A blog in Tamil and occasionally in English to share the writer's interests in myriad things: books, politics, science, education, events, food and travel.
Sunday, July 31, 2011
காவல் நிலையத்தில் கால் மேல கால்: திருநெல்வேலி பெருமாள்புரம் நிலையத்தில் ஒரு அனுபவம்
பாஸ்போர்ட்டில் பக்கங்கள் தீர்ந்து போனதால் புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருந்தேன். ப்ரூனே இந்தியத் தூதரகம் முகவரி கேட்டது. ப்ரூனே முகவரியைக் கொடுத்தேன். அதை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். இந்தியாவிலும் நிரந்தர முகவரி வேண்டுமாம். எனவே, அதைக் கொடுத்தேன். கொடுத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு என்னுடைய பெற்றோர் அழைத்தார்கள். “இங்கே முகவரி சரியானதா என்று விசாரிக்க போலீசார் வந்திருக்கிறார்கள். நீ வீட்டில் இல்லையென்பதால் காவல் நிலையத்திற்கு வரச் சொல்கிறார்கள். கூடவே உன் பெயர் முழுமையாக எழுதப்படவில்லை. புகைப்படமும் நகலில் தெளிவாக இல்லை.” சந்தர்ப்பவசமாக நானும் ஒரு வாரத்தில் இந்தியா வருவதால் நானே வந்து பிரச்சினையை சரி செய்கிறேன் என்றேன். இந்தியத் தூதரகத்தைக் கூப்பிட்டு டெல்லியிலிருந்து திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்ட நகலில் உள்ள பிரச்சினைகளை எடுத்துச் சொன்னேன். நாங்கள் சரி செய்து விடுகிறோம் என்றார்கள்.
திருநெல்வேலி வந்த மறுநாள் பெருமாள்புரம் காவல் நிலையம் சென்றேன். சம்பந்தப்பட்ட எழுத்தரிடம் பேசினேன். அவர் என்னுடைய தற்போதைய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு முதலானவற்றை பரிசோதித்து விட்டு, அவற்றின் நகலையும், புகைப்படம் ஒன்றையும் கொடுத்தால் அவற்றை டெல்லிக்கு அனுப்பி விடுவதாக சொன்னார். விஷயம் முடிந்ததென்று வீட்டிற்கு வந்து விட்டேன். பத்து நாட்கள் கழித்து ப்ரூனே தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. உங்கள் பாஸ்போர்ட் வந்து விட்டது. பெற்றுக் கொள்ளுங்கள் என்று. நான் இந்தியாவில் இருக்கும் தகவலைச் சொல்லி, ப்ரூனே வரும் போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன்.
கடந்த வாரம் சென்னை சென்றிருந்தேன். திருநெல்வேலியிலிருந்து தொலைபேசி. மீண்டும் முகவரியை சரிபார்க்க வேண்டுமென்கிறார்கள். எனக்குப் புரிந்தது. நான் ப்ரூனே தூதகரத்தில் தெரிவித்திருந்தேனில்லையா: டெல்லியிலிருந்து தெளிவில்லாத நகலை திருநெல்வேலிக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார்கள் என்று. அதை சரி செய்ய மற்றொரு நகலை அனுப்பியிருப்பார்கள். அதன் பேரில் மறுபடியும் ஒரு முறை முகவரியை சரி செய்கிறார்கள்.
நேற்று (30.7.11) சென்னையிலிருந்து வந்ததும் மறுபடியும் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்குப் போனேன். இந்த முறை அவர்கள் கேட்கப் போகும் எல்லா ஆவணங்களையும் தயாராக எடுத்துக் கொண்டு போனேன். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் யாரும் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்கள். 10 நிமிடத்தில் வந்து விடுவார்கள். இங்கே உட்காருங்கள் என்று ஒரு நாற்காலி கொடுத்தார்கள். அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் ஒரு ஜீப் வந்தது. வெளியே சில அதட்டல்கள் கேட்டன. வாயிலில் நின்றிருந்த காவலாளி விரைப்பானார். இரண்டு மூன்று காக்கிச் சட்டை போலிஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள். வாயில் காவலாளி துப்பாக்கியை உயர்த்தி இப்படியும், அப்படியுமாக சுழற்றி ஒரு விதமான வித்தை செய்தார். போலிஸ்காரர்கள் உள்ளே போய் விட்டார்கள். ஒருவர் என்னிடம் ஒரு ரெஜிஸ்தரைத் தூக்கிக் கொண்டு வந்து “பேர் என்ன?” என்றார். சொன்னேன். பாஸ்போர்ட் விபரங்கள் சரிபார்க்கும் அறைக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போய் புகைப்படத்தை வாங்கி உரிய இடத்தில் ஒட்டினார். அந்த நேரத்தில் என்னை முதலில் சந்தித்த ஏட்டு, “என்ன பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட எழுத்தர் வந்து விட்டாரா?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் எட்டிப் பார்த்தவர் “இன்ஸ்பெக்டர்லா” என்று சொல்லிக் கொண்டே பின் வாங்கினார்.
“ஓ, இந்த இன்ஸ்பெக்டர் வந்ததால்தான் இத்தனை தடபுடலா?” என்று நினைத்துக் கொண்டிருந்த போது என்னுடைய புகைப்படத்தை ரெஜிஸ்தரில் ஒட்டிய காவலாளி “இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க” என்று சொல்ல இன்ஸ்பெக்டர் “ஒங்க பேர் என்ன?” என்றார் அதட்டலாக. சொன்னேன். காவலாளியிடம் “நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். ரைட்டர் வந்ததும் பாத்துக்குவார்” என்றார்.
நான் திரும்பி வரவேற்புப் பகுதிக்கு வந்து அமர்ந்து கொண்டேன். ஒரு சாதாரண சம்பிரதாயத்தைத் தாமதமாக்கும் இன்ஸ்பெக்டர் சவடால், ஏற்கனவே காத்திருந்த அலுப்பு இரண்டும் எரிச்சலை உருவாக்கின. காத்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் வரவேற்புப் பகுதிக்கு வந்தார். என்னைப் பார்த்து கோபமாக “நீங்க என்ன வேலை பாத்துக்கிட்டு இருக்கீங்க? எதுக்காக இங்க நாற்காலில உக்காந்திருக்கீங்க?” என்றார்.
எனக்கு கோபம் வந்து விட்டது. “இது பொது மக்கள் உட்காரும் இடம். நானென்ன தரையிலா உட்கார வேண்டும்?” என்றேன்.
“இங்க கால் மேல கால் போட்டு ஒக்காரக் கூடாது”
“அப்டின்னு எந்த ரூல் புக்ல போட்டிருக்கு. காண்பிங்க. நான் அதுல சொல்ற மாதிரி ஒக்கார்றேன்”
இன்ஸ்பெக்டர் கோபத்தின் உச்சிக்குப் போய் விட்டார்.
“நீ யாரு?” என்று ஒருமையில் கத்தியபடி முன்னேறி வந்தார். இதற்குள் இரண்டு மூன்று காவலர்கள் வந்து இரண்டு பேருக்கும் நடுவில் நின்று கொண்டார்கள்.
“நீ கால் மேல கால் போட்டு உக்காந்திருக்கறது ரெஸ்பெக்ட் கிடையாது. இங்கிருந்து வெளியே போ” என்று கத்த ஆரம்பித்து விட்டார்.
“இங்கிருந்து வெளியே போகச் சொல்ல உங்களால் சொல்ல முடியாது” என்று நான் ஆரம்பிக்க சுற்றியிருந்த காவலர்கள் “சார் வெளிய போயிடுங்க சார்” என்று என்னிடம் சொல்ல ஆரம்பிக்க, “நான் போறேன். ஆனால் இத இப்படியே நான் விடுடறதா இல்லை” என்றபடி இன்ஸ்பெக்டர் பெயர்ப் பலகையை பார்த்தேன். “ஆர். பொன்னரசு” என்று போட்டிருந்தது. “பொன்னரசுதானே உங்க பெயர்” என்றேன். “ஆமா, உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிக்க” என்றார் அவர்.
இப்ப என்ன பண்ண முடியுங்கறத பத்தி யோசிச்சுட்டிருக்கிறேன்.
இந்த இன்ஸ்பெக்டர் சொல்வது போல கை கட்டி வாய் பொத்தி அந்தக் காவல் நிலையத்தில் நிற்க வேண்டிய எந்த வித நிர்பந்தமும் எனக்குக் கிடையாது.
நான் என்ன கொலை செய்தேனா, கொள்ளை அடித்தேனா, அல்லது ஒரு சிறிய தவறையாவது செய்தேனா? கிடையாது. சுமார் ரூ 4000 இந்திய அரசிற்கு கட்டணமாகக் கட்டி எனது உரிமையான ஒரு பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருக்கிறேன். அதன் ஒரு பகுதிதான் இந்த முகவரி சரி பார்ப்பது. அதற்காகத்தான் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அங்கே பொது மக்கள் உட்காரும் பகுதி என்று ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் அமர்ந்திருக்கிறேன். இந்த இன்ஸ்பெக்டரின் அறைக்குள் போயோ வேறெந்த பகுதியிலோ அமரவில்லை. எனக்கு கால் மேல் கால் போட்டு அமருவது வசதியாக இருக்கிறது. அரை மணி நேரமோ கூடுதலாகவோ அமரும் போது அப்படித்தான் அமர முடியும்.
வெளி நாட்டில் இருந்தாலும், இந்தியாவில் நான் செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டுகிறேன். அது வருமான வரியாக இருந்தாலும் சரி, விற்பனை மற்றும் சேவை வரிகளாக இருந்தாலும் சரி. நானும், அந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சகல சக இந்தியர்களும் செலுத்தும் வரி வருமானத்தில்தான் நமது அரசு நடக்கிறது. காவல் துறைக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. காவல் துறையினருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. சட்டத்தை மதித்து நடக்கும் எவருக்கும் காவல் துறை பணியாளே தவிர எஜமானன் அல்ல. சட்டத்தை மீறுபவர்கள் கூட காவல்துறைக்கு அடிமைகளாவதில்லை. அவர்களைக் கூட மனிதாபிமானத்துடன்தான் நடத்த வேண்டும் என்பதே விதிமுறை.
இருப்பினும் காவல் துறையில் இருப்பவர்கள் பலர் தங்களை மக்களின் எஜமானன்களாக நினைத்துக் கொள்கிறாரார்களென்றால், மமதையாக நடந்து கொள்கிறார்களென்றால், அதற்குக் காரணம் சாமான்யர்களாகிய நாம் அவர்களை அப்படி நடத்த விடுவதே. இவர்களது நினைப்பிற்கெதிராக எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்படுமென்றால் இவர்கள் வழிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்.
இன்று மாலை என்னோடு கல்லூரியில் படித்து, தமிழகக் காவல் துறையில் உயரிய பதவிகள் ஒன்றில் இருப்பவரோடும், ஊடகத் துறையிலும், நீதித் துறையிலும் முன்னணியில் விளங்கும் ஒரு நண்பவரோடும் இது குறித்து ஆலோசிக்க உள்ளேன். அதன் பின் செய்யவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒரு தபால் போடுவேன்.
Saturday, January 22, 2011
இரவுகளின் சில நினைவுகள்

ஜெயமோகனின் "இரு கலைஞர்கள் " கதையில் வரும் சில்வண்டின் ஒலி என்னை 35 வருடங்களுக்குப் பின்னர் இழுத்துக்கொண்டு போய்விட்டது. இத்தனைக்கும் அவர் சொல்வதுபோல் "எல்லோரும் சிறு வயதில் இரவைச் சில்வண்டின் ஒலியாகவே அறிகிறார்கள் என்பது என் இளம்பருவ நினைவுகளுக்குப் பொருந்தாது. நான் பிறந்து வளர்ந்தது மணப்பாடு என்னும் ஒரு கடற்கரைக் கிராமம் (மணப்பாடு பற்றி பதிவர் இளம் வஞ்சியின் பதிவு இங்கே, இங்கே; மணப்பாட்டின் இணையதளம் மணவை.காம்). அப்போதெல்லாம் அங்கே இரவு எழு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். நாங்கள் ஒரு பெரிய பங்களாவில் வசித்தோம். அந்த ஊரிலிருந்து இலங்கைக்குச் சென்று வாணிபத்தில் பெருமளவு செல்வம் திரட்டிய குடும்பத்தின் உடைமைதான் அந்த வீடு. இரட்டை அடுக்கு. மொத்தமாக 6000 - 7000 சதுர அடி இருக்குமென ஊகம். தரைத்தளம் இருபது அடி உயரமிருக்கலாம். ஐந்தாறடி உயர சன்னல்கள் சுமார் பத்து எண்ணிக்கை கொண்ட முன் ஹாலில் 25 பேர் படுத்துறங்கலாம். சுற்றிலும் வேப்ப மரங்கள். பெரும்பாலான நேரங்களில் கற்று சிலுசிலுவென்று வீசும். தெருவிலிருந்து ஏறி வரும் வாசலுக்கும், வீட்டின் உட்புறம் ஏறும் வாசலுக்கும் நடுவில் சிமென்ட் பாவிய முற்றம் ஓன்று உண்டு. வீட்டிற்குள் ஏறும் வாசலின் படிகள் விசாலமானவை; மழுமழுவென்ற சிமிட்டியில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த படிகளில் இரவில் ஊரடங்கிய பின் படுத்துக் கொண்டு வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்து கொண்டே இருக்கலாம். ஊர் அமைதியாக இருக்கும். காற்றின் சிறு சலனமும் இல்லாத வேளைகளில் உன்னித்துக் கேட்டால் தூரத்தில் அடிக்கும் அலைகளின் ஓலி கேட்கலாம். அபூர்வமாக தெருவில் யாராவது நடந்து செல்லும் காலடி சப்தம் கேட்கும். கள்ளோ சாராயமோ குடித்த போதை மிக யாராவது குடிமக்கள் வசை பேசிக்கொண்டு போவார்கள் எப்போதாவது. மற்றபடி மௌனமே நானறிந்த இரவின் குரல். நட்சத்திரங்களே இரவின் ஒளி.
Sunday, January 9, 2011
30000 அடி உயரத்தில் சில எச்சரிக்கை மணிகள்
2011ன் முதல் பயணம் மதுரையின் புதிய விமான நிலையத்திலிருந்து. பளபளப்பாக, ஜொலிப்பாக, தூய்மையாக இருக்கிறது இந்த நிலையம். மதுரையை அடையாளப்படுத்த முகப்பில் ஏதாவது கட்டிடக் கலை வேலைகள் செய்திருக்கலாம். ஆனால் திருச்சியில் செய்தது போல் முனைந்து சரிவராமல் போனதற்கு செய்யாததே தேவலாம் என்று தோன்றுகிறது. உள்ளே கருங்கல்லில் எளிமையாக ஒரு சிறு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். பல புகைப்படங்கள் உள்ளன. ஒரு படத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரு வருகிறார். பக்கத்தில் காமராசர் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு நிற்கிறார். கொடைக்கானல் ஏரியின் நீள்தோற்றப் படமொன்றும் இருக்கிறது. இந்தப் படத்தை இன்னும் சிரத்தையெடுத்து நகலாக்கியிருக்கலாம். பழைய விமான நிலையத்திலிருந்து இருக்கைகளை கொண்டு போட்டு விட்டார்கள். அங்கேயே இந்த இருக்கைகள் பழையதாகத் தெரிந்தன. இங்கே கண் திருஷ்டிப் பூசணி இல்லாததை நிறைவு செய்கின்றன. கடைகளும் அங்கே இருந்து இங்கே மாறிவிட்டன என்று நினைக்கிறேன். புத்தகக் கடை கொஞ்சம் பெரிதாக இருப்பதால் கொஞ்சம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வழக்கமான விமான நிலைய புத்தகங்கள்தான். “யூ கேன் வின்” ஷிவ் கெரா, “அக்கினிச் சிறகுகள்” அப்துல் கலாம், ப்ளாஸ்டிக் தாளில் பொதிந்த காமசூத்ரா, மில்ஸ் & பூன், ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், இத்யாதிகள். ஆனால் சில புதியவைகளும் தென்பட்டன. ரிச்சர்ட் டாக்கின்ஸின் “God Delusion” ஒரு உதாரணம். கடையில் பதிவர் தருமி ஒரு பங்குதாரராக இருப்பாரோ என்று தோன்றியது. கிழக்கு பதிப்பகம் சுஜாதாவின் நூல்களை அருமையான பதிப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து “பாரதி இருந்த வீடு” என்ற நாடகத் தொகுப்பையும், கடந்த ஆண்டு பெங்குவின் வெளியிட்ட “அப்சலூட் குஷ்வந்த்” என்கிற குஷ்வந்த் சிங்கின் புத்தகத்தையும் வாங்கினேன்.
