Saturday, February 13, 2010

புலிக்கு முன்னால் வந்த கிலி

பிப்ரவரி 8 ஹோச்சிமின் நகரில் வந்திறங்கிய போது சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான தயாரிப்புகள் தீவிரமடைந்திருந்தன.

உலகெங்கிலும் சீனர்கள் (இதில் கலாசார ரீதியாக வியட்நாமியர்களும் அடங்குவர்) தங்கள் புத்தாண்டை அக்கறையாக கொண்டாடுகிறார்கள். ஒரு வாரமோ, இரண்டு வாரங்களோ விடுமுறை எடுத்துக் கொண்டு, பிறந்த ஊருக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி விட்டுத்தான் மறு வேலை பார்க்கிறார்கள்.

மஞ்சளும், வெளிர் மற்றும் அடர் சிவப்பு நிறங்களும்தான் வியட்நாமின் புத்தாண்டு நிறங்கள். ஹோச்சிமின் நகரின் தெருக்களும், கடைகளும், வீடுகளும் இந்த நிறத்து மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மாலை வேளைகளில் பிரதான சாலைகளெல்லாம் மக்கள் கூட்டத்தால் தளும்புகின்றன.

ஹோச்சிமின் நகர் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் ஒரு ஊர். இதில் முக்கால்வாசிப் பேரின் பூர்வீகம் ஹோச்சிமின் நகருக்கு வெளியே. வழக்கமாக ஹோச்சிமின் நகருக்குள் வருபவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். இப்போது தத்தம் பூர்வீக கிராமங்களை நோக்கி நகரை விட்டு வெளியே பயணிப்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். ஹோச்சிமின் நகரிலிருந்து மேக்காங் ஆற்றைக் கடக்கும் வின் லாங் படகுத் துறையில் சாதாரணமாக 15-20 நிமிடம் காத்திருந்தால் போதுமானது. இப்போது 3 மணி நேரம் காக்க வேண்டியுள்ளது.

நாளை (பெப்ரவரி 14) பிறக்கும் புத்தாண்டு புலியின் ஆண்டு. பன்னிரண்டு ஆண்டு சுழற்சியில் வரும் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் பிரச்சினை வரும்; குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கிலியைக் கிளப்பி விட்டு விட்டார்கள். எனவே புத்தாண்டு பிறக்கு முன்னே திருமணங்கள் நடத்த ஒரே பரபரப்பு.

No comments: