Thursday, November 25, 2010

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும் ... 1

அத்தியாயம் 1: கண்ணாயிரம் பெருமாள் B. எழுத்தாளனை சந்தித்த கதை

ஊஷ் என்ற பேரிரைச்சலுடன் flush ஆகும் ஆகாய விமானத்தின் toilet போல big bang, அதற்குப் பின் அண்டசராசரம், அதிலே சூரியன், சூரியனைச் சுற்றும் பூமி, பூமிக்கு மேலே புல், புல்லைத் தின்ன பசு, பசுவின் பாலைக் குடிக்க மனிதன், மனிதனை வழிநடத்த போலிச் சாமியார்கள் என்று வரிசைக்கிரமமாக காரியங்கள் நடந்தேறி வந்த காலத்தில் நடந்த ஒரு கதை இது.

ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், ஜாம் பஜார், பர்மா பஜார் என்று நிலப்பகுதியில் கடை விரித்தது போதாதென்று அலைகள் வந்து நுறையைப் பரப்பிச் செல்லும் மணல் வெளி வரைக்கும் காரபஜ்ஜி, கருகிய மக்காச் சோளம், பொரித்து, அனல் காற்றில் வரளும் மீன்கள் ஆகியவற்றை விற்கும் கடைகளைப் பரத்தி வைத்த சென்னை மாநகர். காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சி, இடையிலும், இரவிலும் உடல்பசி, மற்றும் மக்களின் மற்ற பல தேவைகளை பூர்த்தி செய்து வந்த அதன் முக்கிய கடற்கரையாகிய மெரீனா பீச். கடற்கரையிலிருந்து மேற்கு திசையில், சற்றுத் தொலைவில் சிற்றி சென்ற்றர் பிளாசா என்றழைக்கப்படும் நவீன அங்காடி மையம். அந்த அங்காடி மையத்தின் உச்சியில் ஒரு உணவு வளாகம். அந்த வளாகத்தில் B. எழுத்தாளன் மசால் தோசை தாங்கிய ஒரு பீங்கான் தட்டும், மணமான ஃபில்ற்றர் காஃபி நிறைந்த ஒரு காகிதக் கோப்பையுமாக அமர்ந்திருந்தான். தோசையை நடுவாக்கில் பிய்த்து தேங்காய்ச் சட்னியில் தோய்த்து ஒரு விள்ளல் போட்ட பிறகுதான் அவனுக்கு நினைவு தட்டியது. எச்சல் கையைத் திசுத்தாளில் துடைத்துக் கொண்டே தன் இடுப்புப் பட்டியில் இணைக்கப்பட்டிருந்த கேமராவை உருவி, அதன் கண்ணைத் திறந்து தோசையை ஃபோகஸ் செய்யத் தொடங்கினான். அவனை ஒரு ஜோடிக் கண்கள் ஃபோகஸ் செய்வதை அப்போது உணர்ந்தானில்லை.

கேமராவை அப்படியும், இப்படியுமாகத் திருப்பி 2-3 படங்கள் எடுத்து, அவை எப்படி வந்திருக்கின்றன என்று பார்வையிட்டான். திருப்தியில்லை. ஒரோரு பதிவர்கள் என்னமாய் புகைப்படங்கள் எடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். சின்னவஞ்சி என்ற பதிவர் தோசையைப் படமெடுத்தால், எப்படி அந்த முறுமுறு தோசை முறிந்து, லேசான எண்ணெய் பிசுபிசுப்புடன் மூன்று கடுகு, ஒரு பச்சைப் பட்டாணி, முந்திரிப் பருப்பின் ஒடிந்த ஒரு துணுக்கு ஆகியன மஞ்சள் நிற உருளைக் கிழங்கு பின்னணியில் துல்லியமாகப் புலப்படுகின்றன. தான் எடுக்கும் படங்களோ, அமெரிக்காவிற்குப் போன ஐ.டி. இளைஞர்கள் சமைக்கும் உருளை மசால் போல் அசமஞ்சமாக தெரிகிறது. ஒரு வேளை தன்னுடைய கேமராவில்தான் எதோ குறைபாடோ, இல்லை தன்னுடைய தோசைதான் சரியில்லையோ என்று பலவாறாக அவன் குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் தன் பக்கத்தில் யாரோ நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான்.

சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரம், பூப்போட்ட சட்டை, சட்டைக்கு சம்பந்தமில்லாத 55 வயது முகமும் உடல் மொழியும், சற்று வழிசல் கலந்த ஒரு சிரிப்பு.

“பத்திரிகையாளரா நீங்க?”

ஒரு காலத்தில் பத்திரிகையாளனாக வேண்டுமென்ற கனவில் திரிந்தவன் B. எழுத்தாளன். விதி வேறு திசைக்கு இழுத்துச் சென்று விட்டது. அப்படியும் பத்திரிகையுலகம் தப்பவில்லையே என்ற விசனம் B. எழுத்தாளனுக்கு உண்டு. இப்படி சடுதியில் தோன்றிய எண்ண ஓட்டத்தை நிறுத்தி விட்டு ”இல்லையே, நீங்க?” என்று இழுத்தான்.

“I am Kannayiram Perumal” என்று கையை நீட்டினான் அவன்.

B. எழுத்தாளனுக்கு அந்த பெயர் எங்கேயோ கேட்டது போல இருந்தது. ஆனால் பிடிபடவில்லை. அவனுக்கு அவகாசம் எதுவும் கொடுக்காமலே, கண்ணாயிரம் பெருமாள் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு எதிரில் அமர்ந்தான். அவன் கையிலே BARRISTA என்று எழுதப்பட்ட ஒரு ப்ரௌன் நிறக் காகிதக் கோப்பையிலிருந்து காஃபியும், சாக்கலேற்றும் கலந்த நல்ல மணம் எழும்பிக் கொண்டிருந்தது. அடர்த்தியான மீசையை நறுக்காகக் கத்தரித்திருந்தான். ஒரு காதிலே கடுக்கண். கழுத்தை ஒட்டிய பொன் சங்கிலி. கொஞ்சம் முறைப்பாக இருக்க முடிந்தால் தமிழ்ப் பட தாதாவின் கையாட்களைப் போலிருந்திருக்கலாம். ஆனால் வழிசலான சிரிப்பு அவனை ஒரு மலையாளப் பட காமெடியன் போலாக்கி விட்டது.

“நீங்க கட்டாயமா ஒரு எழுத்தாளர்தான். குறைந்த பட்சம் ஒரு ப்ளாக் எழுத்தாளராகவாவது இருக்க வேண்டும். சரியா?” என்றான். இப்போது வழிசல் குறைந்து அவன் பேச்சில் gravitas கொஞ்சம் கூடியிருந்தது.

B. எழுத்தாளனுக்கு இப்போது பெருமாள் மீது கொஞ்சம் மதிப்பு ஏற்பட்டு விட்டது. எப்படி இந்த ஆள் சரியாகச் சொல்கிறார் என்று சற்று திகைத்தான்.

அந்த திகைப்பே அவன் ப்ளாக் எழுத்தாளன்தான் என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டதை உணர்ந்த பெருமாள் ஒரு வித பெருமிதமாக புன்னகை செய்தான். அதில் வழிசல் குறைவாக இருந்ததனாலோ, அல்லது பெருமாள் மீதிருந்த மரியாதை அதிகரித்திருந்ததாலோ, அல்லது ஒரு எழுத்தாளனாக அறியப்பட்டபடியினாலோ, B. எழுத்தாளனுக்கு அந்த புன்னகை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

“எனக்கு உன்னால் ஒரு உதவி தேவைப்படுகிறது, செய்ய முடியுமா?” என்று நேரடியாகவும், நைச்சியமாகவும் விஷயத்திற்கு வந்தான் பெருமாள்.

B. எழுத்தாளன் மறுபடியும் alert ஆனான். மல்ற்றி லெவல் மார்க்கெற்றிங் ஆசாமிகளிடம் மாட்டிக் கொண்டு சில கசப்பான அனுபவங்களைப் பெற்றவன் அவன். அது முதல் பொது இடங்களில் முன்னே பின்னே தெரியாத நபர்கள் நைச்சியமாகப் பேசினாலே அவனுக்கு வயிற்றுக்குள் ஜிவ்வென்று ஆகி விடும்.

“வேற ஒண்ணுமில்ல. என்னப் பத்தி உன்னோட ப்ளாக்ல எழுத முடியுமான்னு கேக்கத்தான் வந்தேன்… அப்படி என்ன பாக்கற? என்கிட்ட ஒலகத்துக்கு சொல்றதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. அதைப் பரவலா கொண்டு போய் சேக்கறதுக்கு வழிகளைத்தான் தேடிட்டிருக்கிறேன்.... அட…என்னப்பா சந்தேகம்? பெரிய எழுத்தாளரான சாரு நிவேதிதா கூட என்னுடைய கதையை எழுதியிருக்கிறார் தெரியுமா? சொல்லப் போனா என்னுடைய கதையை எழுதிதான் அவரால சொந்தமா கதை எழுத முடியும்னே நிரூபிக்க முடிஞ்சுது. அதுக்கு முன்னால அவர் பேர்ல வந்த “ஸீரோ டிகிரி’ங்கற நாவலை நான்தான் எழுதினேன், நான்தான் எழுதினேன்னு அவனவன் சொன்னான்ல. அவனுங்க வாயையெல்லாம் அடைக்கறதுக்குத்தான் என்னோட கதையை எழுதி புஸ்தகமாவே போட்டார்ப்பா. நானூறு, நானுத்தம்பது பக்க புஸ்தகம்”

இப்போதுதான் B. எழுத்தாளனுக்கு கண்ணாயிரம் பெருமாள் என்ற பெயரை எங்கே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று புலப்பட்டது. சட்டென்று பதட்டத்திற்கும் உள்ளானான் அவன்.