மதுரை-சென்னை விமானத்தில் வைகோவும் வந்திருந்தார். மிடுக்காக இருக்கிறார். இவர் வருங்காலத்தில் முதல்வராக வருவார் என்று மனதிற்குள் பட்ஷி சொல்கிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அநேகமாக மறுபடியும் நாயக்கர்களின் ஆட்சிதான்.
விமானம் சென்னையைச் சேர்ந்த போது இரவு 10:20. கூட்டமிருக்காது என்று நினைத்தேன். அலை மோதியது. மறுநாள் சயின்ஸ் காங்கிரஸ். பிரதமர் சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் வந்திருந்தார். மும்பை, பெங்களூரு, மதுரை மூன்று விமானங்களின் பெட்டிகளையும் ஒரே பெல்ட்டில் போட்டு விட்டார்கள். 12:15 மணிக்குப் புறப்படும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏற 11:15 மணிக்கு சர்வதேச முனையகத்தில் இருக்க வேண்டும். மதுரை விமானப் பெட்டிகள் வர 10:50 ஆகி விட்டது. சர்வதேச முனையகம் வழக்கமாகவே கூட்டத்தில் திண்டாடும். நல்ல வேளையாக, அன்று கூட்டம் குறைவு. 11:10க்கு ஆஜர் கொடுத்து தப்பித்தேன்.
2010ன் இறுதியில் விமானப் பயணங்கள் சுகப்படவில்லை. டிசம்பரில் சிங்கப்பூரிலிருந்து திருவனந்தபுரம் வந்த விமானம் இறங்கப் போவதற்கு முன் நடுவானில் காற்றில் தள்ளாடியது. விமானத்தின் எச்சரிக்கை அறிவிப்பு தானாகவே தொடங்கி “விமானம் இப்போது தரையில் விழும் அபாயம் இருக்கிறது. உங்கள் இருக்கைக்கு கீழ் மிதவை இருக்கிறது. அதை எடுத்து அணிந்து கொள்ளுங்கள்” என்றெல்லாம் பினாத்த ஆரம்பித்து விட்டது. பயணிகளெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். “இந்த அறிவிப்பை இதற்கு முன் எப்போதாவது கேட்டிருக்கிறாயா?” என்கிறார் சக பயணி. “இல்லை” என்கிறேன் நான். பைலட்டோ, விமானப் பணியாளர்களோ ஏதாவது அறிவிப்பு கொடுப்பார்களா என்றால், அதுவும் இல்லை. இதற்கிடையில் கீழே விமான நிலையத்தின் விளக்குகள் தெரியமளவுக்கு பறந்து வந்து விட்டதால் போன உயிர் திரும்ப வந்தது.
சில நாட்களுக்குப் பின் சென்னை மார்க்கமாக பாங்காக் வழியாக சீனாவின் குவாங்சூ. சென்னையிலிருந்து புறப்பட்ட தாய் ஏர்வேஸ் விமானம் முக்கால் மணி நேரம் பறந்து விட்டு, வானத்திலே ஒரு வட்டமடித்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டது. தரையில் இறங்கி அரை மணி நேரம் ஆகியும் காரணம் சொல்லப்படவில்லை. பயணிகள் கத்த ஆரம்பித்த பிறகுதான் தகவல் சொன்னார்கள். விமானத்தில் சரக்குகள் வைக்குமிடத்திலிருந்து ஏதோ எச்சரிக்கை சமிக்ஞைகள் வந்தனவாம். அதைச் சரி பார்க்க விமானத்தை தரையில் இறக்கி இருக்கிறார்களாம். ஒரு வழியாக விமானம் மூன்று மணி நேரத் தாமத்திற்குப் பிறகு பாங்காக் சென்றது. அதிர்ஷ்டவசமாக எங்களது குவாங்சூ விமானத்தைக் கடைசி நிமிடத்தில் பிடித்து விட்டோம்.
2010ன் கடைசிப் பயணமாக சென்னை-தூத்துக்குடி கிங் ஃபிஷர். காலை 11:15 புறப்பாடு. 10:15க்கு சென்னை விமான நிலையம் முன் காரில் வந்து இறங்குகிறோம். விமான நிலைய விரிவாக்கத்தாலும், தொடர் மழையாலும் ரயில் நிலையத்தைவிடக் கேவலமாகி இருக்கும் சென்னை விமான நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். ஹஜ் சென்று திரும்பி வரும் பயணிகளை வரவேற்க வந்த கூட்டமும், ஹஜ் பயணிகளின் வருகையும். ஒரு வழியாக ஜனப் பெருந்திரளுக்கு எதிர் நீச்சல் போட்டு முனையகத்திற்குள் நுழையும் போது 10:25. பெட்டிகளை எக்ஸ்ரே செய்து வரிசையில் நிற்கும் போது 10:31. என்னுடைய முறை வரும் போது 10:36. செக்-இன் செய்யும் நேரம் முடிந்து விட்டது என்றார் பணிப்பெண். 10:35ற்கு மூடிவிடுவார்களாம். நான் என்ன சொல்ல முயன்றாலும் நிர்த்தாட்சண்யமாக முடியாது, முடியாது என்றபடியே இருந்தார். இதற்குள் பக்கத்துக் கொண்டரில் இருக்கும் நபர் “அந்த விமானம் இன்னும் திறந்துதான் இருக்கிறது. உடனடியாக செக்-இன் செய்தால் பிரச்சினை இல்லை” என்று கூற இந்தப் பெண்ணோ எந்த உதவியும் செய்யும் மனப்பாங்கில் இல்லை. திரும்ப, திரும்ப, “நீ தாமதம்” என்று பல்லவியையே பாடிக் கொண்டிருந்தார். அதற்குள் பக்கத்துக் கவுண்டர்காரர் எழுந்து வந்து என்னுடைய தகவல்களை உபயோகித்து செக்-இன் தொடங்கி விட்டார். அதன் பின்னும் பல்லவியை இந்தப் பெண் நிறுத்தவில்லை. “கொஞ்சம் வாயைப் பொத்துகிறீர்களா? நாங்கள் வாடிக்கையாளர்கள். அதற்கேற்றபடி நடத்துங்கள்” என்று என் மனைவி கடுமையாகக் கேட்ட பிறகுதான் பெண்மணி வாயை மூடினார். விஜய் மல்லையா கிங் ஃபிஷர் ஏர்லைன்சின் பணிப்பெண்கள் ஒவ்வொருவரையும் நேரடியாகத் தெரிவு செய்கிறாராம். உருவ அழகோடு வாடிக்கையாளர் சேவை செய்யத் தகுதியானவர்களா என்று பார்த்து அவர் தெரிவு செய்வது நலம்.
Saturday, February 13, 2010
அப்போதிலிருந்து இப்போது வரை: 2. பாதித்த மூன்று மரணங்கள்
அமானுஷ்யம். நாம் ஒன்றைப் பற்றி நினைக்கும் போது அது உடனே நடந்து விட்டால் ஒரு மாதிரி உடல் திடுக்கிடுகிறதே அது நடந்தது எழுத்தாளர் சுஜாதாவின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட போது. அதற்கு சில தினங்களுக்கு முன்னர் நற்செய்தியாளர் டி.ஜி.எஸ். தினகரன் மரணமடைந்த செய்தி வந்தது. டி.ஜி.எஸ். அவர்களை நேரில் பார்த்திருக்கிறேன். அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். மெல்லிய இறகுகளை வைத்து விசிறுவது போன்ற பேச்சு அவருடையது. அவர் மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னால் அவரது பாடல்கள் கொண்ட குறுந்தகடு ஒன்று கிடைத்தது. அதை என் ஐ-பாடில் வைத்துக் கேட்கும் போது அவரது குரலின் பரிவும், அது ஆன்மாவில் ஏற்படுத்தும் கிளர்ச்ச்சியும் என்னை பிரமிப்படைய வைத்தது. ஒரு முறை விகடனில் எழுதிய கட்டுரையொன்றில் சுஜாதா தமிழில் சிறப்பான பேச்சாளர்கள் ஒலியைல்லாம் பதிந்து, தொகுத்து, பராமரிக்க வேண்டும் என்றும் americanrhetoric.com என்ற தளம் அப்படிச் செய்து வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதில் சிறந்த பேச்சாளர்கள் என்று வரிசைப்படுத்திவர்களில் டி.ஜி.எஸ். தினகரனும் அடக்கம். தினகரன் இறந்த போது சுஜாதாவின் கட்டுரைதான் என் நினைவுக்கு வந்தது. அந்த நினைவினூடாகவே, சுஜாதாவிற்கும் டி.ஜி.எஸ் வயதிருக்குமே, அவருக்கும் உடல்நலக் குறைவுகள் உண்டே, இன்னும் அவருக்கு எத்தனை ஆண்டுகளோ என்ற நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சில நாட்களில் சுஜாதா மறைவான போது பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.
இளவயதில் சுஜாதாவின் தீவிர வாசகனாயிருந்தேன். விகடன் மாணவ பத்திரிகையாளரில் பயிற்சி பெற்ற போது அப் பயிற்சி முகாமில் அவர் பேசினார். அதுவே அவரை முதலும் கடைசியுமாகப் பார்த்தது. காலப் போக்கில் அவரது படைப்புகளைத் தேடிப் பிடித்து வாசிப்பது குறைந்தது என்றாலும், அவர் தமிழ் கலாசார உலகில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றிய எண்ணங்களில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எதை எழுதினாலும் சுவாராசியமாக எழுதுவது, யாரும் முயற்சிக்காத விஷயங்களையெல்லாம் படித்தோ, அனுபவித்தோ தெரிந்து கொண்டு அதைப் பற்றி எழுதுவது, எல்லா வகை எழுத்துக்களையும் எழுதிப் பார்ப்பது, சக கலைஞர்களை ஊக்குவிப்பது என்று ரொம்ப தீவிரமாக இயங்கிய ஒரு நபர் அவர். சமீபத்தில் நானும் ப்ரகாஷும் சான் ஃப்ரான்சிஸ்கோவில் காரில் போகும் போது டாலஸ் நகரம் பற்றிய ஒரு பேச்சு வந்தது. ப்ரகாஷ் அங்கு கொஞ்சக் காலம் இருந்திருக்கிறான். “அங்க ஜான் கென்னடி சுட்ட இடத்தை சுற்றுலாப் பயணிகள் போய் பார்க்கிற மாதிரி செய்திருக்கிறார்கள். அமெரிக்கர்கள் பண விஷயத்தில் கெட்டி. அதற்கும் பணம் வசூலித்து விடுகிறார்கள்” என்றான். "தெரியுமே, சுஜாதா எழுதியிருக்கிறாரே:
கென்னடியைச்
சுட்டுக் கொன்ற ஜன்னலின் வழியே
எட்டிப் பார்க்க
துட்டுக் கேட்கிறார்கள்” என்றேன்.
அதுதான் சுஜாதா.
மூன்றாவது மரணம் வேலுப்பிள்ளை பிரபாகரனுடையது. அந்த சமயம் இந்தோனேசியாவின் சுறபயா நகரில் இருந்தேன். சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஆஃப்கானிஸ்தானில் உள்ள விஷயம் தெரிந்த ஒரு நண்பர் மூலமாக இலங்கைப் படையினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டார்கள்; முடித்து விடுவார்கள் என்று அறியக் கிடைத்தது. இருப்பினும் செய்தி வந்த போது மனது உடைந்து விட்டது. இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. பிரபாகரனது வழிமுறைகளில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மாபெரும் வீரன், ஓப்பீடு இல்லாத அறிவுக் கூர்மை கொண்ட ஒரு நபர், தன்னுடைய இலட்சியத்திற்கு நூறு சதவிகிதம் உண்மையாக வாழ்ந்தவர், அவர் என் தமிழ் பேசும் ஒருவர் – அவர் நிரந்தரமாக இந்த உலகை விட்டுச் சென்று விட்டார் எனும் போது எழும் ஆற்றாமையை தேற்ற முடியவில்லை. கூடவே, சிங்களவர்கள் மட்டும் நீதியோடு நடந்து கொண்டிருந்தால் பிரபாகரன் இலங்கையை எந்த அளவிற்கு உயர்த்தியிருக்கலாம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. பிரபாகரன் மறைந்த நாள் தமிழர்களுக்கு தரும் துக்கத்தை விட, தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒரு மாபெரும் வாய்ப்பை கைவிட்ட சிங்களவர்களுக்கு அதிக துக்கத்தைத் தர வேண்டும். அதை அவர்கள் ஒரு நாள் உணருவார்கள். It will probably be too late, then.
அப்போதிலிருந்து இப்போது வரை
நவம்பர் 19, 2007: ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் நாலு மடங்கு ரேட்டுக்காரன் பதிவு. அதற்குப் பின் ஜனவரி 17, 2010: அது இது பதிவு
இந்த இடைவெளியில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். நிறைய விஷயங்களில் ஞாபகத்தில் இருப்பது, பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடிவது கீழே சில.
முதலில் நம்மூர் ஆட்டோக்காரர்களிடம் ஒரு சிறு மன்னிப்பு: 2008 நவம்பரில் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி நகரே திகைத்து நின்ற போது கை கொடுத்தவர்கள் ஆட்டோக்காரர்கள்தான். எந்த கால் டாக்சியைக் கூப்பிட்டாலும் வர மறுத்தார்கள். ஆட்டோக்கள் ஒழுங்காக ஓடின. மழையை முன்னிட்டு கட்டணம் அதிகமாக வசூலித்தார்கள். ஆனால், போக வேண்டிய இடத்திற்கு போக முடிந்ததே பெரிய விஷயம்.
