கவலைப்படுவதில்லை. இயற்கையின் நியதி அதுதான் என்பது அவனுக்குத் தெரியும். நெல்லுக்கு நீர் போய்ச் சேருகிறதா என்பதில்தான் அவன் கவனம் இருக்கும். ஆனால் “புல்லுக்குப் பொசிகிறதே” என்ற பொருமலிலேயே மாமல்லனின் காலம் விரையமாவதாகத் தோன்றுகிறது. தி. ஜானகிராமனுடன் சாரு நிவேதிதா பேசியிருப்பாரா போன்ற புலனாய்வுகளில் புளங்காகிதம் எய்துவதை விட்டு விட்டு “எக்ஸைல்” நாவலுக்கு எழுதியது போன்று சாரமான விமர்சனங்களை அவர் தொடர்ந்து எழுதினால் என்னைப் போன்ற குஞ்சுகளுக்கு உபகாரமாக இருக்கும்.                 

Sunday, January 15, 2012

எக்ஸைலுக்கு மாமல்லன் எழுதிய விமர்சனம்


தமிழ் புத்தக விமர்சனங்களைப் படித்து நாளாகிவிட்டது. முன்னெல்லாம், விமர்சனங்கள் ஆங்காங்கு தட்டுப்படும். அவற்றில் பெரும்பாலும் சாரமாகவும் இருக்கும். எழுத்தாளர்களே ஒருவர் படைப்பைப் பற்றி மற்றவர் எழுதினார்கள். உதாரணமாக, புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, எஸ். ராமகிருஷ்ணன் முதலான தமிழின் பெரிய இலக்கியக் குடுமிகளையே சாரு நிருவேதிதா கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார். இப்போதெல்லாம், விமர்சனங்களும் குறைந்து விட்டன; அவற்றிலிருந்த சாரமும் குறைந்து விட்டது. “நான் உன் முதுகைச் சொரிந்து விடுகிறேன், நீ என் முதுகைச் சொரிந்து விடு” என்கிற மாதிரி நிலைமை வந்து விட்டது. விளைவாக, தமிழில் எழுதப்படும் எல்லாப் படைப்புகளுமே “ஆகச் சிறந்த” படைப்புகள்தான் என்பது போல் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாரு நிவேதிதாவே இந்த மாதிரி தில்லாலங்கடி வேலைகளைச் செய்வது மாமல்லன் எழுதிய ஒரு பதிவில் தெரிய வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் மாமல்லன் எழுதி வரும் பல இலக்கிய விமர்சனங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. ஒரு நவீன நக்கீரராக இவர் எல்லாத் திசைகளிலும் வாள் சுழற்றி வருகிறார். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் முதலான பெரும் தற்காலப் படைப்பாளிகளை கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கியிருக்கிறார். சமயங்களில் அந்த விமர்சனங்கள் சிறு, சிறு எழுத்து, இலக்கண, மற்றும் புரிதல் பிழைகளை பூதாகாரப்படுத்தி எரிச்சலுண்டாக்கலாம். ஆனால், அவரது நுண்ணிய அவதானத்தில் ஒரு பிரமிப்பு எழுவது தவிர்க்க முடியாதது.
சாரு நிவேதிதாவின் எக்ஸைலுக்கு மாமல்லன் எழுதிய விமர்சனம் அவரது மற்ற விமர்சனங்களிலிருந்து வேறுபட்டது. முதலாவது, இவர் எக்ஸைலின் முதலிருபது பக்கங்கள் வரைக்கும்தான் வாசித்திருக்கிறார். அதற்கு மேல், வாசிக்க முடியவில்லை, இனி வாசிக்கும் தருணமும் வரப்போவதில்லை என்கிறார். படித்தது வரையிலான விமர்சனமும் கூர்மையாகவும், தெளிவாகவும் இருக்கிறது: “சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர் தம் வலைத்தளத்தில் ஏற்கெனவே பொங்கிய ஊசிப்போன பொங்கலை எல்லாம் உதயாவின் எண்ணங்களாக அதீத தர்மாவேசங்களாகக் கிழக்கு தொண்ணையில் விநியோகிப்பதைப் பார்க்க, இவ்வளவு வறட்சியா எனப் பரிதாபப்படுவதற்கு பதிலாக, கண்டதையும் கலந்துகட்டி புக்கு தேற்றும் புத்திசாலித்தனத்தைப் பார்த்து எரிச்சல்தான் வருகிறது.”  சாரு நிவேதிதாவின் முந்தைய நாவல்களைப் படித்தவர்களுக்கு, இந்த விமர்சனத்திலிருந்து பிடிபடுவது என்னவென்றால் எக்ஸைல் புதிய தலைப்பில், புதிய அட்டைக்குள், புதிய பதிப்பகத்திலிருந்து பழைய படைப்பு என்பது. ஆக ஸீரோ டிகிரிக்குப் பின்னர் சாரு நிவேதிதா எதையும் புதிதாகப் படைக்கவில்லை என்று தோன்றுகிறது.
