Thursday, February 18, 2016

கோடூ போட்ட மாமல்லன்

எழுத்தாளர் மாமல்லன் ‘தி இந்து’ தமிழ் தினசரியில் 2016 பொங்கல் சிறப்பு மலரில் “கோடு” என்ற தலைப்பில் சிறுகதை ஒன்று எழுதியுள்ளார். கூகிள் பிளஸ்ஸில் அவரை நான் தொடர்வதால், அவர் கொடுத்த சுட்டி மூலமாக கதையைப் படித்தேன் (http://www.maamallan.com/2016/01/blog-post_15.html).

சுருக்கம் இதுதான்:

1980களின் பெசன்ட் நகர். அரசு ஊழியர்களின் குடியிருப்புகளாக வளரத் தொடங்கிய அன்றைய சென்னையின் புறநகர்.

அங்கே பார்ப்பன அதிகாரி ஒருவரின் வீட்டில் மேற்கத்திய வகைக் கழிப்பிடம் மாட்டச் செல்கிறார் ஒரு முஸ்லீம் ப்ளம்பர்.

வேலை நடக்கும் போது அன்றைய அரசியல் நிலவரங்களோடு பொருத்தி சுவாரஸ்யமாக கதை சொல்லும் ஒரு பாகவதரின் உரையை பார்ப்பன அதிகாரி கேசட் ப்ளேயரில் கேட்கிறார். கதை வாழை இலை நடுவில் கோடு எப்படி வந்தது என்பதைப் பற்றியது. ராமன் இலங்கையிலிருந்து வரும்போது பரத்வாஜ முனிவரின் குடிலில் விருந்துண்கிறார். பந்தியில் உட்காரும் போது அனுமனையும் தன் இலையிலேயே சாப்பிட அழைக்கிறார்.  அப்படிச் செய்யும் போது இது என் பகுதி, அது உன் பகுதி என்று தெரிவிக்க ஒரு கோட்டைப் போடுகிறார்.

கதை முடியும் நேரத்தில் ப்ளம்பரின் வேலையும் முடிந்து விடுகிறது. குடிக்கத் தண்ணீர் கேட்கிறார். அதிகாரி பாத்ரூமில் தண்ணீர் பிடித்துக் கொடுக்கிறார். ப்ளம்பர் “நீங்கள் அங்கிருந்துதான் குடிக்கத் தண்ணீர் எடுப்பீர்களா” என்று கேட்கிறார். அதிகாரி “நீங்கள் வாய் வைத்துக் குடிப்பீர்கள் என்பதால்தான் அப்படிக் கொடுத்தேன்” என்று சால்ஜாப்பு சொல்கிறார். நீயும் வேணாம், உன் தண்ணியும் வேணாம் என்று கோபித்துக் கொண்டு போகும் பாய், அனுமனையே நீ குரங்கு என்றுதானே கோட்டைப் போட்டார் உங்கள் ராமர் என்று சொல்லி அதிகாரியைத் திகைக்க வைக்கிறார்.
  
நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்த நல்ல ஒரு சிறுகதை. ஹீரோவை ஓவர் நல்லவனாகவும், வில்லைனை ஆகக் கொடியவனாகவும் காட்டும் சினிமாத்தனத்தை அடக்கி, பாரதிராஜா வகை நாடகத்தன்மையை குறைத்திருந்தால் இந்தக் கதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.  கூகில் ப்ளஸ்ஸில் “அபாரம்” என்று கருத்து சொல்லி விட்டு, பிழையாகப் பட்ட ஒரு பகுதியையும் சுட்டிக் காட்டியிருந்தேன். பிழை சிறிய இலக்கணப் பிழைதான். சொற்பிழை மன்னிக்கப்படலாம் என்று சொன்ன ஏ.பி. நாகராஜன் இலக்கணப் பிழையைப் பற்றி குறிப்பாக சொல்லா விட்டாலும் இந்த வகை இலக்கணப் பிழையும் மன்னிக்கப்படலாமாகத்தான் இருக்கும். இருந்தாலும் சுட்டிக் காட்ட விரும்பினேன். ஏனென்றால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் பிரபலமாக இருக்கும் அத்தனை இலக்கியவாதிகளின் சொல், இலக்கண, பொருட்பிழைகளையும் கிழி, கிழி என்று கிழித்து பதிவுகள் போட்டு தான் பிறந்ததன் நோக்கத்தை அடைந்தவர் போல் மகிழ்ந்தவர்தான் இந்த மாமல்லன்.  அவரால் தொங்கவிடப்பட்ட இலக்கியவாதிகளில் ஒருவர் காலேஜ் ட்ராப் அவுட். இன்னொருவர் ஆங்கில இலக்கிய பட்டதாரி. நம்மவரோ மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரானாலும் கல்லூரியில் தமிழ் மேஜர். தனது மொழிப் புலமையைப் பெருமையாக அணிந்து கொள்பவர். அவர் இப்படிப்பட்ட ஒரு பிழையைச் செய்திருக்கிறார் என்று ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் அது எடிட்டரால் கவனிக்கப்படாமல் போனது. இந்து தமிழ் தினசரியின் ஆசிரியர் கே. அசோகன் விகடனிலிருந்து வந்தவர். விகடன் ஆசிரியர் காலம் சென்ற பாலசுப்பிரமணியன் ஒரு கறாரான எடிட்டர். இன்று விகடனில் எடிட்டிங் தரம் சீரழிந்து விட்டது. ஆனால் பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆசிரியராக இருக்கும் வரையில் விகடன் இதழ்களில் பிழைகளைக் காண்பது அரிதாக இருக்கும். அவர் வளர்த்த அசோகன் ஆசிரியராக இருக்கும் இதழில் எப்படி இந்த பிழை வந்தது என்பது இன்னொரு ஆச்சரியம்.

பிழையைச் சுட்டிக் காட்டாமல் பிழையுள்ள பகுதியைச் சுட்டிக் காட்டினால் போதும் என்று அந்தப் பகுதியை மட்டும் வெட்டி, ஒட்டிக் காட்டியிருந்தேன். அது கீழே:

“பெஸண்ட் நகர் பஸ் ஸ்டாண்ட்டை அடுத்து இருந்தது அந்த மத்திய அரசுக் குடியிருப்பு. பார்க்கப் போனால், இரண்டொரு முக்கியமான தடங்களில் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடம்தான் அது என்றாலும் வெறும் கடல் மண் பரந்து கிடக்கும் இடத்திற்கு எப்படி டெப்போ என்கிற அந்தஸ்தை அளிக்க முடியும்.”