ஆட்டோவைப் பற்றிப் பேசும் போது டாக்சிகளை விட முடியாது:
ஹைதராபாதில் (டிசம்பர் 2008) கால் டாக்சி உபயோகித்த பிறகு சென்னை கால் டாக்சி சேவை மோசமாகத் தோன்றுகிறது. சென்னையில் கால் டாக்சியென்றால் மாருதி ஓம்னி, அல்லது டாடா இண்டிகாதான். அவற்றில் பெரும்பாலனவை கட்டாய ஓய்வுக் காலத்தை நெருங்கி விட்டவை. ஹைதராபாதில் கணிசமான எண்ணிக்கையில் புத்தம் புதிய ரேனால்ட்கள். ஹைதராபாத் புதிய விமான நிலையத்தில் டாக்சி சேவை அருமையாக செய்திருக்கிறார்கள். முன்னர் மும்பை விமான நிலையத்தில் இருந்தது போல வரிசையாக வண்டிகள் வர, வர ஏறிச் செல்லலாம். சென்னை விமான நிலையத்தில் டாக்சி சேவை குத்தகை எடுத்திருக்கும் அக்பர் ட்ராவல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கும், கால் டாக்சி நிறுவனங்களுக்கும் தொழில் போட்டி. கால் டாக்சிகள் பயணிகளை இறக்கி விட்டு, வேறு பயணிகளை ஏற்றிச் சென்றால் அதற்கு பார்க்கிங் வசூலித்து விடுகிறார்கள். இதைத் தவிர்க்க கால் டாக்சிகள் பயணிகளை சற்று தூரம் வெளியே நடந்து வரும்படி கேட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சேவைக் குளறுபடிகள்.
இந்தியாவில் டாக்சி சேவைகளுக்குச் சிறந்த நகரங்கள் என்றால் மும்பையும் கொல்கத்தாவும்தான். மும்பை பழைய உள்நாட்டு முனையகம் (டெர்மினல்தான்) எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அங்கு டாக்சி சேவை நன்றாக இருந்தது. கத்தி போய் வாலு வந்த கதையாக, புதிய, அழகான மும்பை உள்நாட்டு விமான முனையகம் வந்த பிறகு டாக்சி சேவை சீரழிந்து விட்டது (2008-09). முன்னைப் போல் டாக்சிகள் நம்மைத் தேடி வருவதில்லை. நாம் அவற்றைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. வெர்சோவா செல்ல ஒரு சீக்கிய டாக்சி ஓட்டுநர் 700 ரூபாய் கேட்டார். போன தடவை 100 ரூபாயில் போனேன் என்றால், எனக்கு இன்று முழுவதும் சவாரியே கிடைக்கவில்லை; நீதான் முதல் சவாரி என்கிறார். நல்லவேளை இந்த ஆளுக்கு நேற்று ஏதோ சவாரி கிடைத்திருக்கிறது, இல்லையென்றால் 3000 ரூபாய் கேட்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டே ஆட்டோ பிடித்துப் போனேன்.
டெல்லியில் (ஜூலை 2009) நானும் கொலம்பிய நண்பர் செர்ஜியோவும் ஒரு டாக்சி பிடித்தோம். ஓட்டுநர் சீக்கிய இளைஞர். சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார். “என்னுடைய ஆங்கிலம் எப்படியிருக்கிறது” என்று கேட்டார். “நன்றாக இருக்கிறது. ஏன் கேட்கிறீர்?” “இப்போது கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறேன். முடித்து விட்டு ஆஸ்திரேலியா போகிறேன். அதற்குத்தான் ஆங்கிலப் பயிற்சி” அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது தொடங்கியிருந்தது. “பயமில்லையா?” “பயமா, எனக்கா?” என்று அட்டகாசமாகச் சிரித்தார் அந்த ஆறடி, 80 கிலோ எடையுள்ள இளைஞர்.
ஓர்லாண்டோவில் (ஃபெப்ரவரி 2008) டாக்சி என்று கேட்டால் ஒரு சிறு பஸ்ஸைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். டிஸ்னிலேண்ட் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் வருவதால் 12 பேர் உட்காரக்கூடிய வேன்தான் அங்கு பிரதானமான டாக்சி. அமெரிக்காவில் பத்து ரூபாய்க்கு லிற்றர் பெட்ரோல் கிடைத்த போது பரவாயில்லை. 30 ரூபாய்க்கு லிற்றர் விற்கப்படும்போது அந்த டாக்சியில் செல்லும் போது திக், திக் என்று இருந்தது. நினைத்தது போலவே, ஸ்பீடாமீற்றரைவிட டாக்சி மீற்றர் வேகமாக ஓடியது. ஊருக்குள் போய்ச் சேர 40-50 டாலர் ஆகிவிடுகிறது.
சியாற்றிலும் (ஃபெப்ரவரி & நவம்பர் 2009) டாக்சி வாடகை ஓர்லாண்டோவிற்கு குறைந்தது அல்ல. காரணம்: சியாற்றில்-டகோமா விமான நிலையத்திலிருந்து சியாற்றில் 25 மைல் தூரம். ஊருக்குள் வருவதற்கு வாடகை நாற்பத்தைந்து டாலரைத் தொட்டு விடுகிறது. முதல் தடவை நான் பழைய ஞாபகத்தில் ஒரு டாலரோ, இரண்டு டாலரோ tip கொடுத்தேன். ஓட்டுநர் இந்தியர் மாதிரி தெரிந்தார். ஒரு மாதிரி பார்த்தார். நண்பர்களிடம் விசாரித்ததற்கு 45 டாலர் பில் வந்தால் 5 டாலர் tip கொடுக்க வேண்டும் என்றார்கள். அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்தில் டாலர் தண்ணீர் போல செலவாகிறது.
கொரியாவில் பூசான் (மே 2009) விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு செல்ல எடுத்த டாக்சி ஓட்டுநர் என்னிடமிருந்தும் நண்பர் அனிலிடமிருந்தும் இரண்டு லட்சம் வான் கறந்து விட்டார். சரியான கட்டணம் ஒரு லட்சத்து இருபதாயிரம் வான்தான் என்று மறு நாள் தெரிய வந்தது. மற்றபடி, பூசானில் எடுத்த டாக்சியனைத்திலும் மீற்றர்படிதான் வசூலித்தார்கள். பூசானின் அட்டகாசமான உள்ளூர் ரயில் (எம்.ஆர்.டி.) பழகி விட்டால் அந்த நகரில் டாக்சியே தேவையில்லை. அதே போல்தான் சிங்கபூரிலும் (ஜனவரி 2010). விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் செல்ல 20-25 டாலர் ஆகிறது. அதுவும், காலை, மாலை அலுவலக நேரங்களில் ஆர்ச்சர்ட் ரோடில் செல்ல நெரிசல் கட்டணம் என்று கூடுதலாக 35% வசூலித்து விடுவார்கள். முதன் முறையாக சிங்கப்பூர் எம்.ஆர்.டியில் விமான நிலையத்திலிருந்து ஆர்ச்சர்ட் ரோடு சென்றேன். 1.8 சிங்கப்பூர் டாலர் அவ்வளவுதான்.
கோலாலம்பூரில் (நவம்பர் 2009) விமான நிலையத்திலிருந்து நகருக்கு விரைவு ரயில் (26 ரிங்கிட்டுகள்) + நகர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு டாக்சி 11 ரிங்கிட்டுகள். திரும்பிப் போகும் போது செர்ஜியோ தங்கும் விடுதியிலேயே டாக்சி எடுத்து விடலாம் என்றார். அவரிடம் இன்னொரு நண்பர் விடுதியிலேயே டாக்சி எடுக்காதீர், கொள்ளையடிப்பார்கள், வெளியே போய் மீற்றர் டாக்சி எடும் என்று சொல்லியிருக்கிறார். விடுதி டாக்சி ஓட்டுநர்களிடம் விசாரித்தார். 120 ரிங்கிட் சொல்லி 100க்கு இறங்கி வந்தார்கள். செர்ஜியோ வெளியே போய் டாக்சி எடுத்தால் இன்னும் மலிவாக இருக்கும் என்று மீற்றர் டாக்சியை நிறுத்தி ஏறினார். கோலாலம்பூர் விமான நிலையம் அடைந்த போது மீற்றர் சரியாக 100 ரிங்கிட் காட்டியது. வெளியே போய் மீற்றர் டாக்சி எடுக்கச் சொன்ன நண்பரை அடுத்த தடவை பார்த்தால் உதைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இறங்கினார்.
ஹோச்சிமின் நகரில் (பெப்ரவரி 2010) மோட்டார் சைக்கிள் டாக்சிக்காரர்கள் மூலைக்கு மூலை நிற்கிறார்கள். ஒரு இரவு கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் என்று கிளம்பி, சீனப்புத்தாண்டு தினத்தையொட்டிய தெரு அலங்காரங்களால் கவரப்பட்டு நடந்து, நடந்து, கால் அசந்து விடுதிக்கு திரும்பலாம் என்று நினைத்தால், திசை சரியாக தெரியவில்லை. தெற்கும், மேற்கும், வடக்கும், கிழக்கும் உத்தேசமாக நடந்த பிறகும் விடுதி தென்படுகிற மாதிரி தெரியவில்லை. கடைசியில் மோட்டார் சைக்கிள் டாக்சிக்காரர் ஒருவரிடம்தான் தஞ்சமடைய வேண்டி வந்தது. விடுதியின் முகவரியைப் பார்த்து விட்டு “பத்தாயிரம் டாங்” என்றார். பத்தாயிரம் டாங் என்பது 23 ரூபாய். “சரி”யென்று கிளம்பினேன். 200 அடி போய் ஒரு வலது திருப்பம், இன்னொரு 100 அடி போய் ஒரு இடது திருப்பம். விடுதி வந்து விட்டது. Knowledge is power.
உலகெங்கும் சுற்றி விட்டு மறுபடியும் சென்னை கால் டாக்சி. அநேகமாக 2009ன் தொடக்க மாதங்களில் ஒன்று. வேளச்சேரியிலிருந்து கோடம்பாக்கம். தி. நகர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் வர நெடுநேரம் காத்திருந்து வாகனத்தை வலது பக்கம் திருப்பினால், “யாமிருக்க பயமேன்” ஸ்டைலில் கையைக் காட்டிக் கொண்டு ஒரு பெண்மணி. அதாவது அவர் சாலையை கடக்கப் போகிறாராம், வாகனத்தை நிறுத்தி வழி விட வேண்டுமாம். ஓட்டுநர் சன்னல் வழியாக தலையை திருப்பி “ஆமாம்மா, பெரிய வி.ஐ.பி. நீ. இத்தனை காரும் உனக்காக நிற்க வேண்டும்” என்று வைதார். பிறகு சென்னை நகரத்துப் பெண்களைப் பற்றி பெரிய முறைப்பாடு வைத்தார். “இதெல்லாம் பரவாயில்லை சார், இந்த ஐ.டி. பொண்ணுங்க டார்ச்சர் தாங்க முடியல” என்றார். “என்னாச்சு?” என்றேன். “ஓல்டு மகாபலிபுரம் ரோட்ல நின்னுக்கிட்டிருந்த ஒரு பஸ்ஸைக் க்ராஸ் பண்றேன். ஸ்கூட்டில ஒரு பொண்ணு ஒரு 20-22 வயது இருக்கும். பஸ் முன்னாடி இருந்து சாடுது” (ஓட்டுநர் நம்மூர்க்காரர்). “ஏம்மா இப்படி பண்ணறியேனு கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?” என்று கேட்டு விட்டு சொன்னார் “போடா” (ஓட்டுநருக்கு 60 வயது இருக்கும்). “உடனே வண்டிய ஸ்லோ பண்ணி அவள மொறச்சேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?” என்று மறுபடியும் கேட்டுவிட்டு “டேய் போடா, மொறச்சீன்னா ஈவ் டீசிங்னு கம்ப்ளைண்ட் பண்ணிருவேன் அப்டிங்குது. இப்டியெல்லாம் பொண்ணுங்க இருக்கு சார்” என்ற ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டார். உவரியிலிருந்து வரும் அவர் பையனை பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டு, கால் டாக்சி ஓட்டுநராக பணி புரிகிறாராம்.
Monday, November 19, 2007
ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன், நாலு மடங்கு ரேட்டுக்காரன்

அட்டவணையில் குறிப்பிட்டபடியே காலை 10:55க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது.
பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன. நானிருந்த பெட்டியில் நானும், கன்னியாகுமரியிலிருந்து ஏறியிருந்த ஒரு வட இந்தியக் குடும்பம் மட்டுமே. பகல் நேர பயணம் என்பதால் அலுவல் சம்பந்தமாக வாசித்து குறிப்பெடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து விரித்துப் போட வசதியான தனிமை. மதியம் 12:30க்கு திருவனந்தபுரம் வந்தடைந்தது. தூரம் 90 கி.மீ. என்றாலும், நெரிசலான சாலை வழியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் அடைய இப்போதெல்லாம் இரண்டு மணி நேரங்கள் ஆகி விடுகிறது.
திருவனந்தபுரத்தில் கொஞ்சம் பேர் ஏறினர். வர்கலாவில் எதிர்பார்த்தது போலவே ஒரு இளம், வெள்ளைக்கார தம்பதி ஏறியது. முதுகில் சுமந்து வந்த பெரு மூட்டைப் பொதியை இறக்கி வைத்து விட்டு, ஒரு டான் ப்ரௌன் நாவலையும், ஒரு ப்ரிட்டானியா பிஸ்கட் பொட்டலத்தையும் பிரித்துக் கொண்டு இரண்டையும் ஒரு கை பார்க்க ஆரம்பித்தது. கொல்லம் போன்ற தெரிந்த ஊர்கள் வழியாகவும், கருநாகப்பள்ளி போன்ற தெரியாத, திகிலூட்டும் பேர்கள் கொண்ட ஊர்கள் வழியாகவும் பயணம் தொடர்ந்தது. சங்கனாசேரி வரை எனது நீண்ட இருக்கைக்கும், எதிரேயுள்ள இருக்கைக்கும் போட்டியில்லை.
சங்கனாசேரியில் ஒரு பிரமாண்டமான சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகளோடு ஏறினார். எனக்கு எதிரான இருக்கை அவர்களுக்கு. துருதுருவென்று இருந்த பையன் – 4 வயதிருக்கும் – பெயர் ஜோ. சற்று அமைதியாக 7 வயதான பெண் – பெயர் ரீட்டா. உள்ளே நுழைந்து, அமர்ந்த அடுத்த நொடி பேச ஆரம்பித்து விட்டான் ஜோ. ரீட்டாவும் அதிகம் தாமதிக்கவில்லை. ரீட்டா கையில் ஒரு இளம்சிவப்பு நிறக் காகிதம். அதில் பெங்களூர் எக்ஸ்பிரசின் கால அட்டவணை அச்சிடப்பட்டிருந்தது. மிகத் தெளிவான ஆங்கிலேயே உச்சரிப்பில்:
“ஜோ உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால், நான் இதில் இந்த ரயில் இது வரை கடந்து வந்த நிலையங்களையெல்லாம் அடித்து விடுகிறேன், சரியா?” என்று சொல்லி விட்டு, ஒவ்வொரு நிலையமாக அடித்துக் கொண்டே வந்து, சரி அடுத்த நிலையம் “கோட்டயம்” என்றாள். பிறகு அடித்து விட்ட நிலையங்களையெல்லாம் இந்தியில் எண்ணி விட்டு “அம்மா, இந்த ரயில் 20 நிலையங்களைத் தாண்டி வந்து விட்டது” என்றாள்.
“கோட்டயத்திற்குப் பிறகு பெங்களூரா?” என்றான் ஜோ.
“இல்லை, நாளைக் காலையில்தான் பெங்களூர்”
“நான் மேலே போகலாமா?”
“போகலாம், ஆனால் மேலேயும், கீழேயும் போய் விட்டு வந்து விட்டு இருக்கக் கூடாது”
“வந்தால்?”
“அப்புறம் மேலே அனுப்ப மாட்டேன்”
பிள்ளைகள் இருவரும் மேலே செல்ல எத்தனிக்க
“இன்னொரு விஷயம் மேலே சிவப்பு நிறத்தில் சங்கிலி ஒன்று இருக்கிறதல்லவா. அதைத் தொடக்கூட முயற்சி செய்யாதே”
“தொட்டால்?”
