Sunday, November 27, 2011

வேர்க்கடலையும் பாலும்


டாக்டர் காலின் கேம்பல் என்பவர் எழுதியுள்ள ஒரு புத்தகம் 5 இலட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றுள்ளது. இது ஊட்டச்சத்து (nutrition) துறையில் ஒரு சாதனை என்கிறார்கள்.

அமெரிக்காவில் அதிக அளவில் பால் உற்பத்தியாகும் விஸ்கான்சின் மாநிலத்தில் மாட்டுப் பண்ணை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் கேம்பல். கால்நடை மருத்துவப் படிப்பில் ஆர்வம் கொள்கிறார். ஆனால் அந்த ஆர்வம் ஊட்டச் சத்துத் துறைக்கு மாறுகிறது. கோர்னல் பல்கலைக்கழகத்தில் ஊட்டச் சத்துத் துறையில் முனைவர் பட்டம் பெறுகிறார்.

முனைவர் பட்டம் முடித்த பின்னர் அவருக்கு ஒரு பணி வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊட்டச்சத்து ஆய்வு தொடர்பானது அது. அந்த நாட்டில் புரதச் சத்து உண்ணுவதை அதிகரிக்கும் நோக்கத்தில் வேர்க்கடலை உண்ணுவது ஊக்குவிக்கப்படுகிறது. வேர்க்கடலை உண்ணுவது அதிகரிக்கிறது. கூடவே, கல்லீரல் புற்றுநோயும் அதிகரிக்கிறது. இரண்டிற்கும் தொடர்பிருக்க வாய்ப்புகள் உண்டு. வேர்க்கடலையைப் பாதிக்கும் ஒரு பூஞ்சைக் காளான் உற்பத்தி செய்யும் அஃப்லோடாக்சின் எனும் வகை நச்சு, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. எனவே, இது தொடர்ப்பாக ஆய்வு செய்ய டாக்டர் கேம்பல் அழைக்கப்படுகிறார்.

டாக்டர் கேம்பல் பிலிப்பைன்ஸில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களைப் பார்க்கிறார். அவருக்கு ஒன்று புலனாகிறது. கல்லீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைக் குடும்பத்துக் குழந்தைகளை விட, வசதியான குடும்பத்துக் குழந்தைகளே.

இதைப் பற்றி சிந்திக்கும் போது, அவருக்கு தான் ஏற்கனவே வாசித்த ஒரு ஆய்வுக் கட்டுரை நினைவுக்கு வருகிறது. அந்த ஆய்வு இந்தியாவில், பஞ்சாபில் நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் எலிகளுக்கு பூஞ்சைக் காளான் நச்சை உணவில் சேர்த்துக் கொடுக்கிறார்கள். பிறகு எலிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஒரு குழுவிற்கு குறைந்த புரதச் சத்துள்ள உணவு. மற்றொன்றிற்கு அதிக புரதச் சத்துள்ள உணவு. அதிகப் புரதச் சத்து உட்கொண்ட எலிகள் அத்தனையும் கல்லீரல் புற்று நோயால் செத்து விடுகின்றன. குறைந்த புரதம் உட்கொண்ட எலிகள் எவையும் சாகவே இல்லை. இந்த ஆய்வு வெளியான காலத்தில் சர்ச்சைக்குள்ளான ஒன்று. துறை வல்லுநர்கள் அனைவரும் அதிகப் புரதம் கொண்ட எலிகளே புற்றுநோயை வலுவாக எதிர்த்திருக்கும் என்று நம்பினார்கள். இந்திய ஆய்வாளர்கள் ஆய்வில் தவறிழைத்து விட்டதாக பரவலாக சொல்லப்பட்டது.

டாக்டர் கேம்பலுக்கு பிலிப்பைன்ஸ் புள்ளிவிபரம் பார்த்த பிறகு. இந்திய ஆய்வு சரியானதாகவே படுகிறது. மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார். இந்திய ஆய்வில், புரதச் சத்து எதிலிருந்து பெறப்பட்டதென்று பார்க்கிறார்.  அது கேசின் என்ற பொருளிலிருந்து பெறப்பட்டது. கேசின், வே என்பன பசுவின் பாலின் இரு பிரதான புரதங்கள். எனவே, அஃப்லோடாக்சின் நச்சு உட்கொண்ட உயிரினங்கள் கேசின் உட்கொள்ளும் போது புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறதா என்று ஆராயத் தொடங்குகிறார். அதிகரிக்கிறது என்பதையும், இன்னும் பல, தொடர்பான கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்.

இதற்கிடையில் சீனாவில் ஒரு பெரிய அளவிலான கள ஆய்வில் ஈடுபடுகிறார். சீன மக்களின் உணவுப் பழக்கங்களும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்களையும் குறித்த பல்லாண்டு காலக்கட்டத்தில், பல்லாயிரம் மக்களிடம் சர்வே எடுத்து செய்யப்பட்ட ஒரு ஆய்வு. அந்த ஆய்வின் முடிவுதான் “The China Study: The Most Comprehensive Study of Nutrition Ever Conducted And the Startling Implications for Diet, Weight Loss, And Long-term Health” என்ற ஐந்து லட்சம் பிரதிகள் விற்ற புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் முக்கியச் செய்தி: இறைச்சி, மீன், முட்டை, பால் என்று மிருகங்களிடமிருந்து பெறப்படும் எல்லா உணவு வகைகளும் மனித ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பன, எனவே, மனிதன் நலமுடன் வாழ வேண்டுமென்றால் தாவர உணவிற்கு மாற வேண்டும் என்பதே. புறக்கணிக்க முடியாத ஆதாரங்கள் கொண்ட இச் செய்தியை எளிதாகப் புறக்கணிக்க இயலாது.

Sunday, November 13, 2011

பாற்கடலில் மீன்


கடந்த வாரம் சில நாட்கள் கம்போடியாவில். அங்கோர் வாட் பார்க்கப் போனேன். முன்னர் ஒரு முறை சென்ற போது கடுமையான மழை. இம்முறை கடுமையான வெயில். பெரிய அளவில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. முகப்புக் கோபுரத்தை வலையால் மூடி வேலை பார்த்து வருகிறார்கள். சுற்று மண்டபச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற சிற்பக் காட்சிகளை பெரும்பாலும் புனரமைப்பு செய்து விட்டார்கள். உச்சிக் கோபுரத்திற்கு மேலேறும் ஒடுங்கிய, செங்குத்தான, ஆபத்து மிகுந்த கற்படிகளின் மீது ஏறுவதை தடை செய்து விட்டார்கள். பதிலுக்கு, சற்று பத்திரமான மரப்படிகளை நிர்மாணித்திருக்கிறார்கள். கைப்பிடியும் அமைத்திருக்கிறார்கள். மேலேறிப் பார்த்தால் அங்கோர் வாட்டின் சுற்றுப்புறம் முழுமையாகத் தெரிகிறது. சுகமாகக் காற்றும் வீசுகிறது.
சுற்று மண்டபச் சுவர்களில் உள்ள சிற்பச் சித்திரக் காட்சிகளை உச்சிக் கோபுரத்திலிருந்து இறங்கும் வழியில் மறுபடியும் ஒரு முறை பார்த்தேன். மொத்தம் நான்கு நீள் சுவர்களிலும் தலா ஒரு காட்சி: பாற்கடலை தேவர்களும், அரசர்களும் கடைந்து அமுதம் எடுப்பது; மகாபாரத யுத்தம்; நரகம்; மன்னன் இரண்டாம் ஜெயவர்மனின் ஆட்சிச் சிறப்பு. இவற்றில் பாற்கடல் கடையும் சித்திரக்காட்சியில் கண்ணில் பட்டது பாற்கடலில் துள்ளிக் கொண்டிருக்கும் மீன்கள். இது வரைக்கும் பாற்கடல் என்பது பால் நிரம்பிய ஒரு கடல் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் அது நீர் நிரம்பிய கடல் என்று புரிந்தது. கூகுளாம்மனிடம் விசாரித்தபோது ஸ்ரீமத் பாகவத்தில் பாற்கடலில் மீன் மட்டுமல்ல திமிங்கிலங்களும், பாம்புகளும் இருந்தன என்று சொல்லப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கோர் வாட் பாற்கடலில் மீன்களோடு, முதலைகளும், சிங்கத்தலை கொண்ட டிராகன்களும் தண்ணீரில் நெளிந்து கொண்டிருந்தன. மீன்களைக் கூர்ந்து பார்க்கும்போது மூன்று இனங்களைப் பெரும்பாலும் காண நேர்ந்தது: கெண்டை, கெளுத்தி வகைகளோடு featherback என்று அழைக்கப்படும் Notopterus மீன்களும்.
மறுநாள் தோன்லே சாப் ஏரிக்குச் சென்றிருந்தேன். தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி தோன்லே சாப். ஆசியாவின் ஜீவ நதிகளில் ஒன்றான மேக்காங்கின் கிளை நதி ஒன்றுடன் தோன்லே சாப் இணைந்திருக்கிறது. திபெத்தின் மலைகளில் உருகும் பனியும், மேக்காங் பயணிக்கும் நிலங்களில் பெய்யும் மழையும் சேர்ந்து மேக்காங் ஆறு பெருகும் போது, உபரியான நீர் கிளைநதி மூலம் தோன்லே சாப்பை நிரப்பி 2700 சதுர கி.மீ பரப்பளவுள்ள ஏரியை 16,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ளதாக மாற்றுகிறது. மேக்காங்கில் நீர் மட்டம் குறையும் போது இந்த உபரிச் சேமிப்பு மறுபடியும் நதிக்கே சென்று விடுகிறது. அங்கோர் வாட்டின் சிற்பிகளுக்கு தோன்லே சாப்பும் அதிலுள்ள உயிரினங்களுமே பாற்கடலாகவும், அதிலுள்ள மீன்களும், முதலைகளுமாகத் தோன்றியிருக்கலாம். தோன்லே சாப் படகுப் பயணத்தை முடிக்கும் தருவாயில், கெளுத்தி மீன்களைப் பிடித்து உயிருடன் சந்தைக்குக் கொண்டு வந்து கொண்டிருந்த படகொன்றைப் புகைப்படமெடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. பரந்த நீர்ப்பரப்பில், குளிர்ந்த காற்றில், மாலை மங்கும் அந்த அமைதியான தருணம் மறக்க முடியாதது.  

      

Sunday, October 9, 2011

எஸ். ராமகிருஷ்ணனின் அருமையான ஒரு பத்தி

உயிர்மை இதழில் எஸ். ராமகிருஷ்ணன் திரைப்படங்களைப் பற்றி ஒரு பத்தி எழுதத் தொடங்கியிருக்கிறார். சமீபத்திய இதழில் நான் படித்த கட்டுரை நன்றாக இருந்தது. பாலச்சந்தர் திரைப்படப் பாடல்கள் பற்றியும், சாவித்திரி இயக்கிய தமிழ்த் திரைப்படம் தோல்வியடைந்தது குறித்ததுமான அலசல்கள்தான் இந்தத் தவணை. பின்னதில் இதுவரை கேள்விப்பட்டிராத விபரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

---

பாரதியார் முக்கியமான ஒரு கவிஞர்; ஆனால் அவரை மகாகவி என்று அழைக்க முடியாது என்று ஜெயமோகன் அவரது தளத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். சிந்தனைக்குரிய விவாதம். பாரதியின் கவிதைகளைக் கேட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பாரதி பாடல்கள் தொகுப்பினைக் கேட்டேன். “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” பாடலில் “வானையளப் போம் கடல்மீனை யளப்போம்” என்ற போது இந்த மனிதர் மகாகவியோ இல்லையோ, தன் காலத்திற்கு முப்பது, நாற்பது ஆண்டுகள் தாண்டிச் சிந்தித்த ஒரு அற்புதமான மனிதன் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது.

---

தி சிம்ப்சன்ஸ்” இருபத்தி இரண்டாவது சீசன் டிவிடி கிடைத்தது. கிட்டத்தட்ட அத்தனை எபிசோடுகளையும் பார்த்து விட்டேன். 1989 முதல் இன்று வரை தொடர்ந்து தொலைக்காட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த நகைச்சுவைக் கார்ட்டூன் தொடர் இன்னும் இரண்டாண்டுகள் வரைக்கும் செல்லலாம் என்கிறார்கள். கார்ட்டூன் பாத்திரங்களுக்காக பின்னணி பேசுபவர்கள் ஒரு 20 நிமிட எபிசோடுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய்களுக்கு சமமான டாலர்கள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதை இப்போது ஒன்றரை கோடி ரூபாய்களாக குறைத்து விட்டார்களாம். பார்வையாளர்கள் குறைந்து வருவதால் வருமானம் போதவில்லையாம்.

ஹாலிவுட் திரைப்படங்களைப் பற்றியும், மற்ற அயல் நாட்டு திரைப்படங்களைப் பற்றியும் தமிழ் ஊடகங்களில் (இணையம் உட்பட) எழுதப்படுகின்றது. ஆனால் அயல்நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி அதிகமாக எழுதப்படுவதுபோல் தெரியவில்லை. அமெரிக்காவில் திரைப்படங்களுக்கு நிகரான ஒரு கலை வணிக முயற்சியாக தொலைக்காட்சித் தொடர்கள் இருக்கின்றன. பல தொடர்கள் திரைப்படங்களை விட வெற்றியை அடைகின்றன. இத் தொடர்கள் இப்போது நம் நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்படுவதால் இவற்றைப் பற்றி யாராவது எழுதினால் நன்றாக இருக்கும்.

Sunday, October 2, 2011

யாருடையது அரசு?

