Sunday, January 30, 2011

கண்ணாயிரம் பெருமாள் அருளிய ‘மலை’ப் பிரசங்கம்

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும், அத்தியாயம் 2

B. எழுத்தாளனும் கண்ணாயிரம் பெருமாளும் அடுத்ததாக சந்தித்துக் கொண்டது வெஸ்ட் மின்ஸ்ட்டர் பாரில். இந்த வெஸ்ட் மின்ஸ்ட்டர் பார் என்பதாகப்பட்டது சோழா ஓட்டல் என்று சென்னையில் ஆட்டோக்காரர்களாலும், சோழா ஷெரட்டன் என்று படித்த, பணக்கார பெரிய மனிதர்களாலும் அழைக்கப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இருக்கிறது. இதன் வாசலில் கடா மீசையும், பெரிய தலைப்பாகையும் கொண்ட ஒரு காவலர் இருப்பார். அவர் கதவைத் திறந்து விடும் பட்சத்தில், உள்ளே நுழைந்து பீச்சாங்கைப் பக்கம் திரும்பினால் இந்த பார் வரும். அங்கே மிகுந்த பிரயாசையுடன் பேசப்படும் ஆங்கிலத்தில் ஒரு குப்புசாமியோ, அந்தோணியோ உங்கள் தாகத்தை எப்படிப் பூர்த்தி செய்கிறதென்று கேட்பார்கள்.

B. எழுத்தாளன் வருவதற்கு முன்பே க. பெருமாள் அங்கு வந்து அப்சலூட் வோத்காவை ஆரஞ்சுப் பழச் சாற்றுடன் கலந்து அருந்திக் கொண்டிருந்தான். அந்தப் பானத்திற்கு ஸ்க்ரூ ட்ரைவர் என்று பெயர். வோத்கா என்ற பானத்தின் சிறப்பு என்னவென்றால் அது சுத்தமான சாராயம். அதற்கென்று ஒரு மணமோ, குணமோ கிடையாது. எனவே, அதை வித, விதமான பழச்சாறுகளுடன் கலந்து அருந்தலாம். அந்தந்த பானங்களின் மணத்தையும், சுவையையும் அது உள்வாங்கிக் கொள்ளும். ஆனால், ஆரஞ்சுப் பழச்சாறும், தக்காளிப் பழச்சாறுமே வோத்காவோடு கலப்பதற்கு மிகவும் உகந்தவை என்று வெள்ளைக்காரர்கள் கடின ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்டு பிடித்து வைத்து விட்டனர். அதிலும் தக்காளிப் பழச்சாறு கூட கொஞ்சம் மிளகு ரசமும் சேர்த்தால் இன்னமும் அருமையாக இருக்குமாம்.

B. எழுத்தாளன் மிகுந்த யோக்கியன் என்பதால் வெஸ்ட் மின்ஸ்ட்டர் பாரில் கூட அவன் வெறும் ஆரஞ்சுப்பழச்சாறு மட்டுமே அருந்துவது வழக்கம். அப்படி அருந்துவதோடு நிறுத்தி விட மாட்டான். தன்னோடு கூட இருந்த இன்னார், இன்னாரெல்லாம் என்னென்ன கெட்டக் கெட்ட பானங்களைக் குடித்து விட்டு மல்லாந்தனர் என்பதையும் தெளிவாக தனது வலைத்தளத்தில் எழுதி விடுவான். அப்படி எழுதுவது சம்பந்தப்பட்ட குடும்பங்களில் குழப்பங்களை உண்டு பண்ணுமே என்றெல்லாம் நினைக்க மாட்டான். யார் எக்கேடு கெட்டுப் போனால் அவனுக்கென்ன? நல்ல வேளையாக அவனது வலைத் தளத்தை மூன்றே மூன்று பேர்தான் படித்து வந்ததால் பல குடும்பங்கள் குழப்பங்களிலிருந்து தப்பித்தன.

