Sunday, January 2, 2011

புத்தாண்டு தீர்மானமும் புத்தகங்களும்



2011ன் புத்தாண்டு தீர்மானம்: இனி ஒழுங்காக ப்ளாக் எழுதுவேன்.

ஹா ஹா ஹா

கடந்த ஆண்டின் இறுதியில் சிந்தித்துப் பார்த்த போது வாழ்க்கையில் ஒரு உறுதிமொழியை நான் ஒரு வழியாக நிறைவேற்றி விட்டதாக உணர்ந்தேன். ஏற்கனவே வாங்கிய புத்தகங்களைப் படிக்காமல் புது புத்தகங்களை வாங்கவில்லை என்பது அது. 2010லும், அதற்கு முன்னும் நான் வாங்கிய தமிழ் நூல்களைப் பெரும்பாலும் படித்து முடித்து விட்டேன். எனவே புதிய புத்தகங்கள் வாங்க திருநெல்வேலியில் இருக்கும் ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்றேன். இந்த புத்தகக் கடை திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) அருகில் இருக்கிறது. பிரதான சாலை மேலேயே இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் மிட்டாய்க் கடைகள், ஃபேன்சி ஸ்டோர்களின் வெளிச்சத்திற்கு நடுவில் வெட்கப்பட்டு, சற்று ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு தடவை தாண்டிப் போய் மறுபடி வந்து கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. ஓரளவிற்கு புத்தகங்கள் விதத்திலும், எண்ணிக்கையிலும் உள்ளன. என்ன காரணத்தினாலோ பதிப்பகம் வாரியாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். வாங்கியவை:

எஸ். ராமகிருஷ்ணனின் “பதினெட்டாம் நூற்றாண்டின் மழை” என்ற சிறுகதைத் தொகுப்பு

நாஞ்சில் நாடனின் “காவலன் காவான் ஆகின்” என்ற கட்டுரைத் தொகுப்பு

எஸ்.வி. ராஜதுரையின் “பார்வையிழத்தலும், பார்த்தலும்” என்ற கட்டுரைத் தொகுப்பு

ஜெயமோகனின் “ஊமைச் செந்நாய்” என்ற சிறுகதைத் தொகுப்பு

சாரு நிவேதிதாவின் “மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் “காமரூபக் கதைகள்” என்ற புதினம்

எம்.ஜி. சுரேஷின் “பின்நவீனத்துவம் என்றால் என்ன?” என்ற படைப்பு

இந்த புத்தகங்களை வாசித்த பின்னர், இவை எப்படியிருந்தன என்று பதிவு போடுவதாக ஒரு புத்தாண்டு தீர்மானம் மனதிற்குள் உருவாகிறது. ஹா..ஹா..ஹா...


கொசுறு:

புத்தாண்டில் வாசித்த ஒரு உருப்படியான பதிவு (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

1 comment:

Anton Prakash said...

எந்த புதுவருட உறுதிமொழிகளும் எடுக்கப் போவதில்லை என்பதுதான் எனது உறுதிமொழி. பார்க்கலாம்.