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டும் போது பிரதமர் ஒன்று சொன்னார்: பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் ஆபத்திற்குள்ளாகியிருக்கிறதென்று. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே சட்டம் இயற்றும் உரிமை இருக்கிறது. அண்ணா ஹசாரே போன்றவர்கள் நேரடிப் போராட்டம் மூலம் அந்த உரிமையைஒ கைப்பற்றுவது ஆபத்தில் முடியும் என்பதே அவரது கருத்தின் விளக்கம். அவருடைய கருத்தோடு உடன்படுவதும், முரண்படுவதும் இப் பதிவிற்கு அப்பாற்பட்டது. நமது மக்களாட்சி முறை உண்மையிலேயே பிரதிநிதித்துவ முறைதானா என்று கேட்பது இப் பதிவின் நோக்கங்களில் ஒன்று.

அரசியல் சாசனத்தின்படி நமது மக்களாட்சி முறை பிரதிநிதித்துவ முறையே. அதாவது, தொகுதிவாரியாக தேர்ந்தேடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் பிரதமரையும், முதல்வரையும் நியமிக்கின்றனர் (உள்ளாட்சி அரசுகளின் தலைவர்கள் மட்டும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் முறை ஏன் ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை). ஆனால், இந்த பிரதிநிதித்துவ சமாச்சாரம் ஒரு சம்பிரதாயமாகத்தான் இருக்கிறது. உண்மையில் நடப்பது என்னவென்றால் மக்கள் பெரும்பாலும் ஆட்சியை இன்ன கட்சியோ, அல்லது நபரோ நடத்த வேண்டுமென்று முன்கூட்டியே தீர்மானித்து விடுகிறார்கள். அதன் அடிப்படையில்தான் தொகுதிக்கான பிரதிநிதிக்கு வாக்குகள் விழுகின்றன.

நேருவின் காலத்தில் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளாராக ஒரு கழுதை நிறுத்தப்பட்டால் கூட வெற்றி பெற்று விடும் என்று சொல்லப்பட்டது; காமராஜ் பி. சீனிவாசனிடம் தோற்றது; இரா. செழியன் வைஜயந்தி மாலாவிடம் தோற்றது; இவையத்தனையும் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையை நாம் உல்டாவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதன் சாட்சியங்கள். இது நாம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதுதான். அடிப்படையில் நாம் என்ன செய்கிறோம் என்றால் நமது பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒரு கட்சியின் தலைமையிடம் விட்டுக் கொடுத்து விடுகிறோம். ஒருவர் நமக்கு நல்ல பிரதிநிதியாக இருப்பார் என்ற அடிப்படையிலா ஒரு கட்சியின் தலைமை வேட்பாளர்களை நிறுத்தும்? யார் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள், யாரால் தேர்தலில் போட்டியிடத் தேவையான பணம், ஆள்பலம் ஆகியவற்றை அளிக்க முடியும் என்று பார்த்துதானே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனால்தான் முரட்டு பக்தர்களும், முட்டாள் செல்வந்தர்களும் நமது பிரதிநிதிகளாக்கப்பட்டு வருகின்றார்கள். பாராளுமன்றம் ஒன்று கூச்சலும், குழப்பமுமாக இருக்கிறது, அல்லது தூங்கி வழிகிறது. சட்டமன்றத்தில் ஒரு பக்கம் ஜால்ரா சத்தம், இன்னொரு பக்கம் ஏதாவதொரு சாக்குப் போக்கு சொல்லி வெளிநடப்புகள்.

என்று நாம் நமது பிரதிநிதிகளை அவர்கள் தகுதியின் அடிப்படையில் மட்டும் தெரிவு செய்கிறோமோ, அன்றுதான் நமது ஆட்சி உண்மையாகவே தொடங்கும்.

--

லீ குவான் யூவிற்கு இன்னமும் சிங்கப்பூரில் ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிகள் இருப்பதில் நம்பிக்கையில்லை. சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலிலும் ஆளுங்கட்சி எதிர்பார்த்ததிற்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளது. மாற்றுக் கட்சிகள் எவையும் ஆளுங்கட்சிக்கு சவால் விடவே முடியாது என்ற நம்பிக்கை இப்போது தகர்ந்து வருகிறது. லீ குவான் யூவின் கருத்து என்னவென்றால், ஆட்சியை நடத்த வெகு திறமைசாலிகள் தேவைப்படுகின்றார்கள். சிங்கப்பூரில் உள்ள ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகையில் அப்படிப்பட்ட வெகு திறமைசாலிகள் ஒரேயொரு கட்சியில் இருக்குமளவு எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். லீ குவான் யூவின் இந்தக் கருத்தோடு உடன்படலாம், முரண்படலாம், ஆனால், அவரது சிந்தனை நிச்சயம் பாராட்டிற்குரியதே. நமது மாநிலக் கட்சிகள் எவற்றிலும் திறமையாக மாநில நிர்வாகத்தை நடத்தும் நபர்கள் இருபது பேராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.

