Monday, September 17, 2007

கால் தலை கணவாய்

மனஓசை என்ற பதிவுத்தளத்தில் அதன் ஆசிரியர் சந்திரவதனா செல்வகுமரன் என்பவர் “கணவாய்க் கறியும் அப்பாவும்” என்ற தலைப்பில் சில நினைவுகளை எழுதியிருந்தார். அதற்கிட்ட பின்னூட்டங்கள் பலருக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு, கணவாய் என்பது என்னது என்று தெரியவில்லை என்று சொல்லின. விளக்கி நான் அளித்த பின்னூட்டம் நீண்டு விட்டதால், அதையே தனியாக ஒரு பதிவாக இடலாம் என்று எண்ணி இந்த முயற்சி.

ஈழத்தில் கணவாய் என்றழைக்கப்படுவது தமிழ்நாட்டில் கணவாய், கடம்பா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. வட தமிழ்நாட்டிலும், தென் தமிழ்நாட்டிலும் பல மீன்களுக்கு பெயர்கள் வேறுபடுகின்றன (உதாரணம்: வடக்கு – வவ்வால், தெற்கு – வாவல்; வடக்கு – வஞ்சிரம், தெற்கு – சீலா அல்லது நெய்மீன்; வடக்கு – சுதும்பு, தெற்கு – குதிப்பு). அது போல் இதற்கு வடக்கில் பெயர் கடம்பா. தெற்கில் கணவாய். மலையாளத்தில் கணவா.

சிலர் கணவாயை கணவாய் மீன் என்று அழைத்தாலும் இது மீனல்ல. முதுகுத்தண்டு இல்லாத ஒரு கடல் வாழி (Marine invertebrate). கணவாயில் இரண்டு வகை இருக்கிறது – (1) squid எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கண்ணாடி போல தெளிவாக, மெல்லியதாக இருக்கும்; (2) cuttlefish எனப்படும் வகை – இதற்கு உள்ளே இருக்கும் ஓடு கனமாக, வெள்ளையாக இருக்கும். கணவாய் cephalopod எனப்படும் வகையினது. Cephalo என்றால் தலை, pod என்றால் கால் – அதாவது தலையோடு கால்கள் உள்ள பிராணி. மொத்தமாக எட்டுக் கால்கள். ஆனால் சிலந்திக்கும் இதற்கும் நெருங்கிய சொந்தம் கிடையாது. நத்தை, சங்கு, சிப்பி வகைகளுக்கு ரொம்ப சொந்தம். அவைகளுக்கு வெளியே இருக்கும் ஓடு, இவற்றிற்கு உள்ளே இருக்கிறது. இவைகளுக்கு வெளியே இருக்கும் ருசியான தசைப் பகுதி, அவற்றிற்கு உள்ளே இருக்கிறது. அவைகளுக்கு ஓடு பாதுகாப்பு. இவற்றிற்கு ஓடுவதுதான் பாதுகாப்பு. கருப்பு மையை உமிழ்ந்து விட்டு அதி விரைவாக நீந்தி தப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திமிங்கிலம், சுறா, சந்திரவதனா அவர்களின் வீட்டுச் சட்டி முதலானவற்றில் விதி முடிந்து விடும்.

கணவாய் மீன்கள் தமிழ்நாட்டில் ஓரளவு கிடைத்தாலும் கடல்புரத்து மக்கள் தவிர வேறு எவரும் விரும்பி உண்பதில்லை. கேரளாவில் ஓரளவு பரவலாக கணவாய் உண்ணப்படுகிறது. கடல் உணவை ரொம்ப தீவிரமாக உட்கொள்ளும் வங்காளிகள் இதை சாப்பிடுகிறார்களா என்று தெரியவில்லை.

உலகளவில் சீனா, ஜப்பான், கொரியா, தென்கிழக்காசியாவிலும், மத்திய தரைக்கடலையொட்டிய தென் ஐரொப்பாவிலும் (குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின்), இக்கலாச்சாரம் உள்ள தென்னமரிக்காவிலும், இது விரும்பி உண்ணப்படுகிறது. கணவாய்க்கு மிக நெருங்கிய சொந்தமான ஓக்டோபஸும் இந்நாடுகளில் உண்ணப்படுகிறது. ஜப்பான், கொரியாவில் பச்சையாகவும், காய்கறிகளுடன் லேசாக வதக்கியும் உண்கிறார்கள். ஜப்பானிய டெம்பூரா (tempura) முறையில் வட்ட, வட்டமாக நறுக்கிய கணவாயை மாவில் போட்டு பஜ்ஜி போல பொரித்தெடுத்து சாப்பிடலாம். இதையே கலமாரி (kalamari) என்ற பெயரில் பல அமெரிக்க உணவகங்கள் இப்போது வழங்குகின்றன. ஆனால் கலமாரி என்பது ஸ்பானிய மொழியில் கணவாயின் பெயர். இப்போது பாருங்கள்:

கட்டில் ஃபிஷ், ஸ்க்யிட் -- ஆங்கிலம்
கணவாய், கடம்பா – தமிழ்
கணவா – மலையாளம்
இகா – ஜாப்பனிஸ்
கலமாரி – ஸ்பானிஷ்

ஆக, க் அல்லது க்-ன் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லா மொழிகளிலும் கணவாயின் பெயரில் இருக்கின்றன. இது தற்செயலானதா?

