Monday, September 17, 2007

கால் தலை கணவாய்

மனஓசை என்ற பதிவுத்தளத்தில் அதன் ஆசிரியர் சந்திரவதனா செல்வகுமரன் என்பவர் “கணவாய்க் கறியும் அப்பாவும்” என்ற தலைப்பில் சில நினைவுகளை எழுதியிருந்தார். அதற்கிட்ட பின்னூட்டங்கள் பலருக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு, கணவாய் என்பது என்னது என்று தெரியவில்லை என்று சொல்லின. விளக்கி நான் அளித்த பின்னூட்டம் நீண்டு விட்டதால், அதையே தனியாக ஒரு பதிவாக இடலாம் என்று எண்ணி இந்த முயற்சி.

ஈழத்தில் கணவாய் என்றழைக்கப்படுவது தமிழ்நாட்டில் கணவாய், கடம்பா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. வட தமிழ்நாட்டிலும், தென் தமிழ்நாட்டிலும் பல மீன்களுக்கு பெயர்கள் வேறுபடுகின்றன (உதாரணம்: வடக்கு – வவ்வால், தெற்கு – வாவல்; வடக்கு – வஞ்சிரம், தெற்கு – சீலா அல்லது நெய்மீன்; வடக்கு – சுதும்பு, தெற்கு – குதிப்பு). அது போல் இதற்கு வடக்கில் பெயர் கடம்பா. தெற்கில் கணவாய். மலையாளத்தில் கணவா.

சிலர் கணவாயை கணவாய் மீன் என்று அழைத்தாலும் இது மீனல்ல. முதுகுத்தண்டு இல்லாத ஒரு கடல் வாழி (Marine invertebrate). கணவாயில் இரண்டு வகை இருக்கிறது – (1) squid எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கண்ணாடி போல தெளிவாக, மெல்லியதாக இருக்கும்; (2) cuttlefish எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கனமாக, வெள்ளையாக இருக்கும். கணவாய் cephalopod எனப்படும் வகையினது. Cephalo என்றால் தலை, pod என்றால் கால் – அதாவது தலையோடு கால்கள் உள்ள பிராணி. மொத்தமாக எட்டுக் கால்கள். ஆனால் சிலந்திக்கும் இதற்கும் நெருங்கிய சொந்தம் கிடையாது. நத்தை, சங்கு, சிப்பி வகைகளுக்கு ரொம்ப சொந்தம். அவைகளுக்கு வெளியே இருக்கும் ஓடு, இவற்றிற்கு உள்ளே இருக்கிறது. இவைகளுக்கு வெளியே இருக்கும் ருசியான தசைப் பகுதி, அவற்றிற்கு உள்ளே இருக்கிறது. அவைகளுக்கு ஓடு பாதுகாப்பு. இவற்றிற்கு ஓடுவதுதான் பாதுகாப்பு. கருப்பு மையை உமிழ்ந்து விட்டு அதி விரைவாக நீந்தி தப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திமிங்கிலம், சுறா, சந்திரவதனா அவர்களின் வீட்டுச் சட்டி முதலானவற்றில் விதி முடிந்து விடும்.

கணவாய் மீன்கள் தமிழ்நாட்டில் ஓரளவு கிடைத்தாலும் கடல்புரத்து மக்கள் தவிர வேறு எவரும் விரும்பி உண்பதில்லை. கேரளாவில் ஓரளவு பரவலாக கணவாய் உண்ணப்படுகிறது. கடல் உணவை ரொம்ப தீவிரமாக உட்கொள்ளும் வங்காளிகள் இதை சாப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.

