Friday, July 27, 2007

கி. ராஜநாராயணன் கட்டுரைகள்

மேற்படித் தலைப்பில் அகரம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் 2007 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. இன்னமும் வாசிக்கப்படாமலே அலமாரியில் உட்கார்ந்து கொண்டிருந்தது. இந்த ஞாயிற்றுக்கிழமை வேலையிருப்பதால், வியாழன் மதியத்திற்கு மேல் ஒரு சின்ன விடுப்பு எடுத்துக் கொண்டு, புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். தொகுதிகளாக கட்டுரைகள் அடங்கிய இம்மாதிரி புத்தகங்களில் ஒரு வசதி. எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் வாசிக்க தொடங்கலாம். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டே வாசிக்க ஆரம்பித்ததால், கனமான இப் புத்தகத்தின் நடுவிலிருந்து தொடங்கினேன்.

கட்டுரைகள் என்று தலைப்பு கொடுத்திருந்தாலும், இப்புத்தகத்தில் கட்டுரைகளை விட நிறைய கதைகள் இருக்கின்றன. குட்டிக் குட்டிக் கதைகள். பல இடங்களில் சேகரிக்கப்பட்ட நாட்டுப் புறக் கதைகள். அக் கதைகள் உருவான கதைகள். அவை சொல்லப்பட்ட கதைகள். அவை பதிவு செய்யப்பட்ட கதைகள். ராஜநாராயணனின் சொந்தக் கதைகள். அவற்றில் அவரது நண்பர்கள் சொல்லும் கதைகள். இப்படியாக கட்டுரைக்குள்ளே கதைகள், கதைகளுக்குள்ளே கதைகள் என்று போகிறது. கதைகளைத் தவிர இசை, நாடகம், இலக்கியம், வரலாறு, மக்கள் பழக்க வழக்கங்கள் என்று அனைத்தும் ராஜநாராயணின் திறமையான ஆக்கத்தால், அவருக்கே உரித்தான சுவைகளோடு சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஒரு இடத்தில் மக்கள் பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்து உணவுப் பழக்க வழக்கங்களுக்குள் நுழைந்து விடுகிறார் ராஜநாராயணன். சாப்பாட்டு ராமன் என்ற பெயர் எப்படி வந்தது என்ற விளக்கமும், ஒரு விருந்தில் பதமான சூட்டில் போளிகள் வாழை இலையில் எப்படி விழுந்து கொண்டே இருக்கின்றன என்பதையும் சாப்பிட்டுக் கொண்டே வாசித்தேன். அன்று பாகற்காய் தீயலும், கேரட் துவரனும், பொரித்த மீனுமான மதியச் சாப்பாடு இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டே சாப்பிட்டதில் இன்னும் ருசித்தது. கூடவே வெளியே, லேசான தென்கிழக்குப் பருவ மழைச் சாரல். ரொம்ப சொகமான வியாழன் மதியம்ங்க அது.

அப்துல் கலாம் பற்றி

இந்த வாரம் ஜனாதிபதி கலாம் அவர்களின் ஐந்தாண்டு பதவிக் காலம் நிறைவுக்கு வந்திருக்கிறது.

அவருடைய “அக்கினிச் சிறகுகள்” புத்தகத்தை அது வெளிவந்த புதிதில், ஆங்கில மூலத்தில் படித்து விட்டு அவரைப் பற்றி பிரமிப்பு அடைந்தேன். அப் புத்தகம் வாசித்த சில ஆண்டுகளுக்குப் பின் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தபோது எதிர்பாராத விருந்தினராக வந்து ஒரு சிறு உரையாற்றினார். அந்த உரை “இந்த நாடு முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்” என்பதைத் தவிர இந்த மனிதருக்கு வேறு எந்த நினைப்புகளுமே கிடையாது என்பதைக் காட்டியது. சில மாதங்கள் கழித்து அவர் ஜனாதிபதியானார். ஜனாதிபதி ஆன பிறகு அவர் தனது இதயம் விரும்பிய துறைகளில் தொடர்ந்து காட்டிய முனைப்பும், அணுகுமுறைகளும் முதல் தோன்றிய பிரமிப்பை சிறிதளவும் குறைக்கவில்லை. மூன்றாவது அணியின் தந்திரத்திற்கு இவர் பலியானபோதுகூட “எப்பேர்ப்பட்ட நிலைகளை கடந்து வந்த இவர் இப்படி ஒரு அப்பிராணியாக இருக்கிறாரே” என்று ஒரு புதிய பரிமாணத்தில் பிரமிப்பு எழுந்ததே தவிர முதலில் ஏற்பட்ட பிரமிப்பில் இன்று வரை மாற்றம் எதுவுமில்லை.

கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவரது நோக்கத்திலும், முனைப்பிலும், முயற்சிகளிலும் எவ்விதமான மாற்றங்களும் இருக்கப் போவதில்லை. “ஜனாதிபதி பதவி” என்னும் பாரமூட்டை சேதப்படுத்தாத அவர் முதுகையா “ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு” என்னும் பஞ்சு மூட்டை சேதப்படுத்திவிடப் போகிறது?

ooo

பின்குறிப்பு: கலாமைப் பற்றி விமர்சித்து ஞானி விகடனில் எழுதியிருக்கிறார். “கலாம், என்ன பெரிய கலாம்?” என்ற தொனியில் எழுதப்பட்ட அக்கட்டுரையில் கலாம் இந்தியாவின் ஆயுதபலத்தை பெருக்க உதவி செய்தாரென்றும், இந்தியா வல்லரசாக வளர்வதுதான் அவரது ஒரே கனவு என்றும், அவற்றில் தனக்கு உடன்பாடு கிடையாதென்றும் ஒரு கருத்து உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிடுபவர்கள்தான் இப்படிக் கருத்து கூற முடியும். அட, நாட்டின் வளர்ச்சிக்காக இல்லாவிட்டாலும், நமது சொந்த பாதுகாப்பு கருதியாவது, நமது இராணுவத்திற்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பெரிதும் நன்றி உள்ளவர்களாக இருக்கலாமே. பேனா கூரிய ஆயுதமாக இருக்கலாம், ஆனால் பக்கத்து நாட்டு வழியாக தாலிபான்கள் படையெடுத்து வந்தால் ஆர்ட்டிலெரியைத்தானே அனுப்புவோம்.

இரண்டாவது தபால்: ஒரு முன்னுரை

எனது இரண்டாவது ஞாயிறு தபால் வெள்ளியன்றே வருகிறது. காரணம் வரும் ஞாயிறு முழுவதற்கும் பல பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

எனது வலைப் பதிவுகளை தொடங்கு முன்னர், மற்றவர்களது வலைப் பதிவுகளை அத்தனை கவனமாக வாசித்ததில்லை. குறிப்பாக தமிழில். எனவே, இந்த வாரம் மற்றவர்களது வலைப் பதிவுகளை வாசிக்க தொடங்கினேன். http://ilavanji.blogspot.com தான் நான் தொடங்கிய இடம். முற்றுப் பெற்றதும் அங்கேதான். அவ்வளவு சுவையான பதிவுகள் அங்கே உள்ளன. ‘தனித்துவமானவன், உங்களைப் போலவே” என்று வெளிப்புறத்தில் சுய கேலியாக, ஆனால் சற்று யோசித்தால் யதார்த்தமான தன் விளக்கம், இளவஞ்சியின் படைப்புக்கள் அத்தனையிலும் பிரதிபலிக்கிறது.

நான் தபாலை அறிமுகப்படுத்தி அனுப்பிய மின்மடலுக்கு பதிலாக இளவஞ்சி:
“தமிழ்ப்பதிவுலகம் எனும் குளத்தில் தொபுக்கடீரென குதித்ததற்கும், வரும் காலங்களில் மூழ்கி பல முத்துக்கள் எடுக்கவும் வாழ்த்துக்கள்!

மூன்று பதிவுகள் ஆன பிறகு தமிழ்மணத்தில் இணைத்துவிடுங்கள். பல படிப்பாளர்களை சென்றடைய இது உதவும். சுட்டி http://www.thamizmanam.com/user_blog_submission.php
என்று சொல்லியிருந்தார்.

எனவே, இந்த வார தபால்களை பதிந்து விட்டு தமிழ்மணத்தில் இத் தளத்தை இணைப்பதாக திட்டம்.

இந்த வார தபாலில் ஒரு மாற்றம். கடந்த முறை பல விஷயங்களை ஒரே பதிவாக செய்தது போலல்லாமல் ஒவ்வொன்றையும் தனித் தனியாக செய்கிறேன். ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக தலைப்பு கொடுப்பது, பின்னர் உள்ளடக்கம் தயாரிப்பது எளிதாக இருக்கும் என்ற காரணத்தினால்தான் இந்த மாற்றம்.

