
சவுக்கு தளம் இன்னமும் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டு வருகிறது. சவுக்கு சங்கரின் துணிச்சல் ஒரு பக்கம். அவரது கருத்துக்களும், எழுத்து நடையும் இன்னொரு பக்கம். பல நேரங்களில் அவரது தகவல்களும், கணிப்புகளும் சரியாக இருப்பது மற்றொரு பக்கம். புலனாய்வுப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் எல்லாப் பத்திரிகைகளை விடவும் சவுக்கு தளம் துல்லியமாக விஷயங்களைச் சொல்கிறது என்றே கருதுகிறேன். சங்கர் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை சோ தனது ஆண்டு விழாவில் சொல்லுமளவுக்கு அவரது எழுத்துத் திறன் அமர்க்களமாக உள்ளது.
ஜாபர் சேட் என்ற ஒரு காவல் அதிகாரியைக் குறிவைத்து அதிகமாகத் தாக்குவது, சில சமயங்களில் விமர்சனங்களில் நாகரீக எல்லையை மீறுவது போன்றவை அவ்வப்போது நெருடலாக அமைகின்றன. இருந்தாலும், அவற்றையும் தாண்டி இந்த தளம் சிறப்புடன் வளர்ந்து வருகின்றது.
தமிழகத் தேர்தல் முடிந்தவுடன் சவுக்கு “புதிய ஆட்சியில் ஜெ என்னென்ன செய்ய வேண்டும்?” என்று வாசகர்கள் கருதுவதை எழுதியனுப்பச் சொல்லியிருந்தார். ஜெ பற்றி சமீபத்தில் வைகோ என்ன சொன்னாரோ (அவர் மாறவுமில்லை, மாறப் போவதுமில்லை), அதுதான் எனது அனுமானமும். எனவே, சவுக்கிடம் கேட்டுக் கொள்ளப் போவது ஒன்றுதான்: திமுகவிற்கு மாற்று அதிமுக; அதிமுகவிற்கு மாற்று திமுக என்ற பூஜ்யக் கூட்டல் கழித்தல் விளையாட்டிலிருந்து (zero sum game) தமிழகத்திலிருந்து அடுத்த தேர்தலிலாவது விடுவிக்க உங்களாலானதைச் செய்யுங்கள்.