எங்கோ தொடங்கி எங்கோ போய் விட்டேன். B. எழுத்தாளன் க. பெருமாளைச் சந்தித்த தருணத்திற்கு மறுபடியும் செல்லலாம். க. பெ. B. எ.வைப் பார்த்து விட்டு ஒரு மாதிரி உதட்டைப் பிதுக்கினான். B.எ.விற்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது. ஏனென்றால் B.எ. க.பெ.வைச் சந்தித்து விட்டு எழுதிய முதல் பதிவு ரொம்ப பிரமாதமாக வந்து விட்டதான ஒரு ஹோதாவில் இருந்தான் B.எ. அதைப் படித்து விட்டு க.பெ. தன்னை ரொம்ப பாராட்டுவான் என்று நினைத்திருந்தான் B.எ. புகழை விரும்பாத எழுத்தாளன் யாராவது உண்டா சொல்லுங்கள்?

“என்னப்பா B? எந்த யுகத்தில் வசிக்கிறாய் நீ?” என்று உண்மையிலேயே வருத்தத்துடன் வினவினான் பெருமாள்.

பெருமாளின் sincerity B. எழுத்தாளனுக்கு சற்று வெட்கத்தையும், கொஞ்சம் அவமானத்தையும் உண்டாக்கி விட்டது. அவமானம்: அவன் நினைத்ததற்கு எதிர்மாறாக முதல் அத்தியாயம் மோசமாக எழுதப்பட்டிருக்கிறது என்ற உணர்வு. வெட்கம்: அப்படி மோசமான எழுத்திற்கு பாராட்டை எதிர்பார்த்தது.

“என்ன அப்படிச் சொல்லீட்டிங்க?” என்று பலவீனமான குரலில் வினவினான் B. எழுத்தாளன்.

“பின்னே என்னப்பா? இப்படி ஒரு பிற்போக்கான வகையில் கதைய நீ எழுதுவேன்னு நான் நினைக்கவேயில்லை. கதைய ஒரே நேர்கோட்டில, தெளிவா கொண்டு போயிருக்க. சுத்தமா, சுவாரஸ்யமே இல்ல. நான் முதல் அத்தியாத்துல சொன்னத மறந்துட்டியா? எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம். You understand?”

மறுபடியும் ஏதோ புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது B. எழுத்தாளனுக்கு. ஆனால், மறுபடியும், மறுபடியும் தலையைத் தலையை ஆட்டி விட்டு மறுபடியும், மறுபடியும் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் தோன்றியது அவனுக்கு. எனவே கண்ணாயிரம் பெருமாளிடம் விளக்கமாகக் கேட்க வேண்டிய நிலைமைக்கு உள்ளானான் அவன்.

“சரி, கவனமாகக் கேள்” என்று சொல்லிவிட்டு க. பெருமாள் B. எழுத்தாளனுக்கு நிதானமாகச் சொன்ன விஷயங்களின் சாராம்சம்:

ஒரு நாளும் நீ எழுதும் விஷயம் முதல் வாசிப்பில் வாசகனுக்குப் புரியக் கூடாது. எத்தனை தடவை வாசித்தாலும் புரியவில்லை என்றாலும் பாதகமில்லை. முதல் வாசிப்பில் புரியக் கூடாது.

ஒரே ஒரு கதையை நேர்கோட்டில் ஒரு போதும் கொண்டு போகாதே. ராமாயணம், மகாபாரதம் கூட பல கதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள். ஆனால், அந்த இதிகாசங்கள் போல ஒரு குவிமையத்தை நோக்கிக் கொண்டு கதையை ஒரு நாளும் கொண்டு போகாதே. நீ என்ன வால்மீகி காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறாய். 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாயப்பா. 50-60 கதைகள் அங்கே, இங்கே அலங்கோலமாகத் திரியட்டும். அதையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டியது வாசகன் என்று பொறுப்பை அவன் தலையில் போட்டு விடு. ஒன்றுமில்லாத வெளியில் புத்திசாலி வாசகன் கதையைக் காண்பான் – அம்மணக்குண்டி ராசாவின் இடுப்பில் அங்கியைப் பார்த்தது போல.

