Friday, July 27, 2007

அப்துல் கலாம் பற்றி

இந்த வாரம் ஜனாதிபதி கலாம் அவர்களின் ஐந்தாண்டு பதவிக் காலம் நிறைவுக்கு வந்திருக்கிறது.

அவருடைய “அக்கினிச் சிறகுகள்” புத்தகத்தை அது வெளிவந்த புதிதில், ஆங்கில மூலத்தில் படித்து விட்டு அவரைப் பற்றி பிரமிப்பு அடைந்தேன். அப் புத்தகம் வாசித்த சில ஆண்டுகளுக்குப் பின் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தபோது எதிர்பாராத விருந்தினராக வந்து ஒரு சிறு உரையாற்றினார். அந்த உரை “இந்த நாடு முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்” என்பதைத் தவிர இந்த மனிதருக்கு வேறு எந்த நினைப்புகளுமே கிடையாது என்பதைக் காட்டியது. சில மாதங்கள் கழித்து அவர் ஜனாதிபதியானார். ஜனாதிபதி ஆன பிறகு அவர் தனது இதயம் விரும்பிய துறைகளில் தொடர்ந்து காட்டிய முனைப்பும், அணுகுமுறைகளும் முதல் தோன்றிய பிரமிப்பை சிறிதளவும் குறைக்கவில்லை. மூன்றாவது அணியின் தந்திரத்திற்கு இவர் பலியானபோதுகூட “எப்பேர்ப்பட்ட நிலைகளை கடந்து வந்த இவர் இப்படி ஒரு அப்பிராணியாக இருக்கிறாரே” என்று ஒரு புதிய பரிமாணத்தில் பிரமிப்பு எழுந்ததே தவிர முதலில் ஏற்பட்ட பிரமிப்பில் இன்று வரை மாற்றம் எதுவுமில்லை.

கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவரது நோக்கத்திலும், முனைப்பிலும், முயற்சிகளிலும் எவ்விதமான மாற்றங்களும் இருக்கப் போவதில்லை. “ஜனாதிபதி பதவி” என்னும் பாரமூட்டை சேதப்படுத்தாத அவர் முதுகையா “ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு” என்னும் பஞ்சு மூட்டை சேதப்படுத்திவிடப் போகிறது?

ooo

பின்குறிப்பு: கலாமைப் பற்றி விமர்சித்து ஞானி விகடனில் எழுதியிருக்கிறார். “கலாம், என்ன பெரிய கலாம்?” என்ற தொனியில் எழுதப்பட்ட அக்கட்டுரையில் கலாம் இந்தியாவின் ஆயுதபலத்தை பெருக்க உதவி செய்தாரென்றும், இந்தியா வல்லரசாக வளர்வதுதான் அவரது ஒரே கனவு என்றும், அவற்றில் தனக்கு உடன்பாடு கிடையாதென்றும் ஒரு கருத்து உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிடுபவர்கள்தான் இப்படிக் கருத்து கூற முடியும். அட, நாட்டின் வளர்ச்சிக்காக இல்லாவிட்டாலும், நமது சொந்த பாதுகாப்பு கருதியாவது, நமது இராணுவத்திற்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பெரிதும் நன்றி உள்ளவர்களாக இருக்கலாமே. பேனா கூரிய ஆயுதமாக இருக்கலாம், ஆனால் பக்கத்து நாட்டு வழியாக தாலிபான்கள் படையெடுத்து வந்தால் ஆர்ட்டிலெரியைத்தானே அனுப்புவோம்.

2 comments:

அஞ்சாநெஞ்சன் said...

கலாமைப் பற்றிய தங்களின் கருத்துக்களில் பிரசினை இல்லை. ஆனால், இதில் சம்மந்தம் இல்லாமல் ஏன் தாலிபான்களை இழுக்கின்றீர்கள்? அவர்கள் தங்கள் நாட்டுக்காக ஆயுதெமேந்தி போராடும் போராளிகள். அவர்கள் எப்போது பிறர் நாட்டை அபகரிக்க முனைந்தனர்? கலாமைப் புகழும் நீங்கள் தாலிபன்களையுமல்லாவா புகழ வேண்டும்... இருவருமே தத்தமது நாட்டிற்காக அவரவர் வழியில் போராடுகின்றனர்.

Victor Suresh said...

நான் கொஞ்சம் லூஸ்தனமாக எழுதலாம். அதற்காக நான் முழுக் கிறுக்கன் என்று நீங்கள் முடிவு கட்டி விடக் கூடாது.

தங்கள் நாட்டுக்காக ஆயுதமேந்தி போராடும் போராளிகள் எங்கள் நாட்டு விமானத்தைக் கடத்திப் போனதை நீங்கள் மறந்திருக்கலாம். நாங்கள் மறக்கவில்லை. எங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து நாச வேலைகளை செய்வதை நீங்கள் சுவாரசியமாக பார்க்கலாம். நாங்கள் பார்க்கவில்லை.