
இப்போது மாதம் ஒரு முறை சிங்கப்பூர் செல்வதால் அங்கு நடந்து முடிந்த தேர்தலில் ஒரு சிறிய ஆர்வம் தோன்றியது. கூடவே, லீ குவான் யூவின் From Third World To First படித்து வருவதும் ஒரு காரணம்.
எல்லோரும் எதிர்பார்த்தபடியே ஆளும் கட்சியான PAP பேரளவில் வெற்றி பெற்றுள்ளது; ஆனால் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்து விட்டது; அல்ஜூனிட் என்ற ஒரு தொகுதியில் பாட்டாளிகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தொகுதியில் பாட்டாளிகள் கட்சி தலைவரிடம் கடந்த அமைச்சரவையின் வெளிநாட்டு அமைச்சர் தோற்று விட்டார்.
எண்பத்தேழு வயதான லீ குவான் யூ எந்த வித எதிர்ப்புமின்றி ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். PAPகாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழக்கம் போல் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசினார். அல்ஜூனிட் வாக்காளர்கள் PAPஐ தோற்கடித்தால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். PAP எம்.பி.க்கள் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதியைத்தான் கவனிப்பார்கள் என்ற ரீதியில் மிரட்டினார். பட்டாளிகள் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக அரசியலில் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் நோக்கம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் அப்படிக் கைப்பற்றினால் அவர்களில் பிரதமர், நிதியமைச்சர், வெளிநாட்டு அமைச்சர், வர்த்தக அமைச்சர் போன்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் கிடையாது என்பதை வாக்காளர்கள் யோசிக்க வேண்டும் என்றார். நாமும் யோசிக்க வேண்டிய விஷயம்தான் அது. விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும் பல இளைஞர்களை அரசியலுக்கும் பிறகு ஆட்சியதிகாரத்திற்கும் கொண்டு வந்தது. சேலத்திலிருந்த ராஜாஜி அவர்கள் ஈரோட்டிலிருந்த ஈ.வே.ரா. அவர்களைத் தேடிச் சென்று காங்கிரஸ் இயக்கத்திற்குள் கொண்டு வந்தார் என்று அறிகிறோம். மக்கள் சார்ந்த இயக்கங்கள் தேய்ந்து விட்ட நிலையில் இன்று அரசியலுக்குள் வருகை என்பது ஏற்கனவே வெளிச்சத்திலுள்ள நடிகர்களுக்கும், தலைவர்களின் வாரிசுகளுக்கும், ஆட்சியதிகாரத்திலுள்ள அதிகாரிகளுக்கும் (உதாரணம்: பிரதமர் மன்மோகன் சிங்) மட்டுமே சாத்தியமாகிறது. இதனால்தான் நமது ஆட்சியமைப்பு சீர்குலைந்து கொண்டே வருகிறது. மீண்டும் மக்கள் சார்ந்த இயக்கங்கள் தலை தூக்கினால்தான் இந்த நிலைமை மாறும்.
லீ குவான் யூவின் From Third World To First பற்றி…
சிங்கப்பூரை எப்படி முதல்தர நாடாக மாற்றினார் என்பதை லீ குவான் யூ தன்னுடைய மனம் திறந்த, நேரடி பாணியில் எழுதுவதுதான் இந்த நூல். சுமார் 700 பக்கங்கள் கொண்ட தண்டியான புத்தகம்தான். ஆனால் சுலபமாக வாசிக்கலாம். எளிமையான ஆங்கிலம், நேரடியான நடை, சுவையான சம்பவங்கள், ஒளிவு மறைவில்லாத விமர்சனங்கள். இதை வாசிக்கும் போது வெறும் சிங்கப்பூரின் வரலாற்றை மட்டுமல்ல, தென்கிழக்காசியாவின் கடந்த ஐம்பதாண்டு வரலாற்றின் சுருக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.
1 comment:
புத்தகம் வாசித்து முடித்த பின் ”இரு பக்க செய்திகளையும் “ சொல்லுங்களேன்; கேட்டுக் கொள்கிறோம்.
Post a Comment