எழுத்தாளன் வாசகனுக்கு இன்பத்தைக் கொடுக்கிறான். பதிலுக்கு வாசகன் என்ன மயிற்றைக் கொடுக்கிறான். பணம் கொடுக்க மாட்டேன் என்கிறான். மதிப்பு கொடுக்க மாட்டேன் என்கிறான். அடே, கனடாவிற்கோ, தென்னமரிக்காவிற்கோ கூட்டிக் கொண்டு போ. அங்கே எனது மானசீக எழுத்தாளர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்த்து விட்டு, அவர்கள் அருந்திய பானத்தை அருந்திப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்றால் அதையும் செய்ய மறுக்கிறான். எனவே அவனைக் கண்டபடி ஏசினால் மட்டும் போதாது. கதையைப் படிக்க வைத்துக் கோமாளியாக்கி, பைத்தியக்காரப் பட்டம் சூட்டி அழகு பார்த்தால்தான் எழுத்தாளனுக்கும் கொஞ்சம் இன்பம் கிடைக்கும்.

இதையெல்லாம் செய்யும் போதும் என்னுடைய தாரக மந்திரத்தை மறந்து விடாதே: எங்கே, எது, எப்படிச் சொல்லப்படுகிறது முக்கியமல்ல. எங்கேயும், எதையும், எப்படியும் சொல்லலாம். நாம் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும், அதுதான் முக்கியம்.

எனவே, வாசகனை என்னதான் சொல்லித் திட்டினாலும், அவனுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்த மறந்து விடாதே. பூமியில் பிறந்த எல்லா மனிதர்களையும் போலவே அவனும் தலைவர்களைப் பற்றிய, நடிகர்களைப் பற்றிய, தன் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை அறியத் துடித்துக் கொண்டிருப்பவன் என்பதையும் அறிவாயாக. அப்படி அறிய முடியாத பட்சத்தில் அதைப் பற்றி அவனாக ஏதாவது கற்பனை செய்து பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறான் என்பதையும் உணர்வாயாக. அந்த கற்பனைக்கு மூலப் பொருளை வழங்குவதில்தான் ஒரு தீவிர இலக்கியவாதி மும்முரமாக இயங்க வேண்டும்.

இந்த மூலப் பொருளை வழங்குவதற்கு கிசுகிசு பாணி என்ற ஒன்று போன நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டாகி விட்டது. என்னது கிசுகிசு பாணி மஞ்சள் பத்திரிகைகள் பின்பற்றுவதா? இடியட். இப்படி இன்னொரு தடவை சொன்னால் உன்னைத் திட்டி 41 பதிவுகள் போடுவேன், ஜாக்கிரதை. இலக்கியத்தரமாக கிசுகிசு எழுதுவது பற்றிக் கேள்வியும் பட்டிருக்கிறாயா, மண்டூகம்.

முதலில் பெயர்களை நேரிடையாக எழுதாமல் மறைமுகமாக எழுத வேண்டும். என்னது விகடனும், வாரமலரும் அப்படித்தான் எழுதுகிறார்களா? உன்னைப் போன்ற ஒரு அறிவுக் கொழுந்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. “ரோசாப்பூ வாசம் கொண்ட நடிகை”யென்றா உன்னை எழுதச் சொல்கிறேன்? பெயர்களையெல்லாம் புரட்டிப், புரட்டிப் போட்டு புதுமை செய்யப்பா. என்னுடைய குருகூட புதுமைப் புரட்சிக்காக செத்தவன் என்பது உனக்குத் தெரியாதா? என்னது யார் என் குருவா? மகாகவி பாரதியார் என்று ஒரு ஆள் ஞாபகமிருக்கிறதா உனக்கு? சரி மேலே கேள். பெயர்களை எப்படிப் புரட்டிப் போட்டு புதுமை செய்வது எப்படி என்று சொல்கிறேன்.

கிறிஸ்தவப் பெயர்களையெல்லாம் இஸ்லாமியப் பெயர்களாக மாற்று. இஸ்லாமியப் பெயர்களை கிறிஸ்தவப் பெயர்களாக்கு. உதாரணமாக அலெக்ஸ் என்று ஒருவனுக்குப் பெயர் இருந்தால் அதை ஹமீது என்று மாற்று. ஹெலன் என்று ஒருத்திக்குப் பெயர் இருந்தால் அதை சல்மா என்று மாற்று. இந்து மதத்திலோ ஒரு கடவுளுக்கு ஏகப்பட்ட நாமங்கள் இருக்கிறபடியால் கவலையில்லை. முருகன் என்ற பெயரை சுப்பிரமணியன் என்று மாற்று. பரந்தாமன் என்ற பெயரை கண்ணன் என்று மாற்றிக் கொள்.