--

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் முதல்வர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தை வாசித்தேன். வெற்று அரசியல்தான் அதில் பெரிதாகத் தெரிகிறது. “எனது அரசு” என்று மறுபடியும், மறுபடியும் அதில் சொல்கிறார் முதல்வர். சட்டமன்றத்திலும், விழாக்களிலும், பேட்டிகளிலும் கூட “எனது அரசு” என்றுதான் சொல்கிறார் அவர். ஒரு மக்களாட்சியில் அரசு மக்களுடையதென்றும், அதன் நிர்வாகம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதென்றும் நான் நினைக்கிறேன். எனவே, “மக்களுடைய அரசு”, “என் நிர்வாகம்” என்று ஒரு முதல்வர் குறிப்பிடுவதே சரியாகவும் இருக்கும், மக்கள் அபிமானத்தையும் பெறும்.

Sunday, July 31, 2011

காவல் நிலையத்தில் கால் மேல கால்: திருநெல்வேலி பெருமாள்புரம் நிலையத்தில் ஒரு அனுபவம்

திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஒரு நிர்பந்தம்.

பாஸ்போர்ட்டில் பக்கங்கள் தீர்ந்து போனதால் புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருந்தேன். ப்ரூனே இந்தியத் தூதரகம் முகவரி கேட்டது. ப்ரூனே முகவரியைக் கொடுத்தேன். அதை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். இந்தியாவிலும் நிரந்தர முகவரி வேண்டுமாம். எனவே, அதைக் கொடுத்தேன். கொடுத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு என்னுடைய பெற்றோர் அழைத்தார்கள். “இங்கே முகவரி சரியானதா என்று விசாரிக்க போலீசார் வந்திருக்கிறார்கள். நீ வீட்டில் இல்லையென்பதால் காவல் நிலையத்திற்கு வரச் சொல்கிறார்கள். கூடவே உன் பெயர் முழுமையாக எழுதப்படவில்லை. புகைப்படமும் நகலில் தெளிவாக இல்லை.” சந்தர்ப்பவசமாக நானும் ஒரு வாரத்தில் இந்தியா வருவதால் நானே வந்து பிரச்சினையை சரி செய்கிறேன் என்றேன். இந்தியத் தூதரகத்தைக் கூப்பிட்டு டெல்லியிலிருந்து திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்ட நகலில் உள்ள பிரச்சினைகளை எடுத்துச் சொன்னேன். நாங்கள் சரி செய்து விடுகிறோம் என்றார்கள்.

திருநெல்வேலி வந்த மறுநாள் பெருமாள்புரம் காவல் நிலையம் சென்றேன். சம்பந்தப்பட்ட எழுத்தரிடம் பேசினேன். அவர் என்னுடைய தற்போதைய பாஸ்போர்ட், ரேஷன் கார்டு முதலானவற்றை பரிசோதித்து விட்டு, அவற்றின் நகலையும், புகைப்படம் ஒன்றையும் கொடுத்தால் அவற்றை டெல்லிக்கு அனுப்பி விடுவதாக சொன்னார். விஷயம் முடிந்ததென்று வீட்டிற்கு வந்து விட்டேன். பத்து நாட்கள் கழித்து ப்ரூனே தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. உங்கள் பாஸ்போர்ட் வந்து விட்டது. பெற்றுக் கொள்ளுங்கள் என்று. நான் இந்தியாவில் இருக்கும் தகவலைச் சொல்லி, ப்ரூனே வரும் போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