உலகளவில் சீனா, ஜப்பான், கொரியா, தென்கிழக்காசியாவிலும், மத்திய தரைக்கடலையொட்டிய தென் ஐரொப்பாவிலும் (குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின்), இக்கலாச்சாரம் உள்ள தென்னமரிக்காவிலும், இது விரும்பி உண்ணப்படுகிறது. கணவாய்க்கு மிக நெருங்கிய சொந்தமான ஓக்டோபஸும் இந்நாடுகளில் உண்ணப்படுகிறது. ஜப்பான், கொரியாவில் பச்சையாகவும், காய்கறிகளுடன் லேசாக வதக்கியும் உண்கிறார்கள். ஜப்பானிய டெம்பூரா (tempura) முறையில் வட்ட, வட்டமாக நறுக்கிய கணவாயை மாவில் போட்டு பஜ்ஜி போல பொரித்தெடுத்து சாப்பிடலாம். இதையே கலமாரி (kalamari) என்ற பெயரில் பல அமெரிக்க உணவகங்கள் இப்போது வழங்குகின்றன. ஆனால் கலமாரி என்பது ஸ்பானிய மொழியில் கணவாயின் பெயர். இப்போது பாருங்கள்:

கட்டில் ஃபிஷ், ஸ்க்யிட் -- ஆங்கிலம்
கணவாய், கடம்பா – தமிழ்
கணவா – மலையாளம்
இகா – ஜாப்பனிஸ்
கலமாரி – ஸ்பானிஷ்

ஆக, க் அல்லது க்-ன் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லா மொழிகளிலும் கணவாயின் பெயரில் இருக்கின்றன. இது தற்செயலானதா?

கணவாய் சமைக்கும் போது இதை எவ்வளவு விரைவாக சமைத்து முடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் இதன் தசை பச்சையாகவே சற்று ரப்பர் பதம் கொண்டது. சமைக்க சமைக்க இது மேலும், மேலும் ரப்பராகி விடும். இருப்பினும் நம் ஊரில் இதை, மற்ற இறைச்சி வகைகளாக நினைத்துக் கொண்டு, அதிகமான நேரம் அடுப்பில் வைத்துக் கிண்டிக், கிளறியே சாப்பிடுகிறோம். இப்படி சமைக்கப்பட்ட உணவில் நாம் சுவைப்பது தசையையல்ல, அது சுமந்து கொண்டிருக்கும் மசாலா வகைகளையே.

மேலதிக தகவல்களுக்கு காண்க: http://en.wikipedia.org/wiki/Squid

புகைப்படத்தில் வலது முன்பக்கத்தில் குவிந்திருக்கும் கொள கொளா வஸ்துதான் கணவாய். சீனாவின் தென்கடற்கரையோர நகரான ஷாஞ்ஜாங்கில் 2005 எடுக்கப்பட்டது.


Posted by Picasa

Saturday, September 15, 2007

ஆட்டம் விறுவிறுப்பு, முடிவு அசமஞ்சம்



இருபது-20தான் எதிர்கால கிரிக்கெட்டின் அடையாளம். மூன்று மணி நேர ஆட்டம். முழுவதும் விறுவிறுப்பு. ஆட்டம் முழுவதையும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. புவியியல் ரீதியாக கிரிக்கெட் வளர்ந்து வருவதையும், ஆட்டத்தின் இந்த புதிய அமைப்பையும் வைத்துப் பார்க்கும் போது, ஒலிம்பிக்சில் கூட கிரிக்கெட் விளையாடப்படலாம் என்ற நம்பிக்கை உண்டாகிறது. பார்த்தது

கல்லூரி நாட்களுக்குப் பிறகு இரவில் கண் விழித்து முழு ஆட்டத்தையும் பார்த்தது இந்தியா-பாகிஸ்தானின் முதல் உலகக் கோப்பை இருபது-20தான். ஆர்.பி. சிங்கும், ஸ்ரீசாந்தும் பந்து வீசிய லட்சணத்தில் காரியம் கெட்டு பாகிஸ்தான் வெல்வது நிச்சயம் என்று ஏற்பட்ட சமயத்தில், பதானும், அகர்கரும், ஹர்பஜனும் பந்தைக் கையிலெடுத்து வயிற்றில் பால் வார்த்தனர். இந்தியா வெல்வது நிச்சயம் என்று கொஞ்சம் ஆசுவாசமாக நாற்காலியில் சாய்ந்தால் மிஸ்பா நாலும், ஆறுமாக அடித்து பாலுக்குள் புளியை ஊற்றிக் கலக்கினார். காரியம் கெட்டே விட்டது என்ற கடைசி இறுதி இரண்டு பந்துகளில் பாகிஸ்தான் குளறுபடி செய்து ஆட்டம் 141-141 என்று சமம். வீட்டில் அனைவரும் தூங்குகிறார்கள் என்பதால் தொலைக்காட்சியை ஊமையாக்கி ஆட்டத்தைப் பார்த்ததில் இந்த மாதிரி இழுபறிக்கெல்லாம் இருபது-20 ஒரு தீர்வு வைத்திருக்கிறது என்று தெரியாமலே தூங்கப் போய் விட்டேன்.

