Friday, July 27, 2007

கி. ராஜநாராயணன் கட்டுரைகள்

மேற்படித் தலைப்பில் அகரம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் 2007 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. இன்னமும் வாசிக்கப்படாமலே அலமாரியில் உட்கார்ந்து கொண்டிருந்தது. இந்த ஞாயிற்றுக்கிழமை வேலையிருப்பதால், வியாழன் மதியத்திற்கு மேல் ஒரு சின்ன விடுப்பு எடுத்துக் கொண்டு, புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். தொகுதிகளாக கட்டுரைகள் அடங்கிய இம்மாதிரி புத்தகங்களில் ஒரு வசதி. எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் வாசிக்க தொடங்கலாம். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டே வாசிக்க ஆரம்பித்ததால், கனமான இப் புத்தகத்தின் நடுவிலிருந்து தொடங்கினேன்.

கட்டுரைகள் என்று தலைப்பு கொடுத்திருந்தாலும், இப்புத்தகத்தில் கட்டுரைகளை விட நிறைய கதைகள் இருக்கின்றன. குட்டிக் குட்டிக் கதைகள். பல இடங்களில் சேகரிக்கப்பட்ட நாட்டுப் புறக் கதைகள். அக் கதைகள் உருவான கதைகள். அவை சொல்லப்பட்ட கதைகள். அவை பதிவு செய்யப்பட்ட கதைகள். ராஜநாராயணனின் சொந்தக் கதைகள். அவற்றில் அவரது நண்பர்கள் சொல்லும் கதைகள். இப்படியாக கட்டுரைக்குள்ளே கதைகள், கதைகளுக்குள்ளே கதைகள் என்று போகிறது. கதைகளைத் தவிர இசை, நாடகம், இலக்கியம், வரலாறு, மக்கள் பழக்க வழக்கங்கள் என்று அனைத்தும் ராஜநாராயணின் திறமையான ஆக்கத்தால், அவருக்கே உரித்தான சுவைகளோடு சொல்லப்பட்டு இருக்கின்றன.

ஒரு இடத்தில் மக்கள் பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்து உணவுப் பழக்க வழக்கங்களுக்குள் நுழைந்து விடுகிறார் ராஜநாராயணன். சாப்பாட்டு ராமன் என்ற பெயர் எப்படி வந்தது என்ற விளக்கமும், ஒரு விருந்தில் பதமான சூட்டில் போளிகள் வாழை இலையில் எப்படி விழுந்து கொண்டே இருக்கின்றன என்பதையும் சாப்பிட்டுக் கொண்டே வாசித்தேன். அன்று பாகற்காய் தீயலும், கேரட் துவரனும், பொரித்த மீனுமான மதியச் சாப்பாடு இந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டே சாப்பிட்டதில் இன்னும் ருசித்தது. கூடவே வெளியே, லேசான தென்கிழக்குப் பருவ மழைச் சாரல். ரொம்ப சொகமான வியாழன் மதியம்ங்க அது.

1 comment:

வல்லிசிம்ஹன் said...

thiru.Raajanarayanan sir is a very simple but brilliant
person.
even his talks will be laced with humour and nellaithamizh.
thank you for a good post.