Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Friday, February 19, 2010

திரு. ரஃபேல் வாய்ஸ்: அஞ்சலி

மணப்பாடு புனித வளன் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு. ரஃபேல் வாய்ஸ் அவர்கள் நேற்று (ஃபெப்ரவரி 18, 2010) மறைந்தார். அவரது உடல் ஃபெப்ரவரி 21 மணப்பாட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

திரு. வாய்ஸ் அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். அந்த விருது பெற எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருந்தன. அவரிடம் நான் ஓராண்டு கணிதம் பயின்ற மாணவன். சுவாரஸ்யமாக கணிதத்தைப் போதிப்பதில் அவருக்கு இணையான ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் வகுப்பெடுக்கும் ஒரு மணி நேரமும், ஐந்து நிமிடங்கள் போல் கழிந்து விடும். சூத்திரங்களை மாணவர்கள் மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார். “சூத்திரம் தெரியலைனா அவன் தொலைஞ்சான்” என்பது அவர் தாரக மந்திரமாக இருந்தது. அதை வகுப்புகள்தோறும் சொல்லுபவர் அவர். ஆனால் சூத்திரங்களை வெறுமனே மனனம் செய்வது அவருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. சூத்திரங்களின் அடிப்படையை விளக்குவதை சிரத்தையாக செய்வார். ஜியோமெட்ரிதான் அவருக்குப் பிடித்த கணிதப் பிரிவு என்று இப்போது தோன்றுகிறது. உருளை, கூம்பு, கோளம் போன்ற வடிவங்களின் பரப்பளவும், கொள்ளளவும் கண்டு பிடிக்கும் சூத்திரங்களும், அதன் அடிப்படைகளும் 27 ஆண்டுகளுக்குப் பின்னரும் எனக்கு நினைவிருக்கின்றன. இந்த அளவிற்கு தாக்கத்தை உண்டு பண்ணிய ஆசிரியர்கள் வெகு சிலரே.

திரு. வாய்ஸ் அவர்கள் என் வகுப்பிற்கு கணித ஆசிரியர். முழுப் பள்ளிக்கும் தலைமையாசிரியர். அவருடைய கண்டிப்பிற்கு பள்ளியே நடுங்கும். முழுக்கை சட்டை, சட்டைக்கு மேலே கட்டப்பட்ட வேஷ்டி, ஒரு ட்வீட் கோட், கையிலிருந்து மறைவாகத் தொங்கும் ஒரு குடைக் கம்பு, பரந்த நெற்றியில் மேலெழுந்து சீராக வாரப்பட்ட முடி, மெலிந்த ஆனால் ஆரோக்கியமான உடல், சுறுசுறுப்பான நடை – இதுதான் அவர் பள்ளிக்கு வரும் தினசரிக் காட்சி. பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில் இளமையாகவே அவர் இருந்தார். சில சக ஆசிரியர்களால “நித்ய மார்கண்டேயன்” என்று சற்றுப் பொறாமையுடன் அவர் அழைக்கப்பட்டார்.

அவரது குடைக் கம்பின் வீச்சிற்கு அஞ்சி நடுங்காத மாணவர்களே கிடையாது. தினந்தோறும் அசெம்ப்ளி நடத்துவார். ஏதாவது பெரிய தவறு நடந்திருந்ததென்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அசெம்ப்ளியிலேயே குடைக் கம்பு பிரயோகம் நடைபெறும். ஒரு வருடத்தில் மிஞ்சிப் போனால் 4-5 முறைதான் இது நடக்கும். ஆனால், ஆண்டு முழுவதும் அதைப் பற்றிய ஒரு அச்சம் நிலவும்.

அவர் வகுப்பெடுக்கும் வரும் நேரத்தில் அவரைப் பற்றிய அச்சமெல்லாம் மறைந்து விடும். மெல்லிய ஒரு புன்னகையுடன், அவருக்கே உரித்த அங்கத உணர்வுடன் நகைச்சுவையாக பேசிக் கொண்டே வகுப்பு நடத்துவார். என்னுடைய வகுப்பில் இருந்த பல வால்களில் ஒருவனான ஐஸ்வின் என்ற மாணவனுக்கு வாயை அடக்குவது முடியாத விஷயம். ஒரு முறை திரு. வாய்ஸ் அவர்கள் “ஒருத்தனுக்கு சூத்திரம் தெரியலைனா” என்று தொடங்கிய போது, சத்தமாக “அவன் தொலைஞ்சான்” என்று முடித்தான் இவன் (அநேகமாக அவனை அறியாமலேதான் அந்த வார்த்தைகள் வந்திருக்க வேண்டும்). வகுப்பு ஒரு கணம் சப்தமாக சிரித்து விட்டு, உடனே அமைதியாகி விட்டது. எங்கே குடைக்கம்பு வருமோ என்று சொன்னவன் உட்பட அனைவரும் அவரைப் பார்க்க, அவர் சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்து “எல, எல!” என்று தொனியிலேயே லேசாக எச்சரித்து விட்டு விட்டார்.