கடந்த வாரம் சென்னை சென்றிருந்தேன். திருநெல்வேலியிலிருந்து தொலைபேசி. மீண்டும் முகவரியை சரிபார்க்க வேண்டுமென்கிறார்கள். எனக்குப் புரிந்தது. நான் ப்ரூனே தூதகரத்தில் தெரிவித்திருந்தேனில்லையா: டெல்லியிலிருந்து தெளிவில்லாத நகலை திருநெல்வேலிக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார்கள் என்று. அதை சரி செய்ய மற்றொரு நகலை அனுப்பியிருப்பார்கள். அதன் பேரில் மறுபடியும் ஒரு முறை முகவரியை சரி செய்கிறார்கள்.
நேற்று (30.7.11) சென்னையிலிருந்து வந்ததும் மறுபடியும் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்குப் போனேன். இந்த முறை அவர்கள் கேட்கப் போகும் எல்லா ஆவணங்களையும் தயாராக எடுத்துக் கொண்டு போனேன். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் யாரும் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்கள். 10 நிமிடத்தில் வந்து விடுவார்கள். இங்கே உட்காருங்கள் என்று ஒரு நாற்காலி கொடுத்தார்கள். அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் ஒரு ஜீப் வந்தது. வெளியே சில அதட்டல்கள் கேட்டன. வாயிலில் நின்றிருந்த காவலாளி விரைப்பானார். இரண்டு மூன்று காக்கிச் சட்டை போலிஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள். வாயில் காவலாளி துப்பாக்கியை உயர்த்தி இப்படியும், அப்படியுமாக சுழற்றி ஒரு விதமான வித்தை செய்தார். போலிஸ்காரர்கள் உள்ளே போய் விட்டார்கள். ஒருவர் என்னிடம் ஒரு ரெஜிஸ்தரைத் தூக்கிக் கொண்டு வந்து “பேர் என்ன?” என்றார். சொன்னேன். பாஸ்போர்ட் விபரங்கள் சரிபார்க்கும் அறைக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போய் புகைப்படத்தை வாங்கி உரிய இடத்தில் ஒட்டினார். அந்த நேரத்தில் என்னை முதலில் சந்தித்த ஏட்டு, “என்ன பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட எழுத்தர் வந்து விட்டாரா?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் எட்டிப் பார்த்தவர் “இன்ஸ்பெக்டர்லா” என்று சொல்லிக் கொண்டே பின் வாங்கினார்.

“ஓ, இந்த இன்ஸ்பெக்டர் வந்ததால்தான் இத்தனை தடபுடலா?” என்று நினைத்துக் கொண்டிருந்த போது என்னுடைய புகைப்படத்தை ரெஜிஸ்தரில் ஒட்டிய காவலாளி “இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க” என்று சொல்ல இன்ஸ்பெக்டர் “ஒங்க பேர் என்ன?” என்றார் அதட்டலாக. சொன்னேன். காவலாளியிடம் “நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். ரைட்டர் வந்ததும் பாத்துக்குவார்” என்றார்.

நான் திரும்பி வரவேற்புப் பகுதிக்கு வந்து அமர்ந்து கொண்டேன். ஒரு சாதாரண சம்பிரதாயத்தைத் தாமதமாக்கும் இன்ஸ்பெக்டர் சவடால், ஏற்கனவே காத்திருந்த அலுப்பு இரண்டும் எரிச்சலை உருவாக்கின. காத்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் வரவேற்புப் பகுதிக்கு வந்தார். என்னைப் பார்த்து கோபமாக “நீங்க என்ன வேலை பாத்துக்கிட்டு இருக்கீங்க? எதுக்காக இங்க நாற்காலில உக்காந்திருக்கீங்க?” என்றார்.

எனக்கு கோபம் வந்து விட்டது. “இது பொது மக்கள் உட்காரும் இடம். நானென்ன தரையிலா உட்கார வேண்டும்?” என்றேன்.

“இங்க கால் மேல கால் போட்டு ஒக்காரக் கூடாது”

“அப்டின்னு எந்த ரூல் புக்ல போட்டிருக்கு. காண்பிங்க. நான் அதுல சொல்ற மாதிரி ஒக்கார்றேன்”

இன்ஸ்பெக்டர் கோபத்தின் உச்சிக்குப் போய் விட்டார்.

“நீ யாரு?” என்று ஒருமையில் கத்தியபடி முன்னேறி வந்தார். இதற்குள் இரண்டு மூன்று காவலர்கள் வந்து இரண்டு பேருக்கும் நடுவில் நின்று கொண்டார்கள்.

“நீ கால் மேல கால் போட்டு உக்காந்திருக்கறது ரெஸ்பெக்ட் கிடையாது. இங்கிருந்து வெளியே போ” என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

“இங்கிருந்து வெளியே போகச் சொல்ல உங்களால் சொல்ல முடியாது” என்று நான் ஆரம்பிக்க சுற்றியிருந்த காவலர்கள் “சார் வெளிய போயிடுங்க சார்” என்று என்னிடம் சொல்ல ஆரம்பிக்க, “நான் போறேன். ஆனால் இத இப்படியே நான் விடுடறதா இல்லை” என்றபடி இன்ஸ்பெக்டர் பெயர்ப் பலகையை பார்த்தேன். “ஆர். பொன்னரசு” என்று போட்டிருந்தது. “பொன்னரசுதானே உங்க பெயர்” என்றேன். “ஆமா, உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிக்க” என்றார் அவர்.

இப்ப என்ன பண்ண முடியுங்கறத பத்தி யோசிச்சுட்டிருக்கிறேன்.

இந்த இன்ஸ்பெக்டர் சொல்வது போல கை கட்டி வாய் பொத்தி அந்தக் காவல் நிலையத்தில் நிற்க வேண்டிய எந்த வித நிர்பந்தமும் எனக்குக் கிடையாது.

