Sunday, November 13, 2011

பாற்கடலில் மீன்


கடந்த வாரம் சில நாட்கள் கம்போடியாவில். அங்கோர் வாட் பார்க்கப் போனேன். முன்னர் ஒரு முறை சென்ற போது கடுமையான மழை. இம்முறை கடுமையான வெயில். பெரிய அளவில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. முகப்புக் கோபுரத்தை வலையால் மூடி வேலை பார்த்து வருகிறார்கள். சுற்று மண்டபச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற சிற்பக் காட்சிகளை பெரும்பாலும் புனரமைப்பு செய்து விட்டார்கள். உச்சிக் கோபுரத்திற்கு மேலேறும் ஒடுங்கிய, செங்குத்தான, ஆபத்து மிகுந்த கற்படிகளின் மீது ஏறுவதை தடை செய்து விட்டார்கள். பதிலுக்கு, சற்று பத்திரமான மரப்படிகளை நிர்மாணித்திருக்கிறார்கள். கைப்பிடியும் அமைத்திருக்கிறார்கள். மேலேறிப் பார்த்தால் அங்கோர் வாட்டின் சுற்றுப்புறம் முழுமையாகத் தெரிகிறது. சுகமாகக் காற்றும் வீசுகிறது.
சுற்று மண்டபச் சுவர்களில் உள்ள சிற்பச் சித்திரக் காட்சிகளை உச்சிக் கோபுரத்திலிருந்து இறங்கும் வழியில் மறுபடியும் ஒரு முறை பார்த்தேன். மொத்தம் நான்கு நீள் சுவர்களிலும் தலா ஒரு காட்சி: பாற்கடலை தேவர்களும், அரசர்களும் கடைந்து அமுதம் எடுப்பது; மகாபாரத யுத்தம்; நரகம்; மன்னன் இரண்டாம் ஜெயவர்மனின் ஆட்சிச் சிறப்பு. இவற்றில் பாற்கடல் கடையும் சித்திரக்காட்சியில் கண்ணில் பட்டது பாற்கடலில் துள்ளிக் கொண்டிருக்கும் மீன்கள். இது வரைக்கும் பாற்கடல் என்பது பால் நிரம்பிய ஒரு கடல் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் அது நீர் நிரம்பிய கடல் என்று புரிந்தது. கூகுளாம்மனிடம் விசாரித்தபோது ஸ்ரீமத் பாகவத்தில் பாற்கடலில் மீன் மட்டுமல்ல திமிங்கிலங்களும், பாம்புகளும் இருந்தன என்று சொல்லப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கோர் வாட் பாற்கடலில் மீன்களோடு, முதலைகளும், சிங்கத்தலை கொண்ட டிராகன்களும் தண்ணீரில் நெளிந்து கொண்டிருந்தன. மீன்களைக் கூர்ந்து பார்க்கும்போது மூன்று இனங்களைப் பெரும்பாலும் காண நேர்ந்தது: கெண்டை, கெளுத்தி வகைகளோடு featherback என்று அழைக்கப்படும் Notopterus மீன்களும்.
மறுநாள் தோன்லே சாப் ஏரிக்குச் சென்றிருந்தேன். தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி தோன்லே சாப். ஆசியாவின் ஜீவ நதிகளில் ஒன்றான மேக்காங்கின் கிளை நதி ஒன்றுடன் தோன்லே சாப் இணைந்திருக்கிறது. திபெத்தின் மலைகளில் உருகும் பனியும், மேக்காங் பயணிக்கும் நிலங்களில் பெய்யும் மழையும் சேர்ந்து மேக்காங் ஆறு பெருகும் போது, உபரியான நீர் கிளைநதி மூலம் தோன்லே சாப்பை நிரப்பி 2700 சதுர கி.மீ பரப்பளவுள்ள ஏரியை 16,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ளதாக மாற்றுகிறது. மேக்காங்கில் நீர் மட்டம் குறையும் போது இந்த உபரிச் சேமிப்பு மறுபடியும் நதிக்கே சென்று விடுகிறது. அங்கோர் வாட்டின் சிற்பிகளுக்கு தோன்லே சாப்பும் அதிலுள்ள உயிரினங்களுமே பாற்கடலாகவும், அதிலுள்ள மீன்களும், முதலைகளுமாகத் தோன்றியிருக்கலாம். தோன்லே சாப் படகுப் பயணத்தை முடிக்கும் தருவாயில், கெளுத்தி மீன்களைப் பிடித்து உயிருடன் சந்தைக்குக் கொண்டு வந்து கொண்டிருந்த படகொன்றைப் புகைப்படமெடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. பரந்த நீர்ப்பரப்பில், குளிர்ந்த காற்றில், மாலை மங்கும் அந்த அமைதியான தருணம் மறக்க முடியாதது.  

      

2 comments:

Anton Prakash said...

Sounds fantastic place to visit... Did you take Silk ? Are there good hotels to stay ?

Victor Suresh said...

No, I took Vietnam Airlines. Silk Air flies to Siem Reap, but the tickets can get expensive at times and there is no daily service. Vietnam Airlines flies there twice daily, and the service is good.

There are plenty of hotels in Siem Reap now. When I was there last time, I stayed at the best hotel in town. I think it was a Renaissance or Intercontinental then, but now it is a Le Meridien. During that time, I did not see many hotels in that neighborhood. Now there are many. I stayed at Prince D' Angkor, an Expedia find. It worked to about $ 100/day, but my taxi driver said that you can find decent places from $ 50/day. By the way taxi with driver for full day costs about $ 25/day. Another thing you would love is that you don't have exchange money in Cambodia. No one in Cambodia likes to use their currency Riels except as spare change. Even ATMs dispense only US dollars.