அடிப்படை மொழியறிவு உள்ளவர்களுக்கு மேலே உள்ள பகுதியில் உள்ள பிழை என்ன என்பது தெரிந்திருக்கும். இல்லாதவர்கள் Pronoun Precedent Agreement என்றால் என்ன என்று கூகிளில் தேடி தெரிந்து கொள்ளலாம். அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்தப் பதிவின் பின்குறிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

எனது பதிவிற்கு, மாமல்லன் என்ன பிழை என்று கேட்டிருந்தார். நான் பதில் சொல்லும் முன்னரே பஸ் டிப்போவை, பஸ் ஸ்டாண்ட் என்று அழைத்தது பிழையா, எல்லாவற்றையும் விம் போட்டு விளக்கிச் சொல்ல வேண்டுமா என்று ஒரு பதிவு போட்டார். மனிதர் தான் இழைத்த பிழை என்னதென்று தெரியாமலே இப்படி எகிறுகிறாரே என்று நினைத்துக் கொண்டு “அதுவல்ல பிழை, ஆனால் “அது”தான் பிழை. விம் போட்டு விளக்கிச் சொல்ல விரும்பவில்லை. சொந்த முயற்சியிலேயே தெரிந்து கொள்ளுங்கள்” என்று ஒரு பதிவைப் போட்டேன். அடுத்தாற்போல் ஒரு புது பதிவைப் போட்டார்: எழுத்தாளனின் ஆகப் பெரிய சவால் ஆனந்த விகடன்தான் இலக்கியத் தரத்திற்கான ISI என்று கருதும் இணைய அச்சுபிச்சுகளின் தொந்தரவுதான். எனக்கு என்னவோ நகரம் படத்தில் ஆட்டோவில் இறங்கி வரும் வடிவேலு “சச்சே, ஒரு மனுசன் வெளியே போயிட்டு வீட்டுக்குத் திரும்புறதுக்குள்ள எத்தன சலசலப்புகள், சச்சரவுகள சந்திக்க வேண்டியிருக்கு” என்று சொல்வதுதான் நினைவிற்கு வர அந்தப் பதிவிற்கு நக்கலாக ஒரு பதில் கொடுத்தேன். எதிர்வினையாக கூகுள் ப்ளஸ்ஸில் அவரைப் பின்தொடர்பவர்களிலிருந்து என்னைத் துரத்தி விட்டார். அவரது பதிவுகள் ஒன்றையும் எனது ப்ளஸ்ஸில் பார்க்க முடியவில்லை. 

நமது தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் சொல்வதை யாரும் வாங்குவதில்லை; இலவசமாக இணையத்தில் போட்டால்கூட படிப்பதில்லை என்கிறார்கள். யாராவது படித்து விட்டுப் பாராட்டினால் குளிர்ந்து போகிறார்கள். ஆனால் பிழை இருக்கிறது என்று சொன்னால் அவர்களுக்கு கடுப்பு வந்து விடுகிறது. என்னுடைய எழுத்தைப் படிக்காதே என்று டூ போட்டு விடுகிறார்கள். நல்ல வேளையாக மாமல்லனுடைய கதைகளும், கட்டுரைகளும் ப்ளஸ்ஸில் மட்டும் வருவதில்லை. அவருடைய www.maamallan.com தளத்திலும் பதிவாகின்றன. அங்கே படித்துக் கொள்கிறேன்.   

பின்குறிப்பு:

பிழை “அது”தான். பத்தியின் முதல் வரி இப்படி இருக்கிறது:  “பெஸண்ட் நகர் பஸ் ஸ்டாண்ட்டை அடுத்து இருந்தது அந்த மத்திய அரசுக் குடியிருப்பு” அப்படியென்றால் இரண்டாவது வரியில் வரும் “அது” முதல் வரியின் கதாநாயகனான “அந்த” குடியிருப்பைத்தான் சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர தோழனான பஸ் ஸ்டாண்டைச் சுட்டுவதாக இருந்திருக்கக் கூடாது. இரண்டாவது வரியில் பஸ் ஸ்டாண்ட்டை விவரிக்க விரும்பியிருந்தால் சற்று மாற்றி எழுதியிருக்கலாம். உதாரணமாக: 
  
“அந்த மத்திய அரசுக் குடியிருப்பு பெஸண்ட் நகர் பஸ் ஸ்டாண்ட்டை அடுத்து இருந்தது. இரண்டொரு முக்கியமான தடங்களில் செல்லும் பேருந்துகள் புறப்படும் இடத்திற்கு பெயர் பஸ் ஸ்டாண்ட் என்று இருந்தாலும் வெறும் கடல் மண் பரந்து கிடக்கும் இடத்திற்கு டெப்போ என்கிற அந்தஸ்து சற்று அதிகம்தான்” என்றால் பிரச்சினை தீர்ந்திருக்கும்.


திருநெல்வேலி அல்வா மாதிரி கதை ஸ்மூத்தாக உள்ளே போய்க் கொண்டிருக்கும் போது, பத்தியின் இரண்டாவது வரி நெருடி, மீண்டும் முதல் வரியை வாசிக்க வைப்பது எவ்வளவு சிறிய அசவுகரியமென்றாலும் பிழை பிழைதான்.  அதுவும் மற்றவன் எழுத்தையெல்லாம் நொள்ளை சொல்லும் விமலாதித்த மாமல்லன் இப்படி எழுதுவதை விமர்சிக்கமால் இருக்க முடியவில்லை. அதற்கு அவர் கோபித்துக் கொள்ளும் போது வரும் புன்னகையை அடக்கவும் முடியவில்லை.   

Sunday, February 2, 2014

6174: தமிழ் புதினத்தின் ஒரு முக்கியமான மைல்கல்

சிற்சில தடைகளைத் தாண்டி வாசித்து முடித்து விட்டேன் 6174ஐ.

2012ன் இறுதியில் 6174ன் ஆசிரியர் க. சுதாகருடன் தொடர்பு வளையத்திற்குள் வந்தேன். அவரும் நானும் ஒரே வகுப்பில் பள்ளியிறுதி (+2) முடித்தவர்கள். அப்போதெல்லாம் சுதாகருக்கு எழுத்தார்வம் இருந்ததாக நினைவில்லை. எனவே அவர் ஒரு புதினம் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்த போது அதை வாசிக்க ஆவலானேன். ஜெயமோகன் அதைத் தமிழின் முதல் அறிவியல் புதினம் என்று விவரித்து 2012ல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களில் ஒன்றாக பரிந்துரைத்த போது ஆர்வம் அதிகரித்தது. சென்னைக்குச் செல்லும் போது வழக்கமான புத்தகக் கடைகளில் தேடி, கிடைக்கவில்லை என்று வம்சி புக்ஸ் இணைய தளத்தில் வாங்கி, பணம் செலுத்தி, அந்த பணம் வம்சியைச் சென்றடையாமல் என் வங்கிக் கணக்கிற்கே திரும்பி வந்து, கடைசியில் 2014 புத்தகக் கண்காட்சியில் நேராக வம்சி ஸ்டாலுக்கே சென்று புத்தகத்தை வாங்கி வந்தேன். மேற்கூறியது நடந்த சுமார் ஓராண்டு இடைவெளியில் 6174 குறித்த பல குறு விமர்சனங்களை இணையவெளியில் காண நேர்ந்தது. அனைத்தும் பாராட்டுதல்களே. தமிழர்கள் நமது வழக்கப்படியே சுதாகருக்கு தமிழின் டான் ப்ரௌன், றாம் க்ளான்ஸி என்றெல்லாம் பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். மெத்த மகிழ்ச்சி.