ராசா ஆடை எதையும் உடுத்தவில்லை என்பது சிறுவன் சொல்லித்தான் உலகிற்கு தெரிந்தது. சாரு நிவேதிதாவின் சமீபத்திய படைப்புக்களில் இலக்கியம் இல்லை என்பது புலனானாலும், அது ஏன் என்பது தெரியாமலிருந்தது. மாமல்லன் காரணத்தை சர்வ எளிமையாக விளக்கி விடுகிறார்: “தான் வாழ்ந்த வாழ்வை எவ்வளவுதூரம் ஜோடனை செய்யாமல் உண்மையாகப் பார்க்கிறான். அவனையும் மீறி அவனுக்கு எதிரானவற்றை எழுத்தில் வெளிப்பட தன்னை எழுத்துக்கு எவ்வளவுதூரம் திறந்து வைத்திருக்கிறான் என்பதே எனக்கு முக்கியம்.”
இந்த விமர்சனத்தை பிச்சைக்காரன் என்ற பதிவர் தன் தளத்தில் தரக்குறைவாக விமர்சிக்க, அதற்கு பதிலாக மாமல்லன் எழுதிய பதிவும் முக்கியமானது. இதில் சாரு நிவேதிதாவின் இலக்கியப் படைப்புலகத்தையே சில வரிகளுக்குள் முழுமையாக விமர்சித்து விடுகிறார் மாமல்லன். முதலாவது
பேர் சொல்லப்படாத ஒருவருக்கும் இவருக்கும் நடக்கும் தொலைபேசி உரையாடல்:
பே.சொ.ஒ.: இல்ல சார். பொதுவாவே ஜெயமோகன் எஸ்.ரா மாதிரி இல்லாம சாருவை நீங்க சாஃப்ட்டா டீல் பண்றீங்கன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அது அப்படி இல்லேன்னு காட்ட இது ஒரு சான்ஸ் இல்லையா?
மாமல்லன்: ஏம்பா! ஜெயமோகனையும் எஸ்.ராவையும் பத்தி எழுதறேன்னா அவங்க கட்டுரை எழுதறாங்க இல்லாட்டா சிறுகதை எழுதறாங்க. அதைப் படிச்சா எனக்கு ஏதாவது சொல்ல இருக்கு. சாருவோட தளத்துல அப்பிடி என்ன இருக்கு? அப்படி இருந்து சொல்லாமப்போனாதான நான் சாருவை மட்டும் சாஃப்ட்டா டீல் பண்றதா சொல்லலாம்?”
அதன் பின்னர் இது: “கல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்.
சாரு நிவேதிதா தம் இணைய சாம்ராஜ்ஜியத்தில் நான்கே நான்கு உருப்படியான வாசகர்களையாவது உருவாக்கியிருக்கிறாரா? அப்புறம் என்ன இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு. மெளனிக்கு வாசகர்களாக இருந்தோரில்  பெரும்பாலோர் எழுத்தாளர்கள். அது உச்சபட்சம். அதை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பது முடியாத காரியம். குறைந்தபட்சமாய் நான்கு விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் அளவிற்கு நல்ல வாசகர்களை உருவாக்குவதுதான் எந்த எழுத்தாளனின் இலக்கியப் பயன்பாடுமாய் இருக்கவேண்டும். சும்மா கும்பலைக் கூட்டி வைத்துக்கொண்டு சூடத்தைக் கையில் ஏந்தி தன் முகத்துக்கே தீபாராதனை காட்டிக்கொள்வதறகுப் போய்க் கொண்டாடு கொண்டாடு என ஏனிந்தக் கொலைவெறிக் கூப்பாடு?”