“ஒருவர் வந்து உன்னை ரயிலிலிருந்து தூக்கி வீசி விடுவார்”
பிள்ளைகள் மேல் பெர்த்திற்குப் போனார்கள். அம்மா என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
“பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்?”
“டெல்லியில்”
“ஓ…”
எனது ‘ஓ’வில் இருந்த குழப்பம் அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். “இங்கிலாந்தில் நெடுநாட்கள் இருந்து விட்டு இந்தியா திரும்பி ஆறு மாதமாகிறது”
“இந்திய வாழ்க்கை எப்படியிருக்கிறது?”
“பழகத் தொடங்கி விட்டோம்”
“சொந்த ஊர் சங்கனாசேரியா?”
“ஆமாம். பெங்களூர் வரைக்குமா?”
“இல்லை, எர்ணாகுளம் வரையில்தான். அங்கு ஒரு தொழில் ரீதியாக ஒரு பட்டறை”
எர்ணாகுளம் வந்தது.
எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். தமிழ்நாட்டில் இருப்பது போல் “சார் ஆட்டோ வேணுமா?” தொந்தரவுகள் கிடையாது. வேண்டுமென்றால் ஆட்டோவை அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
“சாருக்கு எவிட போணும்?”
“ரீஜெண்ட் அவென்யூ”
என் சூட்கேஸை வாங்கி ஆட்டோவில் வைத்தார் ஓட்டுநர். நான் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பியது. மீட்டர் போடவில்லை.
“மீட்டரா, ஃபிக்சட் ரேட்டா?”
“30 ருப்பீஸ்”
தமிழ்நாட்டில் 30 ருப்பீஸ் என்றால் 5 நிமிடப் பயணம். கேரளாவில் சுமார் 10 நிமிடமாவது ஆனது.
ரீஜண்ட் அவென்யூ எம்.ஜி. ரோட்டில் இருக்கும் ஒரு நான்கு நட்சத்திர விடுதி. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் பிரமாதமாக இருந்திருக்க வேண்டும். இப்போது வயது தெரிகிறது. விசாலமான, வசதியான, தூய்மையான அறைகள். குறை சொல்ல முடியாத, ஆனால் விஷேஷமில்லாத உணவு.
சனிக்கிழமை இரவு பட்டறைக்கு வந்தவர்களையெல்லாம் எர்ணாகுளம் படகுத் துறையிலிருந்து புறப்பட்ட ஒரு படகில் அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள். கப்பல்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதியில் ரசிக்க என்று அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால், குளிருமில்லாமல், அனலுமில்லாமல் நிலவிய மிதமான சூழல் நன்றாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் சூடாக சுட்டு பரிமாறப்பட்ட ஆப்பங்களை மீன் கறியோடு வெட்டினார்கள்.
ஞாயிறு மாலை கொச்சியின் பிரதான சுற்றுலாத் தளங்களான மட்டாஞ்சேரிக்கும், ஃபோர்ட் கொச்சினுக்கும் சென்றேன். எர்ணாகுளத்தையும், மட்டாஞ்சேரியையும் பெரியாறின் இரண்டு கிளைகள் பிரிக்கின்றன. மட்டாஞ்சேரி ஒரு பெரிய மீனவ கிராமம். அதன் ஒரு புறத்தில் யூதர்கள் வசித்து, காலி செய்த தெருக்களில், வீடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கலைப் பொருட்கள், புராதனப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறியிருக்கின்றன. பல கடைகள் வழக்கமான மரச்சிற்பங்கள், கம்பளங்கள், பாஷ்மினா கம்பளி போர்வைகள் விற்கின்றன. சிலவற்றில் அதி நூதனமான பொருட்கள் இருக்கின்றன. ஒரு கடையில் 100 அடி நீளமான ஒரு சுண்டன் வள்ளத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இன்னொரு கடையில் உலகத்திலேயே பெரிய வார்ப்பு என்று ஒரு மகா பெரிய உருளியை செய்து வைத்திருக்கிறார்கள். அதில் அல்வா கிண்டினால் சுண்டன் வள்ளத்துக்காரர்கள்தான் அவர்களது துடுப்பை வைத்து கிண்டி விட வேண்டும். அம்மாம் பெரிசு.
ஃபோர்ட் கொச்சினின் கடற்கரையில் வழக்கம் போலவே ஞாயிற்றுக்கிழமை கூட்டம். சீன மீன் பிடி வலைகளுடன் கடல்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. கரையில் பல பழைய கட்டிடங்கள் விடுதிகளாக உருமாறி விட்டன. ஐரோப்பாவில் இருப்பது போல் உணவு விடுதிகளுக்கு வெளியில் உணவுப் பட்டியலை விலைகளுடன் அச்சிட்டு பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் இரண்டு இத்தாலிய உணவு வகைகள், இரண்டு ஃப்ரெஞ்ச் வகைகள், இரண்டு பஞ்சாபி தினுசுகள், சில கேரளா தினுசுகள் என ஒரு அயிட்டத்துக்கு ரூ. 200 முதல் 800 வரை இருக்கின்றன.
நண்பரொருவர் எர்ணாகுளத்தில் பாரத் டூரிஸ்ட் ஹோம் என்று ஒரு இடம் இருக்கிறது, அங்கே சாப்பிட்டுப் பார் என்று சொல்லியிருந்ததால் அதை முயற்சி செய்தேன். அது வெஜிடேரியன் என்று தெரியாது. இரவு பஃபே, அதுவும் சாப்பாடு என்று தெரியாது. இரவு முழுச் சாப்பாடு சாப்பிட விரும்பாததால், அந்த விடுதிக்குள்ளேயிருக்கும் காஃபி ஷாப்பில் சப்பாத்தி சாப்பிட்டேன். மிக மிருதுவான சப்பாத்திக்கு ஒரு கொள,கொளா வெண்டைக்காய், உருளைக்கிழங்கு குருமா வைத்து கெடுத்திருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி உணவுப் பொருட்களில் எனக்கிருக்கும் விலைவாசி ஞானக் குறைவை சுட்டிக் காட்டியிருந்தபடியால் இந்த விடுதியில் 3 சப்பாத்தி கொண்ட ஒரு செட் ரூ 35, ஒரு காஃபி ரூ 15 என்பதையும் மனதில் குறித்துக் கொண்டேன்.
இரவு 11 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ். 10:30க்கு அவென்யூ ரீஜெண்டில் இருந்து புறப்பட்டேன். ஆட்டோக்காரரிடம் விலை பேசவில்லை. வருவதற்கு ரூ 30. இரவு பத்துக்கு மேல் கிளம்புவதால் 10ஓ, 20ஓ கூட இருக்கலாம் என்று நினைத்தேன். ரயில் நிலையம் சேர்ந்தவுடன் 50 ரூபாய் தாளை நீட்டினேன். எந்த வித தயக்கமும் இல்லாமல் மீதி 20 ரூபாயை எடுத்து நீட்டினார்.
காலை 5:30க்கு நாகர்கோவில். நிலைய வாசலுக்கு வருவதற்கு முன்னே “சார், ஆட்டோ வேணுமா?” என்று ஆரம்பித்து விட்டார்கள். கோட்டாறிலிருந்து வெட்டூர்ணிமடம் செல்ல ரூ. 60. இதை விட இரு மடங்கு தூரத்திற்கு கேரளாவில் பாதி விலை. கேட்டால், “காலை வேளை, சவாரி கிடைக்காது, பெட்ரோல் விலை ஏறி விட்டது, மற்ற ஊர்களையும் இங்கேயும் ஒப்பீடு செய்யாதீர்கள்” என்பார்கள். நம்மூர் ஆட்டோக்காரனை விட பக்கத்து மாநில ஓட்டோக்காரன்தான் நியாயமானவனாக பட்டான் எனக்கு.
Monday, November 12, 2007
தீபாவளி கொளுத்திய பட்டாசு நினைவுகள்
அதிகாலையில் தெருவில் பட்டாசுகள் முழங்கத் தொடங்கி விட்டன. பிள்ளைகள் வழக்கம் போல் வந்து “நாம எப்ப பட்டாசு விடப் போகிறோம்?” என்று ஆரம்பித்து விட்டார்கள். நானும் வழக்கம் போல் “எதுக்காக பட்டாசு?” என்று பதில் புராணத்தை தொடங்கி விட்டேன். வழக்கமான பட்டாசு விரோத காரணங்கள்தான்:
- காதைக் கெடுக்கும் ஒலி
- நுரையீரலை நாசமாக்கும் புகை (இந்த ஆண்டில் அவர்களது
- பாடத்திலேயே க்ரீன் ஹவுஸ் எஃபக்ட், க்ளோபல் வார்மிங் பற்றி சொல்லப்பட்டிருப்பதால் கூடவே அறிவியல் ரீதியான ஒரு பயமுறுத்தலையும் சேர்க்க முடிந்தது)
- தலைவலியைக் கொடுக்கும் நாற்றம்
- தீ விபத்து நடந்து உடலோ, பொருட்களோ கருகுவதான அபாயம்
“உங்கம்மாவுக்கு பென்சில் மத்தாப்பு வெடிச்சே கை அப்படி பொத்துட்டுதே” என்று பயமுறுத்த முயன்றால் “ஒரு தடவ அப்படி நடந்தா, எல்லா தடவயும் அப்படியா நடக்கும்?” என்ற மனைவியின் குறுக்குச்சால் காதில் விழாத மாதிரி நடித்துக் கொண்டு காரணங்களை தொடர்ந்தேன்.
- பட்டாசு வெடிப்பது என்பது காசைக் கரியாக்குவது
- டம, டம என்று காதைப் பிளக்கும் ஒலியை ரசிப்பது நாகரீகமடைந்த மனிதனின் ரசனையில் இடம் பிடிக்காது
என்று பட்டியல் நீண்டது.
பதின்ம வயதாகப் போகும் புதல்வனுக்கு தந்தையருளும் மந்திரங்களின் மகிமை குறைவது சகஜமென்பதால், நாம் சொல்வதை அவ்வப்போதாவது மதிப்பு கொடுத்து கேட்கும் ஒன்பது வயது மகளையாவது மாற்றி விடலாமென்றால், அவள் “அதாவது டாடி, அந்த திரில தீ வெச்சுட்டு, பட்டாசு வெடிக்கற வைக்கும் ஒரு த்ரில்லிங்கா இருக்கும்ல அதுக்குத்தான் பட்டாசு வெடிக்கிறோம்” என்று புதுசாக வெடியைக் கொளுத்திப் போட்டாள்.
வழக்கம் போலவே இந்த பட்டாசு விவாதம், “சரி, நம்ம சாயங்காலம் பட்டாசு வெடிப்போம்” என்ற தீர்ப்போடு நிறைவுக்கு வந்தது.
அதென்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே பட்டாசுகளின் மீது ஆர்வமில்லாமலேயே நான் வளர்ந்து விட்டேன். சின்ன வயதில் “கைல கால்ல வெடிச்சிடப் போகுது” என்று எங்கம்மா எப்பவும் எச்சரித்து, பொட்டு வெடி தவிர எதையும் வெடிக்க அனுமதிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், வளர்ந்த பிறகும் பட்டாசு மீது ஒரு நாட்டம் வரவேயில்லை.
நான் ஏ.ஐ.டி.யில் படிக்கும் போது அங்குள்ள தமிழ் சங்கத்தினரும், இந்திய சங்கத்தினரும் தீபாவளியை விமரிசையாக கொண்டாடுவர். ஏ.ஐ.டியில் இருந்த 20க்கும் மேற்பட்ட நாடு/கலாசார சங்கங்களில் முதன்மையானது தமிழ் சங்கமே. இலங்கை, இந்திய, மலேசிய தமிழர்களோடு, அங்கிருந்த சொற்ப மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்களோடு ஜே, ஜே என்று எப்போதும் தமிழ் சங்கம் இயங்கும். ஏ.ஐ.டி நடுவில் எட்டு கோண அமைப்பில் இருக்கும் “கொரியா ஹவுஸ்” எனப்படும் கட்டடம் ஏறக்குறைய தமிழ் சங்கத்தின் குத்தகையில்தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். வாரத்தில் மூன்று நாள், மாலை 6-9 அந்த கட்டடத்தில் தவறாமல் தமிழ்ப் படம் போடுவார்கள் நம் மக்கள். இது தவிர மாதம் ஒரு முறை கூட்டம், இரவுணவு என்று அசத்துவார்கள். பொங்கல் என்றால் பாங்காக்கில் இருக்கும் தமிழர்களும் வந்து இணைந்து கலைநிகழ்ச்சிகள், மதிய உணவு, என்று செய்து கோலாகலம் பண்ணி விடுவார்கள். சங்கத்தின் பொறுப்பை மூன்று மாதத்திற்கொரு முறை மாற்றியமைக்கப்படும் குழு ஒன்று கவனித்துக் கொள்ளும்.
நான் பொறுப்புக் குழுவிலிருக்கும் போது வந்த தீபாவளியில் பெரிய அளவில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது (இந்த முடிவிலிருந்து அந்தப் பொறுப்புக் குழுவில் என் குரலுக்கு இருந்த மதிப்பையும், மரியாதையையும் அறிந்து கொள்வீர்களாக). பொறுப்புக் குழுவிலிருந்த மற்றவர்களில் சிலர்: அன்புமொழி (சேலத்தைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஜப்பான் சென்று அங்கேயே தங்கிவிட்டதாக கேள்வி), ராமநாராயணன் (கோவையைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஓக்லஹாமா சென்று அங்கேயே வெகு நாட்களாக இருந்தார், இப்போது தொடர்பில்லை), மற்றும் பரம் (குலாலம்பூரைச் சேர்ந்த இவர் இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை) ஆகியோருடன் நானும் பட்டாசு வாங்கும் முயற்சியில் இறங்கினோம்.
முதலாவது ஏ.ஐ.டி.க்கு தெற்கில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் ரங்சிட் என்னும் இடத்தில் முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அது பாங்காக்கின் பாஹ்யோலிதின் துரித நெடுஞ்சாலை டான் முவாங் விமான நிலையத்தோடு நின்று விட்ட காலம். இப்போது அந்த சாலை வடக்கே ஏ.ஐ.டியையும் தாண்டி எங்கோ சென்று விட்டது. விளைவாக ரங்சிட் ஒரு பெரிய நகராக உருப்பெற்று விட்டது. ஆனால் அந்தக் கால ரங்சிட் ஒரு சிறு கிராமம். உள்ளே இருபது, இருபத்து ஐந்து கடைகள் கொண்ட ஒரு தெரு உண்டு. அங்கே பட்டாசைத் தேடிப் போனோம்.
கடைத் தெருவுக்கு போன பிறகுதான் எங்களுக்கு ஒரு பெரிய ஞானோதயம் ஏற்பட்டது. அது, பட்டாசிற்கு தாய் மொழியில் (அதாவது தாய்லாந்தின் மொழியில்) பெயர் என்ன என்பதை விசாரிக்காமலேயே வந்து விட்டோம் என்பது. பாங்காக் நகரிலேயே ஆங்கிலம் பேசுபவர்களை விளக்கெண்ணெய் ஊற்றித்தான் தேட வேண்டும். ரங்சிட்டில் ஆங்கிலம் புரிந்து கொள்பவர்களைக் கண்டுபிடிப்பதை இன்றைய இளைஞர்களின் பாஷையில் சொல்லப் போனால்: “சான்சே இல்லை.”
சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், முடிந்த வரை முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு கடையில் ஏறி:
“கூன், க்ராக்கர்ஸ் மீ மாய்னா?” (ஐயா, பட்டாசு இருக்கிறதா?”
“அலோய்னா?” (அப்படின்னா? – இதைக் கேட்ட விதம் “என்ன உளறுகிறாய்?”)
“க்ராக்கர்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை சொன்னால் கேட்பவருக்கு ஆங்கிலம் புரிந்து விடுகிற மாதிரி நாம்.
“க்ராக்கார்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை நாம் சொன்னதை திருப்பிச் சொன்னால் ஆங்கிலம் புரிந்து கொள்கிற மாதிரி அவர்.
இது சரிப்படாது என்று அன்புமொழிக்கு தோன்றி விட்டது.
“கூன்” (ஐயா) என்று கடைக்காரரை விளித்து விட்டு ஊமை பாஷையில் பேச ஆரம்பித்து விட்டார். ஒரு விரலை நீட்டி (அதுதான் பட்டாசாம்), பிறகு ஒரு கை தீப்பெட்டி, மறு கையை அதில் உரசி தீக் கொளுத்துகிறமாதிரி பாவலா செய்து, விரலில் வைத்து, “டமார்” என்று கத்தினார்.
கடைக்காரரின் இரு புருவங்களின் இடையே போடப்பட்ட வியப்பு முடிச்சு இந்தக் குரங்கு சேட்டையைப் பார்த்த பிறகும் அவிழவில்லை. அவர் “இந்த கிறுக்கனுங்க என்னதான் சொல்ல வரானுங்க?” என்ற கடுமையான சிந்தனையில்தான் இருந்தார்.
ராமநாராயணனுக்கு இதை ஸ்கெட்ச் போட்டு காண்பித்தால்தான் புரியும் என்று தோன்றியது. ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். அன்புமொழி வாயால் சொன்னதை படமாக வரைந்தார். தீ வைத்து, பட்டாசு வெடித்ததை படமாக விளக்கும் போது, அன்புமொழி மீண்டும் ஒரு எஃபக்டுக்காக “டமார்” என்று கத்தினார்.
கடைக்காரர் மூளையிலும் அந்த நேரம் பட்டாசு வெடித்திருக்க வேண்டும். அவர் முகம் 1000 வாட் பல்பு போட்ட மாதிரி பிரகாசமானது.
“ஓ, பட்டாஸ்?” என்றாரே பார்க்கலாம்.
அடப்பாவி பட்டாசுக்கு தாய்லாந்திலும் பெயர் பட்டாசுதானா என்று நாங்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டோம்.
அந்தக் கடையில் மட்டுமல்ல, ரங்சிட் முழுக்க பட்டாஸ் கிடைக்கவில்லை என்பதும், பாங்காக் சென்று சைனா டவுணிலோ, வேறெங்கோ சென்று பட்டாஸ் வாங்கி தீபாவளிக்கு வெடித்தோம் என்பதும் இந்த தீபாவளி நினைவில் பின்குறிப்புகள்.
Monday, October 22, 2007
தமிழரின் பணிவும் குழைவும்
ஓடு வேய்ந்த முகப்பு பகுதியில் நின்றிருந்த ஒருவர் நட்புடன் புன்னகைத்து என் தேவையைக் கேட்டார். கட்டிடத்தின் வலது புறமிருந்த முன்னறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, பதிப்பகத்தின் விலைப்பட்டியலைக் கொடுத்தார். எனக்கு தேவையான புத்தகங்களை தெரிவு செய்து விட்டு, அவை எடுத்துக் கொடுக்கப்படும் வரையில் காத்திருந்த போது, அந்த அலுவலகத்தின் அலமாரி ஒன்றின் கீழ்ப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு தாள் என் கவனத்தை ஈர்த்தது. அது அந்த அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பட்டியல். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்த தாளில் பெயர்கள் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தப்பட்டிருந்தன:
Sudarshan Stores
Sudarshan Books
Sir
Madam
…
…
முதலாளியின் பெயரைத் தட்டச்சு செய்தால் கூட அவரது மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடுமென அஞ்சி “Sir” என்று விளித்த, அந்த முகமறியா ஊழியர் தமிழர்கள் காட்டும் மிதமிஞ்சிய பணிவின் அடையாளமாக எனக்குத் தோன்றினார்.
இறைவனையும் தோழனாகப் பாவித்து, நீ, அவன் என்று அழைத்த தமிழ் சமுதாயம் தனக்கு மேலிருக்கும் மனிதர்களிடம் மிதமிஞ்சிய பணிவினைக் காட்டத் தொடங்கியது எப்போது என்று தெரியவில்லை.
நம் மண்ணில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த சாதியமைப்பும், நிலவுடமையாளர் ஆதிக்கமும், பின்னர் காலனியாதிக்கமும், அதன் விளைவாகப் பிறந்த அதிகார வர்க்கமும் இந்த மனநிலைக்கு காரணமாக இருப்பதில் சந்தேகமில்லை. உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களின் குடும்பத்திலுள்ள சிறுவர்கள் கூட, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முதியவர்களின் பெயர் சொல்லி, ஒருமையில் அழைப்பதை கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன். எனது நண்பரொருவர் காவல் துறையில் உயர்ந்த நிலை பதவி ஒன்றில் இருக்கிறார். அவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவராதலால் அனைவரிடமும் பணிவாக, இனிமையாக பழகுபவர். ஒரு முறை அவர் அலுவலகத்தில் இருக்கும் போது வயது முதிர்ந்த காவலர் ஒருவரை “நீ, போ” என்று ஒருமையில் அழைப்பதை வியந்து பார்த்த போது “இங்கயெல்லாம் இதுதான் வழக்கம். இப்படி நடத்தலேனா நம்ம தலைக்கு மேல ஏறி உக்காந்துருவாங்க” என்றார். நமது தமிழ்ச் சமுதாயத்தின் பணிவும் மரியாதையும் பெரும்பாலும் மனித நேயத்தில் விளைவதில்லை; ஒரு வித அச்சத்திலும், அடிமையுணர்விலுமே விளைகிறது. முகத்திற்கு முன்னால் பணிவும் குழைவும் காட்டும் பலர், முகம் மறைந்ததும் சம்பந்தப்பட்ட நபரை சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சிப்பதை நாம் பல தடவை பார்த்திருக்கலாம்.
ரோபோர்ட்டோ பெனினியின் “Life is beautiful” படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் பெனினி அவரது மாமா நடத்தும் விடுதி ஒன்றில் உணவு பரிமாறும் பணியில் சேர செல்வார். அவரது மாமா அவரிடம் பல கேள்விகள் கேட்பார். அதில் ஒன்று எப்படி விடுதிக்கு உணவருந்த வருகிறவர்களிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டுமென்பது, குறிப்பாக தலையை எப்படி தாழ்த்த வேண்டுமென்பது. பெனினி முதலில் லேசாக தலையைத் தாழ்த்துவார். அதற்கு அவர் மாமா எதுவும் சொல்லாமல் இருக்கவே, தாழ்த்தி, தாழ்த்தி இடுப்பை வளைத்து வணங்குமளவுக்கு போய் விடுவார். அதற்கு அவர் மாமா சொல்வது:
“முட்டாள், சூரியகாந்தி மலர்களைப் பார்த்திருக்கிறாயா? அவை சூரியனுக்கு முன்னால் லேசாகத் தலை வணங்கி நிற்கின்றனவே. அப்படி செய்தால் போதுமானது. ஒரேடியாக சூரியகாந்தி தலையை சாய்த்து விட்டதென்றால் அது செத்துப் போய் விட்டதென்று அர்த்தம். நீ பரிமாறுபவன். பணிவிடைக்காரன் அல்ல (You serve. You are not a servant). பரிமாறுவது என்பது உன்னதமான ஒரு கலை. கடவுள்தான் மனிதனின் முதல் பரிசாரகன். கடவுள் மனிதனுக்கு பரிமாறுகிறார். ஆனால் பணிவிடைக்காரன் ஆவதில்லை”
காலச்சுவடு பதிப்பகத்தில் நான் கடந்த வாரம் வாங்கி வந்த புத்தகங்களில் ஒன்று “ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்” என்பது. இது சுமார் 70 வயதான சுந்தர ராமசாமி அவர்கள், சுமார் 30 வயதுள்ள தடா கைதியான ஏழுமலை என்பவருக்கு எழுதிய பல்வேறு கடிதங்களின் தொகுப்பாகும். இதில் 31.03.03 தேதியிட்ட கடிதத்தில் சுந்தர ராமசாமி பின்வருமாறு எழுதுகிறார்:
“நீங்கள் என்னை ஐயா என்று அழைத்தீர்களானால் அது எனக்குக் கூச்சத்தையே தரும். என் பெயர் சொல்லியே அழைக்கலாம். நட்பும் மதிப்பும் நம் மனதிற்குள் இருந்தால் பிற விஷயங்கள் எல்லாம் சம்பிரதாயமே.”
Monday, October 15, 2007
எலியும் சுண்டெலியும், மணிரத்னத்தின் குரு, அகத்தியனின் அம்னீசியா
சென்னையில் பிள்ளைகளுக்கென்று பல திருத்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சத்யம் திரையரங்க வளாகம். அங்கே, மேற்கத்திய திரையரங்களுக்கு இணையான ஸ்டுடியோ 5 மற்றும் 6 டிகிரிசில் திரைப்படம் பார்ப்பது எனக்கும் உவப்பான ஒன்றே. ஆனால் இம் முறை குழந்தைகளுக்கான திரைப்படமான ராட்டாட்டூயி (Ratatouille) நாங்கள் பார்க்க விரும்பிய தினத்தில் சத்யம் எலைட்டில் போடப்படுவதாக சத்யத்தின் இணைய தளமான www.thecinema.in சொன்னது. முதலில் சத்யம் எலைட் என்பது சத்யம் வளாகத்திற்குள் இன்னொரு அரங்கமோ என்று நினைத்தேன். போன பிறகுதான் தெரிந்தது சத்யம் அரங்கத்தின் பால்கனிதான் சத்யம் எலைட் என வழங்கப்படுகிறது என.
சில ஆண்டுகளுக்கு முன் முதலாவது ஹாரி பாட்டர் பார்க்க சத்யம் அரங்கம் சென்றோம். வசதியில்லாத இருக்கைகள், தெளிவில்லாத ஒலியனுபவம் என்று அவ்வளவு திருப்திகரமாக அந்த அனுபவம் அமையவில்லை. ஆனால், இப்போது அரங்கத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சத்யம் எலைட் செல்லும் வழியில் ஜப்பானிய உள்ளலங்கார அமைப்புகளைச் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. சத்யம் இணைய தளத்திலேயே முன்பதிவு செய்து கொள்ளலாம் (செக்யூரிட்டி செர்ட்டிபிகேட் எக்ஸ்பைர்ட் என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்து விட்டு செய்தேன்). இருக்கைகளை தெரிவு செய்யலாம் (ரூ 10 கட்டணமாகச் செலுத்தி இதையும் செய்தேன்). நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொண்டு இருக்கைக்கு வரவழைக்கலாம் (சோம்பேறித்தனத்திற்கும் ஒரு அளவிருக்கறபடியால் இதை செய்யவில்லை). நுழைவுச் சீட்டுகளை அச்சடித்துக் கொள்ளலாம் (இதைச் செய்யாமலிருக்க முடியாது. அரங்க வாசலில் நமது அச்சடித்த காகிதத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் நுழைவுச் சீட்டை கொடுத்து விடுகிறார்கள்).
ராட்டாட்டூயி அலுப்பு தட்டுகிற படம். “ஏண்டா வந்தோம்” என்ற அளவிற்கல்ல, “கொடுத்த 500 ரூபாய்க்கு வேறு ஏதாவது படம் பார்த்திருக்கலாமே” என்ற எண்ணத்தையும், ஓரிரண்டு கொட்டாவிகளையும் அவ்வப்போது எழுப்பும் அளவிற்கு அலுப்பு தட்டுகிறது. காரணங்கள் பல. ஒன்று, கடந்து 3-4 ஆண்டுகளாக வெளிவந்து, வெற்றி பெற்ற அனிமேஷன் படங்களின் சூத்திரத்தை அப்படியே பின்பற்றுகிறது இந்தக் கதை. கதை சொல்ல வரும் நன்னெறிகளும் டிட்டோ: விடா முயற்சியின் மேன்மை; நட்பின் இலக்கணம்; இத்யாதி, இத்யாதி. இந்த பரிட்சயம் அலுப்பைத் தூண்டுகிறது. இன்னொரு காரணம்: இந்தப் படத்தில் மனிதர்களாக வருகிறவர்கள் அத்தனை பேரும் படு சீரியசான பேர்வழிகள். எலிகளைத் துரத்த துப்பாக்கியைத் தூக்கும் கிழவியிலிருந்து, சிடுசிடு முகத்து சமையல் கலை விமர்சகன் வரை. சிரிக்க மறுக்கிறவர்களால் சிரிக்க வைக்கவும் முடியாது. எலி நாயகனும், அவரது தம்பியும், அப்பாவும் சிரிக்க வைக்கிறார்கள். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: எவ்வளவுதான் நெருங்கிய சொந்தக்காரர்கள் ஆனாலும் சுண்டெலிக்கு இருக்கிற க்யூட்னெஸ் (எ.கா: மிக்கி மவுஸ், டாம் (&ஜெரி), ஸ்டூவர்ட் லிட்டில்) எலிக்கு கிடையாது. கூடவே, இப்படி சொல்வதற்காக உலகம் என்னை பிற்போக்குவாதியாக நிராகரித்தாலும் பரவாயில்லை, ஆனால் சமையல் கலையில் ஒரு எலி வல்லுநர் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரே படத்திற்கு 500 ரூபாயை விரயம் செய்து விட்ட படியால் இனிமேல் படங்கள் ஒன்று டிவியில், அல்லது டிவிடியில் என்று தீர்மானித்தோம். மணிரத்னத்தின் “குரு”வை ஒரு முறை திருவனந்தபுரத்திலிருந்து மும்பை செல்லும் போது விமானத்தில் அரைகுறையாகப் பார்த்திருந்தேன். இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் உதவியோடு கதை புரிந்தது. பிடித்திருந்தது. எனவே, படத்தை மீண்டும், முழுதாக, தமிழில் அனுபவிக்க எண்ணி, மோசர் பேயரின் விசிடி வட்டில் வந்ததை ஸ்பென்சர் ஃபுட்சில் மளிகை சாமான்கள் வாங்கும் போது 28 ரூபாய்க்கு வாங்கினேன்.
இந்தி மூலத்தில் ஆங்கில வசன வாக்கியங்கள் ஓட படத்தை ரசித்த அளவுக்கு தமிழில் ரசிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் படத்தில் உபயோகப்படுத்தப்படும் தமிழ். குஜராத்தின் உடைகளும், உடல் மொழியும் நிறைந்த மனிதர்கள் திருநெல்வேலி் தமிழில் பேசுவது அபத்தமாக இருக்கிறது. கதை ஆரம்பமாகும் பகுதி இலஞ்சி, திருநெல்வேலி ஜில்லா என்று திரையில் போடுவது இந்த அபத்தத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. பூவரசம் பூ போன்ற ஒரு பெரிய மலரை எடுத்து காதில் செருகுகிற உணர்வுதான் ஏற்படுகிறது.