Sunday, July 22, 2007

இது என் முதல் ஞாயிறு தபால்

கடந்த வாரம் பெரும்பாலும் சென்னையில் பல்வேறு பணிகள் நிமித்தமாக.

கல்லூரி நண்பர் சையது யாஹியா தாய்லாந்து, ஜப்பான், நார்வே, நியுசிலாந்து என்று பல இடங்களில் படிப்பும், பணியனுபவமும் பெற்று திரும்பியிருக்கிறார். சென்னையில் அவரோடு சில மணி நேரங்களைக் கழித்தேன். அவரது சகோதரரின் மனிதவள நிறுவனத்தை ஒரு புறம் கவனித்துக் கொண்டு, இன்னொரு புறம் ஒரு பயோடெக் நிறுவனத்தை தொடங்கும் முயற்சிகளில் இருக்கிறார். நிறைய கனவுகளுடனும், திட்டங்களுடனும், பல ஆண்டுகள் வெளிநாடுகளில் வசித்து விட்டு இந்தியாவிற்கு திரும்பி சில மாதங்களே ஆன எல்லோருக்கும் ஏற்படும் சில சந்தேகங்களுடனும் இருக்கின்றார்.

"நான் கார் ஓட்டுறதப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்கங்க" என்றார். சிவப்பு விளக்கு அணைந்து பச்சை விளக்கு வந்தால்தான் வண்டியை நகர்த்துவேன் என்ற பிடிவாதம்தான் நகைப்புக்குக் காரணமாம். இதை நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அவருடைய ஸ்கார்ப்பியோவில் மேற்கு மாம்பலத்தின் ஒரு குறுகலான தெருவில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தோம். வாகனத்தின் சாரதி அந்த தெருவில் ஒரு U-வட்டமடித்து திருப்ப முயன்றார். தெருவின் அகலம், வாகனத்தின் அகலம் ஆகிய இரண்டு காரணங்களாலும் அது U-திருப்பமாக இல்லாமல் ஒரு மாதிரி முன்னும் பின்னும் நகர்த்தி ஒரு W-திருப்பமாக, சுமார் ஒரு நிமிடமாவது எடுத்திருக்கும். சாலையின் இரு பக்கங்களிலும் 2-3 கார்கள், சில இரு சக்கர வாகனங்கள் நமது சாரதி தனது W-திருப்பத்தை முடிக்கும் வரையில் நாரச ஒலியெழுப்பாமல் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தனர். நண்பருக்கு சுட்டிக் காட்டி சொன்னேன்: “இதுதான் நம்ம ஊர். கொஞ்ச நாளில் புரிந்து கொண்டு பழகிக் கொள்வீர்கள்.”

ooo

சனிக்கிழமை, ஜுலை 21, அதிகாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் நாகர்கோவில் ரயில் நிலையம் அடைந்தேன். அங்குள்ள புத்தகக்கடையில் ஜூலை 2007 'காலச்சுவடு' தென்பட்டது. வாங்கினேன். “அரசியல், ஊடக வன்புணர்ச்சியின் கதை” என்ற துணைத் தலைப்பில் கண்ணன் அதில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் (இணையத்தில்: www.kalachuvadu.com/issue-91/katturai01.asp). தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் வன்முறை சம்பவங்களின் பின்விளைவுகளை அலசும் ஒரு முயற்சி இந்தக் கட்டுரை எனலாம். கட்டுரை இரண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளிலும் ‘தினகரன்’ சம்பவத்திற்கு தமிழக ஊடக, இலக்கிய, அரசியல் வட்டங்கள் காட்டிய பலவீனமான அணுகுமுறை கண்டனம் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பகுதி, இந்த பலவீனமான அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான காரணமாக மாறன் சகோதரர்களின் போக்கினை வர்ணிக்கிறது. ஆனால் எழுதப்பட்ட தொனி ஒரு விதத்தில் இந்த அணுகுமுறையையே நியாயப்படுத்த முயல்வது போல் உள்ளது. மிகவும் குறிப்பாக, “தினகரன் தாக்குதலில் பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது விவாதத்திற்குரியது” என்று கட்டுரையாசிரியர் கூறுவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. இதே கருத்து சோ ராமசாமி அவர்களாலும் வெளிப்படுத்தப்பட்டது.