காலையில் மனைவியிடம் “தெரியுமா, இருபது-20ல் முதல் இழுபறி ஆட்டம். அதை இரவு இரண்டரை வரை பார்த்து விட்டுத்தான் தூங்கினேனாக்கும்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள அடுத்த சில நிமிடங்களில் வந்த வானொலி செய்தி “தென்னாப்பிரிக்காவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து சூப்பர் எட்டுக்குள் நுழைந்தது” என்று சொல்லி மூக்குடைத்தது. கிரிக்கின்ஃபோ சென்று பார்த்தால் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி என்று சொல்லியது. அது என்ன பவுல் அவுட் என்பது பகல் நேரத்தில் ஈஎஸ்பிஎன் விளையாட்டின் முக்கிய காட்சிகளை காட்டிய போதுதான் புரிந்தது.

ஸ்டம்புகளுக்குப் பின்னால் விக்கெட் கீப்பர். ஆனால் துடுப்பாட்டக்காரர் கிடையாது. ஒவ்வொரு அணியிலிருந்தும் ஐந்து பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாறி, மாறி பந்து வீசுகிறார்கள். வீச்சாளர் ஸ்டம்பைத் தாக்கி விட்டால் அணிக்கு ஒரு புள்ளி. கால்பந்து டை ப்ரேக்கரின் கலப்படமில்லாத காப்பி. சேவாக், ஹர்பஜன், உத்தப்பா என்று மூன்று பந்து வீச்சாளர்களுமே லெக் ஸ்டம்பைத் தூக்க, பாகிஸ்தானின் மூன்று பந்து வீச்சாளர்களுமே ஸ்டம்பைத் தாக்காமல் கோட்டை விட்டார்கள். இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி.

கிரிக்கின்ஃபோவில் பாகிஸ்தானின் வீரர்களுக்கு இந்த டை ப்ரேக்கர் ஆட்ட முறை புரியவில்லை என்பது போல போட்டிருந்தார்கள். இதில் புரிய என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. தன்னந்தனியாக வில்லனிடம் மாட்டிக் கொண்ட தங்கை நடிகையைப் போல எந்தவித பாதுகாப்பில்லாமல் ஸ்டம்ப் இருக்கிறது. பந்து வீசச் சொல்கிறார்கள். ஸ்டம்பைக் காலி செய்வது தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. முதலாவது ஸ்டம்பைக் காலி செய்த சேவாக்கை எல்லா இந்திய வீரர்களும் கொண்டாடினார்கள். இவையெல்லாம் பார்த்த பின்னும் என்ன குழப்பம் என்பதுதான் நமக்கு குழப்பம்.

எப்படியிருந்தாலும் மூன்று மணி நேரம் பரபரப்பாக ஆடப்பட்ட ஒரு ஆட்டம் இப்படி அசமஞ்சத்தனமாக முடிவுக்கு வந்தது வருத்தம்தான். இந்தியா தோற்றிருந்தால் இன்னும் அதிகமாக வருத்தம் இருந்திருக்கும். நல்ல வேளையாக தோனி ஆர்.பி. சிங்கையும், ஸ்ரீசாந்தையும் டை பிரேக்கரில் பந்து வீச விடவில்லை.