சுதாகருடன் எனக்கு முன்பழக்கம் இல்லையென்றாலும் கூட 6174 தமிழ் புதினத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்று கூறியிருப்பேன். ஏனென்றால் கணிதப் புதிர், அறிவியல் தத்துவங்கள் அடைப்படையில் 400 பக்கங்களுக்கு தமிழில் எழுத ஒரு தெனாவட்டு வேண்டும். அதுவும் தமிழ் புத்தக உலகில் முன்னே பின்னே அறிமுகமில்லாத ஒரு எழுத்தாளருக்கு. அப்படிப்பட்ட புதினத்தைப் பிரசுரிக்க ஒரு பதிப்பகத்திற்கு பெரிய அளவில் தில் வேண்டும். இவையனத்திற்கும் மேலாக அது வெற்றிகரமான ஒரு படைப்பாக வேண்டுமென்றால் எழுதுபவருக்கு அசாதாரணமான திறமை வேண்டும். அந்தத் திறமை சுதாகருக்கு நிறையவே இருப்பது நூலில் தெரிகிறது.

6174ல் சுதாகரின் மிகப் பெரிய வெற்றி என்று நான் கருதுவது சிக்கல்கள் நிறைந்த களத்தில் கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை சீராக செலுத்துவதுதான். வாசகனைக் கொஞ்சம் சலிப்படைய வைத்தாலும், இந்தப் புதினம் முழு தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம். லெமூரியக் காலம் தொடங்கி, இந்நாள் வரை, அமெரிக்கா, தென்னமரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, ரஷ்யா, இந்தியா, மியன்மார் என்று உலகம் முழுவதும் விரிந்து, பக்கத்திற்குப் பக்கம் புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு செல்லும் ஒரு புதினம் மூளைக்கு வேலை வைப்பதுடன், அறுவையாகவுமல்லவா இருக்கிறது என்று மூடி வைத்து விட்டால், அவ்வளவுதான். பிறகு திறந்து வாசிப்பது அரிதாகிவிடும். ஆனால், 6174ன் ஒவ்வொரு பக்கத்திலும் சின்னச் சின்ன மர்ம முடிச்சுகளை இடுவதும், விடுவிப்பதுமான உத்தி அதைக் கடைசி வரை ஆர்வத்துடன் வாசிக்க வைத்து விடுகிறது. இந்த நூல் பரந்த ஒரு வாசகத் தளத்தை வெற்றிகரமாக அடைந்ததற்கு இது ஒரு பிரதான காரணமாக இருக்கலாம்.

இன்னொரு காரணம் எண்-எழுத்துப் புதிர், அறிவியல் தத்துவங்களைத் தாண்டி இந்தப் புதினம் நடமாட விடும் கதாபாத்திரங்கள், அவர்களின் பின்னணி வரலாறுகள் ஆகியவற்றை சுவாரஸ்யமாக சொல்லும் விதம். ஒரு சராசரியான, பொழுதுபோக்கு த்ரில்லர் வகை நாவல் கூட சுவாரஸ்யமாக கதாபாத்திரங்களை உருவாக்கி உலவ விடலாம். ஆனால், சுதாகரின் பாத்திரப் படைப்பிலும், அவர்களுக்கிடையே இருக்கும் உறவுகளின் சித்திரத்திலிமிருக்கும் ஆழம் சராசரியான, பொழுதுபோக்கு த்ரில்லர் வகை நாவல்களில் காண முடியாதது.

6174ஐ வாசிக்கும் போது “இது என்ன வகை புதினம்?” என்று அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்வது போல் இதை அறிவியல் புதினம் என்று அழைக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கிறது. வரலாறு, கணிதம், புவியியல், உயிரியல், மற்றும் நவீன தொழில் நுட்பம் என பல துறைகளிலும் அறிவார்த்தமாக கதை பயணிக்கிறது என்றாலும், இதன் மைய இழை பல்வகைப் புதிர்களை (எண் புதிர்கள், வார்த்தைப் புதிர்கள், வடிவப் புதிர்கள்) அவிழ்த்து அறிவியலாளர்கள் சிலர் எப்படி அழிய இருக்கும் உலகைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே. எனவே, 6174 த்ரில்லர் வகையிலான ஒரு படைப்பு என்றே கருதுகிறேன். இந்த வகையில் சுதாகரை தமிழின் டான் ப்ரௌன் என்றழைப்பது எனக்கு சரியானதாகவே படுகிறது.  இருப்பினும், இருத்தல் குறித்த அறிவியல் தத்துவங்களை இரண்டு மூன்று பக்கத்திற்கு விவாதிக்கும் ஒரு புதினத்தை அறிவியல் புதினமில்லையென்று ஒதுக்கவும் மனம் ஒப்பவில்லை. 

6174 குறித்து நான் வாசித்த விமர்சனங்களனைத்தும் பாராட்டுதல்களே என்பதால் நூலில் கண்ட சில குறைகளையும் பதிவிட விரும்புகிறேன். ஓரளவிற்குப் பெரிய குறையாக நான் பார்ப்பது, கடைசி 50 பக்கங்களில் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற ரீதியில் கதை நகர்த்தப்பட்ட உணர்வு ஏற்படுவதுதான். இந்த பக்கங்களில் ஆசிரியரின் தடுமாற்றங்கள் சில இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, மிங்குன் பகோடாவில் நேரக் கணக்குகள்; அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையைப் பற்றிய விவரணைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கதாசிரியர் ஏற்படுத்திய பல முடிச்சுகளில் சில அவிழ்க்கப்படாமல் போன ஒரு உணர்வையும் தவிர்க்க முடியவில்லை. இதை ஊர்ஜிதம் செய்ய நாவலை முதலில் இருந்து மறுபடியும் படிக்க வேண்டும்.

மேலை நாடுகளில் இருப்பது போன்று புத்தக ஆசிரியர் (புக் எடிட்டர்) ஒருவர் இருந்திருந்தால் 6174 இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று கருதுகிறேன். தன்னுடைய இயற்பியல் துறை சம்பந்தப்பட்ட கலைச் சொற்களை தமிழில் சொல்லும் சுதாகர் (உதாரணம்: நுண்துளைக் குழாய்), அயல் துறையான உயிரியலில் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவது நெருடலாக இருக்கிறது, உதாரணம்: ஜெயண்ட் ஸ்க்யுட் (ராட்சதக் கணவாய்). தமிழாக்கம் செய்த இடங்களில் தவறாகவும் வந்திருக்கிறது. உதாரணம் catfish என்பது பூனைமீன் அல்ல; கெளிறு அல்லது கெளுத்தி என்பதுதான் சரி. நீலத்துடுப்பு சூறை மீன்களை வலை வீசிப் பிடிப்பதில்லை; தூண்டில் போட்டே பிடிக்கிறார்கள். அப்படிச் செய்தால்தான் அந்த வகை மீனை ஜப்பானிய முறைப்படி பச்சையாக உண்ண முடியும். ஜானகி அமெரிக்காவில் போஸ்ட் டாக்டரேட் செய்ய ஜிஆர்ஈ தேர்வு எழுதியதாக ஓரிடத்தில் வருகிறது. மாஸ்டர்ஸ், பிஎச்டி போல போஸ்ட் டாக்டரேட் என்பது ஒரு பட்டப் படிப்பல்ல; பயிற்சியனுபவம்தான். எனவே போஸ்ட் டாக்டரேட் செய்ய ஜிஆர்ஈ தேவையில்லை. இது போன்ற சிறு தவறுகளை புக் எடிட்டர் ஒருவர் இருந்திருந்தால் சரி செய்திருக்கலாம். 
              