திரு. வாய்ஸ் தலைமையாசிரியாராக இருந்ததால் ஒரே ஒரு வகுப்புக்குத்தான் பாடம் எடுத்தார். என்னுடைய அதிர்ஷ்டம் நான் அவர் பாடம் எடுக்கும் வகுப்பில் இருந்தது. தலைமையாசிரியர் என்ற பாரம் இல்லையென்றால் இவர் இன்னும் பல நூறு மாணவர்களுக்கு கணிதத்தில் ஆர்வம் உண்டு பண்ணியிருப்பார்.

நான் பத்தாமாண்டு தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக வந்திருந்தேன். தேர்வு முடிவுகள் வந்து அவரைப் பார்க்கச் சென்ற போது, அவரது அறையில் என்னைத் தெரிந்த இன்னொரு நபரும் இருந்தார். அவர் என்னைப் பாராட்டி விட்டு, “என்ன எஞ்சினியராகப் போகிறாயா, அல்லது டாக்டரா?” என்று கேட்டார். அப்போது திரு. வாய்ஸ் அவர்கள் சொன்னது “அவன் கையைப் பாருங்கள். அது சிறியதாக இருக்கிறது. இவன் கை வைத்து வேலை செய்வதை விட மூளையை வைத்து வேலை செய்வதைத்தான் விரும்புவான். நல்ல ஆசிரியராக வருவான்” என்றார். முதுநிலை, முனைவர் என்று கல்வியிலே என் முன்னேற்றமெல்லாம் பல்கலைக் கழக ஆசிரியனாக வேண்டும் என்ற இலக்கை நோக்கியே நகர்ந்தது. நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்குமல்லவா. அப்படித்தான் நானும் ஆசிரியத் தொழில் கனவுகளுக்கு விடை சொல்லி விட்டு தனியார் தொழில் துறைக்குள் நுழைந்ததும். ஆனால் திரு. ரஃபேல் வாய்ஸ் அவர்களின் அவதானிப்புத் திறனையும், கணிப்புக் கூர்மையையும் எண்ணிப் பலமுறை வியந்திருக்கிறேன்.

திரு. ரஃபேல் வாய்ஸ் அவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்பதை உறுதியாக நம்பியவர் அவர். ஊர் முழுக்க பிரசித்தமானது அவர் பிள்ளைகள் எந்தெந்த வகுப்புகளில் படிக்கிறார்கள் என்பதை அவர் ஒரு போதும் நினைவில் வைத்திராதது. பிள்ளைகளின் பெயர்கள் கூட சமயத்தில் மறந்து விடும் என்று கூட ஒரு வதந்தி உண்டு. ஆனால் தொலைக்காட்சியும், சீரியல்களும் இல்லாத அந்தக் கால மணப்பாட்டில் வதந்திகள் தீவிரமான பொழுது போக்கு சாதனமாக இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எப்படியாயினும் திரு. வாய்ஸ் அவர்களின் வாரிசுகள் அத்தனை பேரும் திறமைசாலிகளாக இருந்தார்கள். இசை அவர்களது குடும்பத்தின், வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது. அவரது மகன் அருட்திரு. டென்னிஸ் வாய்ஸ், தமிழகத்தில் கிறிஸ்தவ இசையறிந்த வட்டங்களில் வெகுபரிட்சயமான இசையமைப்பாளர்களில் ஒருவர். அவரது இன்னொரு மகன் ஜெஃப்ரி எனது நெருங்கிய நண்பர். சிறு வயது முதலே எலக்ட்ரானிக்சில் ஆர்வம் கொண்டவர். இப்போது அனிமேஷன் துறையில் பணிபுரிகிறார். திரு. ரஃபேல் வாய்ஸ் மணப்பாட்டின் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் பாடகர் குழுவின் தலைவராகவும், ஆர்கன் வாத்தியமிசைப்பவராகவும் இருந்தார். அவரது மனைவி திருமதி. இசபேல் வாய்ஸ் அவர்களும் அப் பாடல் குழுவில் இருந்தார்.