பி.கு: மழையினால் ரத்து செய்யப்படுகிற ஆட்டங்களுக்கு தீர்வு காண இரண்டு அணிகளையும் புக் கிரிக்கெட் விளையாட விடலாமே என்ற ஆலோசனையை இருபது-20க்கு கொடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
Posted by Picasa

Monday, September 10, 2007

தன்னந்தனியாய் ஒரு தேசம்

 

பிரசிலின் பரப்பளவு சுமார் 85 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இந்தியாவை விட 2.5 மடங்கு பெரிதான இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 18 கோடியே.

தென்னமரிக்காவின் மற்ற நாடுகளனைத்தும் ஸ்பானிஷ் பேச, பிரசில் மட்டும் போர்ச்சுக்கீஸ் சம்சாரிக்கிறது. போர்ச்சுக்கீஸில் வந்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கொரியா நாடுகளிலிருந்து குடிபுகுந்தவர்களும், அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கர்களும், பூர்வீகக் குடிமக்களும் பெரும்பாலும் இனம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை மறந்து வசிக்கும் தேசம் பிரசில்.

மொழியில் மட்டுமல்ல, மற்ற பல அம்சங்களிலும் பிரசில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. தெளிவாகத் தெரிந்த ஒன்று: பிரசிலின் பெரும்பாலான அமைப்புகளும், நிறுவனங்களும், தொழில்களும், வியாபாரங்களும் பிரசிலியர்களை முன்னிறுத்தி மட்டுமே இயங்குகின்றன. போர்ச்சுக்கல் மொழியில் அல்லாது பிற மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், உணவக பட்டியல்கள், விமான அறிவிப்புகள் ஆகியவை இங்கு வெகு குறைவு. மிக அழகான கடற்கரைகள் கொண்ட வடகிழக்கு நகரங்கள் பிரசிலிய, உள்நாட்டுப் பயணிகளுக்கான சேவைகளை அளிப்பது போன்று, வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை ஊக்கமளிப்பது போல் தெரியவில்லை. நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிய போது

“பிரசிலின் கடற்கரைகளுக்கு விடுமுறைக்காக வருபவர்களில் முக்கால்வாசிக்கு மேல் பிரசிலியர்கள். ஐரோப்பாவிலிருந்து கொஞ்சம் பேர் வருகிறார்கள். அமெரிக்காவிலிருந்து அதிகம் வருவதில்லை” என்றார்.

அமெரிக்காவிக்காவிற்கும் பிரசிலுக்கும் இடையே ஒரு வித இறுக்கமான உறவு நிலை நிலவுகிறது. அமெரிக்கர்கள் விசா எடுத்து செல்ல வேண்டிய வெகுசில நாடுகளில் பிரசிலும் ஒன்று. பிரசிலியர்களுக்கு ஐரோப்பா செல்ல விசா அவசியமில்லை. அமெரிக்கா செல்ல தேவைப்படுகிறது. இது பிரசிலியர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, அமெரிக்கர்கள் விசா எடுத்துத்தான் வரமுடியும் என்றாக்கி விட்டார்கள்.

பிரசிலின் ஆதாரம் வேளாண்மை. இங்கிருந்துதான் முந்திரிப் பருப்பு, பப்பாளி, கொய்யா என்று பல தாவரங்கள் ஆசியாவிற்கு வந்தது (பதிலுக்கு இந்தியாவிலிருந்து மாம்பழம் பிரசிலுக்கு சென்றது). கரும்பு, சோளம், சோயா மொச்சை, காப்பி முதலான பல பயிர்களின் உற்பத்தியில் உலகில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கின்றது இந்த நாடு. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விரிந்த பண்ணைகள் இங்கு ஆயிரக்கணக்கில் உள்ளன. இறைச்சி வகைகளில் பிரசிலியருக்கு பிரதானமானது மாட்டிறைச்சி. நெல்லூர் இன மாடுகள் கொண்டு வரப்பட்டு இங்கு கலப்பினமாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. கோழி உற்பத்தியில் விரைந்து, வளர்ந்து அமெரிக்காவுடன் போட்டியிடுகிறது இந்த நாடு. மீன், இறால் உற்பத்தியும் விரைந்து, பெருகி வருகிறது.