6174ன் வெற்றியைத் தொடர்ந்து சுதாகர் மேலும் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவரது அடுத்த புதினம் 6174ஐயும் விஞ்சும் என்றும் எதிர்பார்க்கிறேன். 

Sunday, January 26, 2014

அதிர்ஷ்டசாலி எழுத்தாளர்கள்

கோவில் திருவிழா வரும் போதெல்லாம் குத்தாட்டக் குழு வருவதைப் போல சென்னையில் புத்தகக் கண்காட்சி வரும் போதெல்லாம் எழுத்தாளர்களுக்குள் குஸ்திச் சண்டையும் வந்து விடுகிறது. சண்டைகளில் இரண்டு வகை உண்டு. இந்தியா-பாக்கிஸ்தான், ஈரான்-இஸ்ரேல், வட கொரியா-தென் கொரியா என்று நீண்ட நெடுங்காலப் பகை கொண்ட நாடுகளிக்கிடையில் சண்டை மூள்வது எதிர்பார்க்கப்படும் சண்டை. ஆனால் சற்றும் எதிர்பாராமல் இரண்டு நாடுகளுக்கிடையில் சண்டைகள் வரலாம். இங்கிலாந்தும் அர்ஜெண்டினாவும் போட்ட சண்டை போல. இது எப்போதாவதுதான் நிகழும். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இரண்டாவது வகை சண்டை எப்போதும் நிகழும் சண்டையாகி விட்டது. யார், யாரோடு சண்டை போடப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கே தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.  இந்த பொங்கலுக்கு மாமல்லனும் மனுஷ்யபுத்திரனும் களத்தில் நிற்கிறார்கள். மாமல்லன் எழுத்தில் காட்டும் சிக்கனத்தை ஏச்சில் காட்ட மாட்டார் என்பதால் களம் கலங்கிப் போய் நிற்கிறது.

தனது படைப்புக்கள் அச்சில் புத்தக வடிவில் பதிக்கப்பட்டிருப்பினும் PDF வடிவில் தானே வெளியிடுவது தவறில்லை என்பதிலும், பதிப்பாளர் எழுத்தாளரின் புத்தகம் எத்தனை பிரதிகள் அச்சாக்கப்பட்டு விற்பனையாகியுள்ளது என்ற தகவலை எழுத்தாளரிடம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார் என்ற வகையிலும் மாமல்லன் பக்கம்தான் நியாயமிருக்கிறது. மேற்படையாகப் பார்க்க ம.பு. நாகரிக மொழியில் உரையாடுவதாகவும், மாமல்லன் குழாயடிச் சண்டை பாஷையில் பேசுவதாகவும் தோன்றலாம். ஆனால், மாமல்லன் நியாயமான தனது கேள்விகளின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறார்; ம.பு. கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்கிறார், மாமல்லன் மீது தனிமனிதத் தாக்குதல் நடத்த முற்படுகிறார் என்பதைப் பார்க்கும் போது மாமல்லன் பக்கத்து நியாயம் இன்னும் வலுவாகத் தோன்றுகிறது.

தமிழில் படைப்புகள் முதலில் இணையத்திலும் அதன் பிறகு அச்சிலும் வெளிவருவது பரவலாகி வரும் நிலையில், உலக அளவில் பதிப்பகங்களையும், வெளியீட்டு நிறுவனங்களையும் புறக்கணித்து, படைப்பாளிகளே நேரடியாக மக்களுக்கு தங்களுடைய படைப்புக்களை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதையும் பார்க்கும் போது, மனுஷ்யபுத்திரன் “நாம் எந்த விதமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?” என்பதை இன்னும் ஒரு தடவை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆனாலும் … இலக்கியப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிப்பவர்கள் ஐயாயிரத்தைத் தாண்ட மாட்டார்கள் என்று கணிக்கப்படும் தமிழ்ச் சூழலில் உயிர்ம்மை போன்ற பதிப்பகங்கள் என்ன லாபத்தைச் சம்பாதித்து விட முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சராசரி புத்தகத்தின் விலை ரூ 300 என்று வைத்துக் கொள்ளலாம். அதில் பதிப்பகத்திற்கு நிகர லாபம் 35%, அதாவது ரூ 105 என்று உத்தேசித்துக் கொள்வோம். பதிப்பகத்திற்கு 100 புத்தகங்கள் உள்ளன; ஆண்டிற்கு 200 பிரதிகள் விற்கின்றன என்றால் லாபம் சுமார் 31 லட்சம் வருகிறது. இன்றைய வணிகச் சூழலில் இது பெரிய லாபமாக தோன்றவில்லை.

ஆனாலும் … மனுஷ்யபுத்திரன் ஏன் எல்லாப் பிரதிகளையும் விற்றுத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் புரியவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு சாரு நிவேதிதாவும் தனது எக்சைலை விற்பதில் உயிர்ம்மை ஆர்வம் காட்டவில்லையென்று ம.பு.வுடன் மல்லுக்கு நின்றார் என்று நினைவிருக்கிறது. குறைவான எண்ணிக்கையில் பொருட்களை சந்தைப்படுத்தி, பொருட்களின் மவுசை உயர்த்த விழையும் வியாபார உத்தியா இது? Does not make any sense.

ஆனாலும் … இந்த சண்டையிலிருந்து நான் தெரிந்து கொண்டது ஒன்று. ஒரு வகையில் பார்த்தால் எழுத்தாளர்கள் அதிர்ஷ்டசாலிகள். ராயல்ட்டி கிடைக்கிறதோ இல்லையோ, எழுதியதற்கு காப்பி ரைட் அவர்களிடம்தான் இருக்கிறது. எங்கள் அறிவியல் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். பாடுபட்டு ஆய்வு செய்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் காப்புரிமையை பதிப்பாளர்களுக்கு எழுதிக் கொடுத்த பிறகுதான் கட்டுரைகளை வெளியிடுவதா வேண்டாமா என்று பரிசீலிக்கவே தொடங்குவார்கள். அச்சானால், அந்தக் கட்டுரையின் அச்சு நகலின் மீது கூட கட்டுரை ஆசிரியருக்கு உரிமை கிடையாது. ஒன்று பல்லாயிரம் ஏன் சில லட்சங்கள் கூட கொடுத்து சஞ்சிகையை வாங்க வேண்டும், அல்லது இரண்டாயிரம் மூவாயிரம் கொடுத்து ஒரு தனிக் கட்டுரையை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முன்னணிப் பதிப்பகங்கள் பல மில்லியன் டாலர் வருமானத்தில் 30-35% நிகர லாபம் ஈட்டுகின்றன. ஆனால் கட்டுரை ஆசிரியருக்கு சல்லிப் பைசா கிடையாது. சில பதிப்பகங்கள் கட்டுரை ஆசியரிடமிருந்து பதிப்பீட்டுக் கட்டணமும் பெற்றுக் கொள்கின்றன. சஞ்சிகைகளுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான அறிவியல் நூல்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாசியர்களுக்கும் கூட இதே நிலைதான். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வற்புறுத்துதலின் பேரில் ஒரு துறை நூலின் ஆசிரியராக ஒத்துக் கொண்டேன். சுமார் 400 பக்க நூல். ஜூனில் முடித்துக் கொடுக்க வேண்டும். எப்படியும் ஒரு மாதத்தை விழுங்கி விடும். தம்பிடி தேறாது. துறைக்காற்றிய சேவையாக எண்ணி, நம்மையே தேற்றிக் கொள்ளலாம், அவ்வளவுதான்.   

