Sunday, August 12, 2007

கடந்த வாரத்தில் தமிழ் பதிவுலகம்

தமிழ்மணத்தில் சேர்ந்தபின் பல தமிழ் பதிவுகளை அறிய நேர்ந்துள்ளது. பதிவுலகத்தின் மொழியும் மெல்ல, மெல்ல புரிந்து வருகிறது. கருவிப் பட்டை போன்ற சில சொற்கள் உடனே புரிந்து விடுகின்றன. பல மரமண்டையில் இறங்க நேரமாகின்றன. இளவஞ்சியிடம் “மறுமொழி” என்றால் என்ன என்று கேட்க வேண்டியதாயிற்று. “கும்மி” என்பது பாரதி பெண் விடுதலை பெற்றவுடன் அடிக்க சொன்ன வகையினது அல்ல என்று தெரிகிறது. ஆனால் “மொக்கை” – சவரன் செய்யும் வகையினதா என்பது தெளிவாகவில்லை.

கடந்த வாரம் தமிழ்மணம் சென்னையில் நடந்த பதிவர் வட்டக் கூட்டத்தில் மாலன் பேசிய பேச்சைக் குறித்த சர்ச்சைகளில் பரபரப்பாக இருந்தது. நானும் தமிழனல்லவா? எனவே இது போன்ற சர்ச்சைகளில், அதிகமாகப் புரிந்து கொள்ளாமல், ஆழமாகப் போகாமல் அரைவேக்காட்டுத்தனமாக ஏதாவது கூறவேண்டுமல்லவா? கூறி விடுகிறேன்.
கோபம், கண்ணீர், கேலி, கிண்டல், இயலாமை, தன் விளக்கம், சுய இரக்கம், கலப்படமில்லாத உளறல் கலந்த மாலன் சர்ச்சையின் இரு துருவங்களுக்குமிடையில் தெளிவாக புலப்படுவது ஒன்றே ஒன்று. அது நாம் விதிகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கும் அளவுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ள தீவிரமாக மறுப்பது.

முதலில் மாலனின் ‘நன்னடத்தை’ குறித்த கருத்துக்கள். இணையத்தில் நன்னடத்தை என்பது என்னைப் பொறுத்த வரை க்ரெடிட் கார்டு திருடாமலிருப்பது; ஸ்பாம் அனுப்பாமலிருப்பது. கருத்துக்களை சொல்வதில் நன்னடத்தை எங்கே வருகிறது என்று தெரியவில்லை. பதிய நினைத்ததை மட்டற்ற சுதந்திரத்தோடு பதிவதில்தான் இணையத்தின் பேராற்றலே இருக்கிறது. திரட்டியில் வருவதால் நீ எழுத நினைத்ததை எழுதாதே என்பதன் அடிப்படை ரொம்ப பலவீனமாக இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது அம்மணமாக இருக்க தயங்காதவன், மனைவி கூட இருக்கும் போது பெர்முடாஸ் தேடுவான் என்னும் வாதம் சிந்திக்க வைக்கிறது. ஆனால் சிந்தனையின் இறுதியில் என்ன தோன்றுகிறதென்றால்: பெர்முடாஸ் போடுபவர்கள் போடட்டும்; பெர்முடாஸ் போட விரும்பாதவர்கள் அப்படியே இருக்கட்டும்; ஏன் பெர்முடாஸ் போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள் கூட அப்படியே இருக்கட்டும். கோட், சூட் போட்டவன், வேட்டி கட்டினவன், லுங்கி அவிழ்ந்தது தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பவன், பெர்முடாஸ் போட்டாலும் நாடாவைக் கட்டாதவன் என்று அத்தனை பேருக்கும் சம வாய்ப்புகள் தரும் இடங்கள் இந்த உலகில் அதிகமில்லை. அவற்றில் இணையமும் ஒன்று. இதை மாற்ற யாரால் முடியும்? இந்த நிலைமைக்கு அஞ்சி சிலர் இணையத்தை புறக்கணிப்பது, பாறையை உதைத்த கழுதை காலாகத்தான் முடியும்.

மாலனின் ‘நன்னடத்தை’ குறித்த ஆழமற்ற வாதங்களை விட அவர் கூறிய இலங்கைத் தமிழர் பாஸ்போர்ட் விவகாரம் ஆய்பூய் ஆக்கப்பட்டிருக்கிறது. மாலன் பேச்சின் மூல உரையைப் படிக்கும் போது இது ஒரு பெரிய விவகாரமே அல்ல என்பது தெளிவாகிறது. கண்டனமல்ல, விமர்சனம் கூட அல்ல, ஒரு சாதாரண ஒப்பிடலைக் கூட தாங்க இயலாதவர்களும், அவர்களைத் தாங்கிப் பிடிப்பவர்களும் போடும் ஓலங்கள் பெரிதுபடுத்த தகுதியற்றவை. ‘நன்னடத்தை’ விதிகள் மூலம் இணையத்தின் சுதந்திரத்தை மட்டுப் படுத்தலாம் என்று ஒரு சாரார் கனவு கண்டால், கூக்குரலிடுவதன் மூலம் மாற்றுக் கருத்துக்களை கேட்காமல் பண்ணலாம் என்று மறு சாரார் எண்ணுகிறார்கள் போலும். இவ்விரண்டு குழுக்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் பதிவு செய்யும் இணையமோ அகழ்வார்ப் பொறுக்கும் பூமி போல் இருக்கிறது; இருக்கும்.

1 comment:

ilavanji said...

// அது நாம் விதிகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கும் அளவுக்கு அவற்றை ஏற்றுக் கொள்ள தீவிரமாக மறுப்பது. //

நல்ல கருத்து. இதை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ நான் ஏற்றுக்கொள்கிறேன்! :)

கிரீடங்கள் மாட்டிக் கொள்வதில் ஒரு சிக்கல் உண்டு. அது காதுகளையும் சேர்த்து மூடிவிடும்! :)