கிசுகிசுவில் உலக இலக்கியம் இருக்கிறதா? என்னப்பா இப்படிக் கேட்டு விட்டாய்? மாரியோ வர்கஸ் யோசா என்று போன வருடம் நோபல் பரிசு வாங்கினாரே, தெரியுமா? அவர் தன் முதல் மனைவியைப் பற்றி கிசுகிசு பாணியிலேயே கதை எழுதிப் புகழ் பெற்றார் தெரியுமா? அவர் முன்னாள் மனைவி “அந்தப் பொடியன் வர்கஸ் சொல்லாதது” என்று நேரிடையாக ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு ஒரு பரிசும் கிடைக்கவில்லை தெரியுமா?

மாரியோ வர்கஸ் யோசா என்றவுடன்தான் ஒரு முக்கியமான காரியம் நினைவிற்கு வருகிறது. திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் என்று ஆங்கில மூடர்கள் அழைத்தது போல, இந்தியாவை இந்து என்று அழைக்கும் லத்தீன் அமெரிக்க மூடர்கள் போல, சரியான எஸ்பாஞோல் உச்சரிப்பு தெரியாத தமிழ் மூடர்களும் லத்தீன் அமெரிக்க நாடுகளை மெக்சிகோ, ஈக்குவேடார், சிலி, பராகுவே, உருகுவே, அர்ஜண்டீனா, பிரேசில் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். நீயோ அந்நாடுகளை முறையே மெஹிக்கோ, எக்குவடோர், ச்சிலெ, பரகுவாய், உருகுவாய், ஆர்ஹந்தீனா, ப்ரசில் என்று அசல் எஸ்பாஞோல் உச்சரிப்பில் அழைத்து உன் ஞானத்தை வெளிப்படுத்திக் கொள். எஸ்பாஞோல் என்றால் என்னதா? அவ்வ்வ்வ்வ்

சரி, இறுதியாக ஒன்று சொல்கிறேன். கேட்டுக் கொள். மிடில் கிளாஸ் எழுத்தாளன் வர்க்கம் என்று ஒன்று இருக்கிறது. அறம், தர்மம் அது, இதுவென்று பேசிக் கொண்டு ரயிலில் மூன்றாவது வகுப்பில் போகும் கூட்டம். அந்த மோஸ்தரெல்லாம் காலாவதியாகி விட்டது. நீ உல்லாசம், கொண்டாட்டம் என்று எழுது. செகண்ட் க்ளாஸ் ஏசி வகுப்பில் போ. கால்வி க்ளெய்ன் ஜட்டி மட்டும் அணிந்து கொள். அந்த ஜட்டி கிடைக்கவில்லையென்று டான்டெக்ஸ் ஜட்டியெல்லாம் போடாதே. ஜட்டி போடாமலே பேன்ட் போடு. ஜிப் போடும்போது மட்டும் ஜாக்கிரதையாகப் போடு.

ஒரு தருணத்தில் பெருமாள் பேசுகிறானா, அல்லது அப்சலூட் பேசுகிறதா என்ற சந்தேகம் வந்ததாலும், மற்ற இரவுத் தொழில்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் பார்களெல்லாம் இரவு பதினோரு மணிக்கு மூடப்பட வேண்டும் என்று நடைமுறையில் இருந்த சட்டத்தாலும், B. எழுத்தாளன் – க. பெருமாள் சந்திப்பு ஒரு முடிவிற்கு வந்து விட்டது.

(தொடரும்)

அடுத்த அத்தியாயம்: இலக்கியச் சேவையும் கவுரவ டாக்டர் பட்டமும்

3 comments:

Anonymous said...

ha ha.. good one.

மதுரை சரவணன் said...

ஆஹா நல்ல சந்திப்பா இருக்கே... பகிர்வுக்கு நன்றி.

Anton Prakash said...

//அவனது வலைத் தளத்தை மூன்றே மூன்று பேர்தான் படித்து வந்ததால் பல குடும்பங்கள் குழப்பங்களிலிருந்து தப்பித்தன//

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

அண்டன்... சாரி, சல்மான் (கேல்வின் க்ளெயின் ஜட்டி அணிந்தபடி எழுதிக்கொண்டது)