திரு. ரஃபேல் வாய்ஸ் பற்றி இன்னொரு பசுமையான நினைவும் எனக்கிருக்கிறது. மணப்பாட்டில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் பின்னால் ஒரு கல்லறைத் தோட்டம் ஒன்று இருக்கிறது. அங்கு காலைத் திருப்பலி முடித்து விட்டு கல்லறைத் தோட்டத்தில் அந்த தேதியில் இறந்தவர்களுக்காக ஒரு சிறு வழிபாடு நடத்துவார்கள். அதில் ஒரு பாடல் பாடுவார்கள். உலக இறுதியில் நடக்கும் சம்பவங்களை “அந்த நாள் கடைசி நாள், படுபயங்கரமான நாள்” என்று வர்ணித்து விட்டு, மனிதனின் உயிர்ப்பையும், நியாயத் தீர்ப்பையும் பற்றி கூறும் ஒரு பாடல். அந்தப் பாடலின் வரிகள் அத்தனையும் இப்போது நினைவில்லாவிட்டாலும், அதன் ராகமும், அதைப் பாடும் திரு. வாய்ஸ் அவர்களின் முகமும் இன்னமும் அப்படியே நினைவிலிருக்கிறது.

டாக்டர் கேரி ஷ்வார்ட்சின் ‘தி ஆஃப்டர் லைஃப் எக்ஸ்பெரிமென்ற்ஸ்” புத்தகத்தைப் படித்த பின்னர் மனிதனின் மரணத்திற்குப் பின்னாலுள்ள வாழ்வு பற்றிய எனது கருத்துக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வந்தாலும், திரு. ரஃபேல் வாய்ஸ் போன்ற ஆசிரியர்கள் மாற்றுச் சிந்தனைகள் எதற்கும் இடம் இல்லாமலேயே அவர்கள் இறந்து நெடுநாளைக்குப் பின்னரும் வாழ்வர் என்பதை அறிவேன். அந்த அளவுக்கு அவர்கள் தாங்கள் வாழும் காலங்களில் மாணவர்கள் மீது ஒரு ஆழ்ந்த தாக்கத்தைப் பதித்து விடுகிறார்கள். இதுவே ஆசிரியப் பணியின் உன்னதம். திரு. ரஃபேல் வாய்ஸ் என் எதிர்காலத்தைப் பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனம் பலிக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் அவ்வப்போது எழுவதும் இதனாலேயே.

Monday, November 12, 2007

தீபாவளி கொளுத்திய பட்டாசு நினைவுகள்

நவம்பர் 8, 2007 தீபாவளி

அதிகாலையில் தெருவில் பட்டாசுகள் முழங்கத் தொடங்கி விட்டன. பிள்ளைகள் வழக்கம் போல் வந்து “நாம எப்ப பட்டாசு விடப் போகிறோம்?” என்று ஆரம்பித்து விட்டார்கள். நானும் வழக்கம் போல் “எதுக்காக பட்டாசு?” என்று பதில் புராணத்தை தொடங்கி விட்டேன். வழக்கமான பட்டாசு விரோத காரணங்கள்தான்:


  • காதைக் கெடுக்கும் ஒலி
  • நுரையீரலை நாசமாக்கும் புகை (இந்த ஆண்டில் அவர்களது
  • பாடத்திலேயே க்ரீன் ஹவுஸ் எஃபக்ட், க்ளோபல் வார்மிங் பற்றி சொல்லப்பட்டிருப்பதால் கூடவே அறிவியல் ரீதியான ஒரு பயமுறுத்தலையும் சேர்க்க முடிந்தது)
  • தலைவலியைக் கொடுக்கும் நாற்றம்
  • தீ விபத்து நடந்து உடலோ, பொருட்களோ கருகுவதான அபாயம்

“உங்கம்மாவுக்கு பென்சில் மத்தாப்பு வெடிச்சே கை அப்படி பொத்துட்டுதே” என்று பயமுறுத்த முயன்றால் “ஒரு தடவ அப்படி நடந்தா, எல்லா தடவயும் அப்படியா நடக்கும்?” என்ற மனைவியின் குறுக்குச்சால் காதில் விழாத மாதிரி நடித்துக் கொண்டு காரணங்களை தொடர்ந்தேன்.

  • பட்டாசு வெடிப்பது என்பது காசைக் கரியாக்குவது
  • டம, டம என்று காதைப் பிளக்கும் ஒலியை ரசிப்பது நாகரீகமடைந்த மனிதனின் ரசனையில் இடம் பிடிக்காது

என்று பட்டியல் நீண்டது.

