Sunday, June 13, 2010

ஏழாவது மாவட்டத்தில் எனது நாள்


ஜூன் 13, 2010.ஞாயிறு காலை. எட்டரை மணி.

ஹோசிமின் நகர் விமான நிலையம் எங்களது விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் தவிர வேறு யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. விசா வழங்கும் பிரிவு அசமஞ்சமாக இயங்கிக் கொண்டிருந்தது.

விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது வழக்கமான ஹோசிமின் நகரின் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனால், வழக்கமான வாகன நெரிசல் இல்லை.

விடுதி ஒழுங்கு செய்தவர்கள் வாகனமும் அனுப்பியிருந்தார்கள். எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்ததால், நான் விடுதி எங்கே இருக்கிறதென்று கவனிக்கவில்லை. வழக்கமாக விடுதிகள் அனைத்துமே டிஸ்ட்ரிக்ற் 1 என்று அழைக்கப்படும் ஹோசிமின் நகரின் சைகான் நதியை ஒட்டிய நகர் பகுதியிலேயே அமைந்திருக்கும். இந்த முறையும் அப்படியேதான் என்று நினைத்து வந்திருந்தேன். ஓட்டுநர் டிஸ்ட்ரிக்ற் 1 செல்லும் பாதையை விட்டு விலகிய ஒரு பாலத்தில் ஏறியபோதுதான் வேறெங்கோ விடுதி ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என்று புரிய வந்தது.

10-15 நிமிடங்களில் விசாலமான வீதிகளும், வானைத் தொடும் கட்டங்களும், கடைகளும் நிறைந்த சிங்கப்பூர் போன்ற ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். விடுதிக்குப் போன பிறகு முகவரியைக் கவனித்தால், அது டிஸ்ட்ரிக்ற் 7 என்று சொன்னது. கூகுளைத் தட்டி டிஸ்ட்ரிக்ற் 7 பற்றிக் கேட்டேன். இது சமீபத்தில் அமைக்கப்பட்ட ஒரு நகரமாம். கொரியர்களும், ஜப்பானியர்களும் இங்கு பெருமளவு வசிக்கிறார்களாம். இங்குள்ள விடுதிகளில் மேற்கத்திய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தங்குவதால், இங்கு பல பார்களும், ரெஸ்தாரந்துகளும் உள்ளனவாம்.

எனக்கு ஒரு தொழில் கண்காட்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அக் கண்காட்சி எஸ்.ஈ.சி.சி. என்னும் சைகான் எக்சிபிஷன் & கன்வென்ஷன் சென்ற்றரில் நடைபெறுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இதே கண்காட்சி டிஸ்ட்ரிக்ற் 1ல் உள்ள ஒரு இடத்தில் நடைபெற்ற போது சென்றிருக்கிறேன். அந்த இடம்தான் எஸ்.ஈ.சி.சி. என்று நினைத்திருந்தேன். ஆனால், எஸ்.ஈ.சி.சி. விடுதியிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்குள்ளேயே இருந்தது. போகிற வழியில் டாக்சியை நிறுத்தி ஏடிஎம்மிலிருந்து 20 லட்சம் டாங் எடுத்துக் கொண்டேன் (ஒரு ரூபாய் இன்றைய கணக்கில் 435 டாங். குறைந்தபட்ச நோட்டு 1000 டாங். 1000, 2000, 5000, பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம், ஒரு லட்சம், ஐந்து லட்சம் என்று கலர், கலராக அடித்து வைத்திருக்கிறார்கள்).

கண்காட்சி முடிந்து, சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து, சற்று நேரம் உறங்கி விட்டு, மாலை 6 மணிக்கு வெளியில் நடக்கச் சென்றேன். தெருவிற்கு தெரு விடுதிகளும், பார்களும், உணவகங்களும்தான். நானிருக்கும் விடுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கணேஷ் வட இந்திய தென் இந்திய உணவகம் என்று ஒன்றைக் கண்டேன். உள்ளே போகத் தோன்றவில்லை. எதிர்ப்புறம் ஒரு திறந்தவெளி உணவகத்தில், பிரமாண்டமான திரையில் ஸ்லோவேனியாவும், அல்ஜீரியாவும் கால்பந்து ஆடுவதைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே போய் உட்கார்ந்தேன்.

இந்த உலகக் கோப்பையில் நான் பார்த்த முதல் முழு ஆட்டம் இதுதான். வரைபடத்திலே எங்கே இருக்கிறதென்று சரியாக தெரியாத இரு நாடுகள் ஆடுவதைப் பார்ப்பதன் சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த அணியையும் ஆதரிக்க வேண்டியதில்லை, ஆட்டத்தை மட்டும் ரசித்தால் போதும். இரண்டுமே ஏறக்குறைய சமமான அணிகள்தான், ஆனால் ஸ்லோவேனியாவின் கை லேசாக ஓங்கியிருந்தது. ஓவர்டைமில் ஒரு கோல் போட்டு ஸ்லோவேனியாதான் வென்றது.

இரவுணவு: இஞ்சியும் வெங்காயமும் போட்டு சோயா சாஸிலே அவிக்கப்பட்ட கொடுவா மீன், பாக்சோய் என்ற சீன முட்டைக்கோசு, சாதம், மாம்பழ ஜூஸ். ஒரு வேளையாவது ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற முனைப்பில் பெறப்பட்ட உணவு. சோயா சாஸிலே மறைந்திருந்த சமைக்கப்படாத முழு மிளகாயைக் கடித்து விட்டு நான் சொரிந்த கண்ணீரைப் பார்த்து விட்டு பரிசாரகருக்கே இரக்கம் வந்து, பக்கத்தில் வந்து போதும் என்கிற வகையில் தண்ணீரை தம்ளரில் நிரப்பிக் கொண்டேயிருந்தார்.

2 comments:

pagu said...

AVS,

Nice to read your article again. I remember old Anantha Vikatan's Manian's Payanakkatturaigal!
You have a good flow and lot of information available from the blog. Carry on!

Anonymous said...

Suresh -

It takes me to places where I cant get to go... Please add pictures.. You can use Picasa, Buzz and Blogspot tightly integrated...

Prakash