2007ன் தொடக்கத்தில் வந்த “குரு”விற்கு இணையத்தில், குறிப்பாக பதிவு தளங்களில் பல விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. என் கவனத்தை ஈர்த்தது பினாத்தல்கள் என்ற பதிவு தளம் (http://penathal.blogspot.com), குறிப்பாக: http://penathal.blogspot.com/2007/01/16-jan-2007.htmlv. மணிரத்னம் திருந்தவே மாட்டாரா என்று அலுத்துக் கொள்ளும் பதிவர், “குரு” எப்படி மணிரத்னத்தின் சூத்திரத்துக்குள் அடங்கி விடுகிறது என்று விபரமாக சொல்கிறார். மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யா ரை அறிமுகம் – இரண்டு பாடல்களும் எனக்கும் ம.ர.வின் பழைய படங்களை ஞாபகப்படுத்தியது உண்மையே. அது போலவே, “நல்லவனா, கெட்டவனா?” கேள்வியும். ஆனால், மணிரத்னத்தின் படைப்புகளை ஒரு சூத்திரத்திற்குள் அடக்க முயலும் பார்வையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி சூத்திரத்திற்குள் முடியும் என்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்” மற்றும் “ஆய்த எழுத்து” ஆகியவற்றை எங்கே நிறுத்துவது. வரலாற்றை, குறிப்பாக சமீப கால வரலாற்றை சொல்ல முடிவது சுலபமல்ல. அதுவும் “சிவாஜி” போன்ற படங்களை ஓட வைக்கும் தமிழ் ரசிக கூட்டத்தில் இது போன்ற படங்களை வணிக ரீதியாக வெற்றி பெற வைப்பது சுலபமே அல்ல (வேண்டுமானால் ஞானராஜசேகரிடம் கேட்டுப் பாருங்கள்). இந்த ரீதியிலும், படம் அலுக்க வைக்காமல் ஓடுகிறது என்ற வகையிலும் “குரு” வெற்றிதான்.
திருபாய் அம்பானி வாழ்க்கையில் நடந்த அதைக் காண்பிக்கவில்லை, இதைக் காண்பிக்கவில்லை என்று சொல்வதும் நியாயமாகாது. எல்லாவற்றையும் காண்பிக்க வேண்டுமானால் படம் 10-12 மணிநேரமாவது ஓட வேண்டும். அப்போதும் இதே குறையைச் சொல்ல ஆட்கள் இருப்பார்கள். திருபாய் அம்பானியின் வாழ்க்கையின் மூலக்கூறு ஒன்றே ஒன்றுதான். அது, ஏற்கனவே உள்ளே சென்று வெற்றி பெற்றவர்கள், மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று பூட்டி வைத்திருந்த இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பிற்குள் அம்பானி முன்னர் எவரும் செய்திராத அளவு தந்திரத்தோடும், உக்கிரத்தோடும் தடைகளை உடைத்தெறிந்து வெற்றியடைந்தார். இதை இந்தப் படம் சாதாரண பார்வையாளனுக்கு கூட வெற்றிகரமாகக் காண்பிக்கிறது என்றே கருதுகிறேன்.
மூன்றாவதாக பார்த்தது கலைஞர் டிவியில் “செல்வம்” என்ற படம். பார்க்க வேண்டும் என்று பார்த்ததல்ல. போட்ட நேரத்தில் தொலைக்காட்சி முன்னர் இருந்த தற்சமயம்தான் காரணம். தலைப்பெல்லாம் முடிந்த பிறகுதான் பார்க்க ஆரம்பித்தோம். ஆரம்பக் காட்சிகள் வித்தியாசமாக இருக்க, “இது என்ன படம்?” என்ற ஆர்வம்தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. தமிழ் திரைப்படங்களில் அநியாயத்திற்கு குதறப்பட்ட மனநல நிலைமைகளில் ஒன்றான அம்னீசியா இந்தப் படத்தில் நடு நாயகம் செலுத்துகிறது.
அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட செல்வம் என்ற இளைஞன் (நடிகர் நந்தா) உண்மையில் யார் என்ற கேள்விக்கான விடையை நோக்கிய பயணம்தான் இந்தப் படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது. நடிகர் நந்தா சிறப்பாக நடித்திருக்கிறார். இயலாமை தரும் கோபம் மற்றும் சோகம், இவற்றோடு இளமை தரும் வேகம் மூன்றையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மருத்துவர்களில் ஒருவரான நடிகை உமாவின் நடிப்பும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக அவரது காதலைச் சொல்லும் காட்சி. தொடக்க காட்சிகளில் வரும் மருத்துவமனைக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன (சிகிட்சைக்கு பலமுறை பணம் கொடுக்க முன்வரும் நந்தாவிடம் “அது வேண்டாம்” என்று மறுக்கும் மருத்துவர் தவிர).
இப்படி விறுவிறுப்பாக செல்லும் படம் செல்வம் யாரென்று தெரிந்ததும் தூய்மையான அபத்தங்களின் திசையில் பயணிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை இயக்குநர் அகத்தியனுக்கும் முன்பாதிப் படத்தைப் பற்றி அம்னீசியா ஏற்பட்டிருக்கலாமோ?
Monday, September 10, 2007
தன்னந்தனியாய் ஒரு தேசம்
பிரசிலின் பரப்பளவு சுமார் 85 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இந்தியாவை விட 2.5 மடங்கு பெரிதான இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 18 கோடியே.
தென்னமரிக்காவின் மற்ற நாடுகளனைத்தும் ஸ்பானிஷ் பேச, பிரசில் மட்டும் போர்ச்சுக்கீஸ் சம்சாரிக்கிறது. போர்ச்சுக்கீஸில் வந்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கொரியா நாடுகளிலிருந்து குடிபுகுந்தவர்களும், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கர்களும், பூர்வீகக் குடிமக்களும் பெரும்பாலும் இனம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை மறந்து வசிக்கும் தேசம் பிரசில்.
மொழியில் மட்டுமல்ல, மற்ற பல அம்சங்களிலும் பிரசில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தெளிவாகத் தெரிந்த ஒன்று: பிரசிலின் பெரும்பாலான அமைப்புகளும், நிறுவனங்களும், தொழில்களும், வியாபாரங்களும் பிரசிலியர்களை முன்னிறுத்தி மட்டுமே இயங்குகின்றன. போர்ச்சுக்கல் மொழியில் அல்லாது பிற மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், உணவக பட்டியல்கள், விமான அறிவிப்புகள் ஆகியவை இங்கு வெகு குறைவு. மிக அழகான கடற்கரைகள் கொண்ட வடகிழக்கு நகரங்கள் பிரசிலிய, உள்நாட்டுப் பயணிகளுக்கான சேவைகளை அளிப்பது போன்று, வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை ஊக்கமளிப்பது போல் தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிய போது
“பிரசிலின் கடற்கரைகளுக்கு விடுமுறைக்காக வருபவர்களில் முக்கால்வாசிக்கு மேல் பிரசிலியர்கள். ஐரோப்பாவிலிருந்து கொஞ்சம் பேர் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து அதிகம் வருவதில்லை” என்றார்.
அமெரிக்காவிக்காவிற்கும் பிரசிலுக்கும் இடையே ஒரு வித இறுக்கமான உறவு நிலை நிலவுகிறது. அமெரிக்கர்கள் விசா எடுத்து செல்ல வேண்டிய வெகுசில நாடுகளில் பிரசிலும் ஒன்று. பிரசிலியர்களுக்கு ஐரோப்பா செல்ல விசா அவசியமில்லை. அமெரிக்கா செல்ல தேவைப்படுகிறது. இது பிரசிலியர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, அமெரிக்கர்கள் விசா எடுத்துத்தான் வரமுடியும் என்றாக்கி விட்டார்கள்.
பிரசிலின் ஆதாரம் வேளாண்மை. இங்கிருந்துதான் முந்திரிப் பருப்பு, பப்பாளி, கொய்யா என்று பல தாவரங்கள் ஆசியாவிற்கு வந்தது (பதிலுக்கு இந்தியாவிலிருந்து மாம்பழம் பிரசிலுக்கு சென்றது). கரும்பு, சோளம், சோயா மொச்சை, காப்பி முதலான பல பயிர்களின் உற்பத்தியில் உலகில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றது இந்த நாடு. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விரிந்த பண்ணைகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இறைச்சி வகைகளில் பிரசிலியருக்கு பிரதானமானது மாட்டிறைச்சி. நெல்லூர் இன மாடுகள் கொண்டு வரப்பட்டு இங்கு கலப்பினமாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. கோழி உற்பத்தியில் விரைந்து, வளர்ந்து அமெரிக்காவுடன் போட்டியிடுகிறது இந்த நாடு. மீன், இறால் உற்பத்தியும் விரைந்து, பெருகி வருகிறது.
கரும்பிலிருந்து எரிசாராயம் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது பிரசில். மக்காச்சோளத்திலிருந்து தயாரிப்பதை விட கரும்பிலிருந்து விலை குறைவாக சாராயம் தயாரிக்கலாமாம். பிரசிலின் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் சாராய எரிபொருளும் விற்கப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 40. எரிசாராயம் லிட்டருக்கு ரூ 20. பெட்ரோல் லிட்டருக்கு 12 கி.மீ. கொடுக்குமென்றால் சாராயம் 8-9 கி.மீ. கொடுக்குமென்கிறார்கள். இப்போது சாராயம் விலை குறைவு என்றாலும், அறுவடை முடிந்து கரும்பு வரத்து குறையும் போது விலை கூடி விடும் என்கிறார்கள்.
வாகனங்களுக்குப் போட்டியாக பிரசிலியர்களும் கரும்பிலிருந்து பெறப்படும் மது வகைகளை குடிக்கிறார்கள். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒருவித ரம் வகை மது கஷாஷா எனப்படுகிறது. இதை எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறை தொட்டுக் கொண்டு, அப்படியே குடிக்கிறார்கள், அல்லது எலுமிச்சங்காய், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் போட்டுக் குலுக்கி கப்ரினா என்ற காக்டெயிலாகவும் குடிக்கிறார்கள். ஒரு லிட்டர் கஷாஷா 75-100 ரூபாய்க்குள் கிடைக்கிறது.
பரந்த நிலப்பரப்பில் குறைந்த மக்கள் தொகை, வற்றாத நீர்வளம், மற்றும் இயற்கையின் தாராளமான உயிரின, கனிம வளங்கள் எல்லாம் இருந்தும் பிரசிலில் வறுமை தாராளமாகவே இருக்கிறது. சா பாலோவின் அடுக்கு மாடிக் கட்டங்களின் பின்னால் சேரிகள். முதுகிற்குப் பின்னால் தாக்கும் வன்முறைக் கலாசாரம். சா பாலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற 50 லட்சம்-ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களிலும், பத்திருபது லட்சம் கொண்ட சிறு நகரங்களான சால்வடோர், ஃபோர்ட்டலிசாவிலும், துப்பாக்கி முனையில் வழிப்பறி, கொள்ளை, ஆட்கடத்தல் என்பன பரவலாக நடைபெறுகின்றன. நண்பர் ஒருவர் சமீபத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் துப்பாக்கி தாங்கிய மோட்டார் சைக்கிள்காரர்களால் மிரட்டப்பட்டு பணம் இழந்திருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை விவரிக்கையில்:
“குடிவெறியர்களுக்கும், போதை மருந்து உபயோகிப்பவர்களுக்கும், வேசிகளுக்கும் பிறந்து, ஏழ்மையில் உழலும் இளைஞர்கள்தான் பெரும்பாலும் இந்த வகையான குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். அன்பு, மனித உயிரின் மதிப்பு முதலியவற்றை அறியாத இவர்கள் உயிரைப் பறிக்க சற்றும் தயங்குவதில்லை. இவர்களிடம் மாட்டிக் கொண்டால் கேட்கும் பொருளைக் கொடுத்துவிட்டு தப்புவதுதான் புத்திசாலித்தனம்” என்றார்.
கூடவே, “நாம் மேல்தளத்தில் இருந்து இரவுணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கீழே கடற்கரை சாலையில் ஒரு பெண்ணின் பையை பறித்துக் கொண்டு ஒருவன் ஓடினானே. நீ பார்த்தாயா?” என்றார்.
“காண வேண்டிய காட்சிகளை நீர் எங்கே காட்டுகிறீர்?” என்று அலுத்துக் கொண்டேன்.
இரவுணவு முடித்து விட்டு விடுதியை நோக்கி சென்ற போது சாலையில் ஓரிடத்தில் தனியாக நின்றிருந்த ஒரு இளம் பெண்ணைச் சுட்டிக் காட்டி “காட்ட வேண்டிய காட்சிகளை சுட்டிக் காட்டவில்லையென்று நீ அலுத்துக் கொள்வதால் சொல்கிறேன், இந்தப் பெண்
ஒரு வேசி. வாடிக்கையாளரை எதிர்பார்த்து நிற்கிறாள்” என்றார்.
அதற்குள் எங்கள் வாகனம் அவளைப் போலவே தனியாக நின்றிருந்த இன்னொரு பெண்ணையும் கடந்து சென்று கொண்டிருந்தது.
“இவளுமா?” என்றேன்.
“இவனுமா? என்று கேள். இது அறுவை சிகிட்சை மூலம் பெண்ணாக மாற்றம் செய்து கொண்ட ஒரு ஆண்” என்றார்.
ஒரு லிட்டர் கஷாஷா குடித்தால்தான் தலைசுற்றுவது நிற்கும் போலிருந்தது.
Sunday, September 2, 2007
சா பாலோவில் உழவர் சந்தை
நண்பர் என்னிடம், “வா என்னுடன். உனக்கு ஒன்றைக் காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றார். சென்ற இடம் அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெரு. ஒவ்வொரு வெள்ளியும் அந்தத் தெரு உழவர் சந்தையாக மாறி விடுகிறதாம்.
பிரசில் -- காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மொச்சை மற்றும் கடலை வித்துக்கள், இறைச்சி, மீன் -- என்று எல்லா விதமான உணவு உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகும். இங்கும் எல்லா இடங்களையும் போலவே உழவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. சா பாலோவில் உணவின் விலை அதிகமாக இருப்பதை உணவகங்களிலும், செல்ல நேரிட்ட ஒரு நடுத்தர அங்காடியிலிருந்தும் அறிந்து கொண்டேன்.
சா பாலோ அரசு உழவர் சந்தை என்று ஒரு இடத்தை நிரந்தரமாக ஏற்படுத்தாமல், நகரிலுள்ள பல தெருக்களில் உழவர் அமைப்புக்கள் வாரத்தில் ஒரு நாள் சந்தை ஏற்படுத்த ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. சா பாலோ போன்ற பெரிய நகரில் இந்த ஏற்பாடு உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. நுகர்வோர் நடந்து சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உழவர்கள் ஒரு பரந்த சந்தையில் பங்கு கொள்ள முடிகிறது. ஆனால், உழவர்கள் ஏதாவது வாகனங்களை சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்துக் கொள்ள வேண்டி வரும். நம்மூர் போல் பேருந்தில் கொண்டு செல்ல முடியாது.
பச்சைப் பசலேன்று காய்கறிகளும், வித, விதமான பழங்களும் சந்தையில் குவிந்திருந்தன. இறைச்சி விற்க இரு கடைகள் இருந்தன. ஒன்றில் விசா க்ரெடிட் கார்டு வசதி உண்டு. மீன்கள் விற்க ஒரு கடை. சாளை மீன்கள் கிலோவுக்கு 4.80 ரியால்கள், ஏறக்குறைய 100 ரூபாய். இறால்கள் ஏறக்குறைய 900 ரூபாய். ஆனால் காய்கறிகள், பழங்கள் விலை ஏகத்துக்கும் மலிவு. ஒரு டஜன் ஆரஞ்சு வாங்கினேன். விலை 60 ரூபாய். ஆனால் விற்றவர் 40 ரூபாய் போதும் என்று சொல்லி விட்டார். கொசுறாக ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்தும் கொடுத்தார்.