கணவாய் சமைக்கும் போது இதை எவ்வளவு விரைவாக சமைத்து முடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் இதன் தசை பச்சையாகவே சற்று ரப்பர் பதம் கொண்டது. சமைக்க சமைக்க இது மேலும், மேலும் ரப்பராகி விடும். இருப்பினும் நம் ஊரில் இதை, மற்ற இறைச்சி வகைகளாக நினைத்துக் கொண்டு, அதிகமான நேரம் அடுப்பில் வைத்துக் கிண்டிக், கிளறியே சாப்பிடுகிறோம். இப்படி சமைக்கப்பட்ட உணவில் நாம் சுவைப்பது தசையையல்ல, அது சுமந்து கொண்டிருக்கும் மசாலா வகைகளையே.

மேலதிக தகவல்களுக்கு காண்க: http://en.wikipedia.org/wiki/Squid

புகைப்படத்தில் வலது முன்பக்கத்தில் குவிந்திருக்கும் கொள கொளா வஸ்துதான் கணவாய். சீனாவின் தென்கடற்கரையோர நகரான ஷாஞ்ஜாங்கில் 2005 எடுக்கப்பட்டது.


Posted by Picasa

6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பல விடயங்களை அறிந்தேன்.
இங்கே பிரான்சில் கலமார் என்பார்கள்.
எங்கள் ஈழத்தில் இதைத் தெரியாதவர்கள் அரிது. விலை அதிகமான கடலுணவு.ஒரு சாண் நீளமான இளம் கணவாய், சமைக்க இலகுவானது. சாப்பிட இதமானது.
உங்களுக்குத் தெரிந்திருக்கும் இதன் ராட்சத இனம். பல அளவுகளில் பிடித்துள்ளார்கள்.http://www.dinosoria.com/calmar_cachalot.htm இதில் பார்க்கலாம்.

Victor Suresh said...

யோகன், பின்னூட்டத்திற்கு நன்றி. கடற்கரையோரத்தில் பிறந்து, வளர்ந்ததனாலும், மீன்வள அறிவியல் படித்ததானாலும் கணவாய்களைப் பற்றி சராசரிக்கு சற்று அதிகமாகவே தெரிய நேர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடற்கரையோரத்தில் இருப்பவர்கள், அதுவும் மீன்பிடிக்கும் இனத்தைச் சேர்ந்து, அத்தொழிலில் ஈடுபடுபவர்கள், தவிர மற்றவர்களுக்கு மீன்கள் தவிர்த்த கடல் உணவு வகைகளில் அதிக ஆர்வம் இருப்பதில்லை. இறால்களில் ஈடுபாடு வந்தது கூட அதை வெளிநாட்டினர் அதிகமாக வாங்குகின்றனர் என்ற தகவல் தெரிந்த பிறகுதான். நண்டு போன்றவற்றை எப்படி சமைப்பது, சாப்பிடுவது என்று பலருக்கு தெரியாது. நத்தை, சிப்பி போன்றவற்றை சாப்பிடலாம் என்றால் ஒரு தினுசாகப் பார்ப்பார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஃப்ரான்சிலும், மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள எல்லா நாடுகளிலும் விதவிதமான கடலுணவுகளை சுவையாக சமைத்து, அனுபவிக்கும் கலாசாரம் இருக்கிறது.

‘சமைக்க இலகுவானது’ என்று ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது முழுக்க, முழுக்க சரி. எல்லா கடல் உணவுகளுமே சமைக்க இலகுவானது என்றாலும், பல மீன் வகைகளை வெட்டி, சுத்தப்படுத்த நேரம் எடுக்கும். ஆனால் கணவாயை சமைக்க தயாரிப்பது மிக எளிது. தலையும், கால்களும், உள்ளுறுப்புக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்திருப்பதால், சில விநாடிகளில் அனைத்தையும் நீக்கி விடலாம். எஞ்சியிருக்கும் பை போன்ற தசைப் பாகத்தின் தோலை ஓரிரு விநாடிகளில் உரித்து விடலாம். வெள்ளை வெளேரென்று அல்வாத் துண்டு போலிருக்கும் தசையை வேண்டிய அளவுகளில் வெட்டினால் சமைக்க தயாராகி விடுகிறது.