பதின்ம வயதாகப் போகும் புதல்வனுக்கு தந்தையருளும் மந்திரங்களின் மகிமை குறைவது சகஜமென்பதால், நாம் சொல்வதை அவ்வப்போதாவது மதிப்பு கொடுத்து கேட்கும் ஒன்பது வயது மகளையாவது மாற்றி விடலாமென்றால், அவள் “அதாவது டாடி, அந்த திரில தீ வெச்சுட்டு, பட்டாசு வெடிக்கற வைக்கும் ஒரு த்ரில்லிங்கா இருக்கும்ல அதுக்குத்தான் பட்டாசு வெடிக்கிறோம்” என்று புதுசாக வெடியைக் கொளுத்திப் போட்டாள்.

வழக்கம் போலவே இந்த பட்டாசு விவாதம், “சரி, நம்ம சாயங்காலம் பட்டாசு வெடிப்போம்” என்ற தீர்ப்போடு நிறைவுக்கு வந்தது.

அதென்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே பட்டாசுகளின் மீது ஆர்வமில்லாமலேயே நான் வளர்ந்து விட்டேன். சின்ன வயதில் “கைல கால்ல வெடிச்சிடப் போகுது” என்று எங்கம்மா எப்பவும் எச்சரித்து, பொட்டு வெடி தவிர எதையும் வெடிக்க அனுமதிக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், வளர்ந்த பிறகும் பட்டாசு மீது ஒரு நாட்டம் வரவேயில்லை.

நான் ஏ.ஐ.டி.யில் படிக்கும் போது அங்குள்ள தமிழ் சங்கத்தினரும், இந்திய சங்கத்தினரும் தீபாவளியை விமரிசையாக கொண்டாடுவர். ஏ.ஐ.டியில் இருந்த 20க்கும் மேற்பட்ட நாடு/கலாசார சங்கங்களில் முதன்மையானது தமிழ் சங்கமே. இலங்கை, இந்திய, மலேசிய தமிழர்களோடு, அங்கிருந்த சொற்ப மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்களோடு ஜே, ஜே என்று எப்போதும் தமிழ் சங்கம் இயங்கும். ஏ.ஐ.டி நடுவில் எட்டு கோண அமைப்பில் இருக்கும் “கொரியா ஹவுஸ்” எனப்படும் கட்டடம் ஏறக்குறைய தமிழ் சங்கத்தின் குத்தகையில்தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். வாரத்தில் மூன்று நாள், மாலை 6-9 அந்த கட்டடத்தில் தவறாமல் தமிழ்ப் படம் போடுவார்கள் நம் மக்கள். இது தவிர மாதம் ஒரு முறை கூட்டம், இரவுணவு என்று அசத்துவார்கள். பொங்கல் என்றால் பாங்காக்கில் இருக்கும் தமிழர்களும் வந்து இணைந்து கலைநிகழ்ச்சிகள், மதிய உணவு, என்று செய்து கோலாகலம் பண்ணி விடுவார்கள். சங்கத்தின் பொறுப்பை மூன்று மாதத்திற்கொரு முறை மாற்றியமைக்கப்படும் குழு ஒன்று கவனித்துக் கொள்ளும்.

நான் பொறுப்புக் குழுவிலிருக்கும் போது வந்த தீபாவளியில் பெரிய அளவில் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது (இந்த முடிவிலிருந்து அந்தப் பொறுப்புக் குழுவில் என் குரலுக்கு இருந்த மதிப்பையும், மரியாதையையும் அறிந்து கொள்வீர்களாக). பொறுப்புக் குழுவிலிருந்த மற்றவர்களில் சிலர்: அன்புமொழி (சேலத்தைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஜப்பான் சென்று அங்கேயே தங்கிவிட்டதாக கேள்வி), ராமநாராயணன் (கோவையைச் சேர்ந்த இவர் வேளாண் பொறியியலில் முனைவர் பட்டம் படிக்க ஓக்லஹாமா சென்று அங்கேயே வெகு நாட்களாக இருந்தார், இப்போது தொடர்பில்லை), மற்றும் பரம் (குலாலம்பூரைச் சேர்ந்த இவர் இப்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை) ஆகியோருடன் நானும் பட்டாசு வாங்கும் முயற்சியில் இறங்கினோம்.

