Tuesday, August 28, 2007

சா பாலோ நோக்கி

பிரேசிலுக்கு போவது முதல் தடவை இல்லையென்றாலும், போகும் வழி புதிது: மும்பை- ஜொகனஸ்பர்க்-சா பாலோ.

சென்னையிலிருந்து ப்ரான்க்பர்ட் அல்லது லண்டன் சென்று அங்கிருந்து சா பாலோ செல்லலாம். ஆனால் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ இரண்டுமே நரகங்களாகிவிட்ட இந்த நாட்களில் இவற்றை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்கிறேன். எனவே, எனது பயண அமைப்பாளர், ட்ராவல் மாஸ்டர்ஸின் சயனம் புதிய வழியை பரிந்துரைத்த போது அது மும்பை வழி என்பதை பொருட்படுத்தாமல் சரி சொன்னேன். மும்பையில் தங்க வேண்டிய 8 மணி நேரத்தைக் கணக்கில் சேர்க்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா மூலமாக பிரேசில் செல்வது, ஐரோப்பா செல்வதை விட தூரமும் நேரமும் குறைவு.

மும்பையிலிருந்து ஜொகனஸ்பர்க் ஆறாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் எட்டு மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க்கிலிருந்து சா பாலோ ஏழாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் மைல்கள். சுமார் ஒன்பது மணி நேரப் பயணம். ஜொகனஸ்பர்க் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இடைத் தங்கல். சகல வசதிகளோடும், குறைவான நெரிசலுடனும், நட்புடன், இனிமையாகப் பேசும் தென்னாப்பிரிக்கர்களுடனும் இருக்கும் ஜொகனஸ்பர்க் விமான நிலையம் ப்ரான்க்பர்ட், லண்டன் ஹீத்ரோ, பாரிஸ் டீகால் மூன்றையும் விட ஆயிரம் மடங்கு உயர்வு.

இப்போதுதான் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க ஏர்வேய்ஸைப் பயன்படுத்துகிறேன். பொழுதுபோக்கு என்ற ஒன்றை மட்டும் தவிர்த்து, மற்ற அத்தனை அம்சங்களிலும் ஐரோப்பிய, அமெரிக்க விமான சேவைகளை விஞ்சுகிறது இந்த ஏர்வேய்ஸ்.

மும்பை- ஜொகனஸ்பர்க் விமானம் கால்வாசி காலியாக இருந்தது வசதியாக இருந்தது. ஜொகனஸ்பர்க்-சா பாலோ நிறைந்திருந்தது. எனக்கு பக்கத்தில் குண்டூரிலிருந்து வந்து பங்களூரு கோவான்சிசில் பணிபுரியும் பிரசாத், அவர் சமீபத்தில் மணமுடித்த அதே கோவான்சிசை சேர்ந்த லதா. இருவரும் இரண்டாண்டுகளுக்கு பெருவில் பணியாற்றப் போகிறார்களாம். பெரு தலைநகர் லிமாவில் உள்ள ஃபிடலிட்டி வங்கி இவர்களது நிறுவனத்தின் மென்பொருளை வாங்கியிருக்கிறதாம். அது தொடர்பான சேவை விவகாரத்திற்காக செல்கிறார்களாம். “ஸ்பானிஷ் தெரியுமா?” என்றதற்கு “பொக்யிட்டோ” (ரொம்பக் கொஞ்சம்) என்று சிரித்தார் பிரசாத். பெரு மாதிரி ஒரு நாட்டில் இரண்டாண்டுகள் தங்கியிருந்தால் ஸ்பானிஷ் தானாக வந்துவிடும்.

சா பாலோ விமான நிலையம் பிரமாண்டமானது. ஒரு கணிசமான நடைக்குப் பின்னர் குடியுரிமை சோதனைக்கு வந்தோம். பிரேசிலின் குடியுரிமை சோதனை ரொம்ப எளிமையானது. பிரேசில் நாட்டவராக இருந்தால் ஒருவர் நின்று கடவுச் சீட்டை பரிசோதிக்கிறார். ஆளின் முகத்தையும், கடவுச் சீட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிடுகிறார். பிறகு நட்பாகவோ, தமாஷாகவோ ஏதாவது பேசிக் கொண்டே அனுப்பி விடுகிறார். வெளிநாட்டினர் மட்டும் வரிசையில் நின்று, அதிகாரிகளிடம் சென்று சோதிக்கப்பட வேண்டும். அதிலும், மற்ற தென்னமரிக்க நாடுகளில் செய்வது போல் இந்திய பாஸ்போர்ட் என்றால் ஒரு வித சந்தேகத்துடன் ஆராய்வது எல்லாம் கிடையாது. கடவுச் சீட்டையும், விசாவையும் துரிதமாக சரிபார்த்து விட்டு, புன்னகையுடன் ஒரு சீல். அவ்வளவுதான்.

No comments: