Sunday, January 9, 2011

30000 அடி உயரத்தில் சில எச்சரிக்கை மணிகள்



2011ன் முதல் பயணம் மதுரையின் புதிய விமான நிலையத்திலிருந்து. பளபளப்பாக, ஜொலிப்பாக, தூய்மையாக இருக்கிறது இந்த நிலையம். மதுரையை அடையாளப்படுத்த முகப்பில் ஏதாவது கட்டிடக் கலை வேலைகள் செய்திருக்கலாம். ஆனால் திருச்சியில் செய்தது போல் முனைந்து சரிவராமல் போனதற்கு செய்யாததே தேவலாம் என்று தோன்றுகிறது. உள்ளே கருங்கல்லில் எளிமையாக ஒரு சிறு மண்டபம் கட்டியிருக்கிறார்கள். பல புகைப்படங்கள் உள்ளன. ஒரு படத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரு வருகிறார். பக்கத்தில் காமராசர் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு நிற்கிறார். கொடைக்கானல் ஏரியின் நீள்தோற்றப் படமொன்றும் இருக்கிறது. இந்தப் படத்தை இன்னும் சிரத்தையெடுத்து நகலாக்கியிருக்கலாம். பழைய விமான நிலையத்திலிருந்து இருக்கைகளை கொண்டு போட்டு விட்டார்கள். அங்கேயே இந்த இருக்கைகள் பழையதாகத் தெரிந்தன. இங்கே கண் திருஷ்டிப் பூசணி இல்லாததை நிறைவு செய்கின்றன. கடைகளும் அங்கே இருந்து இங்கே மாறிவிட்டன என்று நினைக்கிறேன். புத்தகக் கடை கொஞ்சம் பெரிதாக இருப்பதால் கொஞ்சம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வழக்கமான விமான நிலைய புத்தகங்கள்தான். “யூ கேன் வின்” ஷிவ் கெரா, “அக்கினிச் சிறகுகள்” அப்துல் கலாம், ப்ளாஸ்டிக் தாளில் பொதிந்த காமசூத்ரா, மில்ஸ் & பூன், ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், இத்யாதிகள். ஆனால் சில புதியவைகளும் தென்பட்டன. ரிச்சர்ட் டாக்கின்ஸின் “God Delusion” ஒரு உதாரணம். கடையில் பதிவர் தருமி ஒரு பங்குதாரராக இருப்பாரோ என்று தோன்றியது. கிழக்கு பதிப்பகம் சுஜாதாவின் நூல்களை அருமையான பதிப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து “பாரதி இருந்த வீடு” என்ற நாடகத் தொகுப்பையும், கடந்த ஆண்டு பெங்குவின் வெளியிட்ட “அப்சலூட் குஷ்வந்த்” என்கிற குஷ்வந்த் சிங்கின் புத்தகத்தையும் வாங்கினேன்.

மதுரை-சென்னை விமானத்தில் வைகோவும் வந்திருந்தார். மிடுக்காக இருக்கிறார். இவர் வருங்காலத்தில் முதல்வராக வருவார் என்று மனதிற்குள் பட்ஷி சொல்கிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அநேகமாக மறுபடியும் நாயக்கர்களின் ஆட்சிதான்.

விமானம் சென்னையைச் சேர்ந்த போது இரவு 10:20. கூட்டமிருக்காது என்று நினைத்தேன். அலை மோதியது. மறுநாள் சயின்ஸ் காங்கிரஸ். பிரதமர் சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் வந்திருந்தார். மும்பை, பெங்களூரு, மதுரை மூன்று விமானங்களின் பெட்டிகளையும் ஒரே பெல்ட்டில் போட்டு விட்டார்கள். 12:15 மணிக்குப் புறப்படும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏற 11:15 மணிக்கு சர்வதேச முனையகத்தில் இருக்க வேண்டும். மதுரை விமானப் பெட்டிகள் வர 10:50 ஆகி விட்டது. சர்வதேச முனையகம் வழக்கமாகவே கூட்டத்தில் திண்டாடும். நல்ல வேளையாக, அன்று கூட்டம் குறைவு. 11:10க்கு ஆஜர் கொடுத்து தப்பித்தேன்.

2010ன் இறுதியில் விமானப் பயணங்கள் சுகப்படவில்லை. டிசம்பரில் சிங்கப்பூரிலிருந்து திருவனந்தபுரம் வந்த விமானம் இறங்கப் போவதற்கு முன் நடுவானில் காற்றில் தள்ளாடியது. விமானத்தின் எச்சரிக்கை அறிவிப்பு தானாகவே தொடங்கி “விமானம் இப்போது தரையில் விழும் அபாயம் இருக்கிறது. உங்கள் இருக்கைக்கு கீழ் மிதவை இருக்கிறது. அதை எடுத்து அணிந்து கொள்ளுங்கள்” என்றெல்லாம் பினாத்த ஆரம்பித்து விட்டது. பயணிகளெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். “இந்த அறிவிப்பை இதற்கு முன் எப்போதாவது கேட்டிருக்கிறாயா?” என்கிறார் சக பயணி. “இல்லை” என்கிறேன் நான். பைலட்டோ, விமானப் பணியாளர்களோ ஏதாவது அறிவிப்பு கொடுப்பார்களா என்றால், அதுவும் இல்லை. இதற்கிடையில் கீழே விமான நிலையத்தின் விளக்குகள் தெரியமளவுக்கு பறந்து வந்து விட்டதால் போன உயிர் திரும்ப வந்தது.

சில நாட்களுக்குப் பின் சென்னை மார்க்கமாக பாங்காக் வழியாக சீனாவின் குவாங்சூ. சென்னையிலிருந்து புறப்பட்ட தாய் ஏர்வேஸ் விமானம் முக்கால் மணி நேரம் பறந்து விட்டு, வானத்திலே ஒரு வட்டமடித்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டது. தரையில் இறங்கி அரை மணி நேரம் ஆகியும் காரணம் சொல்லப்படவில்லை. பயணிகள் கத்த ஆரம்பித்த பிறகுதான் தகவல் சொன்னார்கள். விமானத்தில் சரக்குகள் வைக்குமிடத்திலிருந்து ஏதோ எச்சரிக்கை சமிக்ஞைகள் வந்தனவாம். அதைச் சரி பார்க்க விமானத்தை தரையில் இறக்கி இருக்கிறார்களாம். ஒரு வழியாக விமானம் மூன்று மணி நேரத் தாமத்திற்குப் பிறகு பாங்காக் சென்றது. அதிர்ஷ்டவசமாக எங்களது குவாங்சூ விமானத்தைக் கடைசி நிமிடத்தில் பிடித்து விட்டோம்.

2010ன் கடைசிப் பயணமாக சென்னை-தூத்துக்குடி கிங் ஃபிஷர். காலை 11:15 புறப்பாடு. 10:15க்கு சென்னை விமான நிலையம் முன் காரில் வந்து இறங்குகிறோம். விமான நிலைய விரிவாக்கத்தாலும், தொடர் மழையாலும் ரயில் நிலையத்தைவிடக் கேவலமாகி இருக்கும் சென்னை விமான நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். ஹஜ் சென்று திரும்பி வரும் பயணிகளை வரவேற்க வந்த கூட்டமும், ஹஜ் பயணிகளின் வருகையும். ஒரு வழியாக ஜனப் பெருந்திரளுக்கு எதிர் நீச்சல் போட்டு முனையகத்திற்குள் நுழையும் போது 10:25. பெட்டிகளை எக்ஸ்ரே செய்து வரிசையில் நிற்கும் போது 10:31. என்னுடைய முறை வரும் போது 10:36. செக்-இன் செய்யும் நேரம் முடிந்து விட்டது என்றார் பணிப்பெண். 10:35ற்கு மூடிவிடுவார்களாம். நான் என்ன சொல்ல முயன்றாலும் நிர்த்தாட்சண்யமாக முடியாது, முடியாது என்றபடியே இருந்தார். இதற்குள் பக்கத்துக் கொண்டரில் இருக்கும் நபர் “அந்த விமானம் இன்னும் திறந்துதான் இருக்கிறது. உடனடியாக செக்-இன் செய்தால் பிரச்சினை இல்லை” என்று கூற இந்தப் பெண்ணோ எந்த உதவியும் செய்யும் மனப்பாங்கில் இல்லை. திரும்ப, திரும்ப, “நீ தாமதம்” என்று பல்லவியையே பாடிக் கொண்டிருந்தார். அதற்குள் பக்கத்துக் கவுண்டர்காரர் எழுந்து வந்து என்னுடைய தகவல்களை உபயோகித்து செக்-இன் தொடங்கி விட்டார். அதன் பின்னும் பல்லவியை இந்தப் பெண் நிறுத்தவில்லை. “கொஞ்சம் வாயைப் பொத்துகிறீர்களா? நாங்கள் வாடிக்கையாளர்கள். அதற்கேற்றபடி நடத்துங்கள்” என்று என் மனைவி கடுமையாகக் கேட்ட பிறகுதான் பெண்மணி வாயை மூடினார். விஜய் மல்லையா கிங் ஃபிஷர் ஏர்லைன்சின் பணிப்பெண்கள் ஒவ்வொருவரையும் நேரடியாகத் தெரிவு செய்கிறாராம். உருவ அழகோடு வாடிக்கையாளர் சேவை செய்யத் தகுதியானவர்களா என்று பார்த்து அவர் தெரிவு செய்வது நலம்.

2 comments:

Anonymous said...

உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. தொடரட்டும்! ஞாயிறு என்றால் அப்போதுதான் புதிய இதுகைகள் வருமா?

தருமி said...

//கடையில் பதிவர் தருமி ஒரு பங்குதாரராக இருப்பாரோ என்று தோன்றியது.//

என் கண்ணில் இது படவில்லை. ஆனால் உங்கள் நண்பர்கள் வைத்தி (வைத்தீஸ்வரன்), ரவி (அழகு ரவி) பார்த்து சொன்னார்கள். (உங்கள் நண்பர்கள் எனக்கு நண்பர்களாக இருக்க முடியாதா என்ன??!!)

அங்க பங்கு போட்டிருந்தா இன்னும் நிறைய இறைச்சிருக்க மாட்டோமா!!