“சார், புகழ் பெற்ற எழுத்தாளராகிய அவர் எங்கே, நான் எங்கே? நாள் ஒன்றுக்கு 3000-4000 பேர் வந்து வாசிக்கும் தளம் அவருடையது. என் ப்ளாகை என்னைத் தவிர வாசிப்பது என் மனைவி, என் மைத்துனன், என் இரண்டு தம்பிகளில் ஒருவன் என்று மொத்தம் மூன்று பேர்” என்று திணறினான் B. எழுத்தாளன்.

“B, எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம். தீவிரவாதிகள் மும்பை ஓட்டல்களைத் தாக்கிய போது, அக் காட்சிகள் சன் டி.வி.யிலும், ஜெயா டி.வி.யிலும், கலைஞர் டி.வி.யிலும், கேப்டன் டி.வி.யிலும் காட்டப்பட்டன அல்லவா? அவை கவனிக்கப்பட்டன என்பதுதான் முக்கியமே ஒழிய, எங்கே காட்டப்பட்டன என்பதா முக்கியம்?”

B. எழுத்தாளனுக்கு க. பெருமாள் சொன்னது புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனால், நிலைமை தெளிவடைவதற்கு முன்னரே கேட்கப்பட்ட உதவியை செய்து தருவதாக மண்டையை ஆட்டி விட்டான் அவன். அதன் விளைவாக உருவானதே இந்தக் கதை. எப்படி சீதைக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து, ராமாயணம் தோன்றியதோ, எப்படி த்ரௌபதிக்கு நேர்ந்த சோதனையிலிருந்து மகாபாரதம் தோன்றியது, எப்படி கண்ணகிக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து சிலப்பதிகாரம் தோன்றியதோ, அப்படி B. எழுத்தாளனுக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து தோன்றியதே இந்தக் கதை. அந்த வகையில் பார்த்தால், உலகிலேயே ஒரு ஆண்மகனுக்கு ஏற்பட்ட சோதனையால் உருவான முதல் காவியம் என்றும் இந்தக் கதையைக் கூறலாம்.

இந்தக் கதையை பிற்காலத்தில் படித்துப் பார்த்த அமுதினி-மெய்மை பதிப்பகத்தின் உரிமையாளர் இளவேனில்குமரன் இதை நூல்வடிவத்தில் கொண்டுவர முடிவு செய்தார். அச்சின் பின்னட்டையில் இந்த நூலைப் பற்றி இப்படிப் போடலாம் என்று தீர்மானித்தார்:

“மனித வாழ்வின் அபத்தங்களை வேடிக்கையாகவும், அதே நேரத்தில் கூர்த்த சிந்தனையுடன் கடுமையாகவும் எதிர்கொண்ட 21ம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்கள், அதே அபத்தங்களின் வடிவமாகவும், பிரதிநிதிகளாகவும் விளங்கினார்கள் என்பதை வேடிக்கையாகவும், அதே நேரத்தில் கூர்த்த சிந்தனையுடன் கடுமையாகவும் எதிர்கொள்ளும் இந்நூல் … இப்போது இந்தப் பத்தியை முதலிலிருந்து வாசிக்கவும்”

பின்குறிப்பு (எச்சரிக்கை): இன்னும் இந்தக் கதை பின்நவீனத்துவ முறையில் எழுதப்படவில்லை. காரணம் என்னவென்றால் பின்நவீனத்துவம் சம்பந்தமான உபதேசத்தை இனி மேல்தான் க. பெருமாள் B. எழுத்தாளனுக்கு அருளப் போகிறான். ஆனால், கிருஷ்ணபகவான் தர்மோபதேசம் செய்யு முன்பே தர்மம் உலகத்திலே நிலவியது போலவே, க. பெருமாள் பின் நவீனத்துவ உபதேசம் செய்யு முன்னரே பின் நவீனத்துவம் உலகில் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த அத்தியாயம்: கண்ணாயிரம் பெருமாள் அருளிய ‘மலை’ப் பிரசங்கம்