மேற்கண்ட விஷயத்தில் மாமல்லன் கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன் மூவருமே வெகுவாக எழுதியவர்களே, ஆனால் சுஜாதா போன்று அவர்கள் வாசகர்களுக்கு இலக்கிய அறிமுகம் செய்து வைத்ததாகத் தோன்றவில்லை. அந்த விஷயத்தில் சுஜாதா ஒரு முன்னோடி. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா முதலியோர் அதை ஓரளவுக்குப் பின்பற்றி வந்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். நபக்காவ், யோசா, காபி போன்ற எழுத்தாளர்களை சாரு தீவிரமாகவே அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவை இப்போது கவனம் பெறவில்லை என்பதற்குக் காரணம் சாரு நிவேதிதா ஆடும் பலவித தில்லாலங்கடி விளையாட்டுகள் அம்பலமாகி வருவதுதான்.  இருப்பினும், எழுத்தாளர்களும், படைப்புக்களும் இன்னும் கூர்மையாக அலசப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே மாமல்லன் இது போன்ற விமர்சனங்களை மேலும் எழுத வேண்டுமென விரும்புகிறேன்.
--
கண்மணி குணசேகரனின் சிறுகதைகள்
கண்மணி குணசேகரனின் எழுத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை வாசிக்க ஆவலாக இருந்தேன். சமீபத்தில் “வெள்ளெருக்கு” என்ற சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. முதல் நான்கு கதைகளை வாசித்த பிறகு கை தவறுதலாக அத் தொகுப்பை எங்கோ வைத்து விட்டேன். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வாசித்த வரை நான்கு சிறுகதைகளுமே அபாரமான கதைகள். முதலாவது எல்லாக் கதைகளிலுமே ஒரு வலுவான “கதை” இருக்கிறது. வெறும் மொழியை வைத்துக் கொண்டு சிலம்பாட்டம் போடுவதையோ, ஏதோவொரு தத்துவத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதையோ காண முடியவில்லை. இரத்தமும், சதையுமான மனிதர்கள் வருகிறார்கள். ஒரு ஊரும், சமுதாயமும் இருக்கிறது. சம்பவங்கள் நடக்கின்றன. சில கதைகளில் மிருகங்கள் கதாநாயகர்கள் ஆகி விடுகின்றன. “புள்ளிப் பொட்ட” என்ற கதையில் ஒரு பெட்டைக் கோழி அதை வளர்க்கும் தம்பதிகளை விட அதிகமாக சொல்லப்படுகிறது. ஆனால் கதையின் இறுதியில், அதிகம் சொல்லப்படாத அத் தம்பதிகளின் பெண் குழந்தை மீதுதான் நமது பரிதாபம் குவிகிறது.
வெள்ளெருக்கையும், கண்மணி குணசேகரனின் மற்ற படைப்புக்களையும் வாசிக்க வேண்டும்.
--
தங்கார் பச்சானின் “பள்ளிக்கூடம்”
தற்செயலாக சன் டி.வி.யில் காண நேர்ந்தது. அப்படியே மூன்று மணி நேரம் கட்டிப் போட்டு விட்டது. சென்ட்டிமென்ட்டல் காட்சிகளும், நாடகத்தனமான அமைப்புகளும் படத்தில் நிறைய இருந்தாலும், கதையை எடுத்துச் செல்லும் விதமும், பல நடிகர்களின் இயல்பான நடிப்பும் திரைப்படத்தைச் சிறப்பாக்கி விடுகின்றது. தங்கார்பச்சானின் நடிப்பு கவனத்தை ஈர்க்கின்றது. உச்ச நடிப்பு சிநேகாவுடையது. பள்ளி விழா மேடையில் கோபமும், வெறுப்பும், கையாலாகாததனமும் வெளிப்படுத்திக் கொண்டு ஒரு உணர்ச்சிக் கலவையில் உட்கார்ந்திருப்பது அதற்கு ஒரு உதாரணம். படம் வெளிவந்த தருணத்தில் வெற்றிகரமாக ஓடியதா என்று தெரியவில்லை. இப்படம் தோல்வியடைந்திருந்தால், அது தமிழ் மக்களின் தோல்வியே.