நான் என்ன கொலை செய்தேனா, கொள்ளை அடித்தேனா, அல்லது ஒரு சிறிய தவறையாவது செய்தேனா? கிடையாது. சுமார் ரூ 4000 இந்திய அரசிற்கு கட்டணமாகக் கட்டி எனது உரிமையான ஒரு பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருக்கிறேன். அதன் ஒரு பகுதிதான் இந்த முகவரி சரி பார்ப்பது. அதற்காகத்தான் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அங்கே பொது மக்கள் உட்காரும் பகுதி என்று ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் அமர்ந்திருக்கிறேன். இந்த இன்ஸ்பெக்டரின் அறைக்குள் போயோ வேறெந்த பகுதியிலோ அமரவில்லை. எனக்கு கால் மேல் கால் போட்டு அமருவது வசதியாக இருக்கிறது. அரை மணி நேரமோ கூடுதலாகவோ அமரும் போது அப்படித்தான் அமர முடியும்.

வெளி நாட்டில் இருந்தாலும், இந்தியாவில் நான் செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டுகிறேன். அது வருமான வரியாக இருந்தாலும் சரி, விற்பனை மற்றும் சேவை வரிகளாக இருந்தாலும் சரி. நானும், அந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சகல சக இந்தியர்களும் செலுத்தும் வரி வருமானத்தில்தான் நமது அரசு நடக்கிறது. காவல் துறைக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. காவல் துறையினருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. சட்டத்தை மதித்து நடக்கும் எவருக்கும் காவல் துறை பணியாளே தவிர எஜமானன் அல்ல. சட்டத்தை மீறுபவர்கள் கூட காவல்துறைக்கு அடிமைகளாவதில்லை. அவர்களைக் கூட மனிதாபிமானத்துடன்தான் நடத்த வேண்டும் என்பதே விதிமுறை.

இருப்பினும் காவல் துறையில் இருப்பவர்கள் பலர் தங்களை மக்களின் எஜமானன்களாக நினைத்துக் கொள்கிறாரார்களென்றால், மமதையாக நடந்து கொள்கிறார்களென்றால், அதற்குக் காரணம் சாமான்யர்களாகிய நாம் அவர்களை அப்படி நடத்த விடுவதே. இவர்களது நினைப்பிற்கெதிராக எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்படுமென்றால் இவர்கள் வழிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்.

இன்று மாலை என்னோடு கல்லூரியில் படித்து, தமிழகக் காவல் துறையில் உயரிய பதவிகள் ஒன்றில் இருப்பவரோடும், ஊடகத் துறையிலும், நீதித் துறையிலும் முன்னணியில் விளங்கும் ஒரு நண்பவரோடும் இது குறித்து ஆலோசிக்க உள்ளேன். அதன் பின் செய்யவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒரு தபால் போடுவேன்.

Sunday, May 8, 2011

சவுக்கு இணையதளம்: ஒரு மதிப்பீடு

சவுக்கு இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். சவுக்கு தளம் தோற்றுவிக்கப்பட்டபோது அதற்கு ஆதரவாக ஒரு பதிவெழுதினேன். அது இங்கே. ஒன்பது மாதங்கள் கழித்து சவுக்கு தளத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன்?

சவுக்கு தளம் இன்னமும் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டு வருகிறது. சவுக்கு சங்கரின் துணிச்சல் ஒரு பக்கம். அவரது கருத்துக்களும், எழுத்து நடையும் இன்னொரு பக்கம். பல நேரங்களில் அவரது தகவல்களும், கணிப்புகளும் சரியாக இருப்பது மற்றொரு பக்கம். புலனாய்வுப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் எல்லாப் பத்திரிகைகளை விடவும் சவுக்கு தளம் துல்லியமாக விஷயங்களைச் சொல்கிறது என்றே கருதுகிறேன். சங்கர் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை சோ தனது ஆண்டு விழாவில் சொல்லுமளவுக்கு அவரது எழுத்துத் திறன் அமர்க்களமாக உள்ளது.

ஜாபர் சேட் என்ற ஒரு காவல் அதிகாரியைக் குறிவைத்து அதிகமாகத் தாக்குவது, சில சமயங்களில் விமர்சனங்களில் நாகரீக எல்லையை மீறுவது போன்றவை அவ்வப்போது நெருடலாக அமைகின்றன. இருந்தாலும், அவற்றையும் தாண்டி இந்த தளம் சிறப்புடன் வளர்ந்து வருகின்றது.