எங்கு இருந்தாலும் உழவர்களுக்கு ஒரு குணம் இருக்கிறது: தங்களது உழைப்பின் பலனை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பார்த்து மகிழ்வது.
Tuesday, August 28, 2007
சா பாலோ நோக்கி
சென்னையிலிருந்து ப்ரான்க்பர்ட் அல்லது லண்டன் சென்று அங்கிருந்து சா பாலோ செல்லலாம். ஆனால் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ இரண்டுமே நரகங்களாகிவிட்ட இந்த நாட்களில் இவற்றை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்கிறேன். எனவே, எனது பயண அமைப்பாளர், ட்ராவல் மாஸ்டர்ஸின் சயனம் புதிய வழியை பரிந்துரைத்த போது அது மும்பை வழி என்பதை பொருட்படுத்தாமல் சரி சொன்னேன். மும்பையில் தங்க வேண்டிய 8 மணி நேரத்தைக் கணக்கில் சேர்க்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா மூலமாக பிரேசில் செல்வது, ஐரோப்பா செல்வதை விட தூரமும் நேரமும் குறைவு.
மும்பையிலிருந்து ஜொகனஸ்பர்க் ஆறாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் எட்டு மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க்கிலிருந்து சா பாலோ ஏழாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் ஒன்பது மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இடைத் தங்கல். சகல வசதிகளோடும், குறைவான நெரிசலுடனும், நட்புடன், இனிமையாகப் பேசும் தென்னாப்பிரிக்கர்களுடனும் இருக்கும் ஜொகனஸ்பர்க் விமான நிலையம் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ, பாரிஸ் டீகால் மூன்றையும் விட ஆயிரம் மடங்கு உயர்வு.
இப்போதுதான் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க ஏர்வேய்ஸைப் பயன்படுத்துகிறேன். பொழுதுபோக்கு என்ற ஒன்றை மட்டும் தவிர்த்து, மற்ற அத்தனை அம்சங்களிலும் ஐரோப்பிய, அமெரிக்க விமான சேவைகளை விஞ்சுகிறது இந்த ஏர்வேய்ஸ்.
மும்பை- ஜொகனஸ்பர்க் விமானம் கால்வாசி காலியாக இருந்தது வசதியாக இருந்தது. ஜொகனஸ்பர்க்-சா பாலோ நிறைந்திருந்தது. எனக்கு பக்கத்தில் குண்டூரிலிருந்து வந்து பங்களூரு கோவான்சிசில் பணிபுரியும் பிரசாத், அவர் சமீபத்தில் மணமுடித்த அதே கோவான்சிசை சேர்ந்த லதா. இருவரும் இரண்டாண்டுகளுக்கு பெருவில் பணியாற்றப் போகிறார்களாம். பெரு தலைநகர் லிமாவில் உள்ள ஃபிடலிட்டி வங்கி இவர்களது நிறுவனத்தின் மென்பொருளை வாங்கியிருக்கிறதாம். அது தொடர்பான சேவை விவகாரத்திற்காக செல்கிறார்களாம். “ஸ்பானிஷ் தெரியுமா?” என்றதற்கு “பொக்யிட்டோ” (ரொம்பக் கொஞ்சம்) என்று சிரித்தார் பிரசாத். பெரு மாதிரி ஒரு நாட்டில் இரண்டாண்டுகள் தங்கியிருந்தால் ஸ்பானிஷ் தானாக வந்துவிடும்.
சா பாலோ விமான நிலையம் பிரமாண்டமானது. ஒரு கணிசமான நடைக்குப் பின்னர் குடியுரிமை சோதனைக்கு வந்தோம். பிரேசிலின் குடியுரிமை சோதனை ரொம்ப எளிமையானது. பிரேசில் நாட்டவராக இருந்தால் ஒருவர் நின்று கடவுச் சீட்டை பரிசோதிக்கிறார். ஆளின் முகத்தையும், கடவுச் சீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிடுகிறார். பிறகு நட்பாகவோ, தமாஷாகவோ ஏதாவது பேசிக் கொண்டே அனுப்பி விடுகிறார். வெளிநாட்டினர் மட்டும் வரிசையில் நின்று, அதிகாரிகளிடம் சென்று சோதிக்கப்பட வேண்டும். அதிலும், மற்ற தென்னமரிக்க நாடுகளில் செய்வது போல் இந்திய பாஸ்போர்ட் என்றால் ஒரு வித சந்தேகத்துடன் ஆராய்வது எல்லாம் கிடையாது. கடவுச் சீட்டையும், விசாவையும் துரிதமாக சரிபார்த்து விட்டு, புன்னகையுடன் ஒரு சீல். அவ்வளவுதான்.
அலுப்பு தட்டிய சிவாஜி
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை
இரண்டாண்டுகளுக்கு முன் இந்த விமான நிலையத்தை உபயோகப்படுத்தும்போது ஏற்பட்ட சில்லறை சிரமங்களால், இதைத் தவிர்த்து விட்டு சென்னை வழியாகவே வான் பயணம் மேற்கொள்ளுவதை நாடி வந்திருக்கிறேன். இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களால் மறுபடியும் மும்பை.
கடந்த முறைக்கு மும்பை விமான நிலையத்தில் சில, நல்ல மாற்றங்கள். நெரிசல் குறைந்தது போலிருக்கிறது. கடந்த முறை கைப்பைகள் பரிசோதிக்கும் வரிசையில் 50-60 பேர். அவர்களில் பந்தா துளிகூட காட்டாது பொறுமையாக நின்றிருந்த ரத்தன் டாட்டாவும் உண்டு. இம்முறை குடியுரிமை சோதனையில் கூட கூட்டமில்லை. பதினாறு அதிகாரிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வரிசையில் போய் நின்றவுடன் அழைத்தார்கள். என்னை சோதித்த நீலப் புடவை உடுத்திய பெண் அதிகாரி என்னையும், என் கடவுச் சீட்டையும் ரொம்ப சந்தேகமாக பார்த்தார். பல கேள்விகள் கேட்டார். திருப்தியில்லாமல்தான் என்னை மேற்கொண்டு செல்ல அனுமதித்தது போல் தோன்றியது.
சிவாஜியின் பயணிகள் காத்திருப்பு கூடம் மகா விசாலமாக இருக்கிறது. வசதியற்ற நாற்காலிகளில் பலர் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். பார்த்தவுடன் பசியடங்கி விடும் வகையில் காட்சியளிக்கும் சாண்ட்விச்களையும், அக்காமாலா பானங்களையும் விற்கும் இரு கடைகள், டாலரை 39.75 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, அதையே 44.50 ரூபாய்க்கு விற்கும் இரு அந்நிய செலாவணிக் கடைகள், சுங்கவரி விலக்கு பெற்ற பொருட்களை விற்கும், கொஞ்சமும் ஆர்வத்தைத் தூண்டாத இரு கடைகள் – இப்படி பயணிகளோடு சேர்ந்து அரைத் தூக்கத்திலிருக்கிறது விமான நிலையம். கடந்த முறை ஏற்பட்ட எரிச்சல் மாறி, இந்த முறை அலுப்புதான் தட்டியது.
அடுத்த முறையாவது இந்த விமான நிலையம் நல்ல அனுபவத்தை தரலாம் என்ற நம்பிக்கையோடு விமானம் நோக்கி நடந்தேன்.
Thursday, August 16, 2007
சிங்கப்பூரில் ஒரு நாள்: செராங்கூன் ரோடு
சிங்கப்பூரின் “லிட்டில் இந்தியா” என்று அழைக்கப்படும் தமிழர்கள் நிறைந்த பகுதியை கீறிச் செல்லும் பிரதான சாலைதான் செராங்கூன் ரோடு. செராங்கூன் சாலையின் ஒரு பக்கம் முழுவதும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்தவர்களுக்கு பொருட்களை விற்கும் பலவிதக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. பல்வேறு வெள்ளைக்காரர்கள் பெயர்களைத் தாங்கிய செராங்கூனின் கிளைச் சாலைகளிலும் இந்தியக் கடைகள் மலிந்திருக்கின்றன. துணிகள், உடுப்புகள், நகைகள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பத்திரிகைகள், குறுந்தகடுகள், உணவகங்கள் என்று வரிசையாக கடைகள். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக முஸ்தஃபா காம்ப்ளெக்ஸ் என்றழைக்கப்படும் பேரங்காடி. சிங்கப்பூரின் புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலும் செராங்கூன் சாலையில்தான் உள்ளது.
நான் முதலும், கடைசியுமாக செராங்கூன் வந்தது 1989ல். பிறகு பலமுறை சிங்கப்பூர் வந்தாலும் செராங்கூன் வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது நண்பர் சிங்கப்பூரில் வேறு பகுதியில் வசித்ததால் செராங்கூன் வர முடியவில்லை. இப்போது பெராக் ஹோட்டலில் இருந்ததால் செராங்கூன் சென்று பார்க்க விரும்பினேன். சில சில்லறை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் தேவைப்பட்டன. முஸ்தாஃபா சென்று அவற்றைப் பார்வையிடவும் வேண்டியிருந்தது.
பெராக் ஹோட்டலில் இருந்து நடையாக சுங்கே வந்து செராங்கூனில் திரும்பும் போது ஒருவர் – ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இந்தியர் – வந்து முஸ்தாஃபா எங்கே இருக்கிறதென்று சொல்ல முடியுமா என்று கேட்டார். நானும் அங்கேதான் போக வேண்டும், எனக்கும் வழி தெரியாது, யாரிடமாவது கேட்போம் என்று அங்கிருந்த ஒருவரிடம் இரண்டு பேரும் வழி கேட்டு விட்டு நடந்தோம்.
அபிஷேக் – அதுதான் என் சக நடைபயணியின் பெயர் – திருவான்மியூரிலிருந்து வருகிறார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலயில் பொறியியல் படித்து விட்டு நேஷனல் யூனிவர்சிடி ஆஃப் சிங்கப்பூரில் பயோ எஞ்சினியரிங்கில் முனைவர் படிப்பு படிக்க வந்திருக்கிறார். இளங்கலையிலிருந்து நேராக முனைவர். முனைவர் பட்டம் பெற நான்காண்டுகளாகுமாம்.
செராங்கூனில் முஸ்தஃபா பேரங்காடியை நோக்கி செல்லும் பாதையில் கடந்த 16 ஆண்டுகளிலும் பெரியதாக மாற்றம் ஏதும் இருப்பதாகப்படவில்லை. முஸ்தாஃபா காலத்திற்கேற்ப பெரிதளவு மாறியிருக்கிறது. கடையை பெரிய அளவில் விரிவுபடுத்தி, தளம் தளமாக, எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி காய்கறி, மளிகை வரை அத்தனையையும் வைத்திருக்கிறார்கள். எனக்கு அங்கு வாங்க வேண்டியது மிகவும் குறிப்பாக சில பொருட்கள். அவற்றை வாங்கிக் கொண்டு நகர ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆயிற்று.
வெளியில் வந்ததும் பசித்தது. முஸ்தஃபாவை சுற்றி, சுற்றி சாப்பாட்டுக் கடைகள்தான். உடுப்பி, செட்டிநாடு, பிஸ்மில்லா பவன்களையெல்லாம் ஒதுக்கி விட்டு, வயிறு பஞ்சாபி உணவு கேட்டது. முஸ்தாஃபின் செராங்கூன் சென்டருக்கு அடுத்துள்ள தந்தூரி ரெஸ்டாரண்டை முயற்சித்தேன். கொடுத்த 34 வெள்ளிகளுக்கு சாப்பாடு சுமார்தான்.
திரும்பி வரும் வழியில் குறுந்தட்டுக் கடை ரொம்ப கவர்ச்சிகரமாக இருக்கவே உள்ளே ஏறுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. பர்தா அணிந்த ஒரு பெண்மணி ரொம்ப நட்பாக “என்ன படம் வேணும், புதுசா, பழசா?” என்றார்.
“புதுசு”
“டிவிடியா, விசிடியா?”
“டிவிடி”
ஒரு வரிசையைக் காண்பித்தார்.
“பருத்திவீரன்”
போனசாக பம்மல் கே சம்பந்தமும் இருக்கும் டிவிடியைக் கொடுத்தார்.
“போக்கிரி வேணுமா?”
“ம்ஹூம்”
“வரலாறு?”
“ம்ஹூஹூம்”
இவரை விட்டால் ஹூக்களை அதிகப்படுத்தும் படங்களைத்தான் அடுக்குவார் என்பதால் “பிரகாஷ்ராஜ், ஜோதிகா படம்…..”
“பச்சைக்கிளி முத்துச்சரம்?”
நினைவுக்கு வந்துவிட்டது. “இல்லை, மொழி”
"அது டிவிடியில் இல்லை. விசிடியில் இருக்கிறது"
தயங்கினேன்.
“நல்ல சுத்தமான பிரிண்ட்”
“சரி கொடுங்க”
இதற்குள் இன்னொருவர் வந்து “புதுசாக என்ன வந்திருக்கிறது?” என்றார்.
“எல்லாம் இருக்கு. ஆனால் சிவாஜி இன்னும் வரவில்லை. இந்த வாரக் கடைசியில் ரிலீஸ் பண்ணுகிறார்களாம்”
நான் எனது தகடுகளுக்கான 25 வெள்ளியைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். 650 ரூபாய்கள். ஆனாலும் இது சட்டபூர்வமான சரக்கு. சிங்கப்பூர் தணிக்கைக் குழு பார்த்து, "பருத்திவீரன்" 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாமென்றும், "மொழி" பெற்றோர்கள் துணையோடு குழந்தைகள் பார்க்கலாமென்றும், அளித்த ஒப்புதல் ஸ்டிக்கர் ஒட்டிய சுத்தமான சரக்கு.
சிங்கப்பூரில் ஒரு நாள்: பெராக், பெராக், பெராக்
சிங்கப்பூர் செல்வது இது முதல் முறை இல்லை. என்றாலும் சில புதிய அனுபவங்கள்.
முதலாவது தங்குமிடம். இது வரை சிங்கப்பூரில் தங்குமிடம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஒரு நெருங்கிய நண்பர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் வீட்டில் தங்குவதை தவிர வேறு எதையும் அனுமதிக்க மாட்டார். இப்போது நண்பர் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டதால் தங்குமிடம் ஒன்றை ஏற்பாடு செய்யும் பொறுப்பு என் தலையில். வழக்கம் போலவே அந்தப் பொறுப்பை நான் கடைசி நிமிடம் வரை தட்டிக் கழித்தேன். புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னர்தான் பண்டாரிலிருந்து ஹோட்டல் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிய வந்தது சிங்கப்பூரில் முக்கால்வாசி விடுதிகள் நான் தங்க வேண்டிய நாளன்று முழுமையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன என்று. வேறு வழியில்லாமல் எக்ஸ்பீடியா.காம்-ஐ நாட வேண்டியதாயிற்று. எக்ஸ்பீடியா காண்பித்த 7-8 ஹோட்டல்களில் ஒன்றே ஒன்றுதான் அமெரிக்க டாலர் 200க்கும் குறைவு. அந்த ஹோட்டலின் பெயர்: பெராக் ஹோட்டல். லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் செராங்கூன் பகுதியில் உள்ளது என்றும், அங்கு ஏற்கனவே தங்கியவர்கள் இதற்கு நான்கு நட்சத்திரங்கள் வழங்கி கவுரப்படுத்தியிருந்ததாலும் இங்கேயே தங்கலாம் என்று முடிவெடுத்தேன்.