ராட்சத கணவாய் (Giant squid) பற்றி நீங்கள் கொடுத்த இணைப்புக்கு நன்றி. அது ஃப்ரெஞ்சில் இருக்கிறபடியால் ஆங்கிலத்தில் உள்ள விக்கிப்பீடியா இணைப்பு: http://en.wikipedia.org/wiki/Giant_squid.

Victor Suresh said...

நான் இப்பதிவினை இட்ட போது கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.

“கணவாய் தமிழ்நாட்டிலும் கணவாய் என்றே அழைக்கப்படுகிறது. வட தமிழ்நாட்டிலும், தென் தமிழ்நாட்டிலும் பல மீன்களுக்கு பெயர்கள் வேறுபட்டாலும் (உதாரணம்: வடக்கு – வவ்வால், தெற்கு – வாவல்; வடக்கு – வஞ்சிரம், தெற்கு – சீலா அல்லது நெய்மீன்; வடக்கு – சுதும்பு, தெற்கு – குதிப்பு) கணவாய்க்கு வடக்கிலும் தெற்கிலும் ஒரே பெயர்தான். மலையாளத்தில் கணவா.”

இந்த வடக்கிலும் தெற்கிலும் ஒரே பெயர்தான் என்பது தவறு. இன்று (செப்டெம்பர் 26, 2007) சென்னையில் FishO’Fish என்ற கடைக்குப் போயிருந்தேன். அங்கே விலைப்பட்டியலில் உள்ள பெயர்களை மேய்ந்து கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன் Squid என்பதற்கு தமிழில் கடம்பா என்று எழுதியிருந்தார்கள்.

எனவே, எனது பதிவை இவ்வாறு திருத்தியுள்ளேன்:

“ஈழத்தில் கணவாய் என்றழைக்கப்படுவது தமிழ்நாட்டில் கணவாய், கடம்பா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. வட தமிழ்நாட்டிலும், தென் தமிழ்நாட்டிலும் பல மீன்களுக்கு பெயர்கள் வேறுபடுகின்றன (உதாரணம்: வடக்கு – வவ்வால், தெற்கு – வாவல்; வடக்கு – வஞ்சிரம், தெற்கு – சீலா அல்லது நெய்மீன்; வடக்கு – சுதும்பு, தெற்கு – குதிப்பு). அது போல் இதற்கு வடக்கில் பெயர் கடம்பா. தெற்கில் கணவாய். மலையாளத்தில் கணவா.”

G.Ragavan said...

நாங்கள்ளாம் சீலான்னுதான் சொல்லுவோம். சென்னைப்பக்கந்தான் வஞ்சிரம்னு சொல்வாங்க.

கணவாய் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். சாப்பிட்டிருக்கேன். ஆனா எனக்குக் கணவாய் பிடிக்காது. நீங்க சொன்னாப்புல ரப்பர் மாதிரி இருக்கும். வட்டவட்டமா வெட்டி பஜ்ஜி போல பொறிச்சி வெச்சிருக்காங்க. ஆனா அவ்வளவா பிடிக்கலை. தமிழகத்துல கணவாய் அவ்வளவா கிடைக்காது.

Chandravathanaa said...

ஏவிஎஸ், ராகவன்

சீலா மீன் வேறு. வஞ்சுரன் மீன் வேறு.
எங்கள் நாட்டில் இரண்டுமே வெவ்வேறு மீன்கள்தான்

றாகவன்
கணவாயைச் சரியான முறையில் சமைத்தால் இறப்பர் மாதிரி வராது.

Victor Suresh said...

வட தமிழ்நாட்டில் வஞ்சிரம் என்பது seer fish (இதை Spanish mackerel என்றும் அழைக்கிறார்கள்). சீலா என்பது barracuda: ஊசி போன்ற மூக்கும் உருண்டை வடிவ உடலும் கொண்ட நீள மீன்.

தென் தமிழ்நாட்டில் seer fishஐ சீலா என்று அழைக்கிறார்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் இது நெய் மீன் என்று அழைக்கப்படுகிறது); barracudaவை ஊழி என்று அழைக்கிறார்கள்.

வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று நான் குறிப்பிடுவதில் உள்ள ஒரு குறைபாடு: எனக்கு சென்னையிலும், நெல்லை-குமரி மாவட்டத்திலும் வழங்கப்படும் மீன் பெயர்கள்தான் பரிச்சயம். தெற்கே இராமநாதபுரம் மாவட்டத்திலோ, வடக்கே நாகப்பட்டிணம்-தென் ஆற்காடு-பாண்டிச்சேரி போன்ற இடங்களிலோ மீன்களின் பெயர்கள் தெரியவில்லை. ஒரு வேளை ராகவன் அவர்கள் குறிப்பிடுவது போல இந்தப் பெயர் வித்தியாசங்கள் சென்னையளவில் மட்டுமே வித்தியாசமாக இருக்க சாத்தியமுண்டு. நண்பர்களிடம் விசாரித்து விட்டு சொல்கிறேன்.