கரும்பிலிருந்து எரிசாராயம் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது பிரசில். மக்காச்சோளத்திலிருந்து தயாரிப்பதை விட கரும்பிலிருந்து விலை குறைவாக சாராயம் தயாரிக்கலாமாம். பிரசிலின் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் சாராய எரிபொருளும் விற்கப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 40. எரிசாராயம் லிட்டருக்கு ரூ 20. பெட்ரோல் லிட்டருக்கு 12 கி.மீ. கொடுக்குமென்றால் சாராயம் 8-9 கி.மீ. கொடுக்குமென்கிறார்கள். இப்போது சாராயம் விலை குறைவு என்றாலும், அறுவடை முடிந்து கரும்பு வரத்து குறையும் போது விலை கூடி விடும் என்கிறார்கள்.

வாகனங்களுக்குப் போட்டியாக பிரசிலியர்களும் கரும்பிலிருந்து பெறப்படும் மது வகைகளை குடிக்கிறார்கள். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒருவித ரம் வகை மது கஷாஷா எனப்படுகிறது. இதை எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறை தொட்டுக் கொண்டு, அப்படியே குடிக்கிறார்கள், அல்லது எலுமிச்சங்காய், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் போட்டுக் குலுக்கி கப்ரினா என்ற காக்டெயிலாகவும் குடிக்கிறார்கள். ஒரு லிட்டர் கஷாஷா 75-100 ரூபாய்க்குள் கிடைக்கிறது.

பரந்த நிலப்பரப்பில் குறைந்த மக்கள் தொகை, வற்றாத நீர்வளம், மற்றும் இயற்கையின் தாராளமான உயிரின, கனிம வளங்கள் எல்லாம் இருந்தும் பிரசிலில் வறுமை தாராளமாகவே இருக்கிறது. சா பாலோவின் அடுக்கு மாடிக் கட்டங்களின் பின்னால் சேரிகள். முதுகிற்குப் பின்னால் தாக்கும் வன்முறைக் கலாசாரம். சா பாலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற 50 லட்சம்-ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களிலும், பத்திருபது லட்சம் கொண்ட சிறு நகரங்களான சால்வடோர், ஃபோர்ட்டலிசாவிலும், துப்பாக்கி முனையில் வழிப்பறி, கொள்ளை, ஆட்கடத்தல் என்பன பரவலாக நடைபெறுகின்றன. நண்பர் ஒருவர் சமீபத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் துப்பாக்கி தாங்கிய மோட்டார் சைக்கிள்காரர்களால் மிரட்டப்பட்டு பணம் இழந்திருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை விவரிக்கையில்:

“குடிவெறியர்களுக்கும், போதை மருந்து உபயோகிப்பவர்களுக்கும், வேசிகளுக்கும் பிறந்து, ஏழ்மையில் உழலும் இளைஞர்கள்தான் பெரும்பாலும் இந்த வகையான குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். அன்பு, மனித உயிரின் மதிப்பு முதலியவற்றை அறியாத இவர்கள் உயிரைப் பறிக்க சற்றும் தயங்குவதில்லை. இவர்களிடம் மாட்டிக் கொண்டால் கேட்கும் பொருளைக் கொடுத்துவிட்டு தப்புவதுதான் புத்திசாலித்தனம்” என்றார்.

கூடவே, “நாம் மேல்தளத்தில் இருந்து இரவுணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கீழே கடற்கரை சாலையில் ஒரு பெண்ணின் பையை பறித்துக் கொண்டு ஒருவன் ஓடினானே. நீ பார்த்தாயா?” என்றார்.

“காண வேண்டிய காட்சிகளை நீர் எங்கே காட்டுகிறீர்?” என்று அலுத்துக் கொண்டேன்.

இரவுணவு முடித்து விட்டு விடுதியை நோக்கி சென்ற போது சாலையில் ஓரிடத்தில் தனியாக நின்றிருந்த ஒரு இளம் பெண்ணைச் சுட்டிக் காட்டி “காட்ட வேண்டிய காட்சிகளை சுட்டிக் காட்டவில்லையென்று நீ அலுத்துக் கொள்வதால் சொல்கிறேன், இந்தப் பெண்
ஒரு வேசி. வாடிக்கையாளரை எதிர்பார்த்து நிற்கிறாள்” என்றார்.