“உன்னுடைய கருத்து எனக்கு ஏற்புடையதல்ல எனினும் அதை நீ சுதந்திரமாக சொல்ல என் உயிரையும் கொடுப்பேன்” என்ற கருத்துச் சுதந்திர தத்துவத்தின் அடிப்படையிலே அமைந்ததுதான் பத்திரிகை சுதந்திரம். அதற்கு நேரெதிரான “உன்னுடைய கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அதை நீ சொன்னால் உன் உயிரையும் எடுப்பேன்” என்ற மிரட்டல்தான் மதுரை சம்பவம். பத்திரிகைச் சுதந்திரத்தை இச் சம்பவம் பாதித்துள்ளதா என்பது எந்த விதத்தில் விவாதத்திற்குரியது என்று புரியவில்லை. கண்ணனும் இதை விளக்க முற்படவில்லை. மாறாக அவர் கூறுவது: “சன் குழுமத்தினர் ஊடகச் சுதந்திரத்தையோ கருத்துச் சுதந்திரத்தையோ எந்த விதத்திலும் ஆதரித்தவர்கள் அல்ல.” இந்த குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமும் வழங்கப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க, கண்ணனின் குற்றச்சாட்டு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் கருத்துச் சுதந்திரம் மட்டுமே பேணிக் காக்கப்பட வேண்டுமா? மனித உரிமைகளுக்காக போராடுபவர்களின் மனித உரிமைகள் மட்டுமே மதிக்கப்பட வேண்டுமா?

கருத்துச் சுதந்திரமும், மனித உரிமைகளும் தமிழகத்தில் தொடர்ந்து மீறப்பட்டு வருவதற்கு மூல காரணம் கண்ணனுடைய அணுகுமுறை போன்றே நாம் பலரின் அணுகுமுறையும் இருப்பதே. தினகரன் சம்பவத்தில் மட்டுமல்ல, குஷ்பு சம்பவத்தில், சங்கராச்சாரியர் கைது விவகாரத்தில், நக்கீரன் கோபால் கைது விஷயத்தில், இப்படி பல உதாரணங்களை அடுக்கலாம் – இவை அனைத்திலுமே இதில் பாதிக்கப்பட்டவர்களையும் குற்றம் சாட்ட சமூகத்தில் ஒரு பெரும் சாரார் எப்போதும் முனைந்து நிற்கிறார்கள். நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட போது “இவருக்கு வேண்டும்” என்று அவருக்கெதிரான உரிமை நசுக்கல்களை ஆதரித்தவர்கள், சங்கராச்சாரியார் மீதான நடவடிக்கைகளில் அதே மீறல்களை கண்டு திகைத்ததை அறிவேன். சங்கராச்சாரியாரின் மீதான நடவடிக்கைகளை நக்கீரன் எப்படி களிப்புடன் நோக்கியது என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி கோட்பாட்டின் (principle) அடிப்படையில் அல்லாமல், தனி நபர் அல்லது குழும/குழுக்கள் விருப்பு-வெறுப்பு அடிப்படையில் மீறல்களைக் குறித்த நமது நிலையற்ற அணுகுமுறைகளே நமது அதிகார மையங்களுக்கு நாம் மீறல்களை நடத்த அளித்துள்ள உரிமங்களாகும். இந்த மூல காரணத்தை கண்ணன் போன்ற சிந்தனையாளர்கள் கூட புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

ooo

Principle என்பதன் சரியான தமிழ்ப்பதம் என்ன என்று தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் இங்கு பதிவு செய்யுங்கள். என்னிடம் இரண்டு தமிழ் அகராதிகள் உள்ளன. LIFCOவின் அகராதி கொள்கை அல்லது நியதி என்கிறது. அது சரியாக தோன்றவில்லை. க்ரியாவின் அகராதி தமிழ்-தமிழ்-ஆங்கிலம். எனவே, இந்த விஷயத்தில் பயனில்லை. http://www.lanka.info/ –வின் ஆன்லைன் அகராதி அடிப்படைக் கோட்பாடு என்கிறது. அது ஓரளவு சரியாகப்பட்டது, ஆனால் அதை விடப் பொருத்தமாக ஒரு சொல் இருக்கும் எனத் தோன்றுகிறது.

ooo

அடுத்த ஞாயிறு சந்திப்போம்.