முதலாவது ஏ.ஐ.டி.க்கு தெற்கில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் ரங்சிட் என்னும் இடத்தில் முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அது பாங்காக்கின் பாஹ்யோலிதின் துரித நெடுஞ்சாலை டான் முவாங் விமான நிலையத்தோடு நின்று விட்ட காலம். இப்போது அந்த சாலை வடக்கே ஏ.ஐ.டியையும் தாண்டி எங்கோ சென்று விட்டது. விளைவாக ரங்சிட் ஒரு பெரிய நகராக உருப்பெற்று விட்டது. ஆனால் அந்தக் கால ரங்சிட் ஒரு சிறு கிராமம். உள்ளே இருபது, இருபத்து ஐந்து கடைகள் கொண்ட ஒரு தெரு உண்டு. அங்கே பட்டாசைத் தேடிப் போனோம்.

கடைத் தெருவுக்கு போன பிறகுதான் எங்களுக்கு ஒரு பெரிய ஞானோதயம் ஏற்பட்டது. அது, பட்டாசிற்கு தாய் மொழியில் (அதாவது தாய்லாந்தின் மொழியில்) பெயர் என்ன என்பதை விசாரிக்காமலேயே வந்து விட்டோம் என்பது. பாங்காக் நகரிலேயே ஆங்கிலம் பேசுபவர்களை விளக்கெண்ணெய் ஊற்றித்தான் தேட வேண்டும். ரங்சிட்டில் ஆங்கிலம் புரிந்து கொள்பவர்களைக் கண்டுபிடிப்பதை இன்றைய இளைஞர்களின் பாஷையில் சொல்லப் போனால்: “சான்சே இல்லை.”

சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், முடிந்த வரை முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டு ஒரு கடையில் ஏறி:

“கூன், க்ராக்கர்ஸ் மீ மாய்னா?” (ஐயா, பட்டாசு இருக்கிறதா?”

“அலோய்னா?” (அப்படின்னா? – இதைக் கேட்ட விதம் “என்ன உளறுகிறாய்?”)

“க்ராக்கர்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை சொன்னால் கேட்பவருக்கு ஆங்கிலம் புரிந்து விடுகிற மாதிரி நாம்.

“க்ராக்கார்ஸ், க்ராக்கர்ஸ்” – ஏதோ இரண்டு தடவை நாம் சொன்னதை திருப்பிச் சொன்னால் ஆங்கிலம் புரிந்து கொள்கிற மாதிரி அவர்.

இது சரிப்படாது என்று அன்புமொழிக்கு தோன்றி விட்டது.

“கூன்” (ஐயா) என்று கடைக்காரரை விளித்து விட்டு ஊமை பாஷையில் பேச ஆரம்பித்து விட்டார். ஒரு விரலை நீட்டி (அதுதான் பட்டாசாம்), பிறகு ஒரு கை தீப்பெட்டி, மறு கையை அதில் உரசி தீக் கொளுத்துகிறமாதிரி பாவலா செய்து, விரலில் வைத்து, “டமார்” என்று கத்தினார்.

கடைக்காரரின் இரு புருவங்களின் இடையே போடப்பட்ட வியப்பு முடிச்சு இந்தக் குரங்கு சேட்டையைப் பார்த்த பிறகும் அவிழவில்லை. அவர் “இந்த கிறுக்கனுங்க என்னதான் சொல்ல வரானுங்க?” என்ற கடுமையான சிந்தனையில்தான் இருந்தார்.

ராமநாராயணனுக்கு இதை ஸ்கெட்ச் போட்டு காண்பித்தால்தான் புரியும் என்று தோன்றியது. ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். அன்புமொழி வாயால் சொன்னதை படமாக வரைந்தார். தீ வைத்து, பட்டாசு வெடித்ததை படமாக விளக்கும் போது, அன்புமொழி மீண்டும் ஒரு எஃபக்டுக்காக “டமார்” என்று கத்தினார்.

கடைக்காரர் மூளையிலும் அந்த நேரம் பட்டாசு வெடித்திருக்க வேண்டும். அவர் முகம் 1000 வாட் பல்பு போட்ட மாதிரி பிரகாசமானது.

“ஓ, பட்டாஸ்?” என்றாரே பார்க்கலாம்.

அடப்பாவி பட்டாசுக்கு தாய்லாந்திலும் பெயர் பட்டாசுதானா என்று நாங்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டோம்.

அந்தக் கடையில் மட்டுமல்ல, ரங்சிட் முழுக்க பட்டாஸ் கிடைக்கவில்லை என்பதும், பாங்காக் சென்று சைனா டவுணிலோ, வேறெங்கோ சென்று பட்டாஸ் வாங்கி தீபாவளிக்கு வெடித்தோம் என்பதும் இந்த தீபாவளி நினைவில் பின்குறிப்புகள்.