அதற்குள் எங்கள் வாகனம் அவளைப் போலவே தனியாக நின்றிருந்த இன்னொரு பெண்ணையும் கடந்து சென்று கொண்டிருந்தது.

“இவளுமா?” என்றேன்.

“இவனுமா? என்று கேள். இது அறுவை சிகிட்சை மூலம் பெண்ணாக மாற்றம் செய்து கொண்ட ஒரு ஆண்” என்றார்.

ஒரு லிட்டர் கஷாஷா குடித்தால்தான் தலைசுற்றுவது நிற்கும் போலிருந்தது.
Posted by Picasa

Sunday, September 2, 2007

சா பாலோவில் உழவர் சந்தை

சா பாலோவின் ஓரளவு வசதி மிக்க குடியிருப்பு பகுதிளில் ஒன்றில் வசிக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். வெள்ளிக் கிழமை காலை 9 மணி. மேக மூட்டமும், குளிரும் அகன்று சுகமான வெம்மை பரவும் வேளை.















நண்பர் என்னிடம், “வா என்னுடன். உனக்கு ஒன்றைக் காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றார். சென்ற இடம் அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெரு. ஒவ்வொரு வெள்ளியும் அந்தத் தெரு உழவர் சந்தையாக மாறி விடுகிறதாம்.














பிரசில் -- காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மொச்சை மற்றும் கடலை வித்துக்கள், இறைச்சி, மீன் -- என்று எல்லா விதமான உணவு உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கக் கூடிய நாடுகளில் ஒன்றாகும். இங்கும் எல்லா இடங்களையும் போலவே உழவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. சா பாலோவில் உணவின் விலை அதிகமாக இருப்பதை உணவகங்களிலும், செல்ல நேரிட்ட ஒரு நடுத்தர அங்காடியிலிருந்தும் அறிந்து கொண்டேன்.

சா பாலோ அரசு உழவர் சந்தை என்று ஒரு இடத்தை நிரந்தரமாக ஏற்படுத்தாமல், நகரிலுள்ள பல தெருக்களில் உழவர் அமைப்புக்கள் வாரத்தில் ஒரு நாள் சந்தை ஏற்படுத்த ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. சா பாலோ போன்ற பெரிய நகரில் இந்த ஏற்பாடு உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. நுகர்வோர் நடந்து சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உழவர்கள் ஒரு பரந்த சந்தையில் பங்கு கொள்ள முடிகிறது. ஆனால், உழவர்கள் ஏதாவது வாகனங்களை சொந்தமாகவோ, வாடகைக்கோ எடுத்துக் கொள்ள வேண்டி வரும். நம்மூர் போல் பேருந்தில் கொண்டு செல்ல முடியாது.

பச்சைப் பசலேன்று காய்கறிகளும், வித, விதமான பழங்களும் சந்தையில் குவிந்திருந்தன. இறைச்சி விற்க இரு கடைகள் இருந்தன. ஒன்றில் விசா க்ரெடிட் கார்டு வசதி உண்டு. மீன்கள் விற்க ஒரு கடை. சாளை மீன்கள் கிலோவுக்கு 4.80 ரியால்கள், ஏறக்குறைய 100 ரூபாய். இறால்கள் ஏறக்குறைய 900 ரூபாய். ஆனால் காய்கறிகள், பழங்கள் விலை ஏகத்துக்கும் மலிவு. ஒரு டஜன் ஆரஞ்சு வாங்கினேன். விலை 60 ரூபாய். ஆனால் விற்றவர் 40 ரூபாய் போதும் என்று சொல்லி விட்டார். கொசுறாக ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்தும் கொடுத்தார்.














எங்கு இருந்தாலும் உழவர்களுக்கு ஒரு குணம் இருக்கிறது: தங்களது உழைப்பின் பலனை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பார்த்து மகிழ்வது.

Posted by Picasa