Sunday, January 19, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி 2014

பல வருடங்களுக்குப் பிறகு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சனிக்கிழமை என்பதால் கூட்டம் எக்கச்சக்கம். கடைகள் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. புத்தகங்களை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகக் கூடியது போல தெரிகிறது. வருபவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பதில்தான் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டது போல் தெரியவில்லை.

வம்சி பதிப்பகத்தில் ஒரே ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் இந்த முறை கண்காட்சிக்குள் நுழைந்தேன். ஒவ்வொரு வரிசையிலும் நுழைவிலேயே என்னென்ன கடைகள் இருக்கின்றன என்று தட்டி வைத்திருக்கிறார்கள். இது நல்ல ஏற்பாடு. 10 நிமிடத்திற்குள் வம்சியைக் கண்டு பிடித்து புத்தகத்தை வாங்கி விட்டேன். கூடவே, பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் “சிதம்பர ஸ்மரண” என்ற படைப்பின் “சிதம்பர நினைவுகள்” எனும் தமிழாக்கத்தையும் வாங்கி வந்தேன்.

இன்று ஞாயிறு. சென்னையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூர் வழியாகப் பயணம். அதிகாலை தொடங்கிய பயணம் என்பதால் தேவாலயத்திற்குப் போக முடியாது என்று தெரியும். தேவாலயத்தில் கடவுளைத் தெரிந்து கொள்வதை விட, வழிபடுவதை விட, இயற்கையில், ஒரு இலையின் அசைவில், ஒரு மலரின் அழகில், ஒரு பறவையின் சிறகில், அவரை அதிகம் தெரிந்து கொள்கிறேன், வழிபடுகிறேன் என்றாலும் கூட ஏதாவது ஒரு ஞாயிறு தேவாலயத்திற்குப் போக முடியவில்லையென்றால் சற்று உறுத்தலாக இருக்கும்.

சிதம்பர நினைவுகளைப் படிக்க, படிக்க அந்த உறுத்துதல் மறைந்ததை உணர்ந்தேன். நேற்று புத்தகத்தை வாங்கிய போது சரியாகக் கவனிக்காததால் அதை ஒரு சிறுகதைத் தொகுப்பு என்றுதான் நினைத்திருந்தேன். இன்றுதான் கவனித்தேன் அது அவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை விவரிக்கும் பல கட்டுரைகளின் தொகுப்பு என்று. படிக்கும் போதுதான் உணர்ந்தேன் அது வெறும் விவரிப்பு கிடையாது, அவரது வாழ்வையே ஒளிவு, மறைவின்றி வெளியரங்கமாக்கி மானுடத்திற்கு படைக்கப்பட்ட ஒரு உன்னதம் என்று. ஏறக்குறைய ஒவ்வொரு கட்டுரையும் எளிமையான மொழியில், சிக்கனமான வாக்கியங்களில், நம் மனதின், இயல்பின் சிக்கல்களைப் புரிய வைக்கிறது.

சிதம்பர நினைவுகளின் ஓரிடத்தில் பகவத் கீதையிலிருந்து காட்டப்பட்ட ஒரு மேற்கோளின் மீது என் மனம் இன்னும் குவிந்து கொண்டிருக்கிறது:

“பிரியமில்லாவிட்டாலும், பலமாக நிர்பந்திக்கப்பட்டவன் போல இந்த மனிதன் ஏன் இப்படி தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருக்கிறான்?”

கிறித்தவத்திலும் இதற்கிணையான சிந்தனை இருக்கிறது. பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் இப்படிச் சொல்கிறார்: “நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; மாறாக விரும்பாத தீமையையே செய்கிறேன்.”

சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் எவ்வளவு உண்மை!

Sunday, February 26, 2012

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்: சில நினைவுகள் (2)


முதல் பகுதி இங்கு.
“பார்ப்பன அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு” என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். பார்க்க முடியாத ஒன்றுதான் எனது முதல் கட்டுரையாக உருவாகியது. அந்தக் காலத்தில் தென் தமிழக மாவட்டங்களில் இலங்கையின் அரசு நிறுவனமான ரூபவாகினியின் தொலைக்காட்சி சேவை மட்டுமே கிடைத்து வந்தது. தூத்துக்குடி போன்ற கடலோர நகர்களில் பெரும்பாலான நேரங்களில் இச்சேவை நன்றாக இருக்கும். படம் தெளிவாகத் தெரியும். சில நேரங்களில் ஒன்றுமே தெரியாது. புரியாத சிங்கள மொழிச் சேவை தெளிவாகத் தெரிவதாகவும், விரும்பிப் பார்க்கும் தமிழ், மற்றும் ஆங்கில மொழிச் சேவைகள் தெளிவாகத் தெரியாததாகவும் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியாவின் கை ஓங்க, ஓங்க, படம் தெளிவு குறைந்து கொண்டே போய், ஒன்றும் தெரியாமலாகிவிட்ட கடுப்பில் “ட்ரான்ஸ்மிட்டரின் சக்தியைக் கூட்டியும் குறைத்தும் நம் உணர்வுகளுடன் விளையாடுகிறது ரூபவாகினி” என்று ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது  அடுத்த வாரம் ‘ரூபவாகினியின் கோர தாண்டவம்’ என்ற தலைப்பில் மதன் அவர்களின் கார்ட்டூனுடன் ஒருபக்கக் கட்டுரையாக பிரசுரமானது. யாரிடமும் எந்த ஒரு அபிப்பிராயமும் கேட்காமல், வெறும் அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை பிரசுரமானது அந்தக் காலத்திலேயே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உண்மையை விட உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய சுவாரஸ்யத்திற்கே தமிழகப் புலனாய்வுப் பத்திரிகைகள் அன்றும், இன்றும் முதலிடம் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் ஜூனியர் விகடன் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் சென்று திரும்பியதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் அவர் விமான நிலையத்திற்குத் திரும்பும் வழியில் திருச்சி சிறைச்சாலையைக் கண் கொட்டாமல் பார்த்து வந்ததாகவும், காரணம் அந்தச் சிறைக்குள்தான் அவரது முன்னாள் தோழியின் உறவினர் அடைக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது. முதல்வரின் வாகன ஓட்டியோ, அல்லது வாகனத்தில் பயணித்த வேறு யாராவதோ சொல்லியிருந்தாலொழிய அவர் அப்படி சிறைச்சாலையைக் கண்கொட்டாமல் பார்த்தாரா இல்லையா என்று தெரியாது. அப்படி முதல்வரின் வாகன ஓட்டியோ, அல்லது வாகனத்தில் பயணத்தில் வேறு யாரோ விகடன் நிருபரிடம் சொல்லக் கூடிய வாய்ப்புகள் குறைவு. எனவே, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் சிறைச்சாலை இருக்கிறது, உள்ளே முன்னாள் தோழியின் உறவினர் இருக்கிறார் என்ற இரண்டு உண்மைகளுக்கு நடுவில் அனுமானத்தின் அடிப்படையில் யாரும் ஒத்துக் கொள்ளவோ, மறுக்கவோ முன்வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் ஒரு உடான்ஸை செருகியிருக்கிறார் பத்திரிகையாளர்.
‘ரூபவாகினியின் கோர தாண்டவம்’ பிரசுரமான சமயத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. எம். வசீகரன் என்பவர் நான் மாணவ நிருபராகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து, என்னை வந்து சந்திக்கும் விருப்பத்தை சொல்லியிருந்தார். அவரும், அவரது நண்பர் கண்ணனும் ஒரு நாள் என்னை வந்து சந்தித்தார்கள். வசீகரன் என்னை விடச் சில ஆண்டுகள் மூத்தவர். கருப்புச் சட்டை அணிந்திருந்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் பகுதிநேரப் பணியும், புகைப்படக் கலைஞராக பகுதிநேரப் பணியும் செய்து கொண்டிருந்தார். திராவிட கழகத்திலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். பத்திரிகைப் பணியில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரிடம் ஸ்கூட்டரும், கேமராவும் இருந்தன. என்னிடம் பத்திரிகையாளன் என்ற அங்கீகார அட்டையும், பேனாவும், காகிதமும் இருந்தன. இருவருக்கும் பத்திரிகைத் துறையில் ஆர்வம் இருந்தது. எனவே, கூட்டணி சேர்ந்து விட்டோம். அன்று முதல் பாரதிராஜா படப்பிடிப்புகளுக்கு கண்ணனின் கண்களை எடுத்துச் செல்வது போல எனது பத்திரிகைப் பணிகளுக்கெல்லாம் வசீகரனின் கண்களைத்தான் எடுத்துச் சென்றேன். என்னை அவரது ஸ்கூட்டர் சுமந்து சென்றது.
தமிழகத்தின் புகழ்பெற்ற வைணவத் தலமான தென்திருப்பேரை கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்ற செய்தி கேள்விப்பட்டு நானும், வசீகரனும் தென்திருப்பேரைக்கு விரைந்தோம். ஏற்கனவே திருச்செந்தூர் கோவிலில் செந்திலாண்டவனுக்கு சாத்தப்பட்ட வைர வேலொன்றை அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு பிரமுகர் அபேஸ் செய்ததாகவும், அதைத் தட்டிக் கேட்ட சுப்பிரமணிய பிள்ளை என்னும் ஆலய அதிகாரியைக் கொன்று விட்டு, உண்டியலில் விழுந்த பணத்தை அவர் திருடி, கையும், களவுமாக பிடிபட்டு, அவர் அவமானத்தால் தூக்கிலிட்டு இறந்து விட்டதாக கதை கட்டியதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. கருணாநிதி இந்த சம்பவத்தை முன்னிட்டு “நீதி கேட்டு நெடும்பயணம்” என்ற பெயரில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரை நடைப் பயணமாக வந்து தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். தென்திருப்பேரை கொள்ளையிலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியதால், இக் கொள்ளைக்கு அரசியல் முக்கியத்துவமும் சேர்ந்திருந்தது.
நானும், வசீகரனும் கொள்ளைச் செய்தியை சராசரி ஜூனியர் விகடன் பாணியிலேயே மேற்கொண்டோம். சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வது. புகைப்படங்கள் எடுப்பது. கோவில் நிர்வாகிகளுடன் பேட்டி. கோவில் தெருவில் வசிப்பவர்களுடன் பேட்டி. புலனாய்வு செய்யும் அதிகாரிகளுடன் பேட்டி. இவற்றின் அடிப்படையில் ஒரு கட்டுரை. நமக்கு என்ன தோன்றுகிறதோ அதன் அடிப்படையில், கூடவே ஏதாவது நீதியைச் சொல்லி கொளகொளா என்று முடிவுரை.   
அடுத்த வாரம் தென்திருப்பேரை கோவில் கொள்ளை பற்றிய கட்டுரை ஜூனியர் விகடனில் வந்தது. அது நானெழுதிய கட்டுரை மாதிரியும் இருந்தது; இல்லாமலிருந்தது போலவும் இருந்தது. அப்போதெல்லாம் கையினால் கட்டுரை எழுதி, பிரதி எடுத்து வைக்காமல் அனுப்புவதால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. ஆனால், கட்டுரையில் பிரசுரமான புகைப்படம் வசீகரன் எடுத்தது. அவர் பெயர் பிரசுரமாகவில்லை. கட்டுரையின் ஆசிரியர் ‘நமது நிருபர்’. பிறகு விசாரித்ததில் தெரிய வந்தது விகடனின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சுதாங்கனுக்கு சொந்த ஊர் தென்திருப்பேரையாம். அவரும் சென்னையிலிருந்து ஊருக்குப் போய் செய்தி திரட்டி அனுப்பியிருக்கிறார். எனவே, கட்டுரையாளர்களின் பெயர் குறிப்பிடப்படாமலே கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.
வீட்டில் இருந்து டி.வி. பார்த்து விட்டு, அனுமானத்தின் அடிப்படையில் ஏதோ ஒன்றை எழுதினால் பிரசுரமாகிறது. விடுமுறை எடுத்துக் கொண்டு, நாள் பூராவும் திரிந்து செய்தி சேகரித்து அனுப்பினால், அது நம் பெயரில் பிரசுரமாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை உணர்ந்த போது உற்சாகம் வடிய ஆரம்பித்தது. இந்த அனுபவம் ஒரு முறை மட்டுமல்ல. மீண்டும், மீண்டும் தொடர்ந்தது.                   
(இன்ஷால்லா தொடர்வேன்)

Sunday, February 12, 2012

கொத்தவரை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா?


Food Chemistry என்ற அறிவியல் பத்திரிகையில் வரவிருக்கும் சில கட்டுரைகளைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது கவனத்தை ஈர்த்தது மைசூர் மத்திய உணவு ஆய்வு நிறுவனத்திலிருந்து சுப்ரா பாண்டே, கிருஷ்ணப்புரா ஸ்ரீனிவாசன் என்ற இரு அறிவியலாளர்கள் எழுதிய ஒரு கட்டுரை. இது கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்; பூண்டு சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் குறையும் என்கிறது.
பொதுவாகவே நார்ச் சத்துள்ள உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. நார்ச் சத்து உணவுப் பாதையை, குறிப்பாக பெருங்குடலையும் அதற்குக் கீழுள்ள உணவுப் பாதையையும் தடைகளில்லாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த நார்ச் சத்து உணவுப் பாதையில் நகரும் போது கூடவே கொலஸ்ட்ராலையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது. இதனால் உணவிலும், செரிமான திரவங்களிலும் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது ரத்தத்திற்கு போகாமல், மலத்திற்குப் போய் உடம்பிற்கு வெளியே போய் விடுகிறது.  
கொத்தவரங்காயைப் பொறுத்த வரையில் அதன் நார்ச் சத்து தவிர, மாவுச் சத்திலும் ஒரு கொழகொழாப் பிசின் தன்மை இருக்கிறதாம். அதுவும் கொலஸ்ட்ராலைச் சுருக்கு வலை போட்டுக் கட்டி, தரதரவென்று இழுத்துக் கொண்டு உடம்பிற்கு வெளியே கொண்டு போய் விடுகிறதாம்.
பூண்டு, வெங்காயம், வெந்தயம், சிவப்பு மிளகாய், மஞ்சள் ஆகியவற்றிற்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை இருப்பதால், கொத்தவரங்காயோ, பூண்டோ தனித்தனியாக குறைப்பதை விட இரண்டும் கூட்டணி சேர்ந்தால் அதிகம் குறைக்குமோ என்று சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் குறைந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சி முடிவை நாம் அப்படியே எடுத்து உபயோகிப்பதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, இந்த ஆராய்ச்சி எலிகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எலிகளுக்கு ரொம்ப தாராளமாக கொத்தவரங்காய் வழங்கியிருக்கிறார்கள். கொத்தவரங்காயைக் காய வைத்து, 10ற்கு ஒரு பாகமான பொடியாக மாற்றி, அந்தப் பொடியை உணவில் 15 சதவிகிதம் கலந்திருக்கிறார்கள். தினமும் 1 கிலோ உணவு சாப்பிடுகிறவர், கூடவே இன்னொரு கிலோவிற்கு மேலேயெ கொத்தவரங்காய் சாப்பிடுவதற்குச் சமமானது இது.
ஆராய்ச்சி என்றால் இப்படித்தான் சமயங்களில் இருக்கும். இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கொத்தவரங்காய் கிடைக்குமென்றால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள். சுவைக்கு சுவை, உடல்நலத்திற்கு உடல்நலம்.                           

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்: சில நினைவுகள்


என் வாழ்க்கைப் பாதையை நிர்ணயித்த முக்கியமான ஒரு பத்து அனுபவங்கள் உண்டென்றால், அவற்றில் ஒன்று விகடன் மாணவப் பத்திரிகையாளாரப் பயிற்சி பெற்ற ஓராண்டு அனுபவம்.
மாணவப் பத்திரிகையாளர் திட்டம் எப்போது தொடங்கப்பட்டதென்று சரியாக நினைவில்லை. அநேகமாக 1982-ஓ 1983-ஓ ஆக இருக்கலாம். ஆனால், அது குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியடைந்த ஒரு திட்டம் என்பது நினைவிருக்கிறது. விகடன் குழுமத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஜூனியர் விகடன் இதழ் தனது புலனாய்வுக் கட்டுரைகளின் மூலம் மத்தியதர வாசக வட்டங்களில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலம். சௌபா, அசோகன், அருள்செழியன், செண்பகக்குழல்வாய்மொழி போன்ற நிருபர்கள் தங்களது துணிச்சலான கட்டுரைகள் வாயிலாக ஹீரோக்களாக அறிமுகமாயிருந்தனர். அவர்களெல்லாம் மாணவப் பத்திரிகையாளராக அறிமுகமானவர்கள். தமிழில் எழுத ஆர்வமுள்ள எந்தக் கல்லூரி மாணவனுக்கும் விகடனின் பயிற்சி ஒரு கனவுத் திட்டமாக இருந்த காலம். 1984-ல் கல்லூரியில் நுழைந்தது முதல் விகடன் மாணவப் பத்திரிகையளாராக வேண்டும் என்பதே என் பெரிய கனவாக இருந்தது. பள்ளியில் எனக்கு முன்னோடியான ஃப்ரிட்ஸ் மிராண்டா பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலிருந்து மாணவப் புகைப்பட நிருபராக தேர்வு செய்யப்பட்டு, அருள்செழியனுடன் இணைந்து சிறப்பாகப் பணிபுரிந்ததும் ஒரு தூண்டுகோலாக இருந்தது.
1985-ல் அந்த வாய்ப்பு கிடைத்தது. “வாருங்கள் மாணப் பத்திரிகையாளர்களே” என்று திட்டத்திற்கான அறிவிப்பு வந்தவுடனேயே முனைப்பாக வேலையைத் தொடங்கினேன். விண்ணப்ப படிவத்தையும், ஒரு கட்டுரையையும் அனுப்பி வைக்க வேண்டும். தூத்துக்குடி அந்தக் காலத்தில் ரௌடியிசத்திற்கு பெயர் பெற்றிருந்தது. பழிக்குப் பழி, பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டிக் கொலை, நாட்டு வெடிகுண்டு வீச்சு, ரௌடிகள் நடத்தும் சாகசங்கள் என்று எழுதுவதற்குப் பஞ்சமில்லாமல் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. கடற்கரைச் சாலைக்கு மிதி வண்டியில் போய் அப்போதைய காவல்துறை உயர் அதிகாரியைச் சந்தித்து பேட்டி கண்டு அதையும் கட்டுரையில் இணைத்திருந்தேன். கட்டுரையை வாசித்துப் பார்த்த போது திருப்தியாக இருந்தது, அடுத்த கட்டத்திற்கு அழைக்கப்படுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
நேர்முகத் தேர்வு சென்னையில். மதுரைக்குத் தெற்கே இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்திருந்தார்கள். ஒரு மாவட்டத்திற்கு 1-2 நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். அப்போது தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதி. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 4-5 பேர்கள் வந்ததாக நினைவு. பள்ளி நாட்களிலிருந்தே நண்பரும், கல்லூரியில் எனக்கு முன்னோடியுமான கழுகாசலமூர்த்தியும் என்னோடு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஒரு எழுத்துத் தேர்வு. பிறகு கலந்துரையாடல் வடிவில் நேர்முகத் தேர்வு. மதிய உணவிற்குப் பின் அலுவலகத்திற்கு வெளியில் எங்காவது சென்று, ஒரு அனுபவத்தைப் பெற்று வந்து கட்டுரையாக எழுதிக் கொடுக்க வேண்டும். அப்போதைய விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களும், இணை ஆசிரியர் மதன் அவர்களும்தான் நேர்முகம் நடத்தினர். மதியம் விகடன் அலுவலகத்திற்கு வெளியே இருந்த அண்ணா சாலை டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் கிடைத்த முதல் பேருந்தில் மெரினா கடற்கரையில் சென்று இறங்கினேன். சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. என்ன செய்வது என்று தெளிவான ஒரு திட்டம் இல்லாமல் கடற்கரையில் கால் போனபடி நடந்தேன். ஒரு இடத்தில் கருவாடு காயப் போட்டிருந்தார்கள். அங்கே சென்று அந்தக் காட்சியை ஒரு புகைப்படம் எடுத்தேன். அங்கே இருந்த நபர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள். அந்தக் காலத்தில் கடற்கரையை அழகு படுத்தும் திட்டம் ஒன்று அரசிடம் இருந்தது. அதில் மீனவர்கள் கடற்கரையை பயன்படுத்துவதில் பல தடைகளை உருவாக்கப் போவதாக ஐயங்கள் எழவே, மீனவர்கள் வெகுண்டு போராடத் தொடங்கியிருந்தார்கள். ஆக, அந்தக் கருவாடு காயப்போட்டிருந்த நபரிடமே அந்தப் போராட்டங்கள் தொடர்பாக பேட்டியைத் தொடங்கி விசாரிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்குள் கட்டுரை எழுத போதுமான சரக்கு கிடைத்தது. மறுபடி பேருந்து பிடித்து அலுவலகம் சென்று கட்டுரையை எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.
சில வாரங்களுக்குள் நான் ஆவலாக எதிர்பார்த்த செய்தியும் வந்தது. வாழ்க்கையில் அதற்கு முன்னும், பின்னும் எந்த தேர்வு வெற்றியும் அளித்திராத ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன். விகடன் மாணவப் பத்திரிகையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்; இன்னின்ன தேதிகளில் சென்னையில் பயிற்சி; மாதாமாதம் உதவித் தொகையாக ரூ. 50 போன்ற செய்திகளை அடங்கிய கடிதத்தை நூறு முறைகளாவது படித்துப் பார்த்திருப்பேன். விரைவிலேயே புகைப்படம், பெயர் போட்டு ஆனந்த விகடனிலும், ஜூனியர் விகடனிலும் செய்தி வந்தது. கடிதத்தையே நூறு தடவை வாசித்தேன்; அந்தச் செய்தியை ஆயிரம் தடவை பார்த்திருப்பேன்.
சென்னை தியாகராய நகரில் ஒரு திருமண மண்டபத்தில்தான் பயிற்சி முகாம் நடைபெற்றது. உறங்க, குளிக்க அங்கே என்னென்ன வசதிகள் செய்திருந்தார்கள் என்று நினைவில்லை. மதியம் பேருந்தில் நல்ல உணவகங்களுக்குச் சென்று உணவருந்தியது நினைவிருக்கிறது. ஒரு நாள் விகடன் அச்சகம் அழைத்துச் சென்று எப்படி பத்திரிகைகள் வடிவமைக்கப்படுகின்றன, அச்சிடப்படுகின்றன என்பதைக் காண்பித்தார்கள். பெரும்பாலும் திருமண மண்டபத்திலேயே வகுப்புகள் நடைபெற்றன. ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திட்டத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். பேச்சுத் தமிழில், நகைச்சுவையோடு, பல உதாரணங்களையும் கொடுத்துப் பேசினார். நாங்கள் தேர்வில் எப்படி செய்திருந்தோம் என்றும் கூறினார். அப்போதெல்லாம், விகடனில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், குறிப்பாக தெளிவின்மை கட்டுரைகளில் வந்து விடக் கூடாது என்பதில் கறாராக இருப்பார்கள். இந்த விஷயத்தை சோதித்தறிய தேர்வில் ஒரு பகுதி இருந்தது. ‘அதில் தூத்துக்குடில இருந்து வந்திருக்கிற அருள் விக்டர் சுரேஷ் மட்டும்தான் முழுசா மார்க் எடுத்துருக்கிறார்’ என்ற ரீதியில் அவர் சொல்ல, அப்படியே ஜிவ்வென்று வானத்திற்குப் போனேன்.
முகாமில் பேச சில பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். புகைப்படப் பயிற்சிக்கு சுபா சுந்தரம் அழைக்கப்பட்டிருந்தார். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பல அபூர்வ புகைப்படங்களைக் காண்பித்துப் பேசினார். பெரியார் எப்படி புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிப்பார்; எம்.ஜி.ஆர். ஒரு முறை அவிழ்ந்த வேஷ்டியைக் கட்டுவதைப் படமெடுத்த புகைப்படக் கலைஞரை, மேடையிலிருந்து கீழே குதித்து, காமெராவைப் பிடுங்கி, படச்சுருளைக் கழற்றினார்; இறுதியாக கருணாநிதி கருப்புக் கண்ணாடி அணியாமலும், எம்.ஜி.ஆர் தொப்பி அணியாமலும் இணைந்து எடுத்து எப்படி படம் எடுத்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பேசினார். விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் படங்கள் பலவற்றையும் காட்டினார். அவருடைய அப்போதைய உதவியாளர் சுபா ரவிசங்கர் எவரிடமும் சுலபமாகவும், இனிமையாகவும் பழகுபவர். அவரிடம் நாங்கள் ஒட்டிக் கொண்டோம். புலிகள் முகாம் எங்கே நடக்கிறது என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்து விட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் சுபா சுந்தரம் உடன் இருந்தவர் என்பதாலேயே பெரும் தொந்தரவுகளுக்கு ஆளானவர் ரவிஷங்கர்.
முகாமிற்கு சுஜாதா வந்திருந்தார். நாங்கள் அச்சகத்திற்குப் போய் வந்ததைப் பற்றி ஒரு பத்தி எழுதச் சொன்னார். எழுதி முடித்த பின்னால், எத்தனை பெயர் கூட்டன்பெர்க் பெயரை எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அச்சகத்தில் ஒரு மாதிரி மை வாசம் அடிக்குமே, அதை எத்தனை பேர் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். க்ளினிக்கல் ரைட்டிங் என்பதைப் பற்றி ஒரு உரையாற்றினார்.
முகாமின் இறுதிநாள் ஏற்கனவே பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கும் நிகழ்ச்சி. அருள்செழியன், செண்பகக்குழல்வாய்மொழி, ரமேஷ் பிரபா போன்றவர்களெல்லாம் அதில் சிறந்த பத்திரிகையாளர்களாக விருது பெற்றதாக நினைவு. ரமேஷ் பிரபா பேசியது மட்டும்தான் நினைவிருக்கிறது. ஐ.ஐ.எம். கல்கத்தாவில் படித்துக் கொண்டே மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றவர் அவர். மேலாண்மை, நிர்வாகம், வணிகம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. கல்கத்தாவின் போக்குவரத்து நெரிசலில் களத்திற்குச் சென்று செய்தி திரட்டுவது என்பது கணிசமான நேரத்தைத் தின்று விடும் என்ற ரீதியில் அவர் பேசியது இன்றும் நினைவிருக்கிறது.
முகாம் முடித்து திருப்தியோடு தூத்துக்குடி வந்தேன். மாணவப் பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டை, விசிட்டிங் கார்டுகள், இவற்றை வைத்துக் கொள்ள வெளிர் பச்சை நிறத்தில், குஷன் வைத்து, ஜிப் போட்ட ஒரு file folder முதலானவைதான் எங்களுக்கு அளிக்கப்பட்ட உபகரணங்கள். கையில் சுத்தியல் வைத்திருப்பவனுக்கு உலகமே ஆணியாகத் தோன்றுவது போல், பார்ப்பன அனைத்தும் செய்திகளாகத் தோன்றின எனக்கு. பேனாவைப் பார்க்கும் போதெல்லாம், சமூக அநீதிகளை வேரறுக்கும் வாளைத்தான் கண்டேன். இளம்பச்சை file folderல் சிரித்துக் கொண்டிருக்கும் விகடன் தாத்தாவைப் பார்த்து அவ்வப்போது பெருமையுடன் புன்னகைப்பேன். அவரது உச்சித்தலை கூர்மையாக நீண்டிருக்கும்; எனது தலை பெருமிதத்தால் வீங்கியிருந்தது.
(இன்ஷால்லா தொடர்வேன்)