தமிழகத் தேர்தல் முடிந்தவுடன் சவுக்கு “புதிய ஆட்சியில் ஜெ என்னென்ன செய்ய வேண்டும்?” என்று வாசகர்கள் கருதுவதை எழுதியனுப்பச் சொல்லியிருந்தார். ஜெ பற்றி சமீபத்தில் வைகோ என்ன சொன்னாரோ (அவர் மாறவுமில்லை, மாறப் போவதுமில்லை), அதுதான் எனது அனுமானமும். எனவே, சவுக்கிடம் கேட்டுக் கொள்ளப் போவது ஒன்றுதான்: திமுகவிற்கு மாற்று அதிமுக; அதிமுகவிற்கு மாற்று திமுக என்ற பூஜ்யக் கூட்டல் கழித்தல் விளையாட்டிலிருந்து (zero sum game) தமிழகத்திலிருந்து அடுத்த தேர்தலிலாவது விடுவிக்க உங்களாலானதைச் செய்யுங்கள்.

சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்


இப்போது மாதம் ஒரு முறை சிங்கப்பூர் செல்வதால் அங்கு நடந்து முடிந்த தேர்தலில் ஒரு சிறிய ஆர்வம் தோன்றியது. கூடவே, லீ குவான் யூவின் From Third World To First படித்து வருவதும் ஒரு காரணம்.

எல்லோரும் எதிர்பார்த்தபடியே ஆளும் கட்சியான PAP பேரளவில் வெற்றி பெற்றுள்ளது; ஆனால் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்து விட்டது; அல்ஜூனிட் என்ற ஒரு தொகுதியில் பாட்டாளிகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தொகுதியில் பாட்டாளிகள் கட்சி தலைவரிடம் கடந்த அமைச்சரவையின் வெளிநாட்டு அமைச்சர் தோற்று விட்டார்.

எண்பத்தேழு வயதான லீ குவான் யூ எந்த வித எதிர்ப்புமின்றி ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். PAPகாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழக்கம் போல் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசினார். அல்ஜூனிட் வாக்காளர்கள் PAPஐ தோற்கடித்தால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். PAP எம்.பி.க்கள் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதியைத்தான் கவனிப்பார்கள் என்ற ரீதியில் மிரட்டினார். பட்டாளிகள் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக அரசியலில் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் நோக்கம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் அப்படிக் கைப்பற்றினால் அவர்களில் பிரதமர், நிதியமைச்சர், வெளிநாட்டு அமைச்சர், வர்த்தக அமைச்சர் போன்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் கிடையாது என்பதை வாக்காளர்கள் யோசிக்க வேண்டும் என்றார். நாமும் யோசிக்க வேண்டிய விஷயம்தான் அது. விடுதலை இயக்கமும், திராவிட இயக்கமும் பல இளைஞர்களை அரசியலுக்கும் பிறகு ஆட்சியதிகாரத்திற்கும் கொண்டு வந்தது. சேலத்திலிருந்த ராஜாஜி அவர்கள் ஈரோட்டிலிருந்த ஈ.வே.ரா. அவர்களைத் தேடிச் சென்று காங்கிரஸ் இயக்கத்திற்குள் கொண்டு வந்தார் என்று அறிகிறோம். மக்கள் சார்ந்த இயக்கங்கள் தேய்ந்து விட்ட நிலையில் இன்று அரசியலுக்குள் வருகை என்பது ஏற்கனவே வெளிச்சத்திலுள்ள நடிகர்களுக்கும், தலைவர்களின் வாரிசுகளுக்கும், ஆட்சியதிகாரத்திலுள்ள அதிகாரிகளுக்கும் (உதாரணம்: பிரதமர் மன்மோகன் சிங்) மட்டுமே சாத்தியமாகிறது. இதனால்தான் நமது ஆட்சியமைப்பு சீர்குலைந்து கொண்டே வருகிறது. மீண்டும் மக்கள் சார்ந்த இயக்கங்கள் தலை தூக்கினால்தான் இந்த நிலைமை மாறும்.

லீ குவான் யூவின் From Third World To First பற்றி…

சிங்கப்பூரை எப்படி முதல்தர நாடாக மாற்றினார் என்பதை லீ குவான் யூ தன்னுடைய மனம் திறந்த, நேரடி பாணியில் எழுதுவதுதான் இந்த நூல். சுமார் 700 பக்கங்கள் கொண்ட தண்டியான புத்தகம்தான். ஆனால் சுலபமாக வாசிக்கலாம். எளிமையான ஆங்கிலம், நேரடியான நடை, சுவையான சம்பவங்கள், ஒளிவு மறைவில்லாத விமர்சனங்கள். இதை வாசிக்கும் போது வெறும் சிங்கப்பூரின் வரலாற்றை மட்டுமல்ல, தென்கிழக்காசியாவின் கடந்த ஐம்பதாண்டு வரலாற்றின் சுருக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.