சிங்கப்பூரில் வாடகை ஊர்தியில் ஏறியதும் வாகன ஓட்டியிடம் “பெராக் ஹோட்டல்” என்றேன்.
“அப்படியா, அது எங்கே இருக்கிறது?”
நான் – “பெராக் ரோடு என்று போட்டிருந்தார்கள்”
அவர் – “கேள்விப்பட்டதில்லை”
நான் – “செராங்கூன் சாலை பக்கத்தில் என்று படித்தேன்”
அவர் – “செராங்கூன் ரொம்ப நீளமான சாலை”
இப்படிச் சொன்னவர் வாகனத்தில் இருக்கும் திசைகாட்டியை இயக்கி பெராக் ரோடைத் தேட அங்கும் அது இல்லை. இதற்கிடையில் நான் கணிணியத் திறந்து, ஹோட்டல் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து அவரிடம் சொல்ல, செல்போன் மூலமாக ஹோட்டலைத் தொடர்பு கொண்டு இடத்தைக் கண்டுபிடித்தார்.
இத்தனைக்கும் பெராக் ரோடு ஒதுக்குப்புறம் என்று சொல்ல முடியாது. ஜலன் பெசார் (Jalan Besar) என்கிற பிரதான சாலையும், சுங்கேய் (Sungei) என்கிற இன்னொரு பிரதான சாலையும் சந்திக்கும் இடத்திலிருந்து சுங்கேயில் மேற்கு நோக்கி சென்றால் முதலாவது வலது புறத் திருப்பம்தான் பெராக் ரோடு.
பெராக் ஹோட்டல் “பெராக் லாட்ஜ்” என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஓரளவு பெயர் வாய்ந்த விடுதியாக இருந்திருக்கிறது. இடையில் தொய்ந்து, பழையதான ஹோட்டலை இப்போது புதுப்பித்திருக்கிறார்கள். சுவர்களை சரிசெய்து வண்ணம் பூசி, அறைகளுக்கு மிகையில்லாத உள் அலங்காரங்கள் செய்து, மரப்பலகைகள் வேய்ந்த தளங்களை மீண்டும் பளபளப்பாக்கி, தேவைப்படும் இடங்களில் சிவப்பு தள ஓடுகள் பதித்து – மொத்தத்தில் ஒரு ஆடம்பரமில்லாத, ஆனால் தூய்மையையும், எளிமை துலங்கும் ஒரு வித கலையுணர்வையும் கொண்டு வந்திருக்கிறார்கள். அறைகளின் அளவுதான் அநியாயத்திற்கு சின்னது. நான் இருந்தது சுப்பீரியர் அறை. ஸ்டாண்டர்ட் அறையை விட சற்று பெரிது என்றார்கள். எனக்கு போதுமானது. இன்னொருவர் இருந்தால் இடைஞ்சலாக இருக்கலாம். கணவன்-மனைவி-குழந்தைகள் என்றால் கட்டாயம் முடியாது. ஆனால் ட்ரிப்பிள் ரூம் என்று பெரிய அறைகளும் உள்ளன.
இந்த இடத்திற்கு எக்ஸ்பீடியா என்னிடம் சுமார் வரிகள் உள்ளிட்டு 118 அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. நேரடியாக பதிந்தால் என்ன வாடகை என்றேன். சிங்கை டாலர்கள் 170 என்றார்கள். அது ஏறக்குறைய 110 அமெரிக்க டாலர்கள் வருகிறது. 2001-ல் 9/11க்குப் பிறகு பான் பசிபிக்கில் (சிங்கப்பூரின் 5 நட்சத்திர விடுதிகளில் ஒன்று) 100 அமெரிக்க டாலர்களுக்கு குறைவான வாடகையில் தங்கியிருக்கிறேன். இப்போது நிலைமை மாறி விட்டது. மறுபடியும் சிங்கப்பூரில் தங்குமிட தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.
சிங்கப்பூரில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்குபவர்களுக்கு, குறிப்பாக இந்திய உணவு சாப்பிட விரும்புவர்களுக்கு, முஸ்தாபாவில் பொருட்கள் வாங்க செல்கிறவர்களுக்கு, பெராக் ஹோட்டல் நல்ல தீர்வாக இருக்கும். ஆன் லைன் முன்பதிவு செய்யும் வசதியுடன் உள்ள பெராக் ஹோட்டலின் இணைய தளம்: www.peraklogdge.net.
Sunday, August 5, 2007
என் சமையலறையில்
சிறு வயதில் … அநேகமாக 8-9 வயதிருக்குமென நினைக்கிறேன் … தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாக வேண்டும் என்ற சட்டம் எங்கள் வீட்டில் அமல்படுத்தப்பட்டு பலத்த எதிர்ப்பிற்கு உள்ளான நேரம். சட்டத்தின் கடுமையைக் குறைப்பதற்காக அந்த முட்டை நாங்கள் விருப்பப்பட்ட வகையில் சமைத்துக் கொள்ளப்படலாம் என்றும், நாங்களே அதை சமைத்துக் கொள்ளலாம் என்றும் இரு சலுகைகள் வழங்கப்பட்டன.
பச்சையாக பாலில் அடித்து …
அரைகுறையாக அவித்து, ஓட்டின் மேல் துவாரம் செய்து, உப்பும், மிளகும் போட்டு …
முழுவதாக அவித்து, இரண்டாக பிளந்து, உப்பும், மிளகும் தூவி…
முட்டையை உடைத்து ஊற்றி, திருப்பிப் போட்டோ, போடாமலோ பொரித்து எடுத்து …
அடித்த முட்டையில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து ஆமலெட்டாக பொரித்து, அல்லது கிளறி வறுத்து …
இப்படியாக பெரியவர்கள் முட்டை சமைக்கும் முறைகள் எங்களுக்கு அலுத்துப் போனதால், முட்டையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து பொரித்தாலென்ன என்று பரீட்சார்த்த ரீதியாக ஆரம்பித்து, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா மற்றும் கைக்கு கிடைக்கும் பதார்த்தங்களை சேர்த்து பல விஷப் பரிட்சைகளை நடத்தினோம். கடவுள் கிருபையால் உடலுக்கும் பொருளுக்கும் சேதம் விளைவிக்காத அந்த பரிட்சைகள் எப்போது முடிவுக்கு வந்தன என்பது நினைவில்லை.
இந்த முதல் அனுபவத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து, கல்லூரி நாட்களில் மீண்டும் கரண்டியைப் பிடிக்க நேரிட்டது. நான் படித்த மீன்வள அறிவியலில், சுமார் இரண்டு பருவங்கள் (அப்போதெல்லாம் ஒரு பருவம் என்பது மூன்று மாதங்கள் கொண்ட ட்ரைமெஸ்டர்) மீன் வகைகளை பல விதங்களில் பதப்படுத்துவது பற்றி படிக்க வேண்டும். உறைய வைப்பது (ஃப்ரீசிங்), டப்பாக்களில் அடைப்பது (கேனிங்) என்று பலவகையான முறைகளை கற்றுத் தருவார்கள். மீன்கள் தவிர இறால், நண்டு, சிப்பி வகைகள் (ஓயிஸ்டர், மசல்ஸ்), கணவாய் (ஸ்குயிட்) என்று பலவித கடலுணவுகளை தயார் செய்ய வேண்டி வந்தது. ஆனால், வீட்டில் மூன்று வேளை திவ்யபோசனம் கிடைத்து வந்ததால் சமையலறைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை.
அந்தக் கட்டாயம் ஏற்பட்டது இளநிலை முடித்து விட்டது முதுநிலைப் படிப்பிற்காக வெளிநாடு சென்ற போதுதான். நான் சென்றது ஏசியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்றழைக்கப்படும் ஏ.ஐ.டி. தாய்லாந்தில் பாங்க்காக்கில் இருக்கிறது. விமான நிலையத்திலிருந்து அழைத்துப் போன நண்பர் ஜான் தோமஸ் அன்று இரவு விருந்து என்று ஒரு தாய் உணவகத்திற்கு கூட்டிச் சென்று விட்டார். நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன, மிதப்பன என்று சகலவகையான ஜீவராசிகளையும் உள்ளடக்கிய சுவையான விருந்து அது. இந்திய, சீன உணவு தயாரிப்பின் மிகச் சிறந்த அம்சங்களை உள்ளடக்கியதுதான் தாய் உணவு என்றுதான் அன்று கருதினேன்; இன்று வரை கருதுகிறேன். அப்பாடா, நம்மூர் சாப்பாடு கிடைக்க விட்டால் கூட இந்த உணவை சாப்பிட்டு சமாளித்து விடலாம் என்ற மகிழ்ச்சியுடன் அன்று இரவு அறைக்கு திரும்பி வந்தேன், மறுநாளே அந்த நம்பிக்கை குலையப் போகிறது என்று தெரியாமலே.
ஏ.ஐ.டியில் மாணவர்களுக்கு இரண்டு வகையான உறைவிடங்கள் கொடுக்கப்பட்டன. தனித் தனி அறைகள் கொண்ட நான்கு மாடிக் கட்டங்கள், அல்லது தளமொன்றிற்கு மூன்று அறைகள் + வரவேற்பரை & சமையலறை கொண்ட இரண்டு தள அபார்ட்மெண்ட்கள். இந்திய துணைக்கண்டலத்திலிருந்து அங்கிருந்த மாணவர்கள் பெரும்பாலோர் அபார்ட்மெண்ட்களை நாடினர். காரணம் அங்கு நம் விருப்பப்படி சமையல் செய்து கொள்ளலாம். நம்மூர் சமையல் செய்து கொடுக்க அங்கு 4-5 தாய் பெண்களும் இருந்தனர். ஒரு பெண் 2-3 அபார்ட்மெண்ட்டில் சமைப்பது வழக்கம். பத்து மணிக்கு வேலையை ஆரம்பித்து சைவர்களின் அபார்ட்மெண்டில்: சாம்பார், பொரியல், ரசம்; அசைவம் சாப்பிடும் இடங்களில்: மீன், கோழி, நண்டு, இறால் என்று வரிசையாக ஆக்கி வைத்து விட்டு நாம் சாப்பிட வரும் போது காணாமல் போய் விடுவர். பிறகு மதியம் 3 மணிக்கு வந்து துவைத்து, இஸ்திரி போட்ட துணிகளை அறைகளில் வைத்து விட்டு, அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு போவார்கள். மாலை 4 மணிக்கு ராச்சமையல் ஆரம்பித்து விடுவார்கள். மாலை ஆறு மணிக்கெல்லாம் ஹாட் பாட்டில் சப்பாத்தியோ, பூரியோ, ஆலு பரோட்டாவோ, சித்ரான்னங்களோ தயாராக இருக்கும். வாரத்தில் ஆறு நாட்கள் ஒரு fairy tale போல நடக்கும் இந்த மந்திர, மாய சமையல் ஞாயிறு மட்டும் கிடையாது.
முதல் நாளிரவு சுவையான தாய் உணவை சாப்பிட்டு விட்டு, மறு நாள் ஞாயிறு பெரும் எதிர்பார்ப்புடன் ஏ.ஐ.டி.யின் உணவகத்திற்கு சென்ற எனக்கு கிட்டியது பெருத்த ஏமாற்றமே. முதல் நாள் நாங்கள் ருசித்து சாப்பிட்ட உணவு வகைகளையே ஏ.ஐ.டி. உணவகம் சகிக்க முடியாத சுவையில் ஆக்கியளித்திருந்தது. என்னோடு சாப்பிட வந்திருந்த நண்பர் வி.எம்.பி. என்றழைக்கப்பட்ட வி.எம். பாலசுப்பிரமணியம் (தற்போது ஓஹாயோ ஸ்டேட் பல்கலையில் உணவுத் துறையில் பேராசிரியராக இருக்கிறார்) சைவர். இந்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு பேசாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதமும், தயிரும் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்படியாக மறுபடியும் சமையலறையில் மீண்டும் நுழைய ஒரு வாய்ப்பு கிட்டியது.
இதற்கிடையில் அங்கிருந்த தமிழ் குழாமில் ஏற்கனவே சமையல் தெரிந்தவர்கள் சில பேர் இருந்தார்கள். பி.கே என்றழைக்கப்பட்ட மல்லிகார்ஜீனன் பரமேஸ்வரகுமார் (இப்போது வர்ஜினியா டெக்கில் பேராசிரியராக இருக்கிறார்) மோர்க்குழம்பு வைப்பார். சென்னையிலிருந்து வந்திருந்த நாகேஷின் சிறப்பு வத்தக் குழம்பு + வெண்டைக்காய் பொரியல். எல்லாவற்றுக்கும் மேலே ‘தவசிப்பிள்ளை’ என்று சிறப்புப் பட்டம் கொடுக்கப்பட்டு, எல்லோராலும் அண்ணாச்சி அன்று அழைக்கப்பட்ட தூத்துக்குடி கணபதி (தற்போது திருச்சி வேளாண் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்). ஒரு மூட் வந்ததென்றால் சாம்பார், பொரியல், பச்சடி, துவையல் என்று சமைத்து, ஏ.ஐ.டி. பண்ணைக்கு சென்று வாழை இலை பறித்து வந்து விருந்தே போட்டு விடுவார்.
மேலே சொன்ன நண்பர்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்து நானும் சமையல் கற்று வந்தேன். ஆரம்பத்தில் பெரும்பாலும் சைவச் சமையல்தான். அப்புறம் அது அலுத்துப் போய், அசைவச் சமையல் முயன்று பார்த்தோம். கடைக்குப் போய் கோழி வெட்டி வாங்கி வந்தோம். கணபதி, நான், மற்றும் விருதுநகரிலிருந்து நண்பர் அரவிந்தன் (சமீபத்தில் சென்னை எஸ்.எஸ்.என் பொறியல் கல்லூரியில் கணிணித் துறை தலைவராக இருந்ததாக கேள்வி) மூவரும் வெட்டி, சுத்தம் செய்யப்பட்ட கோழியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். அது தன்னை எப்படி சமையல் செய்ய வேண்டும் என்ற முறையை சொல்லும் என்று எதிர்பார்த்தோமோ என்று தெரியவில்லை. மவுனத்தை கணபதிதான் உடைத்தார்:
“எல்லாக் குழம்பு வகைகளுக்கும் புளி வேண்டும்”
அடுத்தாற்போல் அரவிந்தன் சொன்னார்:
“கோழிக்கு மஞ்சள் தடவ வேண்டும். மஞ்சள் நல்ல ஆண்ட்டிசெப்டிக்”
நானும் ஏதாவது சொல்ல வேண்டுமல்லவா, எனவே “தேங்காயை அரைத்து கறியில் ஊற்றுவார்கள்” என்றேன்.
கணபதி புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்கினார். அரவிந்தன் மஞ்சளை தடவினார். நான் தேங்காய் மற்றும் மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்தேன். கொதித்து வந்த புளிநீரில் கோழியை போட்டு அவித்து, மசாலாவைக் கூட்டி இறக்கினோம். ஒரு வாய் சாப்பிட முடியவில்லை.
கோழி சமைக்க கற்றுக் கொள்ள ரங்காவுக்கு திருமணம் ஆக வேண்டியிருந்தது. அந்த அனுபவத்தை அப்